குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, March 1, 2008

44.அமரர் சுஜாதா !!!!!

அமரர் சுஜாதா!

எனக்கு(மட்டுமல்ல,இன்றைய தமிழர்களில் சுமார் 16-17 வயதிலிருந்து 70 வயது வரைக்குமான தமிழர்களில் பெரும்பான்மையோருக்கு) மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் !

அமரர் என்ற அடைமொழி கல்கிக்குப் பிறகு வேறு யாருக்காணும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமென்றால் அது சுஜாதாவுக்கு மட்டும்தான் பொருந்துமென நினைக்கிறேன்.
சிறிது யோசித்துப் பாருங்கள்,ஏன் அமரர் கல்கி என்றே கல்கி அறியப்படுகிறார்?அவரது எழுத்துக்களைப் படிக்கும் எவருக்கும்,அந்த எழுத்துப் படிமம் இதோ இரண்டு நாளைக்கு முன்னால்தான் எழுதப் பட்டு,நேற்று அச்சுக்குப் போய் இன்று நம் கைகளில் படிக்கத் தவழ்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை;இல்லை,இவை உண்மையில் ஜீவிதம் முடிந்து போன ஒரு எழுத்தாளனின்-எப்போதும் வசீகரிக்கும் -எழுத்துக்கள் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்லவே
கல்கி,பெரும்பாலும் ‘அமரர்’ கல்கி’யாக விளிக்கப் படுகிறார்.

இது சுஜாதாவுக்கும் முழுதும் பொருந்தும்.

இரண்டு எழுத்தாளர்களுமே அவர்களின் பங்களிப்பு இருப்பதால் மட்டுமே பத்திரிகைகளின் விற்பனையை எகிற வைத்தவர்கள்/வைப்பவர்கள்.(கல்கி பொன்னியின் செல்வன் ஆரம்பித்தவுடன்,வார அச்சுக்காப்பிகள் 35000 லிருந்து 72000 க்கு எகிறியதும்;சுஜாதா பிரிவோம் சந்திப்போம் எழுத ஆரம்பித்தபோது விகடன் அவருக்கு சினிமாவுக்குப் போல அண்ணாசாலையில் கட் அவுட் வைத்ததும்,சுஜாதாவின் ஆசிரியக் காலத்தில் குமுதம் சுமார் 800000 பிரதிகளை எட்டியதும்,அவர்களின் வியாபார வீச்சுக்கும்,ரசனைத் தாக்கத்துக்கும் சான்று)

எழுத்தின் சகல பரிமாணங்களிலும் சுஜாதாவுக்கிருந்த காதலும்,தேர்ச்சியும் வியப்பூட்டுவன.லாசரா,தி.ஜா,ஜெ.கா,போன்றோர்கள் உணர்வில் கொண்டு வந்த தாக்கத்தை தனது மொழிநடையின் மூலமே வாசகனுக்குக் கொண்டு வந்த அற்புத,கத்தி வீச்சுப் போன்ற கூர்மையான வசீகரிக்கும் மொழிநடை அவருடையது.ஜெயமோகன் சொல்கையில்
சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராய வேண்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.

இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும்.


என்கிறார்.
அதற்கு மின்னல் நடைக்கு வலுவூட்டிய அவரின் பரந்த வாசிப்பனுவமும்,

ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார்-எஸ்.ராமகிருஷ்ணன்
,

அபார புத்திக் கூர்மையும்,விதய ஞானமும்,நிறைந்த நகைச்சுவை, வாசகனின் தோள் மீது கைபோட்டு அவனை எழுத்துக்குள் இழுக்கும் லாவகமும்,
கணிதமேதை ராமானுஜனையும்,ஐஸ்வர்யா ராயை(பச்சனை)யும் ஒரேகட்டுரையில் எழுதும் விஷயக் கோர்ப்பும் இருந்தன.

பாலகுமாரனுக்கு(ம்,சுப்ரமணிய ராஜூவுக்கும்) எப்படி எழுதவேண்டும் என விவரித்த ஒரு அரைமணி நேரப் பேச்சின் போது-இரண்டாவது வரியில் வாசகன் கதையில் முழுமையாக நுழைந்திருக்க வேண்டும் என்பதை அவர் மிகவும் வலியுறுத்தினார் என்று பா.கு. சொல்வார்-அதை தனது அத்தனை படைப்புகளிலும் செயல்படுத்திக் காண்பித்தவர்.

