குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, February 5, 2011

124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


இது சம்பந்தர் திருமுறையில் திருவலிவலப் பதிகத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடல்.

பெரும்பாலும் விநாயகர் வணக்கதிற்கு திருமுறையில் தோய்ந்தவர்களுக்கு சட்டென்று நினைவில் வரும் பாடல்.


இதற்கான பொருள் விளக்க வேண்டி எனது தம்பியிடமிருந்து ஒரு மடல் வந்தது.அனைவருக்கும் பயன்படலாம் என்று நினைத்ததால் பதிவாகவும் வருகிறது...



முதலில் பாடலைப் பதம் பிரித்துப் பார்க்கலாம்..


பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது

வடி கொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடி கணபதி வர அருளினன், மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே



முக்கியமான சொற்களுக்கான பொருள்:


பிடி-பெண் யானை

கரி- ஆண் யானை

கடி-விரைவாக

வடிவு-தோற்றம்,அழகு

பயில்-வாழ்கின்ற,வழக்கமாக வைத்திருக்கின்ற



மொழி,இலக்கிய நயம்:


மிகு கொடை வடிவினர்:


மிகுந்த அளவில் கொடைத் தன்மை கொண்ட அழகிய மாந்தர்கள்

அல்லது மிகுந்த கொடைத் தன்மையையே தம்முடைய அழகை அதிகரிக்கும் என்ற வழக்கத்தை கொண்டிருக்கும்...


மிகு கொடை வடிவினர் பயில் என்பது மிகு கொடை பயில் வடிவினர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளத் தக்கது.அதாவது மிகுந்த கொடையை பயில்கின்ற,வழக்கமாக வைத்தருக்கின்ற அழகிய தோற்றப் பொலிவு கொண்ட மக்கள் வாழ்கின்ற வலிவலம் என்றும் பொருள் கொள்ளலாம்.



கடி கணபதி


இடர்களைக் கடிகின்றவன் அதாவது இடர்களைப் பயமுறுத்தி வெருட்டி விரட்டுகின்றவன்.


சந்த நயம்:


இதுவல்லாமல் பாடலைப் படித்துப் பழகும் போதும் வேகமான சந்த நடையில் சொல்லிப் பார்க்கும் போதும் திருப்புகழைப் பாடும் உணர்வு வரலாம்.தமிழ் இலக்கியங்களில் சொற் சந்த நயத்தில் பலவற்றையும் விஞ்சி நிற்பது திருப்புகழ்.


சம்பந்தரின் தேவாரமும் திருப்புகழுடன் ஒப்பில் வைக்கத் தக்கது.


இந்தப் பாடலுக்கான பண் வியாழக் குறிஞ்சி என்கிறது திருமுறைத் தொகுப்பு.


திரண்ட பொருள்:


மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.


நன்றி..வாய்ப்புக்கு :))

Monday, September 13, 2010

123.குறுந்'தொகைகள்-13092010

தலையும் வாலும் ஒன்றா?
இன்றைய தினமணியின் தலையங்கத்தில் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு மாநிலம் இராணுவத்தின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு மாநிலத்தின் வன்முறை நிகழ்த்தும் சக்திகள் துடைத்தெடுக்கப்படவேண்டும் என்பதுதான் அது.காட்டுத்தனமான கருத்தாகத் தோன்றும் இது விவாதமேடைக்கு உரியது.

ஆனால் என்னை யோசிக்கவும் விசனிக்கவும் வைத்த வரிகள் இரண்டு இந்தத் தலையங்கத்தில் இருந்தன.

தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மறுத்து ராசபட்சயவுக்கு ஈழத்தமிழர்களைக் கொன்றழிப்பதற்கு உறுதுணையாக முன்நின்ற இந்திய நடுவன் அரசு ஏன் அநியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் காஷ்மீரில் இருக்கும் பாக் தீவிரவாதிகளைக் கொன்றழிக்க ராணுவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த லட்சணத்தில் காஷ்மீரில் இருந்த 7 மாவட்டங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற ஃபரூக் அப்துல்லாவின் கோரிக்கையை மன்மோகனும்,ப.சிதம்பரமும் ஆதரித்து விட்டதாகவும் பிரணாப்பும் அந்தோனியும் தீவிரமாக எதிர்ப்பதாலும்தான் ராணுவம் இன்னும் காஷ்மீரில் இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தீவிரவாதிகளையும் மதவியலாளர்களையும் சரியாகத் தரம் பிரிப்பதில் காமைலைக் கண் சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தத் தலையங்கத்திற்கு வந்திருக்கும் சில கருத்துக்களில் மோடியை காஷ்மீரின் முதல்வராக நியமிக்கலாம் என்று வந்திருக்கும் அதிரடிக் கருத்தும் இருக்கிறது.

பரீட்சித்துப் பார்க்கலாமோ?!

()

உயர்சாதீயம்பிராமனீயம்

பதிவர் டோண்டு ராகவனின் இந்தப் பதிவில் எழுப்பியிருக்கும் அறிவார்ந்த கருத்துக்களை ஒட்டி சில கேள்விகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் கடையைக் கலகலப்பாக வைத்திருக்க அவ்வப்போது இவ்வித சாதீயபிராம்மணத் துவேஷம் பற்றிய பதிவுகள் எழுதுவது வழமை என்ற பரவலான கருத்தும் பதிவுலகில் இருப்பது ஒரு புறமிருக்க,எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில சாரமான கேள்விகள் இருக்கின்றன.

பஞ்சகச்சம் எனப்படும் ஆடையும் விபூதியோ அல்லது நாமதாரியாகவோ இருந்தால் வடமாநிலங்களில் பண்டிட்ஜி ஆயியே என்று மதிப்பார்கள் என்றும் சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டும்தான் முறையற்ற பிராமணர்களின் மீதான நிந்தனை இருக்கிறது என்பதும் ராகவனே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள்.மேலும் இவற்றிற்கான காரணிகளாக பெரியார் மற்றும் திராவிட அரசியல் கட்சிகள் 40 ஆண்டுகளாக ஊதி வளர்த்த நிந்தனை நெருப்புமே காரணம் என்ற கருத்தும் வந்திருக்கிறது.

எனக்கு அவ்விதம் தோன்றவில்லை.

சாதியக் காரணங்களை முன்னிறுத்தி தன்னை மற்றவரிடமிருந்து உயர்ந்தவர்கள் என்று ஒரு சாரார் சொல்லும் போது அவர்களை அவர்களின் உண்மையான திறன் மற்றும் தகுதிகளுக்காக மட்டுமே மதிக்க முடியும்,பிறந்த சாதிக்காக அல்ல என்று மாமன்னன் இராசராசன் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருந்த சமூகச் சீர்திருந்தங்களுக்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மேலும் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் போதும் ஆரிய வடவர்களுக்கும் தென்னகத் தமிழர்களுக்கும் மூண்ட யுத்தம் பற்றியும் ஒருவர் மற்றொருவர் ஆதிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடக் கூடாது என்று ஏற்பட்ட உடன்படிக்கை பற்றியும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்குள் பிராமணர்களின் மீதான குறிவைத்த நிந்தனை பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தியதாக இருக்கலாம்;நமக்கு நினைவு மிகவும் மட்டு,வரலாற்றில் சமீபத்திய நிகழ்வுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும்; எனவே பொதுப்புத்தியில் அந்த நிந்தனை உறைந்து போயிருக்கிறது.

மற்றபடி அவர் நுண்ணறிவியல் தொழில்கல்விக்குச் சேரும் போதே பிராமணர் என்பதை பெருமையுடன் ஒத்துக் கொண்டதாகச் சொல்லும் அதேநேரம், தான் சாதீயக் காரணத்திற்காக பெருமைப்படுபவன் அல்ல என்றும் சொதப்பலாக பதில் அளித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் வந்த லாவண்யா என்னும் பெண் உளறிக் கொட்டியதுதான் நினைவில் வருகிறது.

மற்றபடி பார்ப்பனீயம்உயர்சாதீயம் பற்றிய அவரது கருத்தை மாறிவிட்ட இன்றைய சமூக சூழலில் நோக்கும் போது நான் முழுமனதுடன் ஏற்கிறேன்.

மொத்தமாக எல்லா ஈயங்களும் தொலைந்து போகும் போதே சமூக அமைதி நிலவும். அல்லது எல்லா ஈயங்களும் வன்மை பெறும் போதும் கூட அமைதி நிலவலாம்...இப்போது இலங்கையில் நிலவும் 'அமைதி' போல...

()
வலையுலகம்-வரமா,சாபமா?

பதிவர்கள்-நர்சிம்,கேபிள் சங்கர்,அப்துல்லா,வேறு சிலரும் இருக்கலாம்,நினைவில்லை- கலந்து கொண்ட நீயா நானா நேற்றுத்தான் சிங்கையில் ஒளிபரப்பப்பட்டது.
-சாபம் என்று பேசிய ஒருவர் முன்வைத்த,'அதிகம் தேடப்பட்ட சொல் காமம்தான்' என்ற வாதம் எளிதில் செல்லுபடியானது,அதில் உண்மையிருந்ததால்!
-இதிலும் ஒரு பிராமணப் பெண் அவா,இவா என்ற பாஷாதி விதயங்களுடன் உளறிக் கொண்டிருந்தார்,கடைசியில் அவரது தாயும் கோபியும் மடக்கிய கேள்வியில் பரிதாபமாகத் தோன்றினார்.
-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சுருக்கமான முடிவு;தேவைக்கு தேவையான அளவில் உபயோகிப்பது உபத்திரவம் இல்லாதது.
-நர்சிம் அவ்வப்போது-அல்லது எப்போதும்(!)-கால் மேல் கால் போட்டு நெளிந்தபடி அமர்ந்திருந்தார்,ஒரு வேளை இருக்கையின் மத்தியில் ஆணி இருந்ததோ? (நண்பரே,சும்மா கலாய்ப்பு..no peelings of india)
-இணையம் ஒரு வரம் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை எனது கருத்தாகவும் பதிவு செய்கிறேன்;பங்கு வர்த்தகம்,நிதிச் சந்தைகளில்(ஒரு நாளின் வணிகம் 3 ட்ரில்லியன் டாலர்கள்,அதாவது 1000 பில்லியன்,அதாவது பத்து லட்சம் மில்லியன்,அதாவது...போங்கப்பா,மயக்கம் வருது.. ) ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான சில்லரை வணிகம் போன்ற வாய்ப்புகளுக்கும்,டோண்டு ராகவன்பாடகி சின்மயி போன்றவர்கள் மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பதற்கும் இணையமே மூலம் என்பதை மறுக்கவியலாது.
-சுஜாதா இளமை பற்றி ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார் 'இளமை என்பது ஒளிக்கீற்று போலத் தோன்றி மறையும் அற்புதங்களில் ஒன்று,இதை காதலிக்காகக் காத்திருத்தல்கள் போன்ற அநாவசியமான விதயங்களில் விரயம் செய்ய வேண்டாம்' என்று. அதே போலவே இணையமும்..ஃபேஸ்புக்,மின்னரட்டை போன்ற நேரக் கொல்லிகளின் வழி இணையத்தையும் நேரத்தையும் வீண்டிப்பவர்கள் பாவத்திற்குரியவர்கள்..வேண்டாத பதிவுகளை எழுதி நிரப்பும் நம்மைப் போன்ற பதிவர்களும் இதில் அடங்குவார்களா என்று எவரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

Tuesday, September 7, 2010

122.இரு தேசங்களும்,அவற்றின் மொழிக் கொள்கையும்..

சில நாட்களுக்கு முன்னர் வந்த செய்திகளின் படி,தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்திருக்கிறது.
தமிழகத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே மிகவும் பாராட்டத் தக்க வகையில் செயல் பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அடைய வேண்டிய விதயம்.
-அரசுப்பள்ளிகளை முறைப்படுத்தியது-அரசுப்பாடநூல்களை இணையத்தில் அமைத்தது-ஆசிரியர் நியமணங்களில் கூடிய அளவு நேர்மையாகச் செயல்பட்டது-பல நிர்வாக அளவு சீர்திருத்தங்கள்-சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் துவக்கம்-தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை முறைப்படுத்துவதற்கான சட்டம்
போன்ற பல விதயங்களில் அருமையாகச் செயல்படும் அவரை பேசாமல் உயர்கல்வித்துறைக்கும் அமைச்சராக அதிகப் பொறுப்புகள் கொடுத்துப் பதவி உயர்வு அளிக்கலாம் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி.ராசா,பாலு,பூங்கோதை,பிகேபி ராசா போன்ற பல திமுக வைச் சேர்ந்த மத்திய மாநில அமைச்சர்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபடும் போது சரியான காரணங்களுக்காகக் கூட தங்கம் தென்னரசு செய்திகளில் வர மாட்டேனென்கிறார்.திரு.கருணாநிதி அமைச்சரவையில் வெகு காலத்திற்குப் பிறகு ஒரு திறனாளர் தென்பட்டிருக்கிறார்,வாழ்த்தி மகிழ்வோம்.
()
சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்த்தும் சில தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றிருக்கின்றன.இந்த நேரத்தில் சிங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.சிங்கையில் இருக்கும் பள்ளிகளில் சீனமொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும்படி பாடத்திட்டங்கள் மாறும் என்ற பொருளில் கல்வித் துறை அமைச்சர் ஒரு பேட்டியில் சொல்லி வைத்தார்.(சிங்கையில் இருப்பவர்கள் பேசுவது இங்கிலீஷ் அல்ல சிங்கிளீஷ் என்று இந்தியர்கள் கிண்டலடிப்பார்கள்,காரணம் அந்த அளவிற்கு ஆங்கிலத்தை 'சீனப்படுத்தி'ப் பேசுபவர்கள் சிங்கப்பூரர்கள்,Speak Good English என்று ஒரு இயக்கத்தையும் அரசு நடத்துகிறது என்பது ஒரு கூடுதல் செய்தி!).
அமைச்சரின் பேச்சு பட்டாசுக்கடையில் வைத்த தீக்கங்கு மாதிரி ஆனது.
சிங்கப்பூர் பெற்றோர்கள் பொங்கி எழுந்து அமைச்சர் கருத்தை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடைசியில் பிரதமர் முன்வந்து அமைச்சரின் கருத்து சரியானதல்ல;சீன மொழிக்கு இருக்கும் முக்கியதுதவம் எந்த வகையிலும் குறைவு படாது என்பதை விளக்கி உறுதி மொழியாகக் கொடுத்த பின்தான் ஒய்ந்தார்கள்..
கவனியுங்கள்,இது சிங்கை போன்ற ஒரு நாட்டில்,மக்கள் பொதுவாக அதிகம் கட்டுப்படுத்தப்ட்ட ஒரு சூழலில் வாழ்கிறாரகள் என்ற எண்ணம் நிலவும் ஒரு நாட்டில் கூட பொதுமக்களின் ஒருமித்த ஆவேசத்திற்கு விடயத்தின் முக்கியத்துவம் கருதி சரியான முடிவு எடுத்தது மட்டுமல்லாமல்,சரியான நடவடிக்கையும் உறுதிமொழியும் அளிக்கும் பிரதமரும் வாய்த்திருக்கிறார்கள் சிங்கைக்கு..
இந்த விதமான சிங்கை அரசின் அணுகுமுறை சீன மொழி சார்ந்ததால் இவ்வாறு இருந்தது என்று சார்பு முடிவுக்கு வந்து விடக் கூடாது;சிங்கை அரசும் நூலகக் குழுமமும் தமிழ் மொழி மற்றும் மொழி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஆதரவும் ஊக்கமும் தந்து வருகின்றன என்பதை சிங்கைத் தமிழர்கள் அறியக் கூடும்.
பத்ரியின் சிங்கைப் பயணம் பற்றிய செய்திகளும் அவற்றில் சிங்கை அரசு மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாடு எந்த அளவு இருந்தது என்பதையும் இந்த இடத்தில் சுட்டி வைக்கிறேன்.
ஒப்பிடுகையில் தமிழகப் பள்ளிகளில் இருக்கும் தமிழின் நிலை,தமிழினி மெல்லச் சாகும் என்ற உறுதி மொழியைத் தருகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
()

Wednesday, August 25, 2010

121.குறுந்'தொகைகள்-25082010

வலைப்பக்கங்களிலிருந்து நீண்ட ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டதால் இப்போது புத்துணர்ச்சியுடன் மறு வருகை!

()

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நாடு தழுவிய முறையில் நடத்தலாம் என்ற அரசின் கொள்கை முடிவும்,அதைத் தொடர்ந்த தமிழக அரசின்,நீதிமன்றத் தடையுத்தரவும் இப்போதைய செய்திகள்.இது பற்றிய தினமணியின் இன்றைய தலையங்கத்தில் தமிழகத்தின் தடை உத்தரவு முயற்சியை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மூன்று.அரசு இதனை எதிர்ப்பதற்காக சொல்லப்படும் காரணங்கள் சொத்தையானதாக இருப்பதாகத் தோன்றுகிறது.
இது பற்றிய விவரமான பதிவை புரூனோ எழுதிக் கொண்டிருக்கக் கூடும்;பார்க்கலாம்.

()

ஒரு சிறு விடுமுறையில் இந்தியா சென்று வந்தேன்.காரணம் ஒரு விநாயகர் கோயில் குடமுழுக்கு.

நாத்திகம் பேசும் நல்லவர்கள் இந்தப் பத்தியை ஒதுக்கி விடலாம்;ஆனால் அவர்களின் விவாதத்திற்கும் ஒரு விடயம் இருப்பதை அவர்கள் இழந்து விடுவார்கள்!

கோயில்(கோயிலா,கோவிலா-கோ+இல்-தலைவன் அரசன் இருக்கும் இடம் என்று பொருள் தரும் கோயில் என்பதே சரி என்பது எனது எண்ணம்!) எனது மூதாதையர்கள் கட்டிய ஒன்று.எனது தாத்தா வழிநடையாகச் சென்ற போது வெள்ளிப் பணப் பை முடிச்சை, தங்கி இளைப்பாறிய கோயிலில் மறந்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து விட்டதாகவும்,இழந்த பணப்பையை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்த பார்த்த பொழுதில் பணப் பை முடிச்சு பசுவின் சாணத்தால் மூடப்பட்டு அங்கேயே இருந்ததாகவும்,அதனால் நெகிழந்த தாத்தா,அந்தப் பணம் முழுவதையும் அந்தக் கோயிலின் சீரமைப்புக்குச் செலவு செய்து கட்டியதாகவும் கேள்வி.இப்போது 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு குடமுழுக்கு.

விதயம் அதுவல்ல.இந்தக் குடமுழுக்கு எங்கள் குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளில் நடத்தும் இரண்டாவது கோயில் குடமுழுக்கு.முதல் சிவன் கோயில் குடமுழுக்கு ஆகம முறைப்படி சமத்கிருத வழியிலேயே நடந்தது.

பின்னர் எனது திருமணம் நடைபெற்ற போது,தமிழ் முறையில் திருமுறைத் திருமணமாக நடத்தினோம்;இப்போது இந்த விநாயகர் கோவிலின் குடமுழுக்கும் தமிழ்வேதவழி திருமுறைப் பாடல்களால் நிகழ்த்தப் பட்ட குடமுழுக்காக நடத்தப்படவேண்டும் என்ற உறுதி இருந்ததால் அப்படியே நடத்தினோம்.
ஆனால் இதற்காக பலத்த எதிர்ப்பை கோவில் குருக்கள் மற்றும் அவருடைய கூட்டத்தவரால் நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது;அந்த எதிர்ப்பின் கூர்ப்பு எங்களை எதுவும் செய்து விடுமளவுக்கு இல்லையெனினும்,கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தும்,கோவில் பூசை முறைகளைக் கவனியாதிருந்தும் தனது எதிர்ப்பை மேதமை மிகுந்த குருக்களவர்கள் காட்டி வருகிறார்.

இது தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில் எங்களது தரப்பை-அதாவது தமிழ் வழியிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்பதற்கான அழகிய,வலுவான காரணங்களை எடுத்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த அனுபவத்தில் நான் கண்டு மகிழ்ந்த ஒன்று-கிராம மக்கள் உள சுத்தியோடு வைக்கப் படும் கூற்றுக்களை செவிமடுத்ததோடு மட்டுமல்லாது,தோள் கொடுத்துப் பாராட்டியதும்,துணை நின்றதும் மறக்க இயலா நினைவுகள்.உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றானே, நமது தமிழ்த் தோழன்..அதுதான் பொருள் போலும்!

குருக்கள் தரப்பிலிருந்து அந்த வாதப் பிரதி வாதங்கள் நடந்த நேரங்களில்,நாங்கள் இறைவனின் விந்துவிலிருந்து பிறந்தவர்கள்,நாங்கள் என்ன செய்தாலும்(மது,மாது,மயக்கம்,கொலை...மற்றும் இன்ன பிற)நாங்களே பூசைக் காரியங்களுக்கு உகந்தவர்கள்,வேற்றுப் பிறப்பாளர்கள் இறை பிம்பத்தை அணுகுவதையோ,தமிழ் மொழியில் குடமுழுக்கு நடப்பதையோ அனுமதிக்க முடியாது என்று சண்டித்தனம் செய்தார்கள்.
எங்கள் உறுதியினாலும்,கிராமத்தவர்களின் உறுதுணையினாலும்,பின்னர் நாங்களே தமிழில் குடமுழுக்கு நடத்த ஆட்களை கொணர்கிறோம் என்று முன்வந்தார்கள்; அவர்கள் கொண்டு வரும் நபர்களோ மாலையானால் மயங்கி,சொப்பன வாழ்வை ரசிக்கும் பேர்வழிகள்..எனவே அனைத்தையும் புறந்தள்ளி, தமிழ் முறையில் திருமுறை பதிகங்களின் பிண்ணனியில் குடமுழுக்கு பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இனிதாகவே நடந்தேறியது.

மிகுந்த நிம்மதியுடனும் உளத் திருப்தியுடனும் எங்கள் ஊருக்குத் திரும்பிய போது இரவு மணி 9.00.(கோவில் இருக்கும் ஊர் எங்களது ஊரிலிருந்த 20 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்).

மறுநாள் காலை எங்களை வந்து சந்தித்த ஊர்ப் பெரியவர்கள்,என் அம்மாவிடம் சொன்னார்கள்-'அம்மா, தனி ஒரு நபராக நின்று அரும் செயலைச் செய்து விட்டீர்கள்,நேற்றிரவு 10 மணிக்கு துவங்கிய மழை இரவு முழுவதும் அடித்துப் பெய்து அதிகாலைதான் நின்றது.எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி' !!!

சில விதயங்களில் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயற்படுகின்றன என்பது உண்மைதானோ?

()

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...