குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, April 24, 2011

133.பெண் எழுத்து !


பெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த தொடர் பதிவுக்கு எழுதச் சொல்லி இருக்கிறார்;பதிவுலகில் 3 வருடங்களுக்கு மேல் இயங்கினாலும் இவ்விதத் தொடுக்கும் பதிவுக்கான அழைப்பு இதுதான் முதல்.எதற்கும் ஒரு துவக்கம் இருக்க வேண்டுமல்லவா? அந்த வகையில் ஆர்விஎஸ்’க்கு நன்றி.

பெண் எழுத்து என்றால் பெண்கள் எழுதிய எழுத்துக்கள் என்று
நேரடியாகப் பொருள் வரும்.அவ்வகையில் மிகு நீண்ட வரலாறு கொண்ட தமிழில் சங்க காலத்திலேயே 33 பெண் புலவர்கள் இருந்ததாகப் பட்டியல் சொல்கிறது.

அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்

இவர்களில் சங்க காலத்திலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தவர் அவ்வையார்.

அவ்வையார்கள் பலர் பல கால கட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.இதுவரை தெரிந்து 4 அவ்வையார்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.நால்வருமே அற்புத எழுத்தாளர்கள்.

ஆயினும் அதியமானின் தோழியாக இருந்து அரசியலில் ஆலோசனைகள்,தூது போன்ற காரியங்கள் அளவிற்கு கூரிய அறிவுடன் தேர்ந்த மதி-அதாவது டிப்ளமசி-யுடன் கூடியவராக சங்க கால அவ்வையார் திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருந்திருக்கின்றன.

இரண்டாவது அவ்வை பக்தி இலக்கிய காலத்தில் வாழ்ந்த விநாயகர் அகவல் எழுதிய அவ்வை.விநாயகர் அகவல் சைவத்தின் பக்தி இலக்கிய சாரம் முழுதும் அடங்கிய ஒரு சிறு நூல்.இதைப் பற்றிய பதிவு தனியே எழுதிஇருக்கிறேன்.

மூன்றாவது அவ்வை ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற குழந்தை இலக்கியங்கள் எழுதிய அவ்வை.இயல்பை அப்படியே எடுத்துக் கொண்டு இன்னொரு நூலாக புதிய ஆத்திசூடி இயற்றுமளவுக்கு பாரதி போன்ற கவிஞனையே ஆழ்ந்து கவர்ந்தது இந்த அவ்வையின் ஆக்கங்கள்.மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் என்று அறிவுரை சொன்ன கையோடு ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று குழந்தைகளை அமைதிப் படுத்திய நல் எழுத்துக்கு சொந்தக் காரர் இந்த அவ்வை. குழந்தைகள் சமுதாயத்தின் நல்ல அங்கமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற அன்னையர்கள் இந்த அவ்வையின் நூல்களை உடனே தேடுங்கள்..

அவ்வைகள் போல வெள்ளி வீதியார் போன்ற புரட்சி மிகுந்த பெண்களும் சங்க காலத்தில் எழுதிக் கவர்ந்திருக்கிறார்கள். ஒரு பாடல் பாருங்கள்..

அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ
டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி
னோங்கு மணல்
சிறுசிறை
தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காமம்
நெரிதரக் கைந்நில்லாதே
(குறுந் தொகை 149)

நடப் பட்டிருக்கும் கரும்பிற்கு நீர் பாய்ச்சுவதற்காக கட்டப் பட்டிருக்கும் சிறு மண் பாத்தி பெருகி வந்து நீர் அடிக்கும் போது உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாண்டிய காதலின் வலி என்னைத் தாக்கும் போது எனது நாணம் என்னும் பாத்தி உடைந்து அழிந்து போய் விட்டது என்று இழந்த அன்பின்,காதலின் வலியைப் பதிவு செய்யும் பாடலுக்கு சொந்தக் காரர் வெள்ளிவீதி.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே
( குறுந்தொகை, 27)

கன்றும் குடிக்காமல், பீய்ச்சி எடுக்கப்பட்டு மனிதர்க்கும் உபயோகப் படாமல்,நல்ல சுவை பொருந்திய பால் நிலத்தில் தானாக வழிந்த வீணாவது போல மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அழகிய அல்குல் அதன் அழகை இழக்கிறதே’ என்னுமளவுக்கு பாடிய காதல் போராளி வெள்ளி வீதியார்..இந்தக் கால லீனா மணிமேகலைகள் இவரின் சிறு துகள் என்று சொல்லலாம்…

இடைக்காலமான பக்தி இலக்கிய காலத்து பெண்களிலும் பலர் முத்திரை பதித்தவர்கள்.இறைவன் சிவபெருமானே என் அம்மையே என்றழைத்து பெருமைப்படுத்திய காரைக்காலம்மையாராகப் புகழ்பெற்ற புனிதவதியின் எழுத்துக்கள் அற்புதத் திருவந்தாதியோடு மேலும் இரு சிறு நூல்கள்.

