குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, December 16, 2018

195- யதி - ஒரு கருத்துரை

கதையாசிரியர் பாரா- என் பார்வையில்
எழுத்தாளர் பாரா அவர்கள் எழுதிய மிக சமீபத்திய நாவல் யதி.

இதற்கு முன்பாக அவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த நாவல் பூனைக்கதை; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் முழு நேர எழுத்தாளர் பணியிலிருந்து விலகிய (அல்லது கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்த நேரத்தில் அவ்வாறு நான் புரிந்து கொண்ட) நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன்.

நேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில் காட்சிப்புலத்தில் (திரை, சின்னத்திரை)  அவர் வசனகர்த்தாவாக நுழைந்த போது (அதையும் நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தேன்!) ஒரு எழுத்தாளராக அவர் நீர்த்துப் போகப் போகிறார் என்ற கவலையுடனும், ஆதங்கத்துடனும் பார்த்திருந்தேன். ஆனால் அவர் சின்னத்திரை வசனகர்த்தாவாகவம், அவ்வப்போது (ராட்சச வேகத்தில்|அவதாரத்தில் விசுவரூபமெடுக்கும்) தொடர்ந்த எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அந்த நிரூபித்தலின் சமீபத்திய சாட்சிகள் பூனைக்கதையும், யதியும் !

அவரை ஒரு எழுத்தாளராக எனது பதின்ம அல்லது இருபதின்ம நாட்களில் அவர் கல்கி குழுமத்திலிருந்த காலத்திலிருந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவ்வப்போது, கண்ணில் படுகிற அவரது முக்கியமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்கியில் அவர் புழங்கத் தொடங்கிய காலத்தில் அவர் வேண்டியமைத்துக் கொண்ட ஒரு தனித்துவமான நடை அவரை தனித்துக் காட்டியது; பிற்காலங்களில் அந்த நடை வலிந்து அமையாமல் அவ்வப்போது இயல்பாக நுழைந்து வெளியேறுவது போலவே அவரது எழுத்தில் தோன்றவாரம்பித்தது; இதற்குக் காரணம்  ஒரு கதைசொல்லியாக அவருக்கு கைவந்த மொழியின் இலாகவம். எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பா.ராவால் நேர்த்தியாக எழுத முடியும் என்ற நிலைக்கு அவர் வந்து வெகுகாலம் ஆயிற்று. இந்த நிலையை அடைவது ஒரு எழுத்தாளருக்கான பூரணத்துவத்துங்களுள் ஒன்று. [யதியின் கதைசொல்லியாக தன்மை நிலையில் வரும் விமல் பாத்திரமும் கூட இப்படி ‘மொழியின் குழந்தை’ என்றுதான் விளிக்கப்படுகிறான் ;)].
அப்படியான நிலையை அவர் அடைந்த பின்னர் (என்ற எனது கருத்தில் ) அவர் எழுதிய முதல் நாவல் அலகிலா விளையாட்டு; பின்னர் புவியிலோரிடம்; பின்னர் ரெண்டு ஒரு வித்தியாசமான கதைக்களனுக்காக சலசலக்கப் பட்ட ஒரு புனைவு.
ஆனால் இதுநாள் வரையான அவரது 20 ஆண்டு கால, அல்லது சற்றேறக்குறைய முன்பின்னான, கால அவகாசத்தில் அவரெழுதிய புனைவுகளில் எனக்கு துலக்கமாக நினைவில் நிற்பது அலகிலா விளையாட்டு மட்டுமே.

இரண்டாவதாக புவியிலோரிடம்.

இப்போது யதி, பூனைக்கதை இரண்டும் ! (பூனைக்கதையின் முதல் இரு பாகங்கள். சரியாகச் சொல்ல வேண்டுமானால்! :)

இவற்றில் யதி அதனது அடர்வு, களம், நெடிதோட்டம், சாகசம், புனைவின் அழகியல், அவ்வப்போதான பாத்திரங்கள் வாயிலான பாரா வின் தத்துவக் குறிப்புத் தெறிப்புகள் போன்ற காரணங்களால் இனி எளிதாக முதலிடம் பெற்று விடும் என்று தோன்றுகிறது.

களம், இரசிப்புகளுக்கான கூறுகள் :

புனைவோ அல்லது அபுனைவோ நல்ல நூல்கள் பலவற்றுக்கான ஆதார குணம் ஒன்று உண்டு; அது வாசகனின் மன விவாதத்தைக் கிளப்பி அவனை சிந்திக்க விடுவது.

