இசை !
இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்பாடாக உள்ளம் நாடும் விதயங்களில் இசைக்கு முக்கியமான இடம் உண்டு.நமது பொழுதுபோக்கு ஊடகங்களில் கூட இசைக்கு முக்கியமான இடம் உண்டு;இசை இல்லாமல் அவை இருந்தால் ஒருவரும் அவற்றை ரசிக்க மாட்டார்.
இந்தியாவில் இசையின் வடிவங்கள் பல உண்டு.இன்றைய திரைஇசை மெல்லிசையாக இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கலவையாக உருப் பெற்றிருக்கிறது.இந்தியாவில் நிலவும் இசை வடிவங்களில் பாரம்பரியமான இசை என்ற நோக்கில் பார்க்கும் போது வடஇந்தியாவில் இந்துஸ்தானி இசை மற்றும் கஸல் போன்றவை மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதம் ஆகியவை தேறுகின்றன.
இந்த கர்நாடக இசைதான் பாரம்பரிய சங்கீதம் என்ற பொருளில் சாஸ்திரிய சங்கீதம் என்ற அடைமொழியுடன் உலவுகிறது.
அத்தகைய பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகள் எனப் பார்த்தால் சுரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்கள்,ராகங்கள் மற்றும் ராக ஆலாபனைகளின் வடிவமாக கீர்த்தனைகள் ஆகியவை கர்நாடக இசையின் பல கட்டுகளாக உள்ளன.இந்த கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் அமைந்தவை.இந்த கர்நாடக இசையில் பெரும்பாலும் தேர்ச்சி அடைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பாடகர்களும் பெரும்பாலும் பாடும் பாடல்களும் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களே.
20’ம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை வரை இந்த நிலைதான் இருந்தது.தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையில் தமிழ்பாடல்களை பாடப்படாத நிலை கண்டு நொந்த சில பெரியவர்கள் தமிழிசை இயக்கம் என்ற இயக்கத்தையே தொடங்கி தமிழிசையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது.அவர்களின் பெருமுயற்சியால்தான் இன்று சில பாடல்களாவது பாரம்பரிய இசை என சொல்லப்படும் கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்களாக இருக்கின்றன.
தமிழர்கள் உலகின் முதலில் தோன்றிய நாகரிக இனங்கள் என்ற ஒரு பார்வை உண்டு;இன்னும் முழுக்க நாகரிக நிலையடைந்த முதல் மனித இனம் தமிழினமாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தாக்கமும் வலுவுடன் இருப்பதற்கான சான்றுகளை நான் என்னுடை
முந்தைய சில
பதிவுகளில் வைத்தேன்.
இப்படிப்பட்ட பாரம்பரியத் தமிழினத்தில் இசைக்கான இடம் என்ன?தென்னிந்திய பாரம்பரிய இசையான கர்நாடக இசையில் ஏன் தமிழ்ப்பாடல்களுக்கான இடத்தைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருந்தது.இப்போதும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை விழாக்களில் ஏன் தமிழ்பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன?
இப்போதைய இந்த கர்நாடக இசையின் ஊற்றுக்கண் என்ன?இப்போது கர்நாடக இசையின் வடிவங்கள் எனக் கருதப்படும் தெலுங்குக் கீர்த்தனைகளின் தோற்றம் எப்போது?அது தோன்றிய காலத்துக்கு முன் தமிழில் இசையின் வடிவங்கள் பாடல்கள் எவ்வாறு இருந்தன?
இந்த கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என தியாகராச சுவாமிகள்,முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாத்திரிகள் என அறியப்படும் மூவர்.இவர்கள் கர்நாடக சங்கீதத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் எனப் போற்றப்படும் பெரியவர்கள்.இவர்களே அதிகமான கீர்த்தனைகள் என அறியப்படும் தெலுங்குப் பாடல்களை இயற்றியவர்கள்.
இவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் எனக் கொண்டாடப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது இவர்களின் காலத்திற்கு முன் சங்கீத உலகம் எப்படி இருந்தது என்ற தவிர்க்க இயலாத கேள்வி எழுகிறது.இந்தக் கேள்வி எழும்போதே இந்த மும்மூர்த்திகள் வாழந்த காலம் சுமார் 17ம் நூற்றாண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
அப்படியெனில் 17ம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவின் பாரம்பரிய சங்கீதம் எப்படிப்பட்ட வடிவில் இருந்தது?
இன்று பாரம்பரிய சங்கீதம் என்று கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பெருமளவு தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடும் நிலையில்,இத்தகைய தெலுங்கு கீர்த்தனைகள் இயற்றப்பட்ட காலத்துக்கு முன் இசையின் வெளிப்பாட்டு வடிவமாக எந்தப் பாடல்கள் இருந்தன?
ஆழ்ந்த அகன்ற நெடிய இலக்கிய கால வரிசை கொண்ட தமிழில் இசைக்கான இடம் என்ன? அல்லது இசை என்னும் ஒரு அபூர்வக் கலையில் தமிழுக்கான இடம் என்ன?
கேள்விகள் ! கேள்விகள் ! இவற்றிற்கான் பதில்களை எப்போதாவது பெரும்பான்மைத் தமிழர்களான நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
சிறிது அலசுவோம்...
தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு:
தமிழ் என்னும் காலத்தினால் மூத்ததும் பயன்பாடு மற்றும் கருத்துச்செறிவில் என்றும் புத்திளமை கொண்டு இலங்கும் மொழியின் அகன்ற பகுப்பே இயல்,இசை,நாடகம் என்னும் மூன்றாக உள்ளது;எனவே தமிழ் என்னும் மொழியில் இசைக்கு ஆழ்ந்த ஒரு இடம் இருந்தது என்பது விளக்க வேண்டிய அவசியம் இன்றியே அனைவருக்கும் விளங்கும்.
தமிழின் இலக்கியப் புதையலில் ஆராயும்போது மிகத் தொடக்க காலத்து சான்றாக தமிழின் பரிபாடல் பற்றிய குறிப்பு கிடைக்கிறது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரச்செய்யுளின் 242ம் பாடலுக்கான உரையில் ‘அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கந்தன என்பது’ என்ற குறிப்பால் பரிபாடல் என்பது இசைப்பாடல் வடிவத்தில் அமைந்த இலக்கியம் என்பது தெளிவாகிறது.மேலும் இதற்கான சான்றுக் குறிப்புகள் யாப்பருங்கலக்காரிகையிலும் காணக்கிடைக்கின்றன.
பரிபாடலில் நமக்குக் கிடைத்திருக்கும் 21 பாடல்களில் பாடல்களை இயற்றிய புலவர்கள் பெயரும் அப்பாட்டுக்குப் பண் வகுத்த புலவர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பதும் பரிபாடல் இசைப்பாடல்களால் அமைந்த நூல் என்பதற்கான் மேற்சான்றாகும்.இப்புலவர்களில் சிலரது பெயர்களாவன:பெட்டனாகனார்,கண்ணனாகனார்,நாகனார்,நன்னாகனார்,நல்லச்சுதனார் போன்றவை.
கடல் கொண்டு மறைந்த பழந்தமிழ் நாட்டின் பகுதிக்கு நாவலந்தேயம் மற்றும் நாகநாடு என்ற பெயர்கள் நிலவின என்பதும்,தமிழரில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களில் நாகர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தனர் என்பதும் அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் இங்கு மீள்நினைந்து கொள்ளத்தக்கவை.
மேலும் இறையனார் அகப்பொருளுரை முதுநாரை,முதுகுருகு என்னும் இரு இசை நூல்களைப்பற்றியும் பேசுகிறது.
திருமுறைகளைச் சேர்ந்த தேவார திருவாசகப் பாடல்களுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பாணர்கள் என்னும் இசை வகுப்பினர் பண் மற்றும் இசை வகுத்த செய்திகளும் எல்லா திருமுறைப்பாடல்களுக்கும் அவை கொடுக்கப்பட்டிருப்பதும் அனைவரும் எண்ணிப்பார்த்து அறிய வேண்டுவது.