சைவம் மட்டுமின்றி வைணவப் பக்தி இலக்கிய காலத்தின் பெண் சூப்பர் ஸ்டார் சந்தேகமின்றி ஆண்டாள்.

மானிடர்க்கென பேச்சுப்படில் வாழிகில்லேன் கண்டாய் என்று சூளுரைத்து கண்ணனை அடைந்தவர். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றெல்லாம் போராடி நினைத்ததை முடித்த ஆற்றல் மிக்க பெண் எழுத்துக்கு சொந்தக் காரர்.

எழுத்து படிப்பவரை உளரீதியாகவும்,சிந்தனைப் பரப்பிலும் சிறிதாவது உலுக்கி முன்னேற்ற வேண்டும்.அவ்வகையில் மேற்கண்ட பெண் எழுத்தாளர்கள் தவிர்க்க இயலாதவர்கள்.

இது தவிர பெண்மையையும் அவர்களின் உளப் பாங்கையும்  தியாகங்களையும்,அன்பையும்,பக்தியையும் நெகிழ வைக்கும் வகையில் பதிவு செய்த அபிராம பட்டரில் தொடங்கும் வரிசை(நடுக்கடலுள் சென்றே விழினும் கரை ஏற்றுகை நின் திருவுளமே),தவிர்க்கவே இயலாத மீசைக் கவிஞன் பாரதி(எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்… வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி,சாதம் படைக்கவும் செய்திடுவோம்,தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்…) என்று தெய்வங்களையே படைக்க வல்லவர்கள் பெண்கள் என்றும் மேலும் பல எண்ணற்ற பாடல்கள் மூலம் புதுமைப் பெண்ணை முரசறைந்து படைத்த படைப்பாளி, சமகாலத்தின் திஜா(மோகமுள்,அம்மா வந்தாள்),லாசரா(சிந்தாநதி),சுஜாதா(எப்போதும் பெண்),ஆரம்ப கால பாலகுமாரன்(மெர்குரிப் பூக்கள்),கி.ரா.(பல கிராமம் சார்ந்த ஆக்கங்கள்) போன்ற பல ஆண் எழுத்தாளர்களுக்கும் இந்தப் பங்களிப்பில் தவிர்க்க இயலாத இடம் இருக்கிறது.

ஜெயமோகன்,எஸ்.ரா போன்றவர்கள் வேறு தளங்களில் இயங்குபவர்கள்,இந்தப் பெண் எழுத்துச் சிறப்பில் அவர்களுக்கு பங்களிக்க எனக்கு தயக்கங்கள் இருக்கிறது.(இலக்கணப் பிழையோ?! ஒவ்வொரு பூக்களுமே!?..)

பிற்காலத்திலும்,தற்காலத்திலும் எண்ணற்ற பெண்கள் எழுத்துலகில் சாதித்தும்,சாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.அவர்களின் எழுத்து மனதை,சிந்தனையை உயர்த்தும் எழுத்தாக இருக்கலாம் அல்லது அட,இப்படி ஒரு சிந்தனை இருக்கிறதா என்று ஒரு நிமிடமாவது யோசிக்க வைக்கும் எழுத்துக்களுக்கு உரிமை பெற்ற வகையாக இருக்கலாம்;அவ்வகையில்  லக்ஷ்மியிலிருந்து,திலகவதியிலிருந்து,இந்துமதி,வாஸந்தி,வித்யா சுப்ரமணியம்,சல்மா,லீனா  என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

சமகாலப் பதிவுலகில் ரேகுப்தி-நிவேதா, பாலைத்திணை-காயத்ரி(சித்தார்த்),துளசிதளம்-துளசிடீச்சர்,மங்கை-மங்கை, காற்றுவெளி-மதுமிதா தமிழ்நதி-பெயர் தெரியவில்லை,நிறங்கள்-செல்வநாயகி, போன்றவர்களும் இன்னும் பலரும் பல தளத்தில் எழுதும் காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர்கள், பின்னவர்கள் இருவரும் ஈழம் சார்ந்த தமிழ்ச் சமூக வலிகளையே பெருமளவில் பதிவு செய்திருப்பதால் சிறப்பு கவனம் பெற வேண்டியவர்கள்.