பதின்மங்களில் நான் படித்த ஒரு புனைவு, வாழ்வில் நான் எதிர் நோக்கப் போகின்ற அத்தனை பொருதங்களையும் அதன் நடு மண்டையின் உச்சியில் அடித்து எதிர் கொள்ள வைத்த ஒரு வல்லமையை எனது சிந்தனைக்குள் விதைத்தது; அது 16 வயதில், அன்றிலிருந்து இன்று வரை எனது நெருங்கிய நட்புகளில் ஒருவனான தங்கமணி பரிந்துரைத்த,  ஒரு மனிதனின் கதை என்ற உருஷ்ய புனைவின் தமிழாக்கம் அது; பதினேழு வயதில் திஜா வின் மோக முள்ளைப் படித்து அந்த முள் கிளறிய வலியை பல நாட்கள் விவாதித்துச் சுமந்து கிடந்து கடந்த வாலிபம் எங்களது; ஜெயகாந்தனைத் தொட்ட கணங்களில் படித்த அக்கினிப் பிரவேசம் படித்த  அக்கணத்தின் அதிர்வும், அட, சரிதானே இந்த ஆள் சொல்றது.. என்று பின்னரேற்பட்ட உணர்வும் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது; பதினெட்டு வயதில், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ’வைப் படித்து விட்டு நானும் தங்கமணியும் (Dr.Thangamani Nithyanatham,இன்றைய இயல்பியல் துறை முனைவர், பறவையியல் புகைப்படக் கலைஞர்), சுந்தரும் (Dr. சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியம், Prana science என்று கூகிளிட்டால் இவன்(ர்) இன்று என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியலாம். J ) இரண்டரை மணி நேரம் அதை விவாதித்திருக்கிறோம். 

யதியும் இவ்விதமான மன விவாதத்தை எனக்குள் நிகழ்த்தியது; நிச்சயம் உங்களுக்குள்ளும் நிகழ்த்தலாம்!

யதியின் களம் அவரே அவரது முன்னுரையில் சொல்லுகின்ற படி சன்னியாசிகளின் உலகில் உழலும் ஓரு கதையின் களம்; நான்கு சகோதரர்களும் துறவறம் பூண்ட, வேறு குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பத்தின்,  அவர்களுக்குள் நிகழ்கிற வாழ்வின், அவர்கள் அமைத்துக் கொண்ட அல்லது தேடியடைகிற துறவின், வேறுபாடுகளுக்குள் திளைத்துக் கிளம்புகிற, அந்த முயற்சியில் இடம் பெறுகிற பல்வேறு செய்திகள், தத்துவங்கள், திடுக்கிடல்கள், கதை போகிற போக்கில் இடம் பெறுகிற சில சமகால அல்லது சமீபத்திய உண்மை நிகழ்வுகளின் படிமங்கள், சில கொலைகள் அனைத்திலும் ஊடாடிக் கிளம்புகிற கதை யதி.

இப்படித் துறவின் பல கிளைத்துவங்களைப் பாடுபொருளாக வைத்து இன்னொரு புனைவு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அவ்வாறில்லையெனில் அக்காரணத்திற்காகவும் யதி முதன்மை பெறும்.

கதைக்களனுக்கு அப்பால் மேலும் துலக்கமாக நான் இரசித்தது அவ்வப்போது யதியின் பாத்திரங்கள், பெரும்பாலும் விமலன், வெளியிடுகின்ற அல்லது சிந்திக்கின்றனவாக கதையில் வருகிற தத்துவார்த்தமான ஓரிரு வாக்கியங்கள் !  அவற்றை நான் மிகவும் இரசித்தனால் எனது முன்னுரை முடிவில் அவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன், என்னைப் போலவே இரசனை உள்ளவர்கள் ஒரு ஓட்டமாக அவற்றை வாசிக்க முன்னுரையின் இறுதியில் நேரம் ஒதுக்குங்கள் J. மாதிரிக்கு இங்கு இரண்டு மட்டும் – பாகம் 1 நீலக்குறிஞ்சியில்…

ஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்க முடியாது போய்விடும் போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.
நல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

()

சிப்பிக்குள் சித்திரம் எழுதுவது போல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு! ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது.

()
சிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது? எது கெட்டது? எது மருந்தாகும்? எது விஷமாகும்? யாரையாவது கேட்கலாம்.
இப்படியான பல தெறிப்புத் தெளிப்புகள் கடை நெடுகிலும் உண்டு.

