குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, March 19, 2009

99.குறுந்'தொகைகள்-19-03-2009

கோககோலா நிறுவனம் சீனாவின் புகழ்பெற்ற பழரச தயாரிப்பு நிறுவனமான ஹூயுவான்-Huiyuan-நிறுவனத்தை சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முயற்சித்தது.


இந்த முயற்சியை சீனாவின் வர்த்தக அமைச்சகம் மோனோபாலி தடைச்சட்டத்தை பிரயோகித்து தடை செய்து விட்டது நேற்றைய செய்திகளின் படி.இது மேற்குலகத்திற்கு முதுகுத்தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு.ஏனெனில் கோக் நிறுவனத்தின் தரப்பில் இந்த தடையை எவரும் எதிர்பார்க்க வில்லை போலிருக்கிறது.


இந்த ஒப்பந்தம் முடிவாகி இருந்தால் சீனாவின் பானங்கள் சந்தையின் 40 சதவீத்தை கோக் நிறுவனம் கட்டுப்படுத்தி இருக்கக்கூடும்.இந்த தடையின் மூலம் சீனா தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது.

கோக், ஹீயுவானை வாங்கி இருந்தால் சீனாவில் பழரச மார்க்கெட்டில் கோக் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.அது மட்டுமின்றி கோக் அந்த ஒரு பழரச நிறுவனத்துடன் நின்றிருக்காது.அந்த முயற்சியை அனுமதிக்காததன் மூலம் தன் நாட்டின் குடிகளுக்கு பலவித தேர்வுகளுக்கு வாய்ப்பை நிலைநிறுத்தி இருக்கிறது சீனா.


இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான நோக்கில் மட்டுமன்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்;அந்த வகையில் சீனாவின் செயல் மெச்சப்பட்டாலும்,இதே வகையான சீனாவின் அயல்நாட்டு நிறுவன கையகப் படுத்தும் முயற்சிகளிலும் மற்ற நாடுகளும் இதே நிலையையே எடுக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.


இதனுடன் இந்தியாவில் 90 களில் கோக் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பு நோக்கினால் காணாமல் போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.


பிரான்ஸின் டாணோன்-Danone-நிறுவனத்தை கையகப்படுத்த கோக் செய்த முயற்சிகளும் இவ்வாறே நிறுத்தப்பட்டதும் நினைவு கொள்ளத் தக்கது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விதயங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மத்தியிலும் சீனா எச்சரிக்கையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்காக அமெரிக்கா கோபப் படலாம்,ஆனால் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது.சென்ற மாதத்திலேயே அமெரிக்க பணப்பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டில் இனி கவனம் வைக்கப் படும் என்று சீனா அறிவித்தது.ஒருவேளை அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கான ஆப்பு பெரிதாக அடிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன;ஏனெனில் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை-capital flow deficit-இருக்கும் நிலையில்,அமெரிக்கப் பணப் பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்யும் இரு நாடுகளில் ஒன்றான சீனாவைப் பொருளாதார ரீதியாக பகைத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா,இந்தக் காரணங்களால்தான் ஆசியாவில் ராணுவ ரீதியாக பலமான நாடாக இந்தியா இருப்பது அவசியம் என்று அணு ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு உதவுவது போல போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.....


0 0 0


இலங்கை ஜெயராஜ் அவர்களின் கம்ப இராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி பதிவர் கோவி கண்ணன் பதிவிட்டிருந்தார்.கடைசி நாளாயிருப்பினும் நேற்று செல்ல முயன்றும் முடியாது போனது.


கம்பன் கவிகளின் ரசவாதத்தை பலரும் ஆய்ந்து நம் போன்றவர்கள் அருந்தி(வாசித்து) மகிழ வழங்கியிருக்கிறார்கள்.தமிழகத்தில் ஒரு அழகான அறிஞர்கள் வரிசையே இந்த இணையற்ற செயலில் ஈடுபட்டு தாமும் தமிழாய்ந்து மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தார்கள்.