இவை தவிர,எழுத்து மற்றும் அதன் விளைவு சார்ந்த இன்னொரு கோணம் (என்னைப் பொறுத்த வரை) தென்படுகிறது. முன்னே சொன்னபடி எழுத்து படிப்பவரை உள அளவில்,சிந்தனை அளவில், எண்ண அளவில் ஒரு துளியாவது முன்னேற்ற வேண்டும் என்பது எனது பார்வை. அந்த விளைவை ஏற்படுத்தாத எழுத்து சிறந்த எழுத்தாக அறியப்படாது.

இந்த உள அளவில் உயர்த்தும் செயல் எழுத்தினாலன்றி வாழ்வினாலும்,வாழ்ந்து காட்டுவதாலும்,உருவாக்கத்தாலும் கூட விளையலாம்.

ஒஷோ ரஜனீஷ் ஒரு புத்தகத்தில் உலகம் இயங்குவதன் நோக்கம் பற்றி விளக்கியிருப்பார்.இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிரும்,ஒவ்வொரு தாவரமும்,ஒவ்வொரு விலங்கும்,கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட தன்னைப் போன்ற வழித்தோன்றல்களை விளைவித்துச் செல்லும் இயக்கச் சக்கரத்திலேயே இயங்குகின்றன.
அந்த இயக்கத்தில் விளையும் விளைவு மேன்மை பொருந்தியதாக இருக்கும் போது நல்ல காய்கறிகளும்,சுவையான கனிகளும்,வலிமை பொருந்திய கால்நடைகளும் சமூகத்திற்கு நன்மை தரும் வகையில் விளைகின்றன.

மனித இனமும் தன் வாரிசுகள், தான் விட்டுச் செல்லும் உலகிற்கும் சமூகத்திற்கும் நன்மை தரத் தக்க,மேன்மை பொருந்திய, நல்லறிவும் நல்லறமும் மிக்கவர்களாக இருக்கும் வண்ணம் அவர்களை உருவாக்கி விட்டுச் செல்லுவது அவர்கள் தோற்றத்தின் உயர்ந்த,இறுதியான கடமை.அந்தக் கடமையை சிறந்த அளவில் தன் வாழ்க்கையால் விளைவித்துச் செல்பவர்கள் உலகத்தின் நல்லியக்கத்திற்கு இன்றியமையாதவர்கள்.


இவ்வாறான உருவாக்கத்தால் எழுத்தின் விளைவை விளைவிக்கும் மரபில் எண்ணற்ற பெண்ணரசிகள் திருநாவுக்கரசருக்கான திலகவதி தொடங்கி,அருணகிரியின் தமக்கை,சுந்தரருக்கான இசைஞானியார் போன்று பலர் திகழ்ந்து அழகு சேர்த்திருக்கிறார்கள்.

சமகால உலகில் இந்த மரபின் நீட்சியாக வீரம்மாக்களாவும், கண்ணாத்தாள்களாகவும், சின்னாத்தாள்களாகவும் தன் குடும்பத்தையும் தன் சந்ததியையும் சமகால உலகின் சமுதாயத்திற்கான ஒரு நல்ல அங்கமாக மாற்றும் முயற்சியில் வாழ்வெனும் கல்லில் அரைந்து(பட்டு) மணத்து(மணம் வீசி) மறையும் எண்ணற்றவர்களாக வாழ்ந்து மறைந்து பிறந்து வாழ்ந்து மறையும் காலச் சங்கிலியின் தவிர்க்க இயலாத கண்ணிகளாக இருக்கிறார்கள்.பெயர் தெரியாத கடைக் கோடிக் கிராமத்தின் அங்கமாக அவர்கள் இருக்கலாம்,ஆனால் தங்களின் உழைப்பினால்,தியாகத்தால்,வறுமையிலும் செம்மையாய் வாழும் வாழ்க்கையினால் சமுதாயத்தின் உயிர்ப்பை அவர்கள் ஜீவித்திருக்கச் செய்கிறார்கள்.