கதை மற்றும் உள்ளடக்கம் பற்றி :
யதியின் உள்ளடக்கத்தில் முதலில் எளிமையிலிருந்து தொடங்கி பின்னர் கனமானவற்றைப் பார்க்கலாம்.
அழகிய தமிழ் மொழி நடை மற்றும் வாசிப்புச் சுவை:
புலரி போன்ற சொற்களையெல்லாம் இற்றைய நாள் தமிழ் எழுத்தாளர் எளிதாகக் கையாண்டு எழுதுவது சமகாலத் தமிழெழுத்தின் நல்லூழ். (புலரி என்றால் விடியல் என்ற பொருள்.)
மேலும் எந்தப் புத்தகமும் எடுத்தால் கீழே வைக்க இயலாத வாசிப்புச் சுவையைக் கொண்டிருக்க வேண்டும். வாசிப்புச் சுவை இல்லாததாலேயே நான் படிக்காதிருக்கும் புகழ்வாய்ந்த தமிழ்ப்புதினங்கள் சில உண்டு.
ஆனால் யதி ஒரு தொடராக வெளிவந்த போதே, துறவு என்ற அதன் உள்ளடக்கத்தை மீறி, சுண்டியிழுந்த ஒரு தொடர்; புத்தகமாக வரும்போது அதன் வாசிப்புச் சுவை, கீழே வைக்கத் தோன்றாத அளவில் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.
தகவல்கள்:
யதியின் கதை போகிற போக்கில் சொல்லப்படும் பல தகவல்கள் சுவையானவை, உதகையில் மூப்பர்களின் வயதை குறிஞ்சி மலர்ப்புடன் ஒத்துக் கூறுவது (மூன்று குறிஞ்சி கண்டவர்), பலார்ஸா சப்பாத்திக் கல்லில் சப்பாத்தி மெல்லிசாக வரும், (எங்கு இந்தக் கல் சென்னையில் கிடைக்கிறது பாரா? J ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும் J ) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக! வாசகனுக்கு வாசிப்பின் போக்கில் பல தகவல்களைக் கடத்துவதும் நல்ல எழுத்தின் ஒரு அறிகுறி.

சாகச நிகழ்வுகள்:
துறவின், சித்தர்களின் சாகச நிகழ்வுகள் பல கதைப்போக்கில் பல இடங்களில் வருகின்றன. பகுதி 38 ல் வரும் மீன் உண்டவன்’ல் வரும் திரைலங்கரின் கதை, மற்றும் விஜயன் நெருப்பில் படுத்திருப்பது போன்றவை காமிக்ஸ் நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், உண்மையான சித்தர்களின் அனுபவங்கள், சக்திகளை உணர்ந்தவர்கள் இந்த 20,21 ம் நூற்றாண்டிலும் உண்டு; ஆசிரியர் பாரா’ கூட இப்படிப்பட்ட சில அனுபவங்களைக் கண்டிருக்கக் கூடும்.

இந்த இடத்தில் பேராசிரியர் அசஞா அவர்கள் எழுதிய அருளாளர்கள் என்ற நூலின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; அதில் அவர் நேரில் கண்ட, உணர்ந்த அருளாளர்களின் செயல்களையும் அற்புதங்களையும் அவர் விவரித்திருக்கிறார். தேர்ந்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சமகால விற்பன்னரான பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான அவருடைய அந்த நூலே, இவ்விதமான சித்தர்களின் சாகசங்களுக்குச் சான்று.

யதியில் இத்தகைய சாகசங்கள் வேண்டுமளவு உண்டு; யதியின் நிறைவுப் பகுதி கூட இப்படி ஒரு சாகச ஆகுதியுடனேயே நிறைவுறுகிறது.

துறவு:
கதை  எளிமையாகத் தோன்றிப் பிரவாகமெடுக்கிற ஒரு கதை. எளிமையான வாழ்வு வாழும் ஒரு பிராமண ஐயங்கார் குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களது நான்கு குழந்தைகள், குழந்தைகளின் ஒரே தாய் மாமன், இரண்டு வயசாளிகளான சித்தர்கள் மற்றும் திருப்போரூர்ச் சாமி, நாயகி, அவளின் அம்மா… இவ்வளவுதான் பாத்திரங்கள்.

என்ன ஒரேயடியாகத் தூக்குகிறாய் என்று கூட இந்த முன்னுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரக் கூடும்; இந்த குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும், துறவைப் பின்புலமாகக்கொண்ட கதை, சுமார் 1,70,000 சொற்கள் கொண்ட, சுவாரசியம் குறையாத வாசிப்புக்கு உத்தரவாதமளிக்கிற புனைவாகப் பெருகுவது ஒரு அசாத்தியமான காரியம்!

யதியின் நாயகர்கள் நால்வரான விஜய், வினய், வினோத், விமல் (விமலன் என்ற விளிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது, ‘விமலா, விடைப்பாகா, வேதங்கள் ஐயா என்றழைக்கும் என்பதாலும் இருக்கலாம்...) ஒருவர் பின் ஒருவராகத் துறவுத் தேடலில் ஈடுபடுவதற்காகக் கிளம்புவதும், இறுதியில் அவர்கள் என்ன காரணத்திற்காகத் திரும்பச் சேரும் சூழல் வருகிறது என்பதும்தான் கதையின் ஓரிழை (ஒன்லைன்).  இதில் நான்கு பேரும் நான்கு விதமான துறவு வர்க்கத்தில் நுழைந்து புறப்படுகிறார்கள்.

