குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label சைவசித்தாந்தம். Show all posts
Showing posts with label சைவசித்தாந்தம். Show all posts

Monday, July 9, 2012

146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2


ஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன்.

அது மிக நீண்டதால் படிப்பதற்கு சோர்வு தட்டலாம் என்று கருதி இரண்டாவது பகதிக்கு அச்சாரம் போட,அது முற்றுப் பெற்று வருவதற்கு மிக நீண்ட நாட்களாக விட்டன.

இரண்டாவது பகுதி அவனருளாலே இப்போதுதான் முற்றுப் பெற்றது.


முதல் பகுதியின் தொடர்ச்சி .....







உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .
28


உவட்டா-தெவிட்டாத,சலிக்காத
தெவிட்டாத-சலிக்காத
ஐம்புலன்- மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து புலன்கள்


பொதுவாக உபதேசம் கேட்பது எவருக்கும் சலிப்பேற்படுத்தும் ஒரு செயல்;எவரும் நமது நடத்தைகளுக்கோ அல்லது வாழ்க்கைக்கோ உபதேசங்களை விரும்பி ஏற்பதில்லை;ஆனால் ஔவையார் வாக்கில் விநாயகரின் வாக்கில் வரும் உபதேசம் சலிப்பேற்படுத்தாத,இனிமையுடன் கூடியதாக இருப்பதோடு ஞானத் தெளிவையும் காட்டுகிறது.

மேலும் இவ்வுலகின் பிறந்த உயிர் விடுதலை பெற்று இறைத் தன்மை அடைவதற்கு ஐம்புலன்களின் பிடியில் இருந்து உயிர் விடுபட வேண்டும்.
பொறி வாயில் ஐந்தவித்தான் என்று இறைவனை விளிக்கிறது திருக்குறள்.இதையே ஐம்பொறிகளையும் அவித்தவன் இறைவனாகவும் கூடும் என்று பொருள்படுத்திக் கொள்ளலாம்.

அதே வள்ளுவப் பெருந்தகை  சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு  என்று இறை நிலையை அடையும் ஆசை அல்லாத ஒருவனுக்கும் கூட, இந்த உலகம் ஐம் பொறிகளையும் தன் கைக் கொண்டு அவற்றை அடக்கி ஆளத் தெரிந்தவனிடம் , அவனது கைப்பிடிக்குள் இருக்கும் என்கிறது.


அந்தப் பெருநிலையை,சிறப்பு நிலையை அடையும் வழியாக ஐம் புலன்களையும் அடக்கி ஆளும் உபாயத்தை, என்மீது இயல்பாகவும்  இனிமையாகவும் பிரியமாகவும்  இருக்கும் அன்பின் பாற் பட்ட கருணையினால் இனிதாக எனக்கு அளித்து ரட்சிக்கும் விநாயகப் பெருமானே....


கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.
32

கருவிகள்- தத்துவங்கள் 36
இரு வினை-நல் வினை,தீ வினை என வினைகள் இருவகை
நான்கு தலம்- நான்கு வழிகளால் அடையப் பெறும் நான்கு இடங்கள்
சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகியவை நான்கு வழிமுறைகள்;அவற்றைப் பழகி சேவகநிலை,மைந்தநிலை,நட்புநிலை,காதல்நிலை என்ற நிலைகளை ஆன்மா எய்த முடியும்.இந்த நான்கு நிலைகளே சாலோகம்(சேவகம்),சாமீபம்(மைந்தநிலை),சாரூபம்(தோழமை),சாயுச்சியம்(காதல்நிலை,இரண்டறக் கலந்து தாமே ஈசனாகி விட்ட அத்வைத நிலை)
மூன்று மலம்- ஆணவம்,மாயா,கன்மம் ஆகிய மும்மலங்கள்

உயிருக்கு அல்லது உயிரை உடலில் இயக்குவதற்கான  கருவிகள் 36 என்று சொல்கிறது சைவ சித்தாந்தம்.இந்த நிலம் முதல் நாதம் வரையிலான 36 தத்துவங்களும் உயிரின் மேல் செயல்பட்டு நல்வினை,தீவினை என்னும் இருவித வினைகளுக்கு அவ்வுயிரை உட்படுத்துகின்றன.அவ்வினைகளின் விளைவுகளை ஆன்ம உய்வடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கே பயன்படுத்துவோர்,அவ்வினைகளின் எச்சத்தைக் கொண்டு மீண்டும் உலக வாழ்வில் பிறந்து உழல மாட்டார்கள்;மாறாக  பரம்பொருளுக்கு சேவகநிலை,மைந்தநிலை,நட்புநிலை,காதல்நிலை  போன்ற வழிகளின் மூலம் சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் நிலைகளை அடைய இறையைச் சிந்தித்து  முயற்சிப்பார்கள்; இம்முயற்சியில் ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலங்கள் வழிமறித்து ஆன்மாவை திசைதிருப்பி வினைகளின் வழியை திரும்பச் செலுத்த  முயலும்.

 நான்கு தலங்களின் வழியாக உயிர் நான்கு விதமான நிலைகளை அடைய முடியும்.இந்த மொத்த செயல்பாடுகளுக்கிடையே மும்மலங்கள் ஏற்படுத்தும் மாயா நிலைகளும் உயிரை அலைக்கழிக்கும்.

