குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, September 9, 2008

***** 73.ஒரு இரங்கல்,ஒரு தலையங்கம்

வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவு இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு.

வயலின் இசை இன்றைய நவீன காலத்திலும் எப்படி இளையர்களின் மனதையும் கொள்ளை கொள்ள முடியும் என நிரூபித்துக் காட்டிய வயலின் மன்னர்.

வேடிக்கையாக,விமர்சனங்களில்,குன்னக்குடி அவர்கள் குளிக்கும் ஓசை,பல்துலக்கும் ஓசை போன்ற ஒலிக் குறிப்புகளை எல்லாம் கூட வயலினில் கொண்டுவருவார் எனக் குறிப்பிடும் அளவுக்கு அந்த இசைக் கருவியை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தவர்.

இன்றைய இளைஞர்களின் இசையுடன் போட்டி போட்ட இசை இளைஞர்,காலத்தின் விளைவால் மறைந்தார்.

அவரின் பல இசைக் கோர்வைகள் இணையத்திலும்,யூ ட்பிலும் கிடைக்கின்றன.

இசையாலே அவை அவருக்குக் காலத்திற்கும் அஞ்சலி செய்து கொண்டிருக்கும்.

*************************************************************************************

ஒரு முன்குறிப்பு:
இக்கட்டுரை தினமணியின் தலையங்கப் பக்கத்திலிருந்து வந்தது.

நான் ஒரு எழுத்தும் சேர்க்க அவசியமில்லாத,இன்றைய நாற்ற அரசியலின் கூறுகளை முன்வைக்கும் இது கருணாநிதி அவர்களின் ஆட்சிக்கு மட்டுமன்றி ஜெ.அவர்களில் ஆட்சிக்காலத்துக்கும் சிற்சில பெயர்களை மாற்றினால் அப்படியே பொருந்தும் என நினைக்கிறேன்.

நமது பொதுவாழ்வில் விழுமியங்களின் வீழ்ச்சி குறித்து,அச்சப்பட வேண்டிய கவலைகள் ஏற்படுவதை இக்கட்டுரை முன்னுரைக்கின்றது.



ஒரு நாள் மன்னன் பிம்பசாரன் தான் புதிதாக வடிவமைத்திருக்கும் அழகிய தோட்டத்திற்குப் புத்தனை அழைத்து விருந்து வைத்து அப் பெருமானுக்கு விரிந்து பரந்த அந்தத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டே வந்தானாம். புன்முறுவலோடு பார்த்துக் கொண்டு வந்த அந்தப் பெருமான், ஒரு குறிப்பிட்ட மிகமிகச் சிறிய இடம் மட்டும் சுற்றியுள்ள தோட்டத்தின் வனப்புக்குப் பொருத்தமில்லாமலும், ஒழுங்குபடுத்தப்படாமலும் இருப்பதைக் கண்டு வியப்புற்று மன்னனிடம் "ஏன் அதை மட்டும் அப்படியே விட்டு விட்டீர்கள்' என்று கேட்டாராம்.



அந்த இடம் புட்டு அவித்து விற்கும் ஒரு கிழவிக்குச் சொந்தமானது; அந்தச் சிறிய இடத்திற்கு ஒன்றுக்கு நூறாக விலை தருவதாகச் சொல்லியும் அவள் அதை விற்க மறுத்துவிட்டாள். அவள் மூதாதையர் சொத்தாம் அது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த இடத்தை விட்டு விட்டுச் சுற்றிலும் தோட்டம் அமைத்தேன். அந்த அழகுக் குறைவு பெருமானுடைய கண்களிலும் பட்டு விட்டதே என்று பிம்பசாரன் வருந்த, புத்தர் மறுமொழி பகன்றாராம்:



""அந்தப் புட்டு விற்கும் எளிய கிழவியின் உரிமைக்குள் உன்னுடைய அதிகார வாள் செல்ல நாணப்பட்டதன் மூலம், இந்தத் தோட்டம் மட்டுமன்று; உன்னுடைய நாடே அழகுடையதாக மாறிவிட்டது'' என்று பாராட்டினாராம்.



