குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, February 10, 2013

180. இசையும் தமிழும் !



தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இசைக்கான இடம் மிக முக்கியமானது.இன்னும் தமிழிலக்கியத்தின் ஏறத்தாழ அத்தனை பாடல்களுக்கும், அந்தப் பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்ற இசைக் குறிப்புகளுடனேயே இயற்றப் பட்டிருக்கின்றன என்பது உண்மை.

ஆனால் முரண்தொகையாக இந்த உண்மை இன்றைய சராசரித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இன்றைய தமிழர்களின் பெரும்பாலானாவர்களுக்கு இசை என்றாலே திரைஇசையின் கூறுகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரால் சொந்தம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் கர்னாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த இசையின் வடிவம் என்றும் இந்த வடிவத்தை அமைத்தவர்கள்தான் தமிழர்களுக்கும் அல்லது தென்னிந்தியா முழுமைக்கும் இசையின் கூறுகளை கர்னாடக சங்கீதம் மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கருத்தை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.



இசைக்கான கட்டுக் கோப்பு மற்றும் விதிகள் அனைத்தும் கர்னாடக சங்கீதம் மட்டுமே தென்னிந்தியாவிற்கு அளித்திருக்கிறது என்ற கருத்து பலமாக ஊன்றி விட்டது.

உண்மையில் உலகத்தின் முதல் வரிவடிவமும் இசை வடிவமும் தமிழ் மொழியிலிருந்துதான் வந்திருக்கிறது.

மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரையும் மற்றும் பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரையான காலத்திலும் பழந்தமிழின் அத்தனை கருவூலக் கூறுகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன; இசையிலிருந்து, மருத்துவத்திலிருந்து, சோதிடத்திலிருந்து அத்தனை நுண்கலைகளுக்குமான அறிவும், அக்கலைகளின் வடிவம் மற்றும் விதிகள் அனைத்தும் பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைத்தவையே.

ஆனால் இவற்றில் பல நூல்கள் வேறு மொழியில் திருடப் பட்டபின்  திட்டமிட்டு அழிக்கப் பட்டன அல்லது மறக்க வைக்கப் பட்டன.

சிங்கையில்(சிங்கப்பூர்) இரு ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் இளங்குமரன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது; அப்போது தமிழில் இசைக்கான இடப் பற்றிய பேச்சு வந்துது. அப்போது அவர் சிலம்பில்(சிலப்பதிகாரத்தில்) இசை பற்றிய அனைத்து கூறுகளும் விதிகளும் மிக விரிவாக விவரிக்கப் பட்டிருக்கின்றன என்ற விதயத்தை ஆதாரங்களுடன் விவரித்தார்.

இந்தக் கூற்றை உறுதிப் படுத்தும் விதமாக ஒரு பாடலை சமீபத்தில் படிக்க நேரிட்டது.
இல்வாழ்வு மறுத்தால்..பேயுருவம்  கொடு !

சிவபெருமானின் வடிவத்தைத் நேரில் கண்டு பதிவு செய்தவர் காரைக்காலம்மையார் என்றழைக்கப்பட்ட புனிதவதி அம்மையார் என்று மறைமலையடிகள் ஒரு நூலில் எழுதியிருந்தார்.பதினோராம் திருமுறையில் அமைந்த காரைக்காலம்மையார் இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் வரும் ஒரு பாடல்..திருவாலங்காட்டில் (சென்னையில் திருவள்ளூருக்கு அருகில் இருக்கும் ஊர்) அமைந்திருக்கும் ஈசன்  நடனமாடும் அழகை வருணிக்கும் பாடல் பின்வருவது.

"துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணி துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரைவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திருஆலங்காடே"
- (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்: 9)

இந்தப் பாடலில் முதல் இரண்டு வரிகளில் ஏழு சுவரங்களுக்கான தமிழ்ப் பெயரும், அடுத்த நான்கு வரிகளில் அந்த இசையை இசைக்கப் பயன்படுத்திய தமிழின் பண்டைய இசைக்கருவிகளின் பெயரும் அமைவதோடு இறைவன் நடமாடும் அழகை விவரித்திருக்கிறார் காரைக்காலம்மையார்.