கணபதியின் அருள் அன்பானது, ஆன்மாவின் மேல் செயல்படும் 36 கருவிகளை ஒடுக்கும் வழியை அறிவித்து,அவற்றின் விளைவாக ஏற்படும் இருவித வினைகளை அறுத்து நீக்கி ஆணவ,மாய,கன்ம மலங்களின் மயக்கத்தை தெளிவித்து, சரியை,கிரியை,யோகம் மற்றும் ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகள் மூலம்-methods-அடையக் கூடிய நான்கு வித நிலைகளான சாலோகம்-சிவனடியார்கள் கூட்டத்தில் வாழ்வது,சாமீபம்-சிவத்தின் அருகில் வாழும் நிலை-புனிதவதி போல,சாரூபம்-சிவத்தின் வடிவாகவே தாமும் வாழ்வது,சாயுச்சியம்-சிவமே தன்னுள் கலந்து தான் அவன் வேறுபாடு இல்லாத நிலை- ஆகிய நிலைகளை இனிதாக அடையும் வண்ணம் எனக்கருளும் விநாயகப் பெருமானே...


ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே .
36

ஒன்பது வாயில்- இரு கண்,இரு செவி,இரு நாசி,வாய்,கருக்குழி,எருக்குழி என்னும் ஒன்பது வாயில்களைக் கொண்டது உடலம்.
ஐம்புலன்கள் - கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் வழி பார்த்து,கேட்டு,முகர்ந்து,ருசித்து,உணர்ந்து ஆன்மா வினைகளின் வழிப் படுகிறது.
ஆறாதாரம்-மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆஞ்ஞை போன்ற ஆறு ஆதார நிலைகள்.ஆன்ம சக்தி நிலைபெறும் ஆறு இடங்களாக இவை வகைப் படுத்தப் படுகின்றன.
பேறா நிறுத்தி- அசையாது நிறுத்தி நிலைபெறச் செய்வது


ஆன்மா செயல்படும் மனித உடலானது ஒன்பது வாயில்களைக் கொண்டது;இந்த ஒன்பது வாயில்களைப்  பயன்படுத்தி ஐம்புலன்களின் வழியாக கருவிகள் செயல்பட்டு ஆன்மாவை வினைகளின் வழி செலுத்துகிறது; கருவிகள் ஐம்புலன்களின் வழி ஒன்பது வாயில் உடலில் குடி கொண்டிருக்கும் ஆன்மாவை வினைப்படாமல் தவிர்க்க, ஒரு மந்திரம் போல  தனது எல்லையற்ற அருளைச் செலுத்துவதன் மூலம், புற உலக மாயை,கருவிகளை நிறுத்தி, பேச்சற்ற மோன நிலையை நல்கி,ஆன்மசக்தியை ஆஞ்ஞை எனப்படும் சுழிமுனையில் அசையாது நிறுத்தி அருளும் விநாயகப் பெருமானே...




இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
40


இடை,பிங்கலை - இரு வித சுவாச சுத்தி முறை.
சுழிமுனை - புருவ மத்தியில் இருக்கும் ஆறாவது ஆதார நிலை
மூன்று மண்டலம் - சந்திர,சூரிய அக்னி (மதி,பரிதி,தீ) என வகைப்படுத்தப்படும் உடலியக்க சுவாச சக்தி மண்டலங்கள்  
நான்றெழு பாம்பு - தொங்கி நிற்கும் பாம்பு வடிவ குண்டலினி எனப்படும் ஆன்ம சக்தி


நமது சுவாச சுத்தி வழிமுறைகளில் இடை,பிங்கலை எனும் இருவித சுவாச மண்டலங்களில் மூச்சு இயங்கலாம்.இதைத்தான் சந்திரகலை,சூரிய கலை என்று யோகாசனக் கலை கூறுகிறது.இந்த சுவாசத்தை விரும்பிய கலையில் நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்கள் விரும்பிய குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அளவில் திருமந்திரம் சுவாச சித்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

திருமந்திரத்தில் ஒரு அழகான பாடல் பின்வருமாறு-
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குகூற்றை உதைக்கும் குறி அதுவாமே.

இருவித நிலைகளில் நிலவும் சுவாசத்தைப் படித்து,பிடிக்கும் கணக்கை அறிதல் மிகக் கடினம்.அப்படி அறிந்து கொண்டவர் இறவா நிலையை அடையும் வண்ணம் உடல் மூப்பற்றுத் திகழ முடியும்.திருமூலரே 3000 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பது கதை மட்டுமல்ல,நடந்திருக்க முடியும் என்று நம்பக் கூடிய சாத்தியமே என்பதைக் காட்டத்தான் இப்பாடல் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


இவ்வாறு இருவித நிலைகளில் திகழும் சுவாச சூட்சுமத்தை அறிவித்து கடைசி ஆதாரமாகிய சுழிமுனைக் கபாலத்தில்,சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் இழைந்து முட்டி நிலவும் ஆன்ம சக்தியான குண்டலினி சக்தியை,அசையாது சுழிமுனையில் நிறுத்தி நிலைபெறச் செய்வதோடு மட்டுமல்லாது ,அந்த நிலைபெறச் செய்த ஆன்ம சக்தியின் சுவையை எனது நாவிலும் உணர்த்தும் வல்லமை பெற்று அருளுகிற விநாயகப் பெருமானே.....




குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே .
44


குண்டலி - குண்டலினி எனப் படும் ஆன்மசக்தி
கூடிய அசபை - கூடியிருக்கும் உயர்நிலை
விண்டெழு - விளக்கி வாய்விட்டுச் சொல்லும் நிலை

குண்டலினி எனப்படும் ஆன்மசக்தியை சுழிமுனையில் அசையாது நிலைநிறுத்திய நிலையை குண்டலி அதனில் கூடிய அசபை என்ற வாக்கியம் விளக்குகிறது;இந்த நிலையை ஒரு சொல்லவொன்னாத இனிய ஆன்மநிலை என்று யோகம் கூறுகிறது.

திருமந்திரம் 3-584 ம் பாடலில்
எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியை உள்கவல்வார்க்கு
கருவிடும் சோதி கலந்து நின்றானே 

குதம் மற்றும் கருக்குழிகளுக்கு இருவிரற்கடை தொலைவினில் உருவிக் கொண்டு அலையும்  வண்ணம் நிலவும் ஆன்ம சக்தியை கவனித்து உள் எழுப்ப வல்லார்க்கு மீண்டும் கருவினில் நுழையா நிலையான இறைநிலை கிடைக்கும் என்பது பாடலின் பொருள்.இக் கருத்தையே இந்த நான்கு வரிகளும் விளக்குகின்றன.

அவ்வாறு சுழிமுனையில் நிலைபெற்றுத் திகழும் ஆன்மசக்தியின் இனிமை நிலையை  வாய்விட்டு விளக்கி உரைத்து விளக்கி அருள் செய்வது கணபதியின் அருள். அந்த அருள் மூலாதாரத்தில் மூண்டு திகழும் கனலை காலால் எழுப்பும் வித்தையை (யோகாசானத்தில் இது ஒரு உயர்ந்த உட்பொருள் நிரம்பிய ஆசனம், விநாயகர் வடிவத்தின் குதிகால் மூலாதாரத்தை அழுத்தி நிற்கும் வடிவத்தை உற்று நோக்கலாம்!)  கருத்தில் விளங்கும் வண்ணம் அறிவித்து அருள் செய்யும் விநாயகப் பெருமானே....



அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்.
48


அமுத நிலை- ஆன்ம சக்தி சுழிமுனையில் திகழும் அமுத நிலை
ஆதித்தன் இயக்கம் - உடலின் சூரிய மண்டல இயக்கம்
குமுத சகாயன்- குமுத மலரின் சகாயனான சந்திரன்
இடைச் சக்கரம் - சூரிய மண்டலமான நாபியின் மேலிருக்கும் பதினாறு கலைகளுடன் கூடிய சக்கரம்


நமது உடலின் ஆறு ஆதாரங்களின் வழி ஆன்ம சக்தி உயிர்ச் சக்தியாக வழிந்து திகழ்கிறது.அதன் கடை நிலையில் மூலாதாரத்தில் திகழ்த்து கரு உருவாக்க சக்தியாக மாறுகிறது.

சூரிய மண்டலம் நாபிக்கு மேலும் சந்திர மண்டலம் தலைக்குக் கீழும் தண்டுவட நரம்புப் பாதையில் குறியீட்டு நிலையில் திகழ்கின்றன; சந்திர மண்டலத்தில் இருந்து வழியும் உயிர்ச்சத்தானது சூரிய மண்டலத்தில் நிகழும் அக்னியால் உறிஞ்சப் படுவதால் ஆன்மக் கனல் மூலாதார நிலையிலேயே இருக்கிறது.

யோகப் பயிற்சி வழிகளின் ஊடாக சுழிமுனையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக் குறியீட்டு நிலைக்கு, ஆன்ம சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சந்திர மண்டலத்தினின்று கீழ் வழி உயிர்ச்சக்தி வழியாது மேல்வழி திருப்பி,சுழி முனைப் பீடத்தை திறக்கும் வல்லமை பெறும் போது,ஆன்ம சக்தி பேரானந்த நிலைக்கு, பிறப்பற்ற நிலைக்குச் செல்கிறது.

இந்த வழிமுறைகளை உடலியக்க சக்கரங்கள் மற்றும் உறுப்புக்களின் இயக்க நுணுக்கங்களை விளங்கச் செய்து சூரிய இடைச் சக்கரத்தின் நிலை, திங்கள் மண்டலத்தினின்று வழியும் உயிர்ச் சக்தி, அது இயங்கும் ஆதித்த-சூரிய மண்டல இயக்க விளக்கம், இவற்றையெல்லாம் ஆன்ம சக்தி கடந்து சுழி முனைப் பீடத்தை உடைத்துத் திறக்கும் வித்தையை அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....



சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
52



சண்முக தூலம்- அறு கோணத்திலிருக்கும் பருப் பொருள் உண்மை
சதுர்முக சூட்சம்-  நான்கு முக சூட்சும உண்மை
புரியட்ட காயம்- எட்டு நிலைகளால் விளக்கப்படும் உடல்
தெரி எட்டு நிலை- ஐம்புலன்களோடு மனம்,சித்தம்,அகங்காரம் என்ற கரணங்கள் சேர்ந்த எட்டு நிலை

அறு கோணம் ஞான நிலையைச் சார்ந்தது; பல எந்திரச் சக்கரங்கள் எழுதும் போதும், வீடுகளில் எளிய கோலம் போடும் போதும் கூட இரண்டு முக்கோணங்களை ஒன்றன் மீது ஒன்று தலைகீழாகப் பொருத்தி அறுகோணச் சக்கரம் வரைவதைப் பார்த்திருப்போம்.