டி.கே.சி,ம.பொ.சி,போன்றவர்கள் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் பின்னாட்களில் அறிஞர் அ.ச.ஞா அவர்களால் புதிய நிலைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.அவரது பன்முக ஆய்வு நோக்கும்,கவிப் பார்வையும் நிரம்பிய நூல்கள்-சொற்பொழிவுகள்,இன்று நாம் ஒரு தகவல் தொழில் நுட்பத்தில் கடினமான ஒரு ரிப்போர்ட்டை வாடிக்கையாளர் கேட்ட விதம் போல திருப்தியுடன் வடிவமைத்துக் கொடுத்தால் கிடைக்கும் இன்பத்தை அளிக்க வல்லன.


இஸ்மாயில் போன்ற ஜனரஞ்சகமானவர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் அ.ச.ஞா போன்றவர்களின் முன்னர் சூரியனின் முன்னர் விடி விளக்குப் போலத்தான் தோன்றினார்கள்.


திரு.ஜெயராஜ் அவர்கள் கடல் தாண்டிய நாட்டில் அறிஞர் அ.ச.ஞா அவர்களின் மரபில்-school of thought-வந்தவர்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய ஒரு புத்தகம் அழியா அழகு என்று நினைக்கிறேன்,கம்பனின் அழகியல் விரிவுரைகளில் ஒரு நல்ல தேர்ந்த முயற்சி.


இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதை அறியும் நண்பர்கள் சிறிது முன்கூட்டியே அறிவித்தால் உபயோகமாயிருக்கும்.


ஒரு அழகிய தமிழ் மாலையைத் தொலைத்த வருத்தம் இன்னும் இருக்கிறது...


0 0 0


நடிகர் ராதாரவி திரும்பவும் திமுக வில் ஐக்கியமாகியிருக்கிறார்...

தூ!!!

Monday, March 2, 2009

98.காதல்....பிறழ்ந்து கொண்டிருக்கிறதா காதல்????!!!!!!

காதல்!

உலகத்தின் உன்னதமான உணர்வுகளில் ஒன்று.

காதல் காதல் காதல் அது போயின்
சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி.காதலிக்கும் பெண் அளிக்கும் உற்சாகம் விண்ணையும் வெல்லும் சக்தியை அளிக்கும் என்றும் முரசறைந்தவன் அவன்.
இளமைப்பருவத்தில் தோன்றும் உன்னத உணர்வுகளில் ஒன்றான இதில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களும் யுவதிகளும் காதலின் உத்வேகம் மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் வெற்றிகளை வாழ்வு முழுதும் அனுபவிக்கும் அளவிலும் காதல் அமைவது உண்டு.தவறான ஒரு இணையைத் தேர்ந்தெடுத்து விட்டால் வாழ்வை சீர் குலைக்கும் எமனாகவும் மாறக் கூடிய அளவு மோசமான வீர்யமும் கொண்டது காதல்.


பல காதல்களில் தன் தேர்வைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் காதலில் பழகத் துவங்கிய பிறகு பல இணைகளுக்குத் தெரியும் வாய்ப்புளும் உண்டு;இந்த சூழ்நிலைகளில் கூட தன் அறியாமையை நினைத்து நொந்து கொண்டு விலகித் தப்பிக்கும் பல இளையர்களும் உண்டு.

இப்படியான நிகழ்வுகள் நம்மில் பலருக்கு இருந்திருக்கலாம்;அல்லது நமது இளமைக்காலத்தில் நம் தோழர்களிடையே இந்த விதமான எடுத்துக் காட்டுகளையும் நாம் பார்த்திருப்போம்.


ஆனால் காதலித்து விட்டோம் என்ற ஒரு காரணத்திற்காக,தான் தேர்ந்தெடுத்த நபர் அல்லது பெண் தீய குணங்கள் கொண்டவர் என்ற நிலையில் கூட,அந்த விவரங்கள் நன்கு தெரிந்த நிலையிலும் கூட,காதலைத் திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் இளையர்கள் இருப்பார்களா?