அவர்கள் எழுதாமல் எழுதிச் செல்லும் சிற்பிகள். அவர்களின் எழுத்துக்கள் அவரவர் எச்சமாக,எச்சங்களால்(வாரிசுகளால்) அவர்கள் தக்கவர்கள் என்று காலந்தோறும் அறிவிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன(ர்).

அத்தகைய எண்ணற்ற எல்லாப் பெண்மணிகளுக்கும், அவர்களில் நான் அருகிலும் அனுக்கத்திலும் அறிந்த,  உருவாக்கத்தினாலும்,எழுத்தினாலும்(சுமார் 10 நூல்கள் எழுதி இருக்கிறார்) கூட அழகிய விளைவைத் தந்திருக்கும் தமிழின் செல்வியான எனது அன்னைக்கும்….

இந்தப் பெண்ணெழுத்துப் பதிவு சமர்ப்பணம் !

மேலும் தொடர,ஆர்வமிருக்கும் எவருக்கும் எனது அழைப்பு பொதுவானது.

குறிப்பாக மேற் கண்ட குறிப்பிட்ட பெண் பதிவர்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

16 comments:

  1. அறிவன்... உங்கள் ஸ்டைல்... வெளுத்து வாங்கியிருக்கீங்க... இதைப் படிக்கனும்ன்னுதான் உங்களை கூப்பிட்டேன்.
    வெள்ளிவீதியார் பற்றி சொன்னதற்கு நன்றி.
    அகவல் போல நீங்கள் குறுந்தொகை பற்றி கூட எழுதலாம். பிள்ளையாரை அப்படியே விட்டுட்டீங்க. அகவல் படிக்க இந்த டம்மீஸ் ரெடி!
    (அப்படியே... ஏதோ அறிவியல் புனைவு போல.. நல்லா கேட்டுக்குங்க. புனைவு போல... ஒன்னு எழுதறேன்.. வந்து படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க... நன்றி! )

    ReplyDelete
  2. நன்றி ஆர்விஎஸ்.
    இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்னு இப்போ தோணுது.

    அகவல் இன்னும் இரு நாட்களுக்குள்..பல விதயங்களில் நேர மேலாண்மைப் பிரச்சனைகள்..

    :))

    உங்க புனைவு முதல் பகுதி படிச்சேன்..

    ReplyDelete
  3. தேவையான பதிவு. பழந்தமிழிலக்கியப் பெண்களைப் பற்றி சுவையான நடையில் எழுதியதன் வழியாக வாசிக்கத் துாண்டினீர்கள். உங்கள் அழைப்பை ஏற்று வந்து எழுத எனக்கும் ஆவல்தான். ஆனால், சில நாட்களுக்கு தரையில் நில்லாமல் வானத்தில் சஞ்சாரம்:))) தொடர் பயணத்தில் இருக்கிறேன். தரை தொட்டதும் நிச்சயமாக எழுதுகிறேன். அழைப்புக்கு மிகவும் நன்றி அறிவன்.

    ReplyDelete
  4. நல்லது தமிழ்நதி..
    பெண் எழுத்து பற்றிய உங்களது பார்வை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பது எனக்குத் தெரியம்,அதனாலேயே உங்களுக்கு அழைப்பு வைத்தேன்.
    ஏற்றதற்கு நன்றி.

    சஞ்சாரங்களின் அனுபவங்களையும் எழுதுங்கள். :))

    ReplyDelete
  5. அறிவன்,

    உங்களின் அன்புக்கும், அழைப்புக்கும் நன்றி. பதிவுலகைவிட்டுத் தற்சமயம் வனவாசத்திலிருப்பதால் உடனே எழுத இயலுமா எனத் தெரியவில்லை. ஆனால் எப்படியும் எழுத முயற்சிக்கிறேன்.

    பல்வேறு பழந்தமிழ்ப் பெண் படைப்பாளிகளை எல்லாம் பட்டியலிட்டுத் தந்திருக்கிறீர்கள். பயனுள்ள செய்திகள். அதற்கும் நன்றி.

    ReplyDelete
  6. செல்வநாயகி,
    உங்களது போல அழுத்தமான எழுத்துக்களில் பெண் எழுத்து பற்றிய பதிவுகளை படிக்க ஆசை..மறக்காமல் வனவாசம் முடித்து எழுதுங்கள்..நன்றி..

