நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அந்த நிகழ்ச்சி துவக்கப் பட்ட போது வெளியான தொடர் விளம்பரங்கள்;குறிப்பாக கௌசல்யா சுப்ரஜா ஏகாம்பரம்!
சிங்கப்பூரில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளி வெளி வழியாக-லைவ் டெலிகாஸ்ட்- வருவதில்லை;இந்தியாவில் நடந்து ஓரிரு வாரங்கள் கழித்துத்தான் வருகிறது என்பது எனது அவதானம்.தொடங்கப்பட்ட போது நிகழ்ச்சி அவ்வளவு நன்றாக இல்லையெனினும் போகப்போக சூர்யா கொஞ்சம் தேறி ஓரளவு நன்றாகவே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார்.இப்போது பருவத்தின் இறுதிப் பகுதி என்று சொல்லி நாம் அமைப்புக்கு உதவி செய்யும் செய்கையோடு நிகழ்ச்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.
இது ஒரு தற்காலிக நிறுத்தம் என்றும், சிறிது காலம் கழித்து வேறொரு நடிகர் மூலம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதும் என்னுடைய இப்போதைய அனுமானம். பெரும்பாலும் என்னுடைய அனுமானங்கள் சரியாக இருப்பதைப் பிற்காலத்தில் நானே உணர்ந்திருக்கிறேன்;இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது.
ஏன், சூர்யா நன்றாகத்தானே நடத்தினார்,இளம் பெண்கள் வாயின் இருபுறமும் ஊற்றும் ஜொள்ளு தெரியாத அளவிற்குக் கூட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்களே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்....சிறிது அலசலாம்.
![]() |
| ஊற்றும் ஜொள்ளு... |
தமிழக ஊடக சூழலில் இந்த நிகழ்ச்சியை இன்றைய நிலையில், வேறு எந்த நடிகர் நடத்தியிருந்தாலும் இந்த அளவுக்குக் கூட வரவேற்பு இருந்திருக்காது என்பது நிச்சயம்.
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பொங்கி வந்து ஏன் இருக்காது, தல நடத்தியிருந்தால் பட்டை கிளப்பியிருப்பார்,தளபதி நடத்தியிருந்தால் சரவெடி என்றெல்லாம் உதார் விட்டாலும், இன்றைய நடிகர்களில் தமிழை ஓரளவு சரியாக,அழகாக இல்லாவிட்டாலும் அபத்தமாக இல்லாத அளவில் உச்சரிக்கும், பேசும் இயல்புடைய நடிகர்கள் தமிழக ஊடக சூழலில் கமலகாசன்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,ஜீவா ஆகிய நால்வர் மட்டுமே முதல் வரிசையில் வருகிறார்கள்.
கமலகாசன் அவருக்கே வெளிச்சமான காரணங்களுக்காக விளம்பரப் படங்களில் கூட நடிப்பவர் அல்ல, எனவே அவர் தொலைக்காட்சி தொடரை நடத்துவதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று. பிரகாஷ்ராஜ் நன்றாகவே செய்வார் என்றுதான் தோன்றுகிறது,ஆனால் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நட்சத்திர மதிப்பு அவருக்கு இல்லை என்று தொகா கருதியிருக்கக் கூடும்.இதே காரணத்திற்காகவே ஜீவாவும் புறந்தள்ளப்பட்டு சூர்யா தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம்.
ஏன் நடிகர்கள்தான் நடத்த வேண்டுமா,மற்ற புகழ் பெற்ற நபர்கள், பொதுச் சேவையில் இருப்பவர்கள் இல்லையா என்று கேட்டால்,நீங்கள் தமிழக சூழலில் வாழத் தகுதியற்றவர்கள்! இன்றைய தமிழகத்தில் நடிகர்கள் கு**வினால்தான் பொழுது விடியும் என்ற அளவில்தான் மாண்புமிக பொது சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஊடகங்கள் இணைந்து தமிழகத்தின் மேல் திணித்திருக்கும் ஒரு மாயை.தகுதியில் இருந்து தலைவன் வரை அனைத்தும் திரைப்பட நடிகர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று நோக்கில் ஊடகங்களின் செயல்பாடு இருக்கிறது.
எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.
டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தரவரிசைப் படியும் இந்த நிகழ்ச்சி முதல் நிலையில் இருந்ததாக செய்திகள் தெரிவிகின்றன.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியை ஏன் திடீரென்று நிறுத்துவானேன் என்பது கேள்வி..
எனக்குத் தோன்றும் பதில்கள்:
1. விஜய் தொலைக்காட்சிக்கு எதிர்பார்த்த டப்பு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்காது.டிஆர்பி எகிறினாலும் விளம்பரங்கள் எந்த அளவிற்கு வந்தன என்பது ஒரு புறமிருக்க நிகர லாபம் எவ்வளவு என்பது கணக்கீட்டுக்குரிய ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு மொத்த சம்பளமாக சூர்யாவிற்கு 20 கோடிகள் தருவதாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. பரிசுத் தொகை வழங்கிய பணம்,சூர்யாவின் சம்பளம், தயாரிப்பு செலவுகள் போக, விளம்பர வருமானம் மட்டுமே தொலைக்காட்சியின் நிகர வருமானமாக இருக்கும். குறைந்தது 100 சதவிகித மார்ஜின் ஆஃப் சேப்ஃடி இல்லாத ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் வழங்குவது அரிது என்று ஊடக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.(மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்றால் என்ன என்பவர்கள் இளங்கலை வணிகவியல் புத்தகங்களை நாடலாம்!)
2. இந்த 100 சதவிகிதப் பணமும்,சூர்யா நிகழ்ச்சியை நடத்திய விதத்தால் பயங்கரமாக அடி வாங்கியது. முடிவதற்கு மூன்று வாரங்கள் முன்னால் வரை,தவறான பதில் சொன்ன ஒருவரை சூர்யா, 'தேவைப்பட்டால் லைஃப் லைன் இருக்கு சார்' என்று சொல்லாமல் இருந்ததில்லை;அதே நேரம் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் சட்டென்று அவர் அந்த பதிலை உறுதி செய்து விடுவார்.(அவரது இந்த குணவிலாசம் பற்றிக் கடைசியாக விரிவாகப் பார்க்கலாம்!). இதனால் தொகா நிறுவனத்திற்கு வர வேண்டிய வருமானம் அடிவாங்கியிருக்கக் கூடும்.அதை வெளியில் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்;ஆனால் சூர்யாவிடம் இது பற்றி நிச்சயம் பேசியிருப்பார்கள். இதன் விளைவு கடைசி மூன்று வாரங்களில் நன்கு தெரிந்தது. அந்த நேரங்களில்தான் சரியாக விடை சொன்ன மனிதர்களையும் சூர்யா குழப்ப முற்பட்டார்.
ஆனால் அமிதாப் இதை தவறாமல் எல்லோருக்கும் செய்தார் என்பதையும் சேர்த்துப் பாருங்கள்,ஏன் கேபிசி அவ்வளவு நாட்கள் ஓடியது என்றும் ஏன் நீவெஒகோ சட்டென்று நிறுத்தப் பட்டது என்றதற்குமான காரணம் புரியும்.
3. முர்டோக் போன்ற விற்பன்ன தொழில் முதலைகள், அவர்கள் வைத்திருக்கும் இலக்கில் லாபம் தராத எந்த ஒரு தொழிலையும் அல்லது தொழிலின் ஒரு கூறையும் தொடர மாட்டார்கள்.அவர்களுக்கு தொழிலில் லட்சியம்,தொலைநோக்கு,நேர்மை,கடமை என்பதெல்லாம் தனித்தனி வார்த்தைகளல்ல;அனைத்திற்கும் ஒரே பொருள்தான்-இலக்கு வைத்திருக்கும் அளவுக்குப் பணம்.
காட்டாக ரிலையன்ஸ் குழுமம் கூட்டு சதவிகித்ததில்-காம்பவுண்டிங் ரேட் பெர் ஆனம்- 35 சதவிகிதத்திற்குக் குறைவாக லாபம் தரும் எந்த ஒரு தொழிலையும் நடத்துவதில்லை என்பதை விதியாக வைத்திருக்கிறது.அப்பேர்ப்பட்ட ரிலையன்ஸ் குழுமம் கூட ஒன்லி விமல் என்ற, டெக்ஸ்டைல் பிரிவை,அது 15 சதவிகித லாபம் மட்டுமே தந்த போதிலும், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.அதை 2012 ல் தூக்கிக் கடாசி விட்டார்கள்.ஒன்லி விமல் டெக்ஸ்டைல் பிரிவுத் தொழில் மட்டும் விற்கப் படப் போகிறது !