அதாவது,தான் தேர்ந்தெடுத்த இணையைப் பற்றிய மோசமான குணாதிசயங்கள் தெரியாத நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவை தெரிய வரும் போது அதிர்ச்சி அடைந்து தாம் தவறு செய்து விட்டாதாக நொந்து கொள்வோர்களைப் பற்றி நான் சொல்லவில்லை;மாறாக திருமணத்திற்கு முன்பே தான் தேர்ந்தெடுத்த நபர் அல்லது பெண் முழுக்க தவறான குணநலன்கள் கொண்ட நபர் என்று தெரிந்த பின்பும் அவர்களிடமிருந்து விலக இயலாமல் தன்னை சூழ்நிலைக் கைதிகளாக்கிக் கொள்ளும் நபர்களைக் கேள்விப்பட்டிருக்கறீர்களா?(நான் இதில் காமம் பற்றிப் பேசவே இல்லை,அதாவது அவர்களிடையே ஏற்கனவே உடல் சேர்க்கை ஏற்பட்டு விட்டது அதனால் பிரிய இயலாத நிலையில் இருக்கிறார்கள்-என்ற ஒரு கோணம் பற்றிப் பேசவில்லை).


நவீன காலக் காதல்களில் பல இளம் பெண்கள் இந்த விதமான முட்டாள்தன முடிவுகளை எடுக்கிறார்கள் என்ற ஒரு செய்தியைப் படித்த போது எனக்கு வியப்பேற்பட்டது,இந்த அளவுக்கு முட்டாள் தனமாகக் கூட இன்றைய இளைஞிகள் சிந்தனை ஊனத்தில் இருப்பார்களா என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை.

குழம்புகிறீர்களா..பின்வரும் செய்தியைப் படியுங்கள்...இது அவள் விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கல்லூரி முதல்வரின் கடிதம் இது..



டந்த இதழில், தாங்கள் வெளியிட்டிருந்த 'காதல் என்னும் அடிமை சாசனம்' கட்டுரை படித்தேன். இன்றைய கல்லூரி மாணவிகளின் மிக முக்கியமான பிரச்னையை அவசியமான தருணத்தில் வெளி உலக்குக்குச் சொல்லி அலாரம் அடித்திருக்கிறீர்கள்! (அபாயமணி என்றும் மாற்றலாம்!) கல்லூரிப் பேராசிரியையாக 15 ஆண்டுகள் வேலை பார்ப்பவள் என்கிற முறையில் சொல்கிறேன்.. அந்தக் கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்த வார்த்தைகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு நிஜம்!

காதல் என்கிற மாய விலங்கை விரும்பி அணிந்து கொண்டு, பின்னர் அதற்காக வருந்தும் எத்தனையோ மாணவிகளை நானே தினம் தினம் பார்க்கிறேன். காதலன் சொன்னதற்காக செமஸ்டரை எழுதாமல் விட்ட மாணவியைப் பற்றித்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள்.. ஆனால், காதலனின் சந்தேக புத்தியினாலேயே ஒரு மாணவி, கோ-எட் கல்லூரியில் இருந்து மகளிர் கல்லூரியான எங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? இதைக் காட்டிலும் மோசமான அடிமை நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள் இளம் பெண்கள்!

எனக்குத் தெரிந்து பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் நிலைமை தலைகீழாக இருந்தது. அப்போதும் மாணவிகள் காதலித்தார்கள்.. ஆனால், பிடி அப்போது பெண்ணின் கைகளில்தான். ''போ.. உன்கூடப் பேச மாட்டேன்..'', ''உன் லெட்டரைப் பிரிச்சுக்கூடப் பார்க்க மாட்டேன்..'' போன்ற ஆயுதங்களுக்கு அப்படியே அடிபணிவார்கள் பையன்கள்.