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய பண்டைய தமிழிசையின் ஏழுசுரங்களையும் பண்னோடு பாடி சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய பதிநான்கு இசைக்கருவிகளையும் வாசித்து மிகவும் விரைவாக இறைவன் ஆடுவாராம்.


ஆனந்த நடனம்


காரைக்கால் அம்மையார் கூறிய ஏழுசுரங்களும் இன்று
ஓசை(குரல்) - சட்ஜம் (ஸ)
துத்தம் - ரிஷபம் (ரி)
கைக்கிள்ளை - காந்தாரம் (க)
உழை - மத்யமம் (ம)
இளி - பஞ்சமம் (ப)
விளரி - தைவதம் (த)
தாரம் - நிஷாதம் (நி)

என்று வழங்கப்படுகின்றன.


தமிழிலக்கியத்தையோ, பாடல்களையோ படிப்பதே கீழ்மை என்ற எண்ணம் கடந்த மூன்று பத்தாண்டுகளில் மாணவர்களின் சிந்தையில் விஷ வித்தாக விதைக்கப் பட்டு விட்டது; அந்த தலைமுறை இன்று அடுத்த தலைமுறை சமூகத்தை வழி நடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. தனக்குப் பயன்படாவிட்டாலும், அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பிலிருந்து விடுபாடாதிருக்கவாவது, தமிழிலக்கியங்களின் மீது பார்வையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இந்தப் பாடல் பொட்டில் அடப்பது போல உணர்த்திச் செல்கிறது.

தொடர்புடைய முந்தைய பதிவு(கள்) : பாரம்பரிய இசையின் வடிவம் கர்னாடக சங்கீதமா?

11 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... ...ம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் வலையுலகத் தளபதி..

      Delete
  2. அறிவன்,

    தமிழிசை சங்க காலத்தில் இருந்தேயிருக்கிறது.பாணர் குலம் என்றே உண்டு பிற்காலத்தில் ஆரிய மாயையில் எல்லாம் மாறிவிட்டது, முடக்கி விட்டார்கள் ஒரு காலத்தில் பாடுவது,ஆடுவது இழிவுன்னு அவாள் கருதினார்கள்,வெள்ளைக்காரன் இந்தியக்கலையினை ரசிக்கவும், அவாள் கத்துண்டு வெள்ளைக்காரனிடம் நல்லப்பேர் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்,பின்னர் மற்றவர்கள் இசையில் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.

    அண்ணாமலை செட்டியார் அவர்களின் ஆதரவில் தமிழிசை மன்றம் உருவாக்கப்பட்டது, இப்பொழுதும் ஆண்டு தோறும் இசை விழா நடக்குது ஆனால் மீடியா, கர்நாடக சங்கீத இசை விழாவுக்கு கொடுக்கும் முக்கியத்தினை கொடுப்பதில்லை.


    பெரிய பாடகர்களும் அவ்விழாவில் கலந்துக்கொள்வதில்லை.

    வயலின் இந்திய வாத்தியமேயில்லை வெள்ளைக்காரனை குஷிப்படுத்த என்றே வயலினில் இந்திய இசை வாசிக்க ஆரம்பித்தார்கள். இப்படி எத்தனை வாத்தியத்தினை கற்றுக்கொண்டாலும்,தவில், நாதஸ்வரம் பக்கம் மட்டும் போக மாட்டார்கள்,காரணம் அவற்றை வாசிக்க உடல் திறனும் தேவைப்படும் என்பதால் :-))

    தவில் வாசிக்காமல் இருக்க இன்னொருக்காரணம் சொல்வார்கள்,தவிலில் உள்ளது மாட்டுத்தோலாம் ,மாடு புனிதம் ஆச்சே அதான் வாசிக்கலைனு சொல்லிடலாம்,.ஆனால் மிருதங்கம் வாசிப்பார்கள்,அது எளிதில் தட்டலாம், மேலும் ஆட்டுத்தோலினால் ஆனது.

