குறள் சிந்தனை


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321


அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.

பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவும் அவை சார்ந்த பிற பழக்கங்களும் நம்மை வந்தடையும் போது அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் பொருள்.

Friday, April 15, 2011

132.இலஞ்சம் தவிர்த்து,நெஞ்சை நிமிர்த்து !!! - சபாஷ் சகாயம்.


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

பொதுவாக கிராமப் புறங்களில் இருந்து வரும் நபர்களே தன்னூக்கம்,உளசுத்தி,சிறிது அதிகபட்ச நேர்மை,சிறிது அதிகபட்ச சுயமான திறன் கொண்டு இருக்கிறார்கள் என்பது எனது சிந்தனை முடிவு.இதற்கான  புள்ளி விவரங்கள் இல்லையெனினும் எனது அனுபவங்களின் முடிவு,நான் பார்த்த நபர்களின் பின்புலங்களை ஆராயும் போது அல்லது கேள்விப் படும் போது இது பலமுறை மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் கூட சமீபத்தில் சிறு நகரங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பே இந்தியக் கிரிக்கெட்டுக்கு மகத்தானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு கிராமப் புறத்தான் என்ற வகையிலும்,எனது மாவட்டதைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் சகாயத்தை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சகாயம் எண்ணியது போலவே எனது சிறு வயதிலும் நானும் சில பிரதிஞ்கை அல்லது உறுதிப்பாடுகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்;அவற்றை பின்னாளில் எட்டியுமிருக்கிறேன். இப்போது எனது சிறுவயது ஆசைகள் சேவை சார்ந்த
பொதுநலன் சார்ந்த துறைகளில் இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மேற்கண்ட பத்தியைப் படிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாழ்வில் ஏற்றங்களைக் காணும் போது ஒவ்வொரு நிலையிலும் அந்த நிலையின் நமது வயதைப் பொறுத்து நாம் உத்வேகங்களை இழப்பதும்,கிடை நிலைக்குப் போய் விடுவதும் நடக்கிறது என்பதை சிற்சில அனுபவங்கள் உணர்த்துகின்றன.

திரு.சகாயம் அவர்களது மனவெழுச்சி என்றென்றும் மங்காதிருக்க வேண்டும் என்றும், இந்திய அனைத்து மதங்களின் தெய்வ சக்திகள் அவருக்கு அளவில்லா ஆற்றலையும்,பாதுகாப்பையும்,இந்த நேர்மை என்றும் நிலைத்திருக்கவும் அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.(மனித முதல்வர்களை நம்பிப் பயனொன்றும் இல்லை;ஏற்கனவே மணல் கொள்ளைத் தடுப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்படும் முயற்சியில் இருந்து தப்பித்திருக்கிறார் என்கிறது செய்தி.)




இந்த லட்சணத்தில் நல்லவர்கள்,நேர்மையானவர்கள் அரசியலில்,பொது வாழ்வில்  எப்படி  ஈடுபட முன்வருவார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

தமிழக அரசியல் !


()


பாடகி சித்ராவின் 8 வயது மகள் ஒரு விபத்தில் நேற்று துபாயில் மரணமடைந்திருக்கிறார்.

இத்தனைக்கும் குழந்தையில்லாது கிட்டத்திட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை !!!!

மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

சித்ராவின் பல பாடல்கள் மனத்தை வருடுபவை;அவரது பல நிகழ்ச்சிகளிலும் அவரது வெளிப்பாடு மிகுந்த மென்மையும்,மேன்மையும் நிரம்பிய நபராகத்தான் அவரைக் காட்டியிருக்கிறது.தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னிலை மறந்து ரசிப்பில் தள்ளியிருக்கும் அவருக்கு இப்படி ஒரு  சோதனை சொந்த வாழ்வில் !

அவருக்கு ஏன் இப்படி ஏன் ஒரு சோகம்?!


சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது போல், "சில ஏன்'களுக்கு வாழ்வில் கடைசி வரை பதில் கிடைப்பதேயில்லை" என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது.....

It's time of destiny for nightingale's most painful songs....

11 கருத்துரைகள்:

அறிவன்#11802717200764379909 said...

சோதனை

அருள் said...
This comment has been removed by a blog administrator.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனதைக் குளிரச் செய்த ஒரு செய்தியும்(திரு சகாயம்), மனத்தினை கலங்க அடிக்கும் ஒரு செய்தி(திருமதி சித்ராவின் குழந்தை?)
மொத்தத்தில் மனம் கனத்து கிடந்தது!

அறிவன்#11802717200764379909 said...

வாங்க திரு ராமமூர்த்தி..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆம்,நீங்கள் சொல்வது உண்மைதான்,சித்ராவின் இழப்பு துயரமானதுதான்..

RVS said...