துறவிகளில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையடைந்த ஞானிகள் உண்டு ; மந்திரம், மாந்திரீகம், கருப்புலகம், ஆவிகள், யட்சினிகள் என்ற புலத்திற்குள் உழலும் கேரளச் சாமியார்களின் பிரிவு உண்டு; ஏதோவொரு இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பாண்டுரங்கா, பண்டரி நாதா, ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டலையும் துறவு மார்க்கம் உண்டு, சாதாரண மக்கள் எண்ணி அச்சப் படுகிற அளவில் அரசின் அதிகார மட்டத்தின் சகல இழைகள், நிகழ்,நிழலுலகின் முடிசூடா மன்னர்களுடனான தொடர்புகளோடு இயங்கும் துறவிகள் வர்க்கம் உண்டு; இத்தைகய துறவின் அனைத்துப் புலங்களிலும் புகுந்து புறப்படுகிறது யதியின் கதை மாந்தர்களின் கதை. இந்த ஒவ்வொரு இழையும் பிரித்து நெய்யப்பட்டால் கிடைக்கும் துறவின் பேரெழில் துகிலே யதி.

இவ்வாறு துறவின் நான்கு படிம நிலைகளை முன் வைக்கின்ற பொழுதில் அவை நான்கையும் ஒப்பிட்டுச் சிந்திக்கவும்; துறவு என்றால் என்ன என்பதன் ஆதாரக் கேள்வியை எழுப்புவதையும் யதி உங்களுக்குள் இடறி விடுவது நிச்சயம்; ஒரு வகையில் அதுவும் இந்தப் புனைவின் வெற்றிகளில் ஒன்று.

மேற்கண்ட நான்கு துறவு நிலைகளுள் ஒரு கூற்றைக் கொண்ட விமலன், கதையின் முடிவில் தான் கைக்கொண்ட துறவின் வழியை மீண்டும் துறவைத் தொடர்வானா அல்லது துறவின் மேன்மைகளின் உன்னதங்களை மட்டும் தனதாக்கி துறவின் உன்னதத்துவத்தை அடைந்து சிவனை ஒத்த சித்தனாகி விட்ட தன் ஒரு சகோதரனையும்,  வாழ்வின் பலவீனங்களின் சறுக்கல்களைத் தனது துறவு முயற்சியின் ஊடாகச் சந்தித்து அவற்றில் வீழ்ந்து, எழுந்து, வீழ்ந்து, எழுந்து கடைசியில் தியாகத்தின் மூலமும், எதனையும் பெற விரும்பாமல், எல்லாவற்றையும் கொடுக்க விரும்பிய நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு தானும் சித்தனாகி விட்ட இன்னொரு சகோதரன் வழியிலான துறவின் வழியை மேற்கொள்வானா,  என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை; சொன்னால் அவன் துறவியாகவே தொடர்வானா என்ற ஐயத்தையும் கூடத் தொக்கி வைத்து முடிகிறது யதி. ஆனால் உறுதியாகத் தெரிவது ஒரு நல்ல மானுடனாக அவன் தொடர்வான் என்பது. அதுதானே என்றைக்குமான சமூகத் தேவை. J.

இந்தத் துறவிகளைப் பெற்றவளான வி’க்களின் தாய் கதையின் பெரும்பகுதியிலும் படர்க்கை முறையில்தான் அறியப்படுகிறாள்; தன்மையில் அவள் பேசுவது, சொல்வதெல்லாம் மிகச்சில சொற்கள்தான்; மொழியின் குழந்தை’யாக அறியப் படுகிற ஒருவனைப் பெற்றெடுத்த அவள் பேசுகிற மிகக் குறைந்த சொற்கள் அவளைப் பற்றிய பிம்பம், கதையில் நியாயமாக, நிழலாகத் தேய்ந்து மறையவே துணை புரிந்திருக்க வேண்டும்; ஆனால் கதையின் எதிர்பாரா ஒரு கணத்தில் அவளது பிரம்மாண்டம் துலக்கம் பெறுகிறது. அந்த துலக்கம் சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு தரிசனமும் கூட.

துறவும், காமமும் :
துறவுக்கும், காமத்துக்குமான இழை எப்போதும் பேசு பொருளாவது. அருணகிரிநாதரிலிருந்து, பட்டினத்தடிகளிலிருந்து, சமீபத்திய ஓஷோ ரஜனீஷ் மற்றும் கண்ணதாசன் வரை காமத்தின் வேட்புக்கும், துறவின் வாசனைக்குமான இழை விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. ஒருமுறை நண்பர் மோகன்ஜியின் வலைப்பக்கப் பதிவான காமச்சேறு என்ற பதிலில் இதைப் பற்றி நான் ஒரு பக்கமும், பல நண்பர்கள் ஒரு பக்கமும் நின்று விரிவாக விவாதித்தகணங்கள் எனக்கு நினைவிலாடுகின்றது.காமத்தின் துறப்பும், துறவின் துவக்கமும் ஓரிழையில் அமைந்தவையா என்பது ஒரு ஆதாரக் கேள்வி. இதற்கு நோக்கர்களின் பார்வையில் பலவிதமான கருத்துகள், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப் படலாம்.