அப்படி இருந்த நிலைமை, இன்று இப்படி மாறிப் போயிருக்கிறது என்றால், என்ன காரணம் தெரியுமா? இந்தக் காலத்தில் காதலின் தன்மையே மாறிப் போயிருக்கிறது. ஆம்.. நான் படித்த காலத்தில் கூட, ''நான் இவனைக் காதலிக்கிறேன்'' என்று எந்தப் பெண்ணும் தைரியமாக சொல்லிக் கொண்டதில்லை. மிக நெருங்கிய தோழிகளுக்குக்கூடத் தெரியாமல் பரம ரகசியமாக நடக்கும் அவர்களின் சந்திப்பு. கல்லூரிப் படிப்பு முடியும் வரை யாருக்குமே சந்தேகம் வராமல் சமிக்ஞைகளில் காதலித்த ஜோடிகள் எல்லாம் உண்டு. கல்யாணப் பத்திரிகை கொடுக்க வரும்போது, ''ஊமைக் கோட்டான்களே!'' என்று நானே பலரை செல்லமாகத் திட்டியிருக்கிறேன். ஆனால், அவர்களின் திருட்டுத்தனத்தை ரசித்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே காதலை களவு என்று ஏன் குறிப்பிட்டார்கள்? இந்தக் கள்ளத்தனம் தேவை என்பதால்தானே!
ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் நிலைமை அப்படி இல்லை. ''இவன் என்னோட பாய் ஃப்ரெண்ட்'' என்று சொல்லிக்கொள்வதில் மாணவிகள் பெருமைப்படத்தான் செய்கிறார்கள். மாணவர்களோ, ''இவள் என் ஒய்ஃப்!'' என்று அறிமுகப்படுத்தும் அளவுக்குப் போய்விட்டார்கள். நான் ஒரு பேராசிரியை. எனக்கே மாணவ, மாணவிகளின் காதல் பற்றி இத்தனை தெரிகிறதென்றால், அவர்கள் எத்தனை வெளிப்படையாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள்!

எல்லோருக்கும் தங்கள் காதல் தெரிந்து விட்டது.. இனிமேல் அவனைப் பிரிந்தால் சக மாணவிகளே தன்னைத் தவறாகப் பேசுவார்கள் என்ற பயம் காதலிக்கும் மாணவிகள் எல்லோரிடமும் இருக்கிறது. அவன் சொற்படியெல்லாம் இவர்கள் ஆடுவதற்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இப்படி என்னை சிந்திக்க வைத்தவள் என் மாணவி ஒருத்திதான். அவள் பெயர் தேவி! (பெயரை மாற்றி இருக்கிறேன்).

கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே துறுதுறுப்பான பேச்சாலும் அபாரமான ஓவியத் திறமையாலும் எங்களுக்கெல்லாம் 'பெட் மாணவி' ஆனவள் தேவி. ஓவியப் போட்டி என்று எங்கு சென்றாலும் அவள் பரிசு வாங்காமல் திரும்பியதே இல்லை.

அப்படிப்பட்ட பெண் ஒருநாள், தான் ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டதாகச் சொன்னாள். மாநில அளவில் நடைபெறவிருந்த ஒரு போட்டிக்காக அவளைத்தான் நாங்கள் அனுப்பி வைக்க இருந்தோம். ஒரு மணி நேரம் அவளோடு பேசிப் பார்த்தும் பயனில்லை. பிறகுதான் அவள் தோழிகளின் மூலம் விபரம் அறிந்தேன்.. அவளுடைய காதலன்தான் இனி ஓவியமே வரையக் கூடாது என்று அவளிடம் சொல்லிவிட்டானாம். ''ஏன்?'' என்று அதிர்ச்சியோடு கேட்டேன். ''அது வந்து மேம்.. 'டிராயிங்ல அவ பெரிய ஆளா பேர் வாங்கிட்டா, தன்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவாளோனு அவன் பயப்படுறானாம். 'நான் முக்கியமா.. டிராயிங் முக்கியமா?'னு கேட்டிருக்கான்.. இவ டிராயிங்கை விட்டுட்டா''
- அவள் தோழிகளே தலை யில் அடித்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறார்கள். ஆனால், அவளுக்கு அவன் மேல் வெறுப்பே வரவில் லையே.. ஏன்? - இந்தக் கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஒருமுறை தேவியை தனியே அழைத்துப் பேசினேன். எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லி ஆறுதலாகப் பேசினேன். ''அவன் சந்தேக புத்தியும் பொறாமையும் உனக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டேன். ''எல்லாமே புரியுது மேம்'' என்று சொல்லி அதிர்ச்சி தந்தாள் அவள். தாரை தாரையாக அவள் கன்னமெங்கும் கண்ணீர்!