    எல்லாத்துக்கும் நேக்கா ஒரு காரணம் சொல்லிடுவாங்க :-))

    ReplyDelete
    Replies
    1. || மற்றவர்கள் இசையில் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.||

      வவ்ஸ், இதை ஏன் அனுமதிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். பார்ப்பனர்களின் முந்தைய தலைமுறைகள் செய்த தவறை இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

      ஒன்று- தமிழின் வழி இசைக் கூறுகளைக் கற்றுக் கொள்ளும் வழிகளை நாம் தேட வேண்டும். அதற்கான சான்றுகள், கற்றுக் கொள்ளும் வழிமுறைகள் சிலப்பதிகாரத்தில் முழுமையாக இருக்கிறது என்று அறிகிறேன்.

      அல்லது நாமாவது இன்றைய கர்னாடக் சங்கீதத்தைக் கற்றுக் கொண்டு தமிழ்ப் பாடல்களைப் பாடவும்,நிறையக் கேட்கவும் முற்பட வேண்டும்.

      கர்னாடக இசையைக் கற்றுக் கொள்ளத் தேவையான முயற்சியை அளிக்க நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்?

      ஆனால் இன்றைக்கும் பார்ப்பனர்ளின் குழந்தைகள் நான்கு வயதிலிருந்து பதினைந்து வரை முயன்று அந்த இசையைக் கற்றுக் கொள்கிறார்களா இல்லையா?

      தமிழிசை வளரவில்லை என்றால், கேட்பார் இருந்தால்தானே பாடுவார்கள்?

      நமது திருமணங்கள், கொண்டாட்டங்கள் இவற்றில் இதே பாடகர்களை அழைத்து முழுவதும் தமிழ்ப் பாடல்களாகவே பாட வேண்டும் என்று பணிக்கலாமே? என்ன தடை?

      நம்மிடமும் குறை இருக்கிறது ! நமக்குக் குறை சொல்வதில் இருக்கும் அக்கறையும் ஆசையும் முயற்சியை அளிப்பதில் இல்லை என்பதுதான் உண்மை.

      || ஆண்டு தோறும் இசை விழா நடக்குது ஆனால் மீடியா, கர்நாடக சங்கீத இசை விழாவுக்கு கொடுக்கும் முக்கியத்தினை கொடுப்பதில்லை.||

      காரணம் தமிழிசைக் கச்சேரிகள் விலை போவதில்லை என்பதுதான்.

      || வயலின் இந்திய வாத்தியமேயில்லை வெள்ளைக்காரனை குஷிப்படுத்த என்றே வயலினில் இந்திய இசை வாசிக்க ஆரம்பித்தார்கள். இப்படி எத்தனை வாத்தியத்தினை கற்றுக்கொண்டாலும்,தவில், நாதஸ்வரம் பக்கம் மட்டும் போக மாட்டார்கள்,காரணம் அவற்றை வாசிக்க உடல் திறனும் தேவைப்படும் என்பதால் :-))

      தவில் வாசிக்காமல் இருக்க இன்னொருக்காரணம் சொல்வார்கள்,தவிலில் உள்ளது மாட்டுத்தோலாம் ,மாடு புனிதம் ஆச்சே அதான் வாசிக்கலைனு சொல்லிடலாம்,.ஆனால் மிருதங்கம் வாசிப்பார்கள்,அது எளிதில் தட்டலாம், மேலும் ஆட்டுத்தோலினால் ஆனது.

      எல்லாத்துக்கும் நேக்கா ஒரு காரணம் சொல்லிடுவாங்க :-))||

      இவையெல்லாம் இருந்தலியலின் தேவைகள். இன்று பரவலாக எல்லா சமூகத்திலும் இந்த கல்யாண குணங்கள் இருக்கின்றன. அவர்களிடம் சற்று மேன்மையாக இருக்கின்றன, அவ்வளவுதான்.

      நன்றி வவ்ஸ்..