சிவசக்தியின் உட்பொருள் சக்தி ,நான்முகத்தின்னுள் அமைந்த அறுகோண வடிவத் தூலத்தில் திகழ்கிறது என்பதை உணர்த்தவே, முருகனுக்கு அறுகோணச் சக்கரத்துடன் தொடர்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த சிவ சக்தி உட்பொருளை ஆன்ம உயிர் உணரும் வண்ணம் உடலின் எட்டு நிலைகளிலும் எனக்கு அறிவிக்கச் செய்து, சிந்தனை வழி எண்ணித்தெளியும் முகமாக(எண்முகமாக) உடலியக்கத்தின் எட்டு நுட்பத் தன்மைகளை புலப்படும் வண்ணம் எனக்கு அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே.... 




கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து  
56



கருத்தினில் - அறிவில் விளங்கும் வண்ணம்
கபால வாயில் - சுழிமுனையின் ஆதார நிலையும்,அதற்கு மேலான கபாலத் திறப்பின் பெருவெளி நிலை வாயிலும் 
இருத்தி- நிலை பெறச் செய்து
முத்தி- ஆன்மா ஆதார நிலையின் இறுதியை அடைந்து திகழும் இன்புற்ற நிலை
முன்னை வினை- ஆன்ம உயிரின் பற்பல முன் பிறப்பு வினை நிலைகள்


ஆன்மநிலையில் உயர்ந்த பெரியவர்கள் உடலத்தை நீக்கும் போது கபாலப் பெருவழியின் வழி ஆன்ம உயிரை நீக்கிக் கொள்ளும் பேறு பெற்றவர்களாகத் திகழ்வதுண்டு; இறப்பின் உயர்ந்த நிலையாக இது அறியப் படுகிறது.அதனையே கபால மோட்சம் என்று புராணங்கள் விவரிக்கின்றன.

உலகிற்கு ஆன்ம உயிர் அனுப்பப் படும் போது கருவி,வினைகளின் எச்சங்களைப் பொறுத்து அந்த ஆன்ம உயிருக்கான உடலம் சிவசக்தியால் தேர்ந்தெடுக்கப் படுகிறது.
தாயின் சுவாசத்தின் உதவியால் தானும் சுவாசித்துக் கொண்டிருக்கும் குழந்தை உலகைப் பார்க்க கருக்குழி வழி வெளிவரும் கணத்திலேயே அந்தக் குழந்தைக்கான ஆன்ம உயிர் கபாலத்தின் உச்சி வழி குழந்தையின் உடலத்தினுள் சென்று நிலைபெறுகிறது.

குழந்தையின் நாபிக் கொடி அறுத்து குழந்தை முதலில் உலகத்தின் காற்றைச் சுவாசிக்கும் கணம் வரை உள்ள நேரத்தை எடுத்துக் கொண்டு ஆன்ம உயிர் அக்குழந்தையின் உடலில் செயல்படத் துவங்குகிறது.

பிறந்த குழந்தையின் கபால உச்சி இதன் காரணமாகவே குழியுடன் மேற்தோலால் மட்டும் மூடப்பட்டுத் திகழும்; எச்சரிக்கையாகத் தடவிப் பார்க்க கபால உச்சியில் இதனை உணரலாம்.

உடலில் உயிர் நிலவவும்,உடலத்திலிருந்து விடைபெறும் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது கபாலப் பெருவெளி.

உயிர் உடலில் நிலவும் ஆயுட்காலத்திலேயே ஆன்ம உயிர் சக்தியை சுழிமுனை மற்றும் கபாலப் பெருவெளி வரை உலவச் செய்யும் திறனை அடைபவர் ஆன்ம உயிரை உயர்நிலையில் செலுத்தும் நிலையை அடைகின்றனர்.

அந்த நிலையே யோகத்தின், ஞானத்தின் உயர்நிலை.


எனது ஆன்ம உயிர்ப் பொருளை எனது சிந்தனைக்கு அறிவித்து, ஆன்மா தோன்றிய காலம் தொட்டு சேர்த்து வைத்திருக்கின்ற வினைகளை முதல் வரை களைந்து,(முதல் என்பது principal, அதற்கு வினைகள் மென்மேலும் பல பிறப்புகளில் சேர்ந்து interest பெருகுகிறது.அவற்றை முதல் வரை முற்றாகக் களைந்து அருள்கிறார் விநாயகப் பெருமான் என்பது நுண்ணிய பொருள்)  எனது ஆன்ம உயிரை ஆதாரத்தின் இறுதி நிலையான சுழிமுனை மற்றும் பெருவெளியில் வாயிலைக் காட்டி நிறுத்தி எனது ஆன்மாவுக்கான பேரானந்த நிலையை எனக்கு அருளும் விநாயகப் பெருமானே....


வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில்   
60



வாக்கும் மனமும் இல்லா மனோலயம் - பேச்சும் சிந்தனையும் ஒருமுகப் பட்டு கருவி,வினைகள் ஒன்றுமில்லாது திகழும்  மனநிலை
இருள் வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன - இருளாகவும்,வெளிச்சமாகவும் உள்ள இரு நிலைகளிலும் ஒன்றே என உணரும் உயர்நிலை

சும்மா இரு என்று ஞானியர்கள் உபதேசத்திருக்கிறார்கள் என்பது பல கதைகளில் கூட விளக்கப் பெற்றிருக்கிறது. ஒன்றும் செய்யாமல் சோம்பித் தூங்குவது சும்மா இருத்தல் என்று நாம் பலர் அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

அந்த நிலை உடலால் சும்மா இருக்கும் நிலை இல்லை; ஆன்மா கருவிகள்,வினைகள்,மாயை
ஆகிய எவற்றின் பாற்படாமல் சிவசிந்தனையில் திளைத்திருக்கத் திகழும் நிலை.