கணினி,அறிவியல் சார்ந்த தமிழ் எழுத்துகளின் ஆக்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு பெரியது,ராஜீவ்காந்திக்கு இந்திய தகவல் தொழில் நுட்பாளர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டியவர்களோ,அவ்வளவு நன்றியுடன் இன்றைய த.தொ.நுட்ப தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர் அவர்.70’களின் இறுதியிலும்,80’களின் ஆரம்பங்களிலும் கணினி பற்றிய அவரின் எழுத்துக்கள் சிறுவனாக முதன்முதலில் அவரின் எழுத்துக்களுக்குப் பரிச்சயமான பலருக்கு உத்வேகம் தந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.
s.ராமகிருஷ்ணன் எழுதிய அவருக்கான அஞ்சலியின் இப்பகுதி இதற்கான ஒரு உரைகல் !
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.

படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.

இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.

ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.


சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகின் அசைக்க முடியாத ஒரு சாதனையாளர் ;சிறுகதை(பார்வை,எல்டரோடா போன்றவை இன்றும் சிலாகிக்கப்படுபவைகளில் சில),நாவல்,கட்டுரைகள்,கவிதை,நாடகம்,வலை ஊடகம்,சினிமா என்று எழுத்தின் அனைத்துத் துறைகளிலும் தன் அழுத்த முத்திரையைப் பதித்தவர்;அவர் எழுதிய வீட்டின் துணி சலவைக் கணக்குக் கூட பிரசுரமானது ஒருமுறை!

அவரின் எழுத்தின் ஆளுமை பற்றிச் சொல்ல வரும் s.ராமகிருஷ்ணன் சொல்லும் போது

எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.


என்கிறார்.அதுதான் அவரின் வெற்றி !!!

திரைத்துறையின் அவரிடமிருந்து வந்திருக்கக் கூடாத சில பங்களிப்புகளுக்கான காரணங்களை நடிகர் கமலஹாசன் அழகாகச் சொல்லிவிட்டார்.

பெருமளவு புனைவுலகத்திலேயே அவரது ஆக்கங்கள் அமைந்தன,அதனால் அவர் அவ்வளவு சிறந்தவரல்லர் என்பது,கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் தவிர வெறும் திரைப்பாடல்கள் மட்டும்தான் எழுதினார்,அதனால் புறக்கணிக்கப் பட வேண்டியவர் என்பது போன்ற முரண் வாதத்தைச் சேர்ந்தது.

இலக்கியம் படைக்கிறேன் என்ற கூரைக் கூவலுடன் அவர் எழுதவில்லை என்பது ஒத்துக் கொள்ளவேண்டிய ஒன்றே;ஆயினும் அவரது கட்டுரை ஆக்கங்கள் நல்ல வாசிப்பனுபவத்துக்கு உத்தரவாதமளிப்பவை;ஆழ்வார்கள்-ஒரு எளிய அறிமுகம்,குறளுக்கான எளிய உரை-குறிப்பாக அதற்கான முன்னுரை, பிரம்மசூத்திரத்திற்கான எளிய உரை போன்றவை முக்கிய ஆக்கங்களில் சில;ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்,கடவுள்களின் பள்ளத்தாக்கு,கனையாழியின் கடைசிப்பக்கம்,ஏன் – எதற்கு – எப்படி , தலைமைச் செயலகம் போன்றவை மறக்கவியலாதவை !

தமிழிலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்த அவர் அகம்,புறம்,தொல்காப்பியம் போன்றவற்றை எளிமையான,அவருக்கேயுரித்தான வசீகர நடையில், பணி ஓய்வுக்குப் பின்னர்,எழுதக் கொண்டிருந்த ஆர்வத்தை தமிழின் வணிக சினிமா முழுதுமாக விழுங்கியது,ஒருவகையில் நமது துரதிருஷ்டமே.கற்றதும் பெற்றதும்’ன் அவ்வப்போதைய பின்வருவன போன்ற

அம்பலத்தில் குறுந்தொகையின் எளிய அறிமுகம் எழுதிவருகிறேன்.சில பாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.உதாரணம் 130ம் பாடலின் எளிய வடிவம் இது.
நிலம் தோண்டிப் புகுந்து கொள்ளவில்லை
வானில் ஏற்ச் செல்லவில்லை
கடல்மேல் நடந்து செல்லவில்லை
நாடு,நாடாக,ஊர் ஊராக
வீடு வீடாகத்
தேடினால் கிடைக்காமலா போவார் காதலர் ?
வெள்ளிவீதியாரின் இப்பாடல் இரண்டாம் நூற்றாண்டில் இல்லாமல் நேற்று எழுதப்பட்டது என்று சொன்னாலும் நம்பலாம்


சுஜாதாவின் இலக்கியப் பூக்கள்,அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாமே என்ற ஆயாச ஆதங்கத்தை அளிப்பது நிஜம்.