மேலும் பழந்தமிழ் இலக்கியம் மூலம் அறியப்படும் இசைக்கான சூத்திரங்கள் மற்றும் செய்திகளைச் சொல்லும் நூல்களில் சில:
சிற்றிசை
பேரிசை
பஞ்சபாரதீயம்
இசை நுணுக்கம்
பஞ்ச மரபு
பதினாறு படலம்
வாய்ப்பியம்
இந்திரகாளியம்
குலோத்துங்க சோழன் எழுதிய இசைநூல்
இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை
போன்ற நூல்கள்..
இந்த நூல்கள் சொல்லும் செய்திகளில் காணக்கிடைக்கும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளாவன:
-
இசை ஏழு வகைப்படும்.அவை குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பன.இவற்றின் வடமொழிப் பெயர்கள் மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம்,ஷட்ஜம்,ரிஷபம்,காந்தாரம் என்பன.
-
இசை பிறக்கும் இடங்கள்:மிடற்றினால் குரலும்,நாவினால் துத்தமும்,அண்ணத்தால் கைக்கிளையும்,சிரத்தால் உழையும்,நெற்றியால் இளியும்,நெஞ்சினால் விளரியும்,மூக்கால் தாரமும் பிறக்கும்.
இராகங்கள்:பைரவி,தேவக்கிரியை,மேகவிரஞ்சி,குறிஞ்சி,பூபாளம்,வேளாவளி,மலகரி,பௌளி,சீராகம்,இந்தோளம்,பல்லதி,சாவேரி,படமஞ்சரி,தேசி,இலலிதை,தோடி,வசந்தம்,இராமக்கிரியை,வராளி,கைசிகம்,மாளவி,நாராயணி,குண்டக்கிரியை,கூர்ச்சரி,பங்காளம்,தன்னியாசி,காம்போதி,கௌனி,நாட்டை,தேசாட்சரி,சாரங்கம் முதலியன
-
இசை அல்லது இராகத்தின் பகுப்பு நான்கு கூறுகளின் மூலம் வகுக்கப்படும்.அவையாவன இடம்,செய்யுள்,குணம்,காலம் என்பன.
அதாவது இந்த நான்கு காரணிகளின் படி இராகங்கள் பகுக்கப்படலாம்.
-
இடம்பற்றிய இராகங்கள் ஐந்தினை இராகங்கள்.அவை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை நிலங்களுக்குரிய குறிஞ்சி,சாதாரி,செவ்வழி,மருதம் மற்றும் பாலை என்பன
-
செய்யுள் பற்றிய இராகவகைகள்:
வெண்பாவின் இராகம் சங்கராபரணம்
அகவற்பா அல்லது ஆசிரியப்பா:தோடி
கலிப்பா:பந்துவராளி
கலித்துறை:பைரவி
தாழிசை:தோடி
விருத்தம்:கலியாணி,காம்போதி,மத்தியமாவதி
பிள்ளைத்தமிழ்:கேதாரவுளம்
பரணி:கண்டாரவம்
-
குணம் பற்றிய இராகவகைகள்:இரக்கம் உள்ளவை:ஆகரி,கண்டாரவம்,நீலாம்பரி,பியாகடம்,புன்னாகவராளி
துக்கம் உள்ளவை:மேற்கூறியவற்றோடு கூட வராளியும்
மகிழ்ச்சி:காம்போதி,சாவேரி,தன்யாசி
யுத்தம்:நாட்டை
-
காலம் பற்றிய இராகவகைகள்:வசந்த காலம்:காம்போதி,அசாவேரி,தன்னியாசி
மாலை வேளை:கலியாணி,காபி,கன்னடம்,காம்போதி
யாமவேளை:ஆகரி
விடியற்காலை:இந்தோளம்,இராமகலி,தேசாட்சரி,நாட்டை,பூபாளம்
உச்சிவேளை:சாரங்கம்,தேசாட்சரி
ஆகரி,இந்தோளம்,இராமகலி,சாரங்கம்,பூபாளம் நீங்கிய இராகங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை.
-
இன்னும் வரும்