      Delete
  3. அறிவு:

    நீ பின்னூட்டில் சொல்லியதுதான் நான் நினைப்பதும். தமிழினத்தில் மிகக்கூரிய மதியும், ஞானமும், அளப்பரிய ஆற்றலும், சிந்தனையும் கற்பனைத்திறமும் கொண்ட மேதைகள் தோன்றித்தான் இதன் இலக்கியமும், தத்துவமும், கலைகளும், மருத்துவமும், மொழியும் தோன்றியுள்ளன. இது எவ்வளவு தூரம் உண்மையோ அவ்வளவு தூரம் தமிழினம் தாழ்வு மனப்பான்மையும், அடுத்துக்கெடுக்கும் தன்மையும், தனது பொக்கிசங்களை இடது காலால் எட்டிச்செல்லும் அறிவீனமும், வெற்று அகங்காரமும், தன்முனைப்பும் கொண்டது. இக்குணங்களால் தனது சொந்த அழிவின் விளிம்புவரை பல முறை சென்று எப்படியோ மீண்டுள்ளது. இதற்கு மற்றவர்களை ஓரளவுக்கு மேல் குற்றம் சொல்லுதல் என்பது தகாதது. ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது தமிழ் ஆப்தவாக்கியம் அன்றோ!

    உன் பதிவு தகவல்கள் நிறைந்தது. காரைக்கால் அம்மையின் அந்தாது பற்றி நாஞ்சில் நாடன் இங்கே http://solvanam.com/?p=18178

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கமணி.
      நாஞ்சில் நாடன் போன்றவர்கள் பொதுவாக ராமகிருஷ்ணன் போன்று நவீன நாவலாசிரியர்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

      திருமுறைகள் மற்றும் தமிழிலக்கியத்தில் எவ்வளவு ஆழ்ந்து எழுதியிருக்கிறார்..சொல்வனத்தை மீண்டும் அவ்வப்போது எட்டிப் பார்க்க வேண்டும்.

      நன்றி சுட்டிக்கு...

      மற்றபடி உன் கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நன்றி அவ்வப்போது வந்து செல்வதற்கு ! :)))

      Delete
  4. நல்ல கருத்துக்கள் அறிவன். நல்ல இசை எல்லாரையும் சென்று சேர 'சங்கீதத்தை' சிலரின் ஆதிக்கத்திலிருந்து மீட்டுக்கொண்டுவர வேண்டியுள்ளது.இது இயலுமா என்பதும் எந்த அளவு இயலும் என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதவன்..
      இயலும் இயலாதென்பது நம் கையில்தானே இருக்கிறது. :))

      Delete
  5. அறிவு: உன் பதிவு ரீடரில் இருக்கிறது.
    நாஞ்சில் நாடன் மூலம் நான் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை அறிய முடிந்தது. அவரது பனுவல் போற்றுதும் ஒரு நல்ல, பயனுள்ள தொடர். இப்போது புத்தகமாக வாங்கியுள்ளேன்.அருமையான சொல்லாட்சியும், ஆழமான பார்வையும், மரபில் இருந்து நவீனத்துக்கு வரக்கூடிய மிகச்சிலரில் ஒருவர்.

    அப்புறம் எப்ப இந்தப்பக்கம் வருகிறாய்? முடிந்தால் மின்னஞ்சல் கொடு.

    ReplyDelete
    Replies
    1. தங்கமணி,
      இன்னும் அதை பழைய மின்மடல்தான்..உனது முகவரிதான் மாறி விட்டது என்று நினைக்கிறேன்.
      என்னுடைய அதே பழைய மின்மடல் முகவரி இப்போது ஜிமெயில் கணக்கிலும் இருக்கிறது.

      உனது என்டிமணி கணக்கிற்கு இன்று ஒரு மடல் அனுப்பியிருக்கிறேன்.

      Delete
    2. எனது யாகூ மின்னஞ்சல் இப்போது பயன்பாட்டில் இல்லை. உனக்கு என் ஜிமெயிலில் இருந்தே பதில் அளித்திருக்கிறேன்.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...