ஒரு தனிமனிதராக, நேர்படப் பேசுதல்,இனியகுணம்,எவரையும் வெறுக்காதிருத்தல், (பா.கு.க்கு எழுத பெரும் ஊன்றுகோலாகவும்,அறிவுரைகள் கொடுத்த அவரையே,சாவி அளித்த ஒரு விருந்தின் போது போதையின் தாக்கத்தில் உன்னை விட நான் சாதிக்கிறேன் பார்க்கிறாயா? என்று சவால் விட்ட பா.கு.னை பற்றிச் சாவியிடம்,பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொன்ன பண்பை பா.குமாரனே எழுதி இருக்கிறார் !) பணத்தை விட நட்பையும் மனிதர்களையும் மதிக்கும் பாங்கு போன்ற அவரின் பண்புகளை
அவருடன் பழகிய அனுபவம் பெற்றவர்கள் சிலாகிக்கிறார்கள்;இவற்றை நம் நண்பர்கள் சிலரிடம் நாமே பார்க்க முடியும்.அவர்கள் மேன்மக்களானவர்களின் குணாதிசயங்களை தேடி அடைபவர்கள். ராமகிருஷ்ணன்,சுஜாதாவை நினைவு கூர்ந்து,

நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.

அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.

எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.


பணம் சம்பாதிப்பது பற்றிய மிகுவான மன உந்துதல்கள் இல்லாத அவரின் எளிய மன குணத்தை ஹரன் பிரசன்னா அழகாக சொல்கிறார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது.


இப்படியான ஒரு குணாதிசயம் கொண்ட ஒரு அற்புத அறிவுஜீவியான ஒரு எழுத்தாளனைத் தொலைத்திருக்கிறோம் என்பதுதான் கனத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது;
ஆயினும் காலம் அனைத்தையும் கடந்து போகும் என்பதுதான் உண்மை.

அவர் தன் அப்பா மறைந்த போது ‘அப்பா,அன்புள்ள அப்பா’ என்ற ஒரு கட்டுரை எழுதினார்.அதில் அவரின் தந்தையாரின் பல பண்புகளுடன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்காத நேர்மனம்,தன் மகனுக்காக என்று கூட,அண்ணாமலை(யா,அல்லது அண்ணா'வா என நினைவில்லை)ப் பல்கலையில் முக்கியப் பொறுப்பில் இருந்த தன் நண்பரிடம் தொழில்கல்விக்கான(Engineering) கல்லூரி இடத்துக்காக வேண்டாத தன்மை-இச் சம்பவம் பின்னால் அவரின் ஒரு சிறுகதையிலும் ஒரு knot ஆக வந்தது- போன்றவற்றை நினைவுகூர்ந்து எழுதிய பல விதயங்கள்,அவருக்கும் பொருத்தமானவை !

அவரின் 70 ஆவது பிறந்த தினக் கற்றதும் பெற்றதுமை பலர் நினைவு கூர்ந்து விட்டார்கள்.அதில்

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!


என்ற அவரின் பதிவு நெகிழ்வூட்டுவது !

ஹரண் சுஜாதாவுடனான தன் அனுபவத்தை,நினைவஞ்சலியை இவ்வாறு முடிக்கிறார்..

இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. 'ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க' என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye


நானும் வழிமொழிகிறேன்...
சுஜாதா,எங்களின் வாழ்நாளின் சில,பல நாட்களை உங்கள் எழுத்தால் மகிழ்வுறவும்,அறிவுறவும் செய்தீர்கள்,உங்களிடம் கற்றதையும்,உங்களால் பெற்றதையும் நிறைவுடன் நினைந்து,மேலும் சிறிது பெற்றிருக்கலாமே என்று வருந்தி,
அன்புடன்,நெகிழ்வுடன் உங்களுக்கு ஒரு Good Bye !!!!!


-ஹரன்,ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோருக்கு நன்றியுடன்.