அதைத்தான் வாக்கும் மனமும் இறந்த நிலை காணில் யாக்கைக்கு அழிவில்லையாம் என்று பாடிச் சென்றார் ஔவைப் பிராட்டி.

அத்தகு மோன நிலையை காட்ட மட்டும் செய்யாது,அந்த நிலையில் ஆன்மா தேங்கி நிலைத்து நிற்கும் வண்ணம் எனது சிந்தனையைத் தெளிவித்து, இருளும் ஒளியும் ஒன்றே என உணரும் நிலையில் எனது ஆன்மாவை அருளானந்த நிலையில் அழுந்தி இருக்கச் செய்தருளும் விநாயகப் பெருமானே.....


எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
64

சதாசிவம் - சிவத்தின் இறுதி வடிவநிலை(சிவம்,மகேசுவரம்,சதாசிவம்)
சித்தம்- சிந்தனை



சித்தாந்தத்தின் படி சிவம் என்ற கடவுள் நிலை மற்ற அகச் சமயங்களில் நிலவும் கடவுளர்களை மீறிய நிலை;அதனினும் உயர்ந்த நிலை மகேசுவரம் எனப்படும் சிவனடியார்களின் ஆன்மாவாக சிவ சொரூபம் திகழும் நிலை;அதனினும் உயர்ந்தது சித்தாந்தத்தின் மேன்மையான அனைத்தையும் கடந்த சதாசிவ நிலை.


எனது சிந்தனையில் சிவ சொரூபத்தை விளங்கச் செய்து, மாயையின் பாற்பட்டும்,கருவிகளின் வினைகளின் பாற்பட்டும் அல்லலுறும் உலகாதாய சப்த சூழலிலும் ஆன்மாவிற்கு அந்த அல்லல்கள் அனைத்தையும் விலக்கி, ஆன்ம சக்தி சிவத்தின் இறுதி நிலையை அடையவல்ல அருள் வழியைக் காட்டி அருளி, முடிவற்ற ஆனந்த நிலையை எனக்கு அருளச் செய்து,சிவத்தின் இறுதி நிலையான சதாசிவ நிலையை காட்டி அருளச் செய்யவல்ல விநாயப் பெருமானே..... 




அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.
68

கணுமுற்றி நின்ற கரும்பு - கணு முற்றி நின்ற விளைந்த கரும்பின் இனிமை
வேடமும் நீறும் - சிவ வடிவ வேடம் மற்றும் திருநீறு அணிந்த நிலை விளங்க
கூடும் மெய்த் தொண்டர் குழாம்- சிவத்தில் பற்றுக் கொண்டு இணைந்த அடியார்கள் குழுமம்


சைவசித்தாந்த தத்துவத்தின் படி சிவ சொரூபமான இறைவன் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் அல்லதுமாய் இருப்பவன்; மாணிக்கவாசகப் பெருமான் இறைவன் இயல்பை சிவபுராணத்தில் சொல்லும் போது

அன்பருக்கு அன்பனே,யாவையுமாய் அல்லையுமாய்சோதியனே,துன்னிருளே,
தோன்றாப் பெருமையனே,ஆதியனே, 
அந்தம்,நடுவாகி,அல்லானே 

என்று விளிக்கிறார்.

பிரபஞ்சம் எனப்படும் பால்வெளியில் இருக்கும் யாவும்,அந்த யாவும் அல்லாது ஏதாவது இருப்பின் அந்தப் பொருளும், ஒளியாகவும், இருளாகவும், இரண்டுமற்ற தோன்றாத் தன்மையும், முதலானதாவும்,முடிவான பொருளாகவும்,இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும்,எதுவும் அற்றதாகவும் திகழ்கின்ற சிவப் பரம் பொருளே என்று இறைவனின் இயல்பை விரித்துச் செல்கிறார்.

உலக சமயங்கள் எதிலும் இறைச் சக்தியை,பரம் பொருளின் தன்மையை இவ்வளவு பொதுமைப் படுத்திப் பேசும் சமயங்கள் இருக்கின்றனவா என்பது விவாதப் பொருள். அத்தகு மேன்மையான சிவத்தின் சக்தி அணுவிலும் அணுவிற்கு அணுவிலும்(போஸான் என்னும் கடவுள் துகள் !?) அவற்றிற்கு அப்பாலாகவும் திகழும் தன்மையை முற்றி நின்ற கரும்பின் இனிமை போலக் காட்டியருளி, சிவ வேடமும் நீறணிந்த மேனியும் கொண்ட சிவத் தொண்டர் கூட்டத்தினருடன் எம்மை இணைத்து ,சிவத்தின் மேன்மைப் பொருளை விளக்கி அருளும் விநாயகப் பெருமானே....,



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .
72

அஞ்சக்கரம் - அஞ்சு அக்கரம் - ஐந்தெருத்து மந்திரம்(நமசிவாய)
வித்தக - உயர்ந்த,மேன்மையான
விரைகழல் - விரைவாக செயல்படும் கால்கள்,பாதார விந்தம்


நமசிவாய மந்திரம் சிவத்தின் பொருளை விளக்க வல்லது.உலக வினைகளை நீக்கி, மும்மலங்களை நீக்கி ஆன்ம ஒளியை சிவசொரூபத்தில் நிலைக்க வைக்க வல்லது நமசிவாய மந்திரம்.