20 ஆண்டுகளுக்கும் மேலாக அதை முகேஷ் அம்பானி விடாது தொடர்ந்ததற்கு ஒரே காரணம்,அவரது தந்தை முதன்முதலில் பெரிதாக நிறுவிய தொழில் குழுமப் பிரிவு ஒன்லி விமல் என்பதால்.
ஒன்லி விமல் பிரிவு பிரசித்தமடைந்து கொண்டிருந்த நேரத்தில் அனில் அம்பானி நாடு முழுவதும் வியாபாரிகளைச் சந்திப்பதற்காகப் பயணப் பட்டார். அந்த நேரத்தில் அவரை மதுரையில் சந்தித்துப் பேசிய சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அவரை விட சில வருடங்கள் மட்டும் சிறியவனான(இப்போதும் தான் :) ) ஒரு மொட்டு விட்டுக் கொண்டிருந்த சிஏ வாக அவரைச் சந்தித்தேன். அவர்களது மூச்சும் பேச்சும் பிசினஸ் மயமாக இருப்பதை எளிதாக உணர வைத்தது அந்த சந்திப்பு.
அப்பேர்ப்பட்ட குஜராத்திகளுக்குக் கூட பிசினஸ் செண்டிமெண்ட் இருக்கிறது;தந்தையின் முதல் தொழில் என்பதால் இவ்வளவு காலம் அதை இழுத்து ஓட்டிய முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக். ஸ்டார் குழுமத்தில் ஒத்துவராத தொழில் அல்லது பிரிவை பட்டென்று வெட்டுவார்கள். இங்கிலாந்தில் முர்டோக் வைத்திருந்த ஒரு செய்தித்தாளுக்கு இது சமீபத்தில்(உண்மையிலேயே சமீபத்தில்!) நடந்தது.
அதேதான் நீவெஒகோ'க்கு இப்போது நடந்திருக்கிறது; ஆனால் திரும்பவும் துவக்குவார்கள்,வேறொரு நடிகரை வைத்து !
4. பின் ஏன் சூர்யாவை வைத்து துவக்கினார்கள் ? மேற்சொன்ன விதயங்களை முன்னரே யோசிக்காத அளவிற்கு விதொகா குழுமம் முட்டாள்தனமான மேலாண்மையைக்-மேனேஜ்மெண்ட்- கொண்டிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை !
இன்றைய நிலையில் ரஜினி அல்லது கமல் இந்த நிகழ்ச்சியைத் துவக்கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய முகவிலாசம் இந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவால் கிடைத்தது.இளையவர்கள்,முதியவர்கள்,இளம் பெண்கள்,குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமானவர்களையும் சூர்யா கவர்ந்திருக்கும் நிலையில்,சூர்யாவின் அந்த விளம்பரப் புகழ் பிம்பம், இந்த நிகழ்ச்சிக்கான சூப்பர் அடித்தளமாக அமைந்தது.
இந்த விளம்பர அனுகூலத்திற்கான அறுவடையை அடையாமல் தொகா இந்த நிகழ்ச்சியை விட்டு விடாது !
5.மேலே கண்டபடி சூர்யா அநியாயத்திற்கு நல்லவராக இருந்ததால் எளிய மனிதர்களை சந்தித்த போது அவர்களுக்காக உண்மையில் வருந்தி,உருகினார்;அவர்கள் இயன்ற அளவு வெற்றி பெற தன்னால் இயன்ற வரை அவர் உதவியதாகவே பட்டது.
இப்படியை நீடித்தால் கல்லா போண்டியாகி விடும் என்று தொகா'க்கு தெரிந்து விட்ட கணம் வந்தபோது, நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் !
தொகா.யின் பார்வையில் மேலே கண்டவை நடந்திருந்தாலும் பொதுவான பார்வையில் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து என்ன?
சூர்யா என்னும் நடிகர் ஏற்கனவே நடிகராகப் புகழின் உச்சிக்கு சில அடிகள் தூரத்தில்தான் இருந்தார்; இந்த நிகழ்ச்சியில் அவரது நடத்தை,பங்களிப்பு,சாதாரண மக்களின் மீதான அவரது பார்வை ஒரு தமிழ்த் திரையுலகின் நடிகனது பார்வையாக இல்லாது,மனிதனின் பார்வையாக இருந்தது. திரையுலகின் வேறு எந்த ஒரு நடிகரும் இவரளவிற்கு மானுடத் தன்மையுடன் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிதர்சனமாகத் தெரிந்தது.