9 comments:

  1. ரா.கி.சுஜாதாவை நினைவு கூர்ந்து எழுதிய ஒரு பீஸ்.
    http://www.desikan.com/blogcms/?item=205
    ஒரு ஆச்சர்யமாக, சுஜாதா அவரின் அப்பாவின் மறைவின் போது எழுதியதை,என்னைப் போலவே,நினைவு கூர்ந்திருக்கிறார்;வலையில் எழுதிய நினைவஞ்சலிகளில் இந்த விதயம் இதுவரை எவராலும் சுட்டப்படவில்லை என நினைக்கிறேன்.

    -தேசிகனுக்கு நன்றியுடன்.

    ReplyDelete
  2. அன்னாருக்கு நமது அஞ்சலிகள்!

    நீங்கள் குறிப்பிட்ட சுட்டிக்கு நன்றி!

    ReplyDelete
  3. சுஜாதத சார், நம் வாழ்வைத் தொட்டது போல வேறு யாரும் தொட முடியாது. அவ்வளவு தெளிவான மனிதர்.
    அன்புள்ள்வர் கூட.
    வாக்கயின் அத்தனை கணங்களையும் புரிந்து அனுபவித்தவர் என்றே தோன்றுகிறது.

    அது எழுத்து வடிவில் நம்மை வந்து சேர்ந்ததுதான் நமது அதிர்ஷ்டம்.
    நன்றி.

    ReplyDelete
  4. ///கணினி,அறிவியல் சார்ந்த தமிழ் எழுத்துகளின் ஆக்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு பெரியது,ராஜீவ்காந்திக்கு இந்திய தகவல் தொழில் நுட்பாளர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டியவர்களோ,அவ்வளவு நன்றியுடன் இன்றைய த.தொ.நுட்ப தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர் அவர்.70’களின் இறுதியிலும்,80’களின் ஆரம்பங்களிலும் கணினி பற்றிய அவரின் எழுத்துக்கள் சிறுவனாக முதன்முதலில் அவரின் எழுத்துக்களுக்குப் பரிச்சயமான பலருக்கு உத்வேகம் தந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.///

    இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுஜாதா பல சுவாரசியமான புனைகதைகளைப் படைத்தவர் என்பதே சரி. நல்ல அறிவியல் எழுத்து, அறிவியலை demystify பண்ணுவதாக இருக்க வேண்டும். மாறாக, சுஜாதாவின் கட்டுரைகள் அறிவியல்- தொழில்நுட்பத்தை மேலும் mystify செய்து படிப்பவனை/ளை பிரமிப்பில் ஆழ்த்துவனவாகவே அமைந்தவை. உதாரணமாக, 'இன்று ஒரு பொத்தானை அழுத்தி சிங்கப்பூரிலிருந்துகொண்டு அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டரை ஆன் பண்ண முடியும்' என்பார்; இது எப்படி சாத்தியமாகிறது என்ற மேலோட்டமான விளக்கம் கூட இருக்காது. படிப்பவருக்கு 'இதெல்லாம் மெத்தப் படித்த மேதாவிகளின் சமாச்சாரம் போல' என்ற உணர்வே மிஞ்சும். தமிழில் சிறந்த அறிவியல் எழுத்துக்கு இன்றைக்கும் ஆதர்சம், அமரர் பெ.நா.அப்புஸ்வாமி அவர்களே. மற்றும் ஏ.என்.சிவராமன் எழுதிய ராக்கெட்டுகள் பற்றிய புத்தகமும் (தொடராக வந்தது) குறிப்பிடத்தக்கது.

    "இன்றைய விஞ்ஞானம் அதிகம் கேள்வி கேட்டுவிட்டுத் திணறிக்கொண்டிருக்கிறது" என்று எழுதியவர் அறிவியல் எழுத்தாளராகச் சொல்லப்படுவது தமிழ்ச் சூழலில் மட்டுமே சாத்தியம். கேள்வி கேட்பதுதான் அறிவியலின் மிக அடிப்படையான செயல்பாடு. விடைகள் காலப்போக்கில்தான் கண்டுபிடிக்கப்படும். இதில் 'திணறுவதற்கு' என்ன உள்ளது என்பது சுஜாதாவுக்கே வெளிச்சம்.