நமசிவாய  மந்திரத்தின் வழி மேன்மையை அடைந்த பெரியவர்கள் அந்த அனுபவத்தைத்தான் திருமுறைப் பாடல்கள் எங்கிலும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

நாவினுக்கருங்கலம் நமசிவாயவே என்பது அப்பர் பெருமான் வாக்கு; அவரே நற்றுனையாவது நமசிவாயவே என்கிறார்.

ஒருக்கால் எனது சிந்தை உன்னை வழுத்துவதை மறந்தாலும் எனது நாவானது இயல்பாகவே உன்னை சிந்தித்து திகழும் என்ற பொருளில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே என்று அறிவித்தார்;

கூற்றுவன் வரும் காலம் கூற்றுவன் அஞ்சும் வண்ணம் திகழும் காப்புச் சொல் நமசிவாயவே என்ற பொருளில் கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே என்றார் சம்பந்தப் பெருமான்.

அதனாலேயே ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்லப் பட்டது நமசிவாய மந்திரம்.

அந்த மந்திரத்தின் விளக்கப் பொருள்தன்னை என்னுடைய நெஞ்சமும் அறிவும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எனது சிந்தனை அறிவு நிலையையும் கருத்தில் கொண்டு, ஆன்மா சிவத்தினை அடைந்து திகழும் தத்துவ நிலையை எனக்குத் தந்து ஆட்கொண்டருளக் கூடிய,மேன்மை பொருந்திய,எனது நிலையைக் கடைத்தேற்ற விரும்பி ஆட்கொள்ளும் வண்ணம், விரைவாகச் செயல்படும் பாதாரவிந்தங்களைக் கொண்ட விநாயகப் பெருமானே....உனது கழல்களே சரணம் ! சரணம் !! சரணம் !!!


விநாயகர் அகவலை தினந்தோறும் வழுத்தி ஆன்ம உயர் நிலையை அடைந்து இன்புற வாழ்த்துக்கள் !!!

Wednesday, April 6, 2011

130.விநாயகர் அகவல்- ஃபார் டம்மீஸ்-1

சித்தாந்தக் கருத்துகளின் சாரமாக அமையப் பெற்றது விநாயகர் அகவல் என்பர் கற்றோர்.

சிறுவயதில்,ஏன் இன்றும் கூட அம்மா பல பாடல்களை வழிபடு சமயங்களில் பாடும்போது,பெரும்பாலும் விநாயகர் அகவலுடன் தான் வழிபாடு துவங்கும்.
எங்களை சிறுவயதில் இதை மனனம் செய்ய அம்மா பலமுறை வலியுறுத்தியும் டபாய்த்து விட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் பல திருமுறைப் பாடல்கள்,500 க்கும் மேற்பட்ட திருக்குறள் பாடல்களை யெல்லாம் மனனம் செய்து பல போட்டிகளில் 13 வயதுக்குள் பரிசுகள் வாங்கியிருந்தும்,விநாயகர் அகவலின் 72 வரிகள் மனனம் செய்வது அக்காலத்தில் பெரும்பாடாயிருந்தது.

ஆனால் பிற்பாடு எனக்கு இயல்பாகவே ஏற்பட்ட ஆர்வத்தினால் மனனம் செய்த போது நான் சிறுவயதில் மற்றைய பல பாடல்கள் போல இதனையும் மனனம் செய்யாதது எவ்வளவு தவறு என்று புரிந்தது.

காரணத்தை விளக்குகிறேன்.

20 வயதுக்கு மேல்தான் விநாயகர் அகவலைப் பொருளில் திளைத்து படிக்க ஆரம்பித்தேன்.சைவ சித்தாந்தத்தின் நுட்பப் பொருள்கள் பல விநாயகர் அகவலில் இருக்கிறது;முடிந்தால் படித்துத் தெரிந்து கொள் என்ற அம்மாவின் சவாலால்தான் அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆயினும் சிறு வயதில்,அதாவது 13,14 வயதுக்குள் மனனம் செய்யும் பாடல்கள்  அல்லது மற்ற எதுவுமே நினைவின் அடித்தளத்தில் தங்கிப் போகும்.அவற்றை மீளக் கொண்டுவருவது-ரிட்ரைவிங்-மிக எளிது.ஆகையினால்தான் சிறு வயதில் படிப்பது என்பது பசு மரத்தாணி போல மனதில் பதியும் என்று சொல்லி வைத்தார்கள்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்-4 ம் பாகம் என்று நினைக்கிறேன்-அவர் சோம்பிக் கழித்து விட்ட இளமைப் பருவத்தைப் பற்றி வருந்தி எழுதியிருப்பார்.அவர் மட்டும் சோம்பியிராமல் மேலும் சிறு வயதின் பொழுதுகளை பயன்படுத்தியிருந்தால் எதிர்காலத் தமிழன் சிலப்பதிகாரத்திற்கு அவரது உரையைத்தான் படித்திருந்திருப்பான் என்று சொல்லியிருப்பார்.