''அவன் கூடப் பழகின புதுசுலதான் மேம் நான் சந்தோஷமா இருந்தேன். அதுக்கு அப்புறம், அவன் சொல்றவங்ககிட்டதான் பழகணும்.. அவன் சொல்ற டிரெஸ்ஸைத்தான் போடணும்னு என்னோட சுயத்தையே இழந்துட்டேன் மேம். ரவுடிங்க சிநேகிதம், சிகரெட் பழக்கம்னு அவனோட இன்னொரு முகமும் இப்போதான் தெரியுது. இதெல்லாம் தெரியாம ஊரே பார்க்குற மாதிரி அவனோட வெளிய சுத்தியிருக்கேன் மேம்.. அதுதான் இப்போ என்னோட பிரச்னை.
நம்ம கிளாஸ் பொண்ணுங்க எல்லாருக்கும் அவனைத் தெரியும். ஒரு நாள் தியேட்டர்ல வச்சு 'இன்ட்ரோ' கொடுத்திருக்கேன். அதெல்லாம் ஏன்.. அவனைத்தான் கட்டிக்கப் போறேன்னு ஒரு தடவை வீட்டுல சொல்லி, பெரிய பிரச்னையே பண்ணிட்டேன். அப்பாவும் ஒருநாள் அவனை வீட்டுக்கு வரச்சொன்னார். பேசினார். அப்புறம் கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லிட்டார். அதுக்கப்புறம்தான் அவனோட மனசு இவ்வளவு குறுகினதுன்னே எனக்குத் தெரிய வந்தது. இப்போ எதையுமே மாத்த முடியாது மேம்'' என்றவள், அதற்கு மேல் பேசக்கூட வலுவில்லாமல் அழுதுவிட்டாள்.

இது நடந்தது சென்ற ஆண்டில். இப்போது.. இரண்டு வாரங்களுக்கு முன் தேவி கல்யாணப் பத்திரிகையோடு வந்தாள். அவள் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை.

''அவருக்கு சரியான வேலை இல்லை மேம். நான் படிச்சு முடிச்ச உடனே நல்ல சம்பளத்துல வேலைக் குப் போனேன் இல்லையா? அது அவருக் குப் பிடிக்கலை. வேலையை விடச் சொல்லி மிரட்டிக் கிட்டே இருந்தார். நானும் ஏதேதோ சமாளிச்சுக் கிட்டிருந்தேன். கல்யாணத் துக்கு அப்புறம் கண்டிப்பா வேலை பார்க்கக் கூடாதுனு சொல்லிட்டார். இப்போ தான் ஆபீஸ்ல ராஜினாமா கொடுத்துட்டு வர்றேன். இனி என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கும். நினைக் கவே பயமா இருக்கு.