ஒரு சாதாரண மனிதனாக அவர் எளிய மனிதர்களுடன் தன்னை எளிதில் இணைத்துக் கொள்ள முடிந்தது;அவர்களின் துக்கங்களும் துயரங்களும் அவரது கண்ணில் நீர் வர வைத்தன;அவரது திரையுலக நட்சத்திர அந்தஸ்து மற்றும் திகட்டும் அளவிற்கான பணம் ஒரு மனிதனாக அவரது மனத்தையும்,இயல்பான இரக்க மனத்தையும் மாற்றிவிடவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெற்றென எடுத்துக்காட்டியது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக ஒரு மனிதர் எப்போதும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.
இயல்பான அவரது நல்ல குணம் பல இடங்களில், நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.ஒரு சாதாரண பொது சனத்தின் வீட்டிற்கு அவரது அம்மா நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்;அவரது பெண் அவரைத் தனது மகள் போல்,தான் தாயாய் மாறிக் கவனிக்கிறார் என்ற அன்பை மதித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த எளிய பண்பும்,அந்த பண்பின் வெளிப்பாடும் அவரை தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கும்.
![]() |
| சிகரங்களை நோக்கிய ஒரு பயணம்.... |
அதே போல் இந்த நிகழ்ச்சி எளிய துவக்கங்களில் தோன்றி, சாதிக்கும் மன உறுதியைத் துணைக் கொண்டு, மேல்நிலைக்கு வரும் வழியை முட்டித் திறந்து வரப் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை, சிஏ தேர்ச்சி அடையப் போகும் மீனவப் பெண்ணின் கதை மூலம் சொன்னது.அடிப்படை வசதிகள் இருந்தாலும் சாதாரண கிராமப் புறத்தில் இருந்து கிளம்பி, எந்த வழிகாட்டிகளும் இல்லாமல், 80 களின் இறுதியில் கல்வியின் மூலம் வாழ்வின் சிறிது மேல்நிலையை அடைந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பெண் வந்த எபிசோட் கண்ணில் நீர் வர வைத்திருக்கும்;எனக்கும் வந்தது.
கடைசி நாளன்று சிவகுமார் வந்து பங்கு பெற்று,இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று வியக்கும் படியான மகிழ்வை அனுபவித்தார்.
ஆனால் அவர் போகும் போது சொன்ன ஒரு வாக்கியம் என்னை நேற்று முழுவதும் சிந்திக்க வைத்தது.
பள்ளி வைத்து நடத்திய ஒரு மூதாட்டி, உங்கள் மகனை அற்புதமான மனிதனாக நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று சொன்ன போது, அவர் திருத்தமாக ஒரு வாக்கியம் சொன்னார்...
" நான் அவனை நல்ல மனிதனாக வளர்த்தேன் என்பதை விட,நல்ல ஒரு ஆத்மா எனது மகனது உடல் வடிவத்தில் இந்த உலகில் வாழ எங்கள் மூலமாக வந்தது, அதுதான் உண்மை " என்றார் !!!
அந்தக் கணத்தின் கனத்த உண்மையை சூர்யா உணர்ந்திருப்பார் என்றே அவரது அந்தக் கணத்தின் தோற்றம் உணர்த்தியது. இந்த நிமிடம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிமிடம் என்றே சூர்யாவும் சொன்னார். நல்ல ஒரு தகப்பனும், தகுதியான ஒரு மகனும் ஒரே கோட்டில் இணைந்த அழகிய ஒரு தருணம் அது !
![]() |
| அந்தக் கணம்.... |
![]() |
| ஒரு மனிதனாக உயர்ந்த சூர்யா என்னும் சரவணன்... |
பளிச்சென்று திரை விலகியது போல சைவ சித்தாந்தத்தின் முற்றான உண்மையை அந்த ஒரு வாக்கியம் உணர்த்தியதாக எனக்குப் பட்டது !
எந்தரோ மகானுபாவு அந்தகிரி வந்தனமு !!!