    இன்னொன்றையும் குறிப்பிடலாம்: சுஜாதாவின் 'ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து' நூலைப் படித்தால் அறிவியலில் அவருக்கிருந்த "நம்பிக்கை" யின் சாயம் வெளுப்பதைக் காணலாம். தி. க. வின் உண்மை ஏட்டில் இதனை விமரிசித்து ஒரு தொடரே வெளியிடப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

    நான் நினைக்கிறேன், நமக்கு சுலபமான் லேபில்கள் தேவைப்படுகின்றன. 'உவமைக் கவிஞர் சுரதா', 'படிமக் கவிஞர் பிரமிள்' என்பது போல, 'அறிவியல் எழுத்தாளர் சுஜாதா' என்பதில் ஏதோ ஒரு வித சவுகரியம் போல.

    ReplyDelete
  5. சரவணன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    சுஜாதா எழுதிய அனைத்து விதயங்களும் சத்தியமானவை,விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று சொல்ல வந்தது என் நோக்கமல்ல.
    ஆனால் அறிவியலின் சில சாத்தியங்களை,கூறுகளை,அன்றைய சாதாரண தமிழ் வாசகனுக்கு அமைந்த நடப்பு செய்திகள்,விஞ்ஞானம் பொறுத்தவரை நிலவிய சூன்ய சூழலில்,அவர் சாதாரண வாசகனுக்கு வெகுஜன ஊடகம் வழி, அறிவியலை,கணினியைக் கொண்டு சென்றார் என்பதில் எனக்கு தீர்மானம் உண்டு.
    அப்புஸ்வாமி பற்றிய செய்திகள் எனக்கு இல்லை;இணையத்தில் தேடியும் உருப்படியாகப் படிக்க ஒன்றும் கிடைக்கவில்லை.
    ஓரளவு தேடிப் படிக்கும் என்போன்ற(தற்பெருமையாக அல்ல !)ஆட்களுக்கே அப்புஸ்வாமி பற்றிய தகவல்கள் இல்லாதபோது,சாதாரண வாசகனையும்,இணையம் போன்ற வசதிகள் இல்லாத காலத்திலும் சுஜாதா எளிதாகத் தொட்டார்,அறிவியல் கணினி பற்றி பெரிதும் எழுதினார்,அது பாராட்டப் பட வேண்டியது எனக் கருதியதே நான் சொல்ல விழைந்தது.
    இலக்கியம் சார்ந்த விதயங்களில் அவர் ஆங்காங்கு தவறு செய்திருக்கலாம்,இதில் அவரின் பலதுறைகள் சார்ந்த பன்முகத் திறமையையே நான் வியந்தேன்;அவர் சார்ந்த ஒவ்வொரு துறையிலும் விற்பன்னர் எனக் கட்டியம் கூறுவது என் நோக்கமல்ல !
    சாதாரண மனிதர்ர்களுக்கான,எழுத்தாளர்களுக்கான அளவீடுகளில்,அவரது பல்துறை அறிவு,பெருமளவு முன் நின்றது என்பதே என் எண்ணம்.

    மற்றபடி விரிவான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. தென்றல்,வல்லி சிம்ஹன்,
    உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  7. ஒரு அழகான,நெகிழ்வான கடைசித் தருணங்கள் பற்றிய பதிவு.
    தேசிகனுக்கு நன்றி.
    http://www.desikan.com/blogcms/?item=221&pending=1#pending

    ReplyDelete
  8. மிக விரிவான பதிவு அறிவன். எழுத்தாளர் எனும்போது விமர்சனங்களை சந்திப்பது இயல்பே. ஆனாலும் அவர்தனது ஆளுமை மூலம் அதையும் தாண்டியவாராக இருக்கிறார் என நினைக்கிறேன். நன்றி அறிவன்.

    ReplyDelete
  9. நன்றி கோகுலன்.
    சுஜாதாவைப் பொறுத்தவரை அவரின் ஆளுமை அனைவரும் அறிந்தது.எழுத்தாளர்களுக்குள் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருந்தார். எனவே மாபெரும் வாசகர் வட்டம் அவருக்கு இருந்தது,சில எழுத்தாளர்களின் காய்தலுக்கு மீறியும் !

    வேறு சிலருக்கு அவரின் குலம் ஒரு மாபெரும் மனத்தடையாக இருந்தது;ஆனால் இதிலும் விந்தை,இந்த மனப்பான்மையை வெகுஜனங்களுக்கு வன்மையுடன் கடத்திய கட்சித்தலைவர்களுக்கும்,அவர் மகவுகளுக்கும் கூட அவர் பிரியமானவராகவே வாழவும்,நிலை பெறவும் அவரால் முடிந்தது.
    இது irony ஆன ஒரு உண்மை.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...