ஏன் என்று யாரும் கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் பெற்ற மன்னன் கூடத் தன் அதிகாரத்தின் எல்லை தருமநெறியோடு மோதுகின்ற இடத்தில் முற்றுப்பெற்று விடுவதாகவே கருதுகிறான்.




உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பெற்றிருக்கும் நாட்டில், ஒரு மந்திரி இருபது கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைச் "சும்மா பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டுக் கையகப்படுத்திக் கொள்ள' முயன்றிருக்கிறார்.



நிலத்தின் உடைமையாளர்கள் அந்த அக்கிரமத்திற்கு உடன்படாதபோது, அவர்கள் தூக்கிச் செல்லப்பட்டு, உயிர் குறித்து அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நாற்றமெடுத்தபின், முதலமைச்சர் கருணாநிதி என்.கே.கே.பி. இராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேறு வழியில்லாமல் விடுவிக்கிறார்!



இதேபோல் இன்னொரு அமைச்சர் பூங்கோதை, தன்னுடைய இரத்த உறவினர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கும் சிக்கலில், உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் தன் பதவிச் செல்வாக்கைச் செலுத்தியபோது, அவருடைய பேச்சு ஒலி நாடாவில் பதிவாகித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், பதவி விலகுகிறார்!




பிறிதொரு வலிமை வாய்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் இருபதாயிரம் சதுர அடி இடத்தை வசத்திற்குக் கொண்டு வர, எண்பது ஆண்டுகளாக அங்கே குடியிருந்து வந்த முப்பத்தியொரு குடும்பங்களை இம்சித்தும், அச்சுறுத்தியும் காலி செய்ய வைத்தார் என்று வந்த புகாரை விசாரிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதியின் போலீஸ் என்ன ஸ்காட்லாந்த் யார்டா?




வருவாய்க்கு மீறிய சொத்துச் சேர்த்த வழக்கில் இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுத்து, கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு கட்டளையிட்டிருக்கிறது.




"இராமர் பால இடிப்புப் புகழ்' மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தன்னுடைய இரு மகன்களுக்கும் மலிவு விலையில் எரிவாயு உரிமம் வழங்குமாறு, தன்னுடைய கனபரிமாணமுள்ள கூட்டணி மந்திரி பதவியின் செல்வாக்கு அழுத்தத்தை மைய அரசின் மீது செலுத்தி இருக்கிறார்.




""உன் குடும்பத்திற்கு வழியில்லாத வழியில் அரசுரிமம் பெற்றுத் தொழில்களை உருவாக்கவா மந்திரி பதவி? உடனடியாக ராஜிநாமா செய்'' என்று நாடாளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தபோது, மிகவும் குளுமையாக, "அதனாலென்ன?' என்று கேட்டார். அந்த நொடியிலேயே நாடாளுமன்றத்தின் நாடி அடங்கிவிட்டது!




மேற்கூறிய அமைச்சர்களின் ஆள் கடத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள், ஊழல்கள் அனைத்தும் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து நடந்தவை.


இந்தச் சில மந்திரிகள்தாம் நெறிக் குறைபாடு உடையவர்களென்றால், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம்!


ஆனால் இங்கே மொத்த அமைச்சரவையே தறிகெட்டுப் போயிருக்கும்போது, யாரைத்தான் தள்ளுவது? யாரைத்தான் கொள்ளுவது?




கருணாநிதியேகூட ஒரு நேரத்தில் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்ளும்போது, எல்லாப் பிழைகளுக்கும் மூலத்தை அறிந்து கொள்ள மாட்டாரா? அன்று காந்தி இருந்தார். இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு வாருங்கள் என்று அழைத்தார்.



நல்லவர்களெல்லாம் நம்மைத்தான் காந்தி அழைக்கிறார் என்று பொதுவாழ்வுக்கு வந்துவிட்டார்கள். கெட்டவர்களெல்லாம் இந்தக் கிழவன் அழைப்பது நம்மை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆகவே நாட்டின் பொதுவாழ்வு பளிங்கு போல் தூய்மையானதாக இருந்தது.