இந்த - காமம் மற்றும் துறவு இரண்டுக்கிடையேயான ஆதாரக் கொக்கிக் கேள்விக்கான பதிலை யதி இரு விதமான நேரெதிர் பார்வைகளில், இருவிதமான பாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கிறது. அந்தப் பார்வைகளின் நியாய அநியாயங்களை வாசகனின் மன விவாதத்திற்கு விட்டு விடுகிற போக்கு யதியில் நல்ல ஒன்று.

தீண்டுவீராயின் திருநீல கண்டம் என்று சொல்லிக் கட்டி வைத்துவிட்ட யாழ்ப்பாணனின் மனைவி பற்றிச் சொன்ன திருமுறைகளை ஓதியறிந்தது தமிழுலகம்; அதன் ஒரு இழைக் கூற்று யதியிலும் உண்டு; இந்த இழை காமத்தை விலக்குவதே துறவின் வாயில் என்ற ஒன்று சொல்லப்படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். காமம் படிந்த துறவு, பாழ்பட்ட மேன்மையின் உச்சநிலை என்ற கருத்தாக்கத்தில் யதியின் விஜயன் எடுக்கும் முடிவு யதியின் அதிர வைக்கும் கட்டங்களில் ஒன்று.

எதிலும் திளைத்துக்கிளம்பி, வெளியேறி, புறந்தள்ளி இலக்கை நோக்கிச் செல்வதே வாழ்வு, துறவு எல்லாவற்றிற்குமான இலக்கணம் என்று சொல்லுகிற இன்னொரு இழைக்கூற்றும் யதியில் உண்டு. அப்படியாயின் இரண்டாவது பார்வையின் இலக்குதான் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.
யதியின் இறுதி அத்தியாயங்கள் ஒருவேளை இதற்கான விடையை, விளக்கத்தைத் தரக் கூடும் !

பெண்மையின் பிரம்மாண்டம்:
பெண்மை எப்போதும் உலகில் பிரவாகமெடுப்பது; பெண்மையின்றி அமையாது உலகு. பெண்மை பெரும்பாலும் அன்பின் அடித்தளம் கொண்டு அனைவரையும், அனைத்தையும் ஆண்டு கொள்வது என்பதும்; அம்மாவின் ஆதுரம், மனைவியின் கரிசனம், தங்கை, தமக்கைகளின் தோழமை, மகள்களின் பேரன்பு என்று பெண்மை அன்பின் பிரவாகத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டு ஆண்கள் உலகை ஆளுகிறது என்பதும் நிகழ்கின்ற வாழ்வின் புரிதல்.

இந்தப்பெண்மையின் இழைக்குள் ஊடுபாவாகத் திகழ்வது காமமும் அது விளைவிக்கும் விளைவுகளும்.

காமத்தை வேண்டாது துச்சமாக தூக்கி எறிந்து விடும் பெண்மை, பெண்மையின் பேரெழிலும், பேரச்சத்தின் பிரமாண்டமும் கொண்டது. அத்தகைய பெண்களைச் சந்தித்த ஆண்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கவியலும். அத்தகைய ஆண்கள் அந்தப் பெண்மையின் பேரெழிலையும், பிரமாண்டத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்; நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை எதிர்நிலையில் எதிர்கொள்ள வேண்டிய ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் அந்தப் பெண்மைச் சக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறுக்கும் அடிமட்டத்தில் கிடந்து வாழ்ந்து போகவே ஏலும். யதியில் அப்படி ஒரு ஆண் அப்படி ஒரு பெண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அந்த ஆண் கணவனாகவும் போனால்? பெண்மையின் பெருவலிவு, விசுவரூபம், பெருந்தன்மை என அத்தனையைம் தழுவிச் செல்கிறது யதியின் இந்தப் பாத்திரப் படைப்பு.   

காமம் விலக்கப்பட்ட, அல்லது மறுக்கப் பட்ட பெண்மையின் வடிவம் இன்னொரு எல்லை; அது பெண்மையின் பெரு ஊழியை ஒத்தது. இதோடு அப் பெண்ணுக்கு ஒரு தபஸ்வினியின் வலிமை சேருகிறது என்று வைப்போம்; கூடவே பழி உணர்ச்சி! என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண்? யதியின் சித்ரா அந்த உணர்வோடு உக்கிரமாக நிற்கிறாள்; வினோதன் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். அவள் தோற்றாளா, வென்றாளா என்பதில் யதி வெல்கிறது.
மேற்கண்ட இரண்டு கதை நிலைகளும் யதியின் முக்கியப் பாத்திரங்களோடு கலந்தோடுகின்றன.