முதல்ல என்னோட திறமையைக் கொன்னார். இப்போ என்னோட தன்னம்பிக்கையா இருந்த வேலையைப் பிடுங்கிட்டார். அவரைப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. ஒருவேளை நான் அவரோட சேர்ந்து ஊர் சுத்தாம இருந்திருந்தா.. எங்க லவ் நாலு பேருக்குத் தெரிஞ்சு அசிங்கப்படாம இருந்திருந்தா.. சத்தியமா இப்படி ஒருத்தரை நான் கட்டிக்கிட்டிருக்க மாட்டேன் மேம். எல்லார்கிட்டயும் இதைக் காதல் கல்யாணம்னு சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா, எனக்கு ஒரு சதவிகிதம் கூட பிடித்தம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்குது. இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக் கூடாது மேம்..'' என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்தபடியே எழுந்தாள்.

கடைசியாக என் பக்கம் திரும்பி, ''மேம்.. இந்த வருஷ செட்டுலயும் என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க யாராவது பையன்களோட சுத்துவாங்கல்ல..? தினமும் காலேஜுக்கு அவனோட பைக்ல வந்து இறங்குவாங்கல்ல..?'' என்றாள். நான் 'ஆமாம்' என்று தலையாட்ட, அவள் இதழோரம் தெரிந்த அந்த விரக்தியான புன்னகைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அந்தப் புன்னகை தந்த வேதனையோடு....

ஒரு பேராசிரியை!


இவை போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்வது ஏன்?இது சமூக விமர்சனத்தின் மீதான பயமா அல்லது just முட்டாள்தனமா?

இதை காதலின் எந்த வரையறைக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளமுடியுமா???!!!!!!

Sunday, March 1, 2009

97-குறுந்’தொகைகள் -01032009

ரஹ்மான்-ராஜா சர்ச்சை முன்னவர் ஆஸ்கர் வாங்கியிருக்கும் இந்த நேரத்தில் அதிகமாக எழுப்பப்படுகிறது.
தகுதிகள் என்ற நிலையில் ராஜாவுக்கு நிச்சயமான இசைத்தகுதிகள் இருக்கின்றன.ஆனால் மற்ற வகைகளில்???

ரஹ்மானின் பொதுமுகம்-தனிப்பட்டு எப்படி இருந்தாலும்-மிகவும் பண்பட்ட,சமூக மென்மையான,எவரையும் கடியாத முகம்.அதை அவர் ஒரு மேலாண்மை-management-சார்ந்த விதயமாகக் கூட கடைப்பிடித்திருக்கலாம்.ஆனால் அவரது பொதுமுகம் நட்பானது.ஆனால் ராஜா பல சந்தர்ப்பங்களில் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறார்,வெளிப்படையாக...திரையுலகத்திலும்,இசையுலகத்திலும் இதற்கான தரவுகள் நிறையக் கிடைக்கின்றன.கூடவே எவருக்கும் இருக்கக்கூடாத தலைக்கனம்.இதுவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருப்பதாகப் பலர் சுட்டுகிறார்கள்.இது ராஜாவுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையால் கூட இருக்கலாம்;ஏன் சொல்கிறேன் என்றால்,பாடகர் பாலுவும் கங்கை அமரனும் கலந்து கொண்ட காபி வித் அனுவில் ஒரு சம்பவத்தை பாலு நினைவு கூர்ந்தார்.அது ஏவிஎம் போன்ற படப்பிடிப்புத் தளங்களில் எவ்வாறு ராஜா ஒரு கட்டமைக்கப்பட்ட ஒளிவட்டத்திற்குள்,சாதாரணமாக வேடிக்கை,சிரிப்பு போன்ற இயல்பு நிலையற்று துறவி,குரு என்ற அளவில் அனைவரும் 2 அடி எட்ட நின்று வணங்க வேண்டிய நிலையில் இருக்க விரும்புவார் என்பதையும்,அதை உடைக்க பாலு ராஜாவை கிச்சு கிச்சு மூட்டி ஏவிஎம்மின் அந்தத் தளமெங்கும் சிரித்து ஓடவிட்டதையும்,இவ்வளவு சிரிப்பையும் உற்சாகத்தையும் ராஜா ஏன் ஒளித்து வைக்கிறார் என்று தான் கேட்டதாகவும் விவரித்தார்.அதைக் கேட்ட கணத்தில் ராஜா என்ற மனிதனின் மனப்பான்மை அவ்வாறான ஒரு ஒளிவட்டத்தை தனக்கு விரும்பி அமைத்துக் கொண்ட ஒன்று என்பது என் துணிபு.