இளமையின் சக்தி கதிர் வீச்சுப் போன்றது.சிறுவயதில் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ நல்ல விதயங்களை மனதில் நுழைத்து விட்டால்,சிந்தனை முகிழும் நேரங்களில் அந்த மனனப் பகுதிகளை அசை போடும் அறிவு பல ஞான வாசல்களைத் திறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அர்த்தம் புரியாத போதும் நான் மனனம் செய்த 500 க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் இன்று வாழ்வியலை,மனிதர்களை,குணாதிசயங்களை மின்னல் கீற்றுப் போல வெளிச்சப்படுத்திக் காட்டுகின்றன.தமிழின் பொக்கிஷமான இது போன்ற செய்யுட்களை சிறார்களை வற்புறுத்தியாவது மனனம் செய்ய வைப்பது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும்,அவர்களை நல்ல சிந்தனா வாதிகளாக உலவச்செய்யும் கடமையால் சமுதாயத்தின் நன்மைக்கும் பயன் செய்தவர்களாவோம்.

எனவே...இளமையில் கல்'வது நல்லது.

அந்த வகையில் சிறிது கடந்தாவது ஈடுபட்ட விநாயகர் அகவலின் பொருள் தத்துவ வாழ்வின் பல பக்கங்களைப் பரிச்சயம் செய்யும் பலன் மிக்கது.தமிழர்களுக்கு கணபதி என்னும் விநாயகர் எப்போது அறிமுகம் ஆனார் என்பது அறுதியிட்டுத் அறியப்படவில்லை,ஆயினும் நம்பியாண்டார் நம்பியின் காலத்திலேயே பொல்லாப் பிள்ளையார் அவருக்கு அருளிய கதை இருப்பதால் 5|6 ம் நூற்றாண்டு காலத்திலேயே கணபதி இருந்திருக்கிறார் என்பது உறுதி.

மேலும் தமிழர்களின் வாழ்வியலில் எளிதாக எங்கும் பிரசன்னமாகும் தகுதியும் எளிமையும் படைத்தவர் விநாயகர்தான்.சிறிது மஞ்சள் தூளை நீரூற்றி பிசைந்து முக்கோண வடிவில் பிடித்து வைத்தால் அன்புடன் வந்து விடும் எளியவர் விநாயகர்.இளம் பெண்கள் பலரின் கதாநாயகக் கடவுளும் விநாயகராக இருப்பதன் மனவோட்டம் பற்றிப் பலமுறை சிந்தித்தும் இருக்கிறேன்.

இவை எல்லாம் போக, தமிழ்ச் செய்யுளாகவும்,வழிபடு பாடலாகவும் விநாயகர் அகவல் அதன் பொருளுக்காகவும்,சந்த நயத்திற்காகவும் என்னை மிகவும் கவர்ந்ததில் ஒன்று.

எனவே பொருளுடன் விநாயகர் அகவலை வலையில் பதிந்து வைத்தால் இளைய தலைமுறையினர் பலருக்கு பயன்படலாம் என்பதால் இந்தப் பதிவு.


விநாயகர் அகவல்.




சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் .
4


சீதம்-குளிர்ச்சி களபம்- வாசம் அரை-இடுப்பு மருங்கு-இடை\உடல்


தண்மையும் வாசமும் பொருந்திய செந்தாமரை போன்ற பாத்ததில் இருக்கும் சிலம்பு பல விதமான இசைகளை ஒலித்து சப்திக்க, பொன்னாலான அரைநாணும் மலர் போன்ற மென்மையான ஆடையை இடையில்,உடலில் என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அழகு ததும்ப அணிந்து கொண்டு இருக்கின்ற...




பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் .
8


பேழை- பெட்டி 
வேழம்-யானை 
அங்குசம்,பாசம்-இரண்டு கைகளில் வைத்திருக்கும் இரு வித ஆயுதங்கள்.


பெட்டி போன்ற பெரிய வயிறும் நீண்டு பெரிய எடையுடைய பெரிய தந்தமும் கொண்டு யாணை முகத்தையும் அதில் அழகாகத் துலங்குகின்ற சிந்தூரம் எனப்படும் குங்குமமும் கொண்டு, ஐந்து கரங்களையும் அதில் அங்குசம் மற்றும் பாசம் என்னும் இரண்டு கருவிகளையும் கொண்டு, எனது நெஞ்சில் குடிகொண்டு விளங்குகின்ற நீல வண்ண மேனியும்....


அங்குசம் என்பது பொதுவாக அடக்குவதற்கான கருவி.யானையை அடக்குவதற்காக அங்குசத்தை யானைப்பாகன் உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாசம் என்பது தளைப்பது,பிணைப்பது-உலகில் பலவித பொருள்கள் மற்றும் மனிதர்கள் உறவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாசத்தினாலும் ஆசையினாலும்தான் பல வித உலகியல் நடவடிக்கைகளுப் அவை சார்ந்த துன்பங்களும் நேர்கின்றன.விநாயகர் இவ்வாறாக தளைகளை ஏற்படுத்துகின்ற பாசத்தையும் அவற்றை கட்டுறுத்தி,மட்டுறுத்தி வைக்கின்ற அங்குசத்தையும் ஒருங்கே கொண்டு இலங்குகின்றார் என்பதைக் குறிப்பால் தெரிவிக்கின்றன இவ்வரிகள்.


நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் .
12


நான்ற- அகன்ற,பெரிய.
புயம்-தோள்கள் . 
மும்மதம்-யானை வடிவில் இருப்பதால் மும்மதம் பொழிகின்றது எனக் கொள்ளலாம் 
முப்புரி-மூன்று நூல்களை முறுக்கிய நூல்


அகன்ற பெரிய வாயும்,நான்கு புயங்களும், மூன்று கண்களும்-இரண்டு கண்கள் முகத்திலும் தும்பிக்கையில் நடுவில் ஒரு கண்ணும்- மும்மதம் பொழிந்த சுவடான அடையாளமும், இரண்டு செவிகளும், பொன்னாலான கிரீடமும் அணிந்து, திரண்டு விளங்குகின்ற மூன்று நூல்களால் முறுக்கி அமையப்பெற்ற முப்புரி நூல் விளங்குளின்ற ஒளி பொருந்திய மார்பும்...




சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் .
16


சொற்பதம்-சொற்களால் விளக்கப்படுகின்ற ;
துரியம் - இது மெய்ஞானத்தில் நிலைத்திருக்கும் ஒரு நிலை


விநாயகரான கணபதி, இவ்வாறான சொற்களால் விவரிக்கத் தக்க இயலாத வண்ணம் திகழ்கின்ற துரிய நிலையில் அற்புதமாக இலங்குகின்ற அனைத்தையும் வழங்கி மகிழ்கின்ற யானை முகத்தோனே,மா,பலா,வாழை என்ற முக்கனிகளையும் விரும்பி ஏற்கின்ற, மூசிகம் என்னும் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாகக் கொண்டிருக்கின்றவனே, இன்று இந்தப் பொழுதில் என்னை கடைத்தேற்றி ஆட் கொண்டு அருள வேண்டி உன்னை விரும்புகின்றேன்...




சைவ சித்தாந்த மரபில் ஆத்மம்,உடலில் பால் செயல்படுகிறது. அந்த செயல்பாடு உலகில் இருக்கும் பலவித காரியங்களில் இருக்கும் போது விழிப்பு நிலையிலும்,மனவெளியில் கனவுலகில் செயல்படும் சொப்பன நிலையிலும் ஆழ்ந்த கனவுகளற்ற உறக்க நிலையிலும் ஆத்மா செயல் படும் நிலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வேறாக உடல் புற வெளியின் உலகியல் காரணிகளால் ஆளப்பட்டிருப்பினும் ஆன்மா அருள் உணர்வில் இறைத்தத்துவத்தில் ஒடுங்கி நிற்கும் நிலையில் விழிப்போ,மயக்கமோ அல்லது உறக்கமோ அல்லாத ஒரு நிலை கை கூடும்,அந்த நிலையை துரிய நிலை என்று அழைக்கிறது சைவ சித்தாந்தம்.




தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து .
20


மாயாப் பிறவி- மாயை நிலையை அதிகரிக்கின்ற இவ்வுலக வாழ்வு
ஐந்தெழுத்து- நமசிவாய என்னும் ஐந்தெழுத்து
மாயாப் பிறவி- இவ்வுலகில் உயிர் உடலின் பால் செயல்பட்டு பலவித உலகியல் காரியங்களில் ஈடுபடும் போது மாயையின் பாற் பட்டு இயங்குகிறது என்று சொல்கிறது சைவசித்தாந்தம்.ஆகையினாலேயே இவ்வுலகம் ஒரு மாயை என்ற சொலவடை வந்தது. மாயா மாயா எல்லாம் மாயா.....!


உலகில் எந்த உயிருக்கும் தாயைப் போல நன்மை செய்யும் நபர் வேறு எவரும் இல்லை.ஒரு உயிரைப் பிறப்பிப்பதில் இருந்த அந்த உயிரும் உயிர் தாங்கிய உடலும் இயைந்து நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்கு தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் தந்து நம்மை வளர்ப்பவள் தாய்.எனவே தாய் போல ஆன்மாவிற்கு விளங்கி,மாயையின் பாற்பட்டு உழலும் உயிரைத் உலகவாழ்வின் மாயை என்னும் மயக்கும் பந்தத்தில் இருந்து அறுத்து, உயர்ந்ததும்,திருந்தியதும் உயிருக்கு நன்மை செய்விக்குமான  நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை ஆன்மாவின் எண்ணத்திலும் சிந்தையிலும் பொருந்துமாறு உரைப்பதற்காகவே என்னுடைய சிந்தனையில் நுழைந்து இலங்குகின்றாய்....




குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே.
24


குவலயம்-உலகம்
கோடாயுதம்-தந்தம்


என்னுடைய ஆன்மாவிற்கு குருவின் வடிவமாகி இவ்வுலகில் கிடந்து உழலும் எனக்கு உன்னுடைய திருவடிகளை எனக்கு அளித்து எது திறம் எது உண்மையான மெய்ப் பொருள் என்று விளக்கி, என்னை ஆட்கொண்டு, என்னை வாட்டத்திலிருந்த மீட்டு மெய்யான மகிழ்வு நிலையை எனக்கு அருள்வதற்காக உனது கையில் இருக்கும் தந்தத்தினால் அமைந்த கோடாயுதத்தால் எனது தீவினைகள்,கொடு வினைகள் அனைத்தையும் அகற்றி அருளும் பெருமானே...


- அடுத்த பாகத்தில் தொடர்கிறது

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...