இனிமேல் முதல் கமென்ட் சோதனை என்று போடாதீர்கள் அறிவன். நான் போடுகிறேன். அற்புதமான பதிவு. சகாயம் மற்றவர்களுக்கு சகாயம் செய்ய இந்த உலகிற்கு வந்தவர் என்று நினைக்கிறேன். அவருக்கு ஒரு ராயல் சல்யூட். வாத்தியாரின் கருத்தை சொன்னதற்கு உங்களுக்கு ஒரு வாத்தியார் சல்யூட். நன்றி. ;-)

சிவகுமாரன் said...

சகாயம் பற்றிய இந்த செய்திகளை சில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு நாளிதழில் படித்தேன். என் மாவட்டத்துக்காரர் என்று பெருமிதம் கொண்டது மனது. இப்போது தாங்களும் புதுகை மாவட்டத்துக்காரர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

அறிவன்#11802717200764379909 said...

அன்பு ஆர்விஎஸ்,
தஞ்சைத்தரணிக்கேயுரிய அன்பைக் காட்டியதற்கு நன்றி..

பதிவு ஏற்றப்பட்ட உடன் கமெண்ட் விழுவதில் ஏதேனும் டெக்னிகல் பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்து பார்த்துக் கொள்வதற்காகவே அந்த சோதனை.அமரர் சுஜாதாவின் தாக்கம் இல்லாத தமிழ் எழுத்தாளர்கள் 70 களுக்குப் பிறகு இருக்க முடியாது என்பது எனது துணிவான முடிவு.

அவருடைய கதைகளுக்கு நான் ரசிகன் என்றாலும்,என்னை அசைத்துப் பார்த்த எழுத்துக்கள் அவருடைய பத்தி எழுத்துக்கள்.இதில் உலகில் இருக்கும் அத்தனை விதயங்கள் பற்றியும் எழுதினார்,அதையும் கவரும் படி,நெகிழும் படி,சமயங்களில் அழ வைக்கும் படியும் எழுதி இருக்கிறார்.

அவரது இறந்து போன சகோதரி பற்றி எழுதியதும்,ஒன்று விட்ட சகோதரியின் குழந்தை இறந்தபோது எழுதியதும்,அவருடைய அப்பா இறந்த போது எழுதியதும் எப்போது படித்தாலும் மீண்டும் நெகிழ வைப்பவை.

பொருந்தமான கள சூழலில் அவரது வார்த்தைகள் அப்படியே நினைவில் மீள்வது தவிர்க்க இயலாதது.

இந்த 'சில ஏன்'களுக்குப் பதிலே கிடைப்பதில்லை' என்பதும் அப்படிப்பட்ட பிரயோகங்கிளில் ஒன்று.

நன்றி வருகைக்கும்,நன்றிகளுக்கும்.

அறிவன்#11802717200764379909 said...

அன்புள்ள சிவக்குமரன்,
நீங்கள் ஆலங்குடி என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிந்தது.

புதுகை மாவட்டக் காரர்கள் என்ற வகையில் நாம் பெருமை கொள்ளலாம்,சகாயம் போன்ற அற்புத மனிதர்களை அளித்த பகுதி என்பதற்காக...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பத்மநாபன் said...

சகாயம் அவர்களின் நேர்மை பாராட்டுக் குரியது... நேர்மையாளனுக்கு சோதனைகள் நிறைய வரும் ..எங்கும் தடுமாறாமல் நெஞ்சுறுதியோடு அவர் ஆற்றும் பணி சிறப்பு மிக்கது... இப்போதய குறுக்கு வழி மனிதர்களால் வரும் இடைஞ்சல்களிலிருந்து என்றும் விடுபட அவர்க்கு என்றும் இறையாற்றல் துணை நிற்க பிரார்த்திப்போம்...

பத்மநாபன் said...

சின்னக் குயில் சித்ரா அவர்களுக்கு நடந்த சோகம் கொடுமையானது... சாமி படத்தில் ``இது தானா `` எனும் அருமையான பாட்டு பற்றிய பேட்டியில் இந்த பாட்டு மகளின் வருகை தந்த சந்தோஷத்தை பகிர்ந்திருப்பார்... அவரது சோகத்தை காலமும் இறைவனும் விரைவில் மாற்றவேண்டும்...

அறிவன்#11802717200764379909 said...

வாங்க பத்மநாபன்..
வருகைக்கைம் கருத்துக்கும் நன்றி...

சகாயம் போன்றவர்கள் சரியாக கையாளப்படவேண்டும் என்பதுதான் முக்கியம்...

சித்ரா-அமைதி பெற வேண்டுவோம்..

Related Posts Plugin for WordPress, Blogger... படிச்சீங்களா, :)) நீங்க என்ன நினைக்கிறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க...நன்றி...