குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, December 12, 2011

136.தீபாவளி சினிமா-அறிவும் ஆயுதமும்..

தீபாவளிக்கு வந்த இரு படங்கள் 7'ம் அறிவு மற்றும் வேலாயுதம்.

பொதுவாக நட்சத்திரமாக அறியப்பட்ட பின் நமது தமிழ்க் கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் ஒரு வட்டத்திற்குள் அடங்குவது வழமையானது.சென்றைய எம்ஜி இராமச்சந்திரனிலிருந்து சிறிது காலம் நிலைத்த ஜெய்சங்கரிலிருந்து நேற்றைய ரஜினியிலிருந்து இன்றைய விஜய் வரை இதற்கு விதிவிலக்கில்லை.(என்ன எல்லாருடைய பெயர்களிலும் ஜி வருகிறது! சூப்பர் ஸ்டாராவதற்கு இன்னொரு வழி,நடிகர்கள் கவனிப்பார்களாக...).இவர்களின் படங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்குமாறு தயாரிக்கப்படும்,அரைத்த மாவையே அரைப்பது போல் இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் ரசிக சிகாமணிகள் சளைக்காது பார்த்து அப்படங்களை ஓட்டி விடுவார்கள்..

ஆனால் விஜய்'க்கு இந்த விதியிலிருந்து விதிவிலக்கு அளித்து ரசிகர்கள் அவருடைய படங்களை ஓட ஓட 'ஓட்டி'யதும் நடந்தது! எனவே சிறிது உஷாராக இருந்த நிலையில் ஜெயம் ராஜாவின் கதை அவருக்கு உவப்பாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு திரைப்படமாக ஆக்கத்தில் 7'ம் அறிவு மிக வித்தியாசமாக இருப்பதாக ஒரு கதை பரப்பப்பட்டாலும்,படம் எதிர்பார்த்த அளவுக்கு ஆக்கத்தில் வியப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்;(இதையேதான் தன்னுடைய தம்பி நடிகர் கார்த்தி சொன்னதாக நடிகர் சூர்யா ஒத்துக்கொண்டார்,அவர் வேறு வார்த்தைகளில் சொன்னதாலும்!)ஆயினும் வசூலைப் பொறுத்த வரை முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப் படமும் ஒரு வேறுபாடான கோணத்தில் என்னுடைய கருத்தைக் கவர்ந்தது.



வேலாயுதம் திரைப்படம் ஆக்கத்தின் வழி எந்த வித்தியாசமும் இல்லாத ஒரு இன்னொரு விஜய் படம் ! எந்த வேறுபாடும் இல்லாத ஒரு இன்னொரு மசாலா என்றுதான் கருத வேண்டும் என்று கருதியிருந்த நிலையில் நுட்பமான ஒரு வழியில் ஒரு வேறுபாட்டை வெளிப்படுத்தியது ஒரு வியப்பான மகிழ்ச்சி.

7 ம் அறிவைப் பொறுத்தவரை படம் சொல்ல வந்த கருத்தில் இருந்த  தனித்தன்மை என்னைக் கவர்ந்தது....

இன்றைய உலகில் நிலவும் பலவகை நுண்கலைகள் மற்றும் வாழ்வியலின் பல தளங்களில் பயன்ப்படும் கலை நுட்பங்களை தமிழ் மொழிதான் உலகுக்கு அளித்தது என்று ஆணித்தரமாக பல அறிஞர்கள் நிறுவிவிட்ட போதிலும் உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று நகையாடும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காப்புக் கலையான மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சுயபாதுகாப்பு முறை-