இது ஒரு காரணம்.

இந்த குணத்தின் நீட்சியே மணிரத்னம் மற்றும் பாலசந்தர் போன்ற திறமையாளர்கள் இசைக்கு வேறு நபர்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது,பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை! He never turn back !

இரண்டாவது காரணம் முன்னவருக்கு இருந்த தொழில்நுட்பத்தில் மேம்படுத்திக்கொள்ளும் வேட்கை.
ரஹ்மான் அன்றன்றைய புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு தான் மேலும் சிறப்பாக தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒரு வேட்கையுடன் இருந்தார் என்பது மிக வெளிப்படை.ரோஜா படத்தின் போது ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கூடமாக இருந்த அவரது இடம் இப்போது இந்தியாவின் சிறந்த ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள்.எனவே டெக்னிகல் எக்ஸலென்ஸ் இன்னொரு முக்கியக் காரணம்.ராஜா-இசைஞானி,அவர் இல்லாவிட்டால் எந்தப் படமும் ஓடாது என்று 80 களில் எழுப்பப்பட்ட பிம்பங்களினால் தேங்குநீர் நிலைக்குச் சென்று தன் வீழ்ச்சிக்கு அடிகோலிவிட்டார் என்பது உண்மை.

மூன்றாம் காரணம்-சந்தைப் படுத்துதல்.ரஹ்மான் திரை இசை சாராத இசைத்தட்டுக்கள் மூலம் அடிக்கடி திரை அல்லாத இசை வடிவங்களில் தன் தேர்ச்சியை வெளிப்படுத்தவும் அவற்றின் சந்தைப்படுத்தும் உத்திகளின் மூலம் இசையுலகின் பல சந்து பொந்துகளிலும்-நூக் அன்ட் கார்னர்-தன்னுடைய பெயரின் பரிச்சயத்தையும் இருப்பையும் உறுதி செய்தார்.இது அவருக்கு தமிழ்த்திரையுலகை மீறிய இந்தி மற்றும் உலக அளவில் இசைக்கான பல வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் ராஜா தமிழ்த்திரையுலகிலேயே தேய்ந்து முடங்கினார்.நத்திங் பட் விண்ட்,ஹவ் டு நேம் இட் மற்றும் திருவாசகம் தவிர வேறு குறிப்பிட்ட முயற்சிகள் இருக்கின்றனவா தெரியவில்லை!

இம்மூன்று காரணிகளிலும் தான் ரஹ்மான் ராஜாவை வென்றார்,ஆஸ்கர் மூலம்;இசையில் அல்ல !

ஆனால் ஒன்று....500 படங்களுக்குப் பிறகு ராஜா அளித்த தளபதி படம் ஒரு புயல் போல வந்த இசை விருந்து.500 படங்களுக்குப் பிறகு ரஹ்மான் எங்கிருக்கிறார் என்று பார்ப்போம்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் அளிக்கும் இந்தக் கணத்திலும்!

ரஹ்மான் பற்றிய ஒருமுழுத் தகவல் பதிவு ஷாஜி என்பவர் எழுதி ஜெமோ.தமிழ்ப் படுத்தியது...அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று


0 0 0


வழக்கறிஞர்கள்-காவல்துறை மோதல் சர்ச்சைகயில் மெது மெதுவாக காவல் துறைதான் தவறு செய்தது என்ற விதமான முடிவுக்கச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழக காவல்துறை மிக யோக்கியமான துறைகளில் ஒன்று;அவர்கள் அனைவரும் புனிதர்கள் என்பது என் கூற்றல்ல.ஆனால் வழக்கறிஞர் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே அவர்கள் எந்தவிதமான சட்ட,சமுதாய வரைமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல என்ற விதத்தில் நடந்து கொள்வது நல்லதல்ல.