அடுத்த காலகட்டத்தில் அதற்குப் பிறகு வந்த தலைவர்களும் வழக்கம்போல், இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு அழைத்தார்கள்.


நல்லவர்களெல்லாம் இந்த அழைப்பு நமக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.



கெட்டவர்களெல்லாம், "நம் தலைவர் நம்மைத்தான் அழைப்பார்' என்று உரிமையோடு உள்ளே வந்து விட்டார்கள்!



அழைக்கின்றவர் யார் என்பதைப் பொறுத்துப் பின்பற்றுகிறவர்கள் அமைகிறார்கள்!



அன்று நாட்டுக்குப் பணியாற்ற அறிவும், நெறி சார்ந்த வாழ்வும் உடையவர்களெல்லாம் முன் வந்தார்கள். அவர்கள் பல்வேறு ஜாதிகளில் பிறந்தவர்களாய் இருந்தார்கள். அதிகாரம் கைமாறும்போது இயற்கையாகவே பல்வேறு ஜாதிகள் பிரதிநிதித்துவம் பெற்று, சமூகம் சமநிலை எய்தியது! இது முறையான பிரதிநிதித்துவம்!




தமிழ்நாடு ஈன்றெடுத்த தவப்பெருமக்களைப் பாருங்கள்!



வ.உ.சி: நாட்டு விடுதலைக்காக இரண்டு ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்தவர். இவரைத் தந்தது பிள்ளைமார் சமூகம்!



இராஜாஜி: இவரை மிஞ்சிய அரசியல் அறிஞன் இந்திய மண்ணில் இல்லை. அதிகார நாற்காலியில் ஒரு முனிவனைப்போல் அமர்ந்து ஆட்சி நடத்தியவர். இவர் பிறப்பால் பார்ப்பனர்!



ஈவேரா பெரியார்: தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்துச் சுயமரியாதை கொள்ள வைத்தவர். இணையற்ற சிந்தனையாளர். ஜாதி எதிர்ப்பாளரான இவர் பிறப்பால் கன்னட நாயக்கர்!



காமராஜ்: பத்தாண்டுகள் நாட்டு விடுதலைக்காகச் சிறையில் தவமிருந்தவர். பத்தாண்டுகள் நாட்டு மேன்மைக்காக நாடாண்டவர்; இவருடைய ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்! இவர் பிறப்பால் நாடார் சமூகத்தினர்!



முத்துராமலிங்கத் தேவர்: காந்தியால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் தன்னை உருக்கிக் கொண்டவர். பின்னாளில் நேதாஜியின் தளபதி. இவர் பிறப்பால் மறவர்!



ஓ.பி. இராமசாமி ரெட்டியார்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி. முதலமைச்சராகக் கோலோச்சியவர். நேர்மையின் பிறப்பிடம். பிறப்பால் ரெட்டியார் சமூகத்தினர்!



கக்கன்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியப் பட்டறையில் உருவாக்கப்பட்டவர். அரிசன ஆலய நுழைவுப் போரின் தளபதியான வைத்தியநாத ஐயரின் தளபதி. நேர்மை மனித உருக்கொண்டு கக்கனானது! இவர் பிறப்பால் அரிசன வகுப்பினர்!



அண்ணா: புலவர்கள் மட்டத்தில் சுருங்கிப் போயிருக்க வேண்டிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மக்கள் மட்டத்திற்குக் கொண்டு சென்று, தமிழர்களை இன உணர்வு கொள்ள வைத்த தானைத் தலைவர்; ஜாதி மறுப்பாளரான இவர் பிறப்பால் முதலியார் சமூகத்தினர்.



இப்படி, இங்கே பட்டியலிட இடம்போதாத, இன்னும் எத்தனை எத்தனையோ சமூகங்களில் பிறந்து நாட்டுத் தொண்டாற்றிய தலையாய மக்கள் பலர்; அவர்கள் ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரியவர்கள். நிறைவான பெருமக்கள்!



அவர்களிடம் அழுத்தம் பெற்று நிற்கும் அறிவு மற்றும் பண்பு நலன்களுக்கேற்ப அவர்கள் உயரும் வகையில் நாட்டின் மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி!



நல்லது வாழவும், நயவஞ்சகம் அழியவும், உண்மை வாழவும், பொய் ஒழியவும், அறிவு வாழவும் அறியாமை தேயவுமான ஒரு புதிய சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பொதுவாழ்வை உருவாக்கினார்!



ஆனால் பிந்தி வந்த தலைவர்கள் சந்தர்ப்பவாதத்தையும், ஜாதி அரசியலையும் ஆயுதமாகக் கொண்டவர்கள். ஒட்டுமொத்தக் குடும்பம்தான் இவர்களின் ஒரு பெருங் கொள்கை. இத்தகையவர்களின் ஏறுமுகம் நாட்டின் இறங்குமுகமாகி விட்டது.



இவர்கள் தங்கள் மட்டத்திற்கு மேலானவர்களை உடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பித் தவறி விவரமில்லாமல் யாரும் வந்துவிட்டாலும் அவர்களைப் பிதுக்கி வெளியே தள்ளி விடுவார்கள். ஆகவே கீழே உள்ள இரண்டாவது வரிசைத் தலைவர்களைத் தகுதி அடிப்படையில் அல்லாமல், ஜாதி அடிப்படையில் மட்டுமே உருவாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.



ஜாதி என்பது ஒரு சிறு அல்லது பெருங்கூட்டம். அந்தக் கூட்டம் அதிகாரத்தில் தனக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கோரும். அவ்வளவுதான்! அதோடு அமைதி அடைந்துவிடும்!




முன்பிருந்த ஜாதிகள்தாம் இப்போதும் இருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா ஜாதிகளிலும் நல்லோரும் இருக்கிறார்கள்; தீயோரும் இருக்கிறார்கள்! முத்துராமலிங்கத் தேவரையும், காமராஜையும், கக்கனையும் அதே ஜாதிகள்தாம் அளித்தன. அவர்களின் அறிவும், தொண்டும், நேர்மையும் அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி எல்லா ஜாதிகளையும் தேசத்தையும் உயர்த்தின.




என்.கே.கே.பி. இராசாவையும், டி.ஆர். பாலுவையும், கீதா ஜீவனையும், பூங்கோதையையும் அதே ஜாதிகள்தாம் தந்திருக்கின்றன.




இவர்களின் நெறியற்ற நடத்தைகள் பிறந்த ஜாதி உள்ளிட்ட எல்லா ஜாதிகளையும் முடிவாகத் தேசத்தையும் கீழறுக்கின்றன.



இது ஜாதிகளின் குற்றமல்ல; தேர்வு செய்யும் தலைவனின் குற்றம்!

2 comments:

  1. அரசியல் நேர்மை, தூய்மை, வாய்மை... இவற்றுக்கும் ஒருவரின் சாதிக்கும் என்ன சம்பந்தம்? அவரே சம்பந்தம் இல்லையென்று சொல்கிறார். பிறகு ஏன் இந்தத் தலையங்கத்தை எழுதியவருக்கு சாதியைப் பற்றிப் பேசும் அவசியம் எழுந்தது?
    //அழைக்கின்றவர் யார் என்பதைப் பொறுத்துப் பின்பற்றுகிறவர்கள் அமைகிறார்கள்!//
    மேற்கண்ட வரிகளோடு முடியும் தலையங்கப் பகுதியின் கருத்து ஒன்று. ஒத்துக் கொள்ளப்பட வேண்டியது.
    ஆனால் அதற்குக் கீழே சாதியைப் பற்றி எழுதியிருக்கும் பகுதிக்கும் மேற்சொன்ன பகுதிக்கும் தொடர்பு இல்லை.

    மற்றபடி இன்னொரு கசடும் இருக்கிறது: // அவர்களின் அறிவும், தொண்டும், நேர்மையும் அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி எல்லா ஜாதிகளையும் தேசத்தையும் உயர்த்தின.//
    இவ்வரிகளில் இருக்கும் "அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி" என்ற வார்த்தைகளில் ஒளிந்திருப்பது என்னவென்று பார்க்கிறேன். அதுவும் யாரை மட்டும் சுட்டுகிறார், தாழ்த்தப்பட்ட சாதிகளில் பிறந்தவர்களை மட்டும். அன்றைக்கு அப்போது இருந்தது, அதனால் அப்படிச் சொன்னார் என்று எண்ணிவிட முடியாது. சாதியத்தின் தொடர் இருப்பினை, தாழ்ந்த சாதிகள் தாழ்ந்தவையாகவும், அவற்றிலே பிறந்தவர்கள் தாழ்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள் என்ற சாதியக் கட்டமைப்பின் கருத்தியலை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும் வன்மமான வார்த்தைகளே இவை. எழுதியவருக்கு நாட்டு நலனிலே பாதி அக்கறையும், சாதி-சார்ந்த விழுமியங்களைக் கட்டிக் காப்பதிலே மீதி அக்கறையும் இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் இழிந்த சாதியிலே பிறந்து மேலானவர்களாக ஆன முன்னாள் அரசியல்வாதிகளை உதாரணம் காட்டி, இழிந்த சாதியில் பிறந்து இழிவாகவே இருக்கிறீர்களே என்று கேட்கிறார் போலும். சாதியை விட இழிந்த பாகுபாடு ஒன்று மனிதரிடையே இருக்க முடியாது!

    ReplyDelete
  2. சுந்தர்,
    கருத்துக்கு நன்றி.
    சாதியைப் பற்றி ஏன் எழுதினார் என்பதற்கான என் புரிதல்,இரண்டாம் கட்டத்தலைவர்கள் பற்றி விமர்சிக்கும் போது வருகிறது.
    தகுதி அடிப்படையிலான ஒரு நபரைத் தேர்வு செய்யாமல்,சாதி அடிப்படையிலான ஒரு நபரைத் தேர்வு செய்யும் போது சாதிப் பாசம் காரணமாக அவர் தன் கட்டுக்குள் இருப்பார் என்ற ஒரு எண்ண அடிப்படையில் சாதிரீதியான இரண்டாம் நிலைத் தலைவர்கள் உருவாக்கப் பட்டார்கள் என்ற கருத்து முன்வைக்கப் படுவதாக நான் அறிகிறேன்.
    //அவர்கள் பிறந்த சாதிகளைத் தாண்டி// என்ற வார்த்தைகளுக்குண்டான நீ சொல்லும் பார்வை சரியானதாக எனக்குத் தோன்றவில்லை.காரணம் அப்படி சுட்டப்படும் தலைவர்களின் சாதியான நாடார்களும்,தேவர்,மறவர்களும் சமூக கீழ்மை அவலங்களுக்கு ஆளான சாதியிலிருந்து வந்தவர்கள் அல்லர்..ஒரு விதிவிலக்கு கக்கனுக்கு இருக்கலாம்.

    ஆனால் அந்த வார்த்தைகளுக்கான கருத்து தாங்கள் பிறந்த சாதிகள் மட்டும் பயனடைய வேண்டும் என்ற குறுகிய நிலை தாண்டி எல்லா சாதி மக்களுக்காகவும் அவர்கள் பணி செய்தார்கள் என்ற பொருளிலேயே எழுதப்பட்டிருப்பதான நான் புரிந்துகொள்கிறேன்.
    அது உண்மையும் கூட,அவர்கள் பொதுவான மக்கள் தலைவர்களாக இருந்தார்கள்..

    இதில் நீ பார்க்கும் இழிந்த பாகுபாடு எங்கு வருகிறது என்பது புரியவில்லை.

    மேலும் தலையங்கத்தின் அடிப்படை தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காத தலைவர்கள் பற்றியும் சாதீய காரணங்களை முன்வைத்து கொண்டுவரப்படும் இரண்டாம்நிலை தலைவர்கள் வரிசை,ஒரு கட்சியையும்,அக்கட்சி ஆளும் போது ஆட்சியையும்,ஆட்சியினால் நாட்டுக்கும் என்ன கேடுகள் விளைவித்திருக்கின்றன என்ற விதயங்களைத் தொட்டுச் செல்வதாகவே நான் உணர்கிறேன்.

    உனது நீண்ட கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...