    ReplyDelete
  7. அழைப்புக்கு நன்றி அறிவன்.

    இவ்வளவு திறமைசாலிகள் இருக்குமிடத்தில் 'நானா?' என்று ஒரு நிமிடம் திகைச்சுப் போயிட்டேன்!!!!

    கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாமா?

    ReplyDelete
  8. அருமைடா அறிவு!
    அம்மாவுக்கு என் அன்பைச் சொல்லவும்!

    ReplyDelete
  9. ||இவ்வளவு திறமைசாலிகள் இருக்குமிடத்தில் 'நானா?' என்று ஒரு நிமிடம் திகைச்சுப் போயிட்டேன்!!!!||

    துளசி அம்மா...

    அதுனாலதான் உங்களையும் இழுத்து விட்டிருக்கேன் !

    :))

    பல தளங்களில் எழுதும் நீங்களும் என்னைக் கவர்ந்த பதிவு எழுத்தாளர்களில் ஒருவர்..இன்னும் பலர் இருக்காங்க..ஆனால் அவங்க பக்கத்தில எல்லாம் சமீபத்திய இரண்டு வருடங்களில் பதிவையே காணும்..

    சீக்கிரம் எழுதுங்க..நன்றி.

    ReplyDelete
  10. நன்றி சுந்தரா...

    என்ன இப்போதெல்லாம் எழுதவதையை காணோம்...வேலையில் மிகுந்த நேரம் செல்கிறதே..

    அம்மா அவ்வப்போது கேட்பது உண்டு,வாலு,கல்லூரியில வானரக் கூட்டமா திரிஞ்சீங்களே,அதுல மிச்ச பேரெல்லாம் எங்க இருக்காங்கன்னு?

    சொல்லியிருக்கேன். அண்ணா பெருமை யேல் மரத்துல உச்சாணிக் கொம்புக்குப் போயிட்டு இருக்குன்னு..

    :))

    ReplyDelete
  11. அறிவன் என்ற பெயருக்கு ஏற்ப மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இந்த கூட்டத்தில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. அன்பின் அறிவன்! தாமதமாய்த் இதைப் படித்தேன்..
    பல பழைய பெண்பாற் புலவர்களை பட்டியலிட்டு, அவர்களின் ஆக்கங்ககளை ஆர்வமாய் படித்து அதிசயித்த கடந்த நாட்களுக்குள் என்னைக் கடத்தி சென்றுவிட்டீர்கள்.

    ஆர்.வீ.எஸ் என்னையும் எழுத அழைப்பு விடுத்திருந்த போதும் பெண்ணெழுத்து எனும் பதத்தை மனம் ஒப்பவில்லையாதலால் தவிர்த்தேன். ஆக்கத்தில் ஆணெழுத்து பெண்ணெழுத்து என்று பேதம் ஏது?

    Sunday, July 10, 2

    ReplyDelete
  13. நன்றி வித்யா..
    உங்களின் பங்களிப்பை வெகு சன நாவல் உலகில் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. அன்பு மோகன்ஜி,
    நாம் மிகவும் தத்துவார்த்தமாக ஆண் பெண் பேதம் ஏது என்று சொல்லிக் கொள்ளலாம்தான்..ஆனால் அன்றையதாக இருக்கட்டும் அல்லது இன்றைய சமூக வாழ்வாக இருக்கட்டும்,பெண்களுக்கான சரியான பங்களிப்புக்கான மதிப்பு நிலவுகிறதா என்ற கேள்வியை எழுப்பிப் பதில் தேடினால்,சரியான நிலை தெரியவரும்...

    இத்தகைய சூழலில் எந்தத் துறையாக இருந்தாலும் ஆண்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை மீறி தங்கள் பங்களிப்பால் கவனம் பெறுபவர்களும் சிறப்பை அடைபவர்களையும் நாம் போற்றக் கடமைப் பட்டிருக்கிறோம்.

    நானும் அந்த நோக்கிலேயே இப்பதிவை எழுதியிருக்கிறேன்..சொல்லப்போனால்இந்த உலகம் பெண்களில்லா விட்டால் இயக்கம் அதிர்ந்து அலைவுறும் என்பது எனது துணிபு.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    மைனரின் அழைப்பை ஏற்று நீங்களும் எழுத விரும்பி அழைக்கிறேன்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...