இலங்கைத்தமிழர் நலன்,தாழ்த்தப்பட்டவர் நலன்,நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் விவகாரம் என்ற பலவற்றையும் இதில் இழுத்து விடுவதை ஒரு தேர்ந்த அரசு அனுமதிக்கக் கூடாது.இந்த அனைத்து விதயங்களிலும் இருக்கும் நியாயங்கள் என்பது வேறு;சட்டம் ஒழுங்கு என்பது வேறு.

முந்தைய சாக்குகளைச் சொல்லி,இரண்டாவதை தூக்கி எறிவதை ஒரு சரியான அரசு செய்ய அனுமதிக்கக் கூடாது.


0 0 0


உலகெங்கும் இருக்கும் பொருளியல் மந்தநிலையின் கயாஸ் தியரி விளைவுகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சிங்கையின் இந்தக் காலாண்டின் பொருளியல் வீழ்ச்சி 16%,அதாவது -16%.இதுவரையிலான வேலை இழப்புகள் 20000 த்தைத் தாண்டிவிட்டன.இந்தியா போன்ற வளரும் தேசத்தில் கூட அதிகமான வேலை இழப்புப் புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இருள்தான் தெரிகிறது;சுரங்கத்தின் முடிவிலான ஒளி-லைட் அட் த எண்ட் ஆஃப் டனல்-எப்போது வரும் என்று தெரியவில்லை.ஒபாமாவின் கொள்கை சாரந்த முடிவுகள் வேறு சேவைத்துறைகளை மிகவும் பாதிக்கும் சாத்தியங்களும் உண்டு.சேவைத்துறை அளித்த முடுக்கத்தில்-impetus-பந்தா காட்டிக் கொண்டிருந்த இந்தியத் தொழில் துறை என்ன ஆகும்?


0 0 0


முதல்வர் மு.கருணாநிதி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார்.
இந்த நேரத்தில் அவரது கடைநிலை வரை அவர் வேறெந்த உடல் உபாதைகளாலும் சிரமப்படாது,நல்ல உடல் நலத்துடன் இருக்க அவரை வாழ்த்துவோம்.

மருத்துவமனையிலிருந்தே(என நினைக்கிறேன்!) இனியான அவரது உயிர் உங்களுக்கானது,அதாவது மக்களுக்கானது என்ற விதத்தில் ஒரு (அரசியல்) அறிக்கை விட்டிருக்கிறார்.அவருக்கான சிகிச்சை உயிரைப் பாதிக்கும் அளவுக்கான எந்த நோய்க்கும் இல்லை என்பதும்,முதுகுவலிக்கானது என்பதையும் இந்த நேரத்தில் யாரும்,குறிப்பாக கழக மணிகள் நினைவில் கொள்ள மாட்டார்கள்....போகட்டும் அதெல்லாம் விதயமல்ல!

அவர் திரும்ப வரும் வழியில் திமுக கட்சியின் கொடியினைத் தாங்கி எண்ணற்றவர்,சுமார் 1000 பேராவது இருப்பார்கள் என நினைக்கிறேன்-வீதிகளில் அவரது கார் வரும் வழியில் நின்றார்கள்,வழியின் இரு புறங்களிலும்.

எனக்கு எழுந்த சந்தேகம்...

இவர்கள் எல்லாம் யாவர்? அவரது வீட்டில் பார்த்து அவரை நலம் விசாரித்து அளவளாவக் காத்திருந்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.அவரைப் பார்த்து ஒருவார்த்தை பேச இயலாத அல்லது நலம் விசாரிக்கவோ இயலாத இந்த தெருக்காத்திருப்பு எதற்கு? அந்த அளவுக்க வேலை வெட்டி இல்லாதவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன???!!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...