கதைப்போக்கின் முடிவு:
துறவுகளின் பல நிலைகள், பெண்மையின் பிரமாண்டம் என்ற இரு தடத்தில் பயணம் செய்யும் யதியில், இரு சகோதரப் பாத்திரங்கள் துறவின் இருவிதமான உச்சநிலைகளை அடைகிறார்கள்.

ஒரு துறவுநிலை, யோகத்தைக் கைக்கொண்டு, சித்த ஞான நிலை எய்தி விடுகிற ஒரு நிலை; அங்கு உடல் ஒரு பொருட்டில்லை.

இன்னொரு நிலை துறவும் வாழ்வும் சந்திக்கின்ற ஒரு நிலை; வாழ்ந்து கொண்டே துறத்தலும், துறந்து கொண்டே வாழ்தலுமான ஒரு நிலை.

இந்த இரு நிலைகளும் பெண்மையின் பிரமாண்டத்துடன் ஒரு புள்ளியில் பொருதுகின்றன. பொருதலின் விளைவில் இந்த இரு துறவின் நிலைகளும் துலக்கம் பெறுகின்றன. யதியின் பூரணத்துவமான இடம் அதுதான்.
இரண்டு முக்கியமான பாத்திரங்கள் துறவின் இந்த இரு வித நிலைகளை அடைவதுடன் நிறைகிறது கதை.

ஏதேனும் சறுக்கல்கள்?
ஒரு புனைவாக யதியில் ஏதாவது குறையாகச் சொல்ல வேண்டுமெனில் ஒன்று இருக்கிறது.
ஆம். யதி கிட்டத்திட்ட ஒரு நான் லீனியர் வடிவில் சம்பவக் கோர்வைகளைக் கொண்டு செலுத்துகிறது; அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று, 30 ஆண்டுகளுக்குப் பின் வந்த சம்பவத்தோடு கதைப்போக்கில் இணைந்து அடுத்தடுத்துச் சொல்லப் படும்; பல புனைவுகள், நெடுங்கதைகள் இவ்வாறு எழுதப் பட்டிருக்கின்றனதான். ஒரு எடுத்துக்காட்டு பாருங்கள், பின்வரும் பகுதியில் கடைசிப் பத்தி மட்டும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து நிகழ்வு, முதல் இரண்டு பத்திகள், இப்போது நிகழ்வது; இவை இரண்டு இணையும் கணம் கதையில் எவ்விதம் தொய்வையும் ஏற்படுத்துவதில்லை.

'இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷாகற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.'  
'அப்படியா? இது எனக்குத் தெரியாதே' என்றவள் சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.  

யுனானி மருத்துவர் அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.  

இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. வினாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.

ஆனால் யதியில் இவை நிகழும் கணங்கள் அளவில் அதிகமானவை; இருந்தும் கதைப் போக்கு, சுவை சிறிதும் குன்றாமல் செல்வதுதான் கதையின் விசேஷம்.

இந்த முன்பின் உத்தி சறுக்கும் இடம் ஒன்று இருக்கிறது ; வினய் தன் மூத்தவன் விஜயால் எப்படி வரதர் குளத்தின் புஷ்கரணிக்குச் சென்றான் என்ற விவரணையில் ஒரு தொடர்வுப் பிழை இருக்கிறது. பகுதி 51 ன் இறுதியையும், 54 ன் இறுதியும் இந்த நிகழ்வைச் சொல்லுகின்றன.

ஆனால் சொல்லும் சம்பவ விவரிப்புகள் ஒன்றுக்கொன்று முரணானவை, ஒன்றில் தூங்கி எழுந்து புஷ்கரணியில் விழிக்கிறான் வினய்; இன்னொன்றில்  அவனது அண்ணன் விஜய் விழிந்திருக்கும் போதே தன் யோக சாதனையால் அவனை வரதர் கோவில் புஷ்கரணிக்கு அனுப்புகிறேன்.  இது என் புரிதலின் தவறா, அல்லது கதைப் போக்கில் நிகழ்ந்த சிறு பிழையா என்பதை பா.ரா’தான் கவனிக்க வேண்டும்.

- அறிவன்
2018  நவம்பர்- ஒரு ஞாயிறின் அதிகாலை
சிங்கை



Quotable Quotes of யதி (’யின் சில மட்டும்)
அசைந்துகொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பதே உலகின் இயல்பு என்று எடுத்துச் சொல்லுகிற லாகவம். இயல்பே ஆனாலும் இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று போதிக்கிற பாவனை. இயல்பு மீறும் போது மரம் முறிந்துவிடுகிறது.  
 'அங்கே பாருங்கள். அந்த மரங்களின் அசைவைக் கவனியுங்கள்.'  
நான் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் திரும்பிப் பார்த்தார்கள். 'தலையைக் கலைத்துவிட்டுக் கொண்டு சாமியாடும் பெண்களைப் போன்றதல்ல மரங்களின் ஆட்டம். தலை ஆடிக்கொண்டிருந்தாலும் ஒழுங்காக வகிடெடுக்கிற நேர்த்தி அதில் ஒளிந்திருப்பது தெரிகிறதா?'  
'ஆமாம் குருஜி!' வியப்போடு சொன்னார்கள்.    01- நீலக்குறிஞ்சி

()
தொண்ணூற்று நான்காம் வருடம் ஆனமலையில் குறிஞ்சி பூத்தபோது நான் தனியாள். அன்றெனக்குக் காவி இருந்தது. ஆனால் அடையாளமில்லை. சீடர்கள் கிடையாது. நான் சொல்வதைக் கேட்க நான்கு பேர் இல்லை என்பதல்ல விஷயம். எனக்கு சொல்லத் தெரியுமா, என்ன சொல்வேன் என்பதில் எனக்கே குழப்பம் இருந்த காலம் அது. ஆனால் என் குரு தீர்மானமாகச் சொன்னார். 'மொழியின் குழந்தை நீ.'
-01 நீலக்குறிஞ்சி

()

சரியான மொழி வசமாகிவிட்டால் அபத்தங்களின் அழகியலை உதறி விரித்து உலர்த்திவிடலாம். அனுபவம் எனக்குக் காட்டித்தந்த பாடம் அதுதான்.                              02-புரிதலில் இருந்து விடுதலை

()
சாதனைகள் புரிந்து பழகுவதற்குத் தனிமை தேவை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா? நான் சன்னியாசம் ஏற்றபோது எனக்குள் நியமித்துக்கொண்ட வைராக்கியம், எதனிடமிருந்தும் விலகுவதில்லை என்பதுதான்.   'அப்புறம் அது எப்படி சன்னியாசமாகும்?' என்று என்னோடு குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு சமயம் கேட்டான்.   'ஆகும். விலகுவதற்குச் சமமான வீரியம், நெருங்கிக் கரைந்து காணாமல் போய்விடுவதிலும் உள்ளது'.                 04-நாமகரணம்

()
 'குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா?'  
அவர் யோசிக்கவேயில்லை.
சட்டென்று பதில் சொன்னார்,
'கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன்? முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.'    - 04  நாமகரணம்

()

அந்தக் கணத்தில்தான் எனக்குத் தோன்றியது.
எதற்கும் அதிர்ச்சியுறாத ஒரு வாழ்வை எனக்கே எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்துகொண்டால் என்ன? துக்கம் தரத்தக்க எதையும் அண்டவிடாதிருப்பது. துக்கத்தின் ஒரு சொட்டு நிழலும் என் மீது படியாமல் பார்த்துக்கொள்வது. துக்ககரமான எந்த ஒரு நிகழ்விலும் பங்கு கொள்ளாதிருப்பது.  
குருநாதர் இறந்துவிடுவார் என்று தெரிந்தபோது நான் ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டதன் காரணம் அதுதான்.

எனக்கு அவர்மீது பற்றில்லாமல் இல்லை. பாசமில்லாமல் இல்லை. பக்தியோ, மரியாதையோ சற்றும் குறைந்ததேயில்லை. நான் ஆக நினைத்த வடிவை அவர் எனக்குச் சமைத்துக் கொடுத்தவர். என் ஆளுமையின் பிரம்மாண்டம் அவர் வடிவமைத்தது. அதில் சந்தேகமில்லை. ஆனாலும் மரணம் துக்ககரமானது. உலவிய ஒரு உயிரைக் கிடந்த கோலத்தில் காண்பது ஒரு சவால். வைராக்கியத்துக்கோ, விரக்திக்கோ இட்டுச் செல்லும் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை
-        23 – துக்கம் தவிர்த்தல்

()
உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது. அன்பென்றும் பாசமென்றும் ஒற்றைச் சொற்களில் அனைத்தையும் முடிந்து வைத்துவிட நினைக்கிறது மனம். உண்மையில் சொற்களற்ற பெருவெளியில் காற்றில் அலைக்கழியும் ஒரு சிறு சிறகு அல்லது சருகு நிகர்த்த ஸ்தூலமாகத்தான் நான் அதைஉணர்ந்தேன். எதையும் நகர்த்தி வைத்துவிட முடியும் என்று தோன்றியது. தேவை என்ன, அவசியம் என்ன என்பதுதான் விஷயம்.       – 29 கண்ணீரின் கனம்
 ()
அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.       - 38 மீன் உண்டவன்
 ()
அற்புதங்கள் எனக்குப் பிடிக்கும்.
ஆனால் அவை கதைகளில் மட்டுமே நிகழக்கூடியவை என்று நினைத்தேன். துயரங்களின் அடியாழத்தில் அமர்ந்திருந்தும் அதன் ஈரம் படாமல் என்னைத் தற்காத்துக்கொள்ள முடிந்ததன் பலன் அது ஒன்றுதான். எதற்கும் உணர்ச்சி வயப்படுவதில்லை. எது குறித்தும் பரவசமாவதில்லை.
கண்ணீர்?
அறவே கிடையாது. புன்னகை ஒன்றைத்தான் என் போர்வையாக்கிக்கொண்டிருந்தேன்.
அது தேவைப்படுகிறது. எதையும் மறைப்பதற்கு. அல்லது எதையாவது அடைவதற்கு. சொல்கூட அப்போது எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. புன்னகை போதுமென்று நினைத்தேன். என் புன்னகையை நீங்கள் அறிய மாட்டீர்கள். அதில் தெய்வீகம் கிடையாது. மயக்கும் குண விசேடங்கள் ஏதுமில்லை. அது இயல்பானது. பாவனைகள் களைந்த ஒரு மாயப் பாவனை கொண்டது. கணப் பொழுதில் விரிந்து நிறைந்து மறைந்துவிடக் கூடியது. ஆனால் அதற்கொரு நாதமுண்டு. புன்னகையின் நாதம். புலரியின் வசீகரத்துக்கு ஒப்பானதொரு நாதம். அதையே ஆயுதமாகவும் கேடயமாகவும் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.  39- அக்னி சந்தானம்
 ()
அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் என் புன்னகையைத்தான் முதலில் எடுத்து விரிப்பேன். அதில் பரவசம் இருக்காது. உணர்ச்சிப் பெருக்கு இருக்காது. கண்ணீர் இருக்காது. கதறல் அறவே இராது.
ஒரு புன்னகை. வெறும் புன்னகை.
ஆனால் சகல உணர்ச்சிகளையும் அது உள்ளடக்கியிருக்கும். என் கண்ணை நீங்கள் உற்றுப் பார்த்தால் என் புன்னகையின் ஊற்று அங்கே புலப்படும். இதழ்களால் புன்னகை செய்வது இயற்கை விரோதம். கண் போதும். கணப் பொழுது போதவே போதும். அவனில்லாமல் வளர்ந்த வருடங்களில் நான் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் மௌனத்தால் அவர்களை ஈர்த்து நிறுத்தவும் பழகிப் பயின்றிருந்தேன். வீட்டில்கூட வீணாகப் பேசுவதே கிடையாது. ஒரு சொல்லில் ஒரு பதில். அல்லது ஒரு பார்வையில் ஒரு வினா. சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். 39- அக்னி சந்தானம்
 ()
எனக்கு அதுதான் உடன்பாடற்றதாக இருந்தது. மரணத்தை எதற்கு வெல்ல வேண்டும்? வாழ்வின் அனைத்துப் பிசிறுகளையும் நான் விரும்பினேன். மரணம் உள்பட. முரண்பாடுகளில் ஒளிந்துள்ள கவித்துவத்தை ரசித்தேன். கண்ணீரின் ருசியும் புன்னகையின் வாசனையும் இணையும் புள்ளியைத் தேடுவதை விடுத்து மரணத்துக்கு எதிரான துவந்த யுத்தத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?  
கடவுள். ஐயோ அவன் ஒருத்தன் இந்த யோகிகளை என்ன பாடு படுத்தி எடுக்கிறான்!
வாழ்வை விடுத்து மலை முகடுகளில் அவர்கள் தேடிச் செல்லும் பக்காத் திருடன். சிலருக்கு அவன் அகப்படுகிறான். பலர் இறுதிவரை தேடிவிட்டுக் காலாவதியாகிவிடுகிறார்கள். ஆனால் காலம் தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சௌக்கியமாகத் தேடட்டும். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. நிகழ மறுக்கும் அற்புதமான இந்த வாழ்வே எனக்குப் போதும். இதன் கசடுகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இதன் துவர்ப்பு பிடித்திருக்கிறது. இதன் வாசனையும் துர்நாற்றமும் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. போதும்.
அற்புதங்களை அவர்களே நிகழ்த்திக்கொள்ளட்டும். அதை வியக்க நான் ஆளில்லை.
-      41 பிசிறுகளின் காதலன்.
 ()
மனோமயகோசத்தைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அது பிராணமயகோசத்தின் பங்காளி. இந்த இரண்டுமே சூட்சும வகையறா. இதனால்தான் சூட்சுமத்தை சிந்திக்காதே என்கிறேன்.
ஸ்தூலத்தில் இருந்து தொடங்கு. உன் உடலைக் கவனி. சிறிய பிரயத்தனங்களில் அதை உன் வசப்படுத்திவிட முடியும்.'  
'ஆனால் உடலைக் கவனித்தால் போதுமா?'  
'முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.'
 – 46 உடலாகு பெயர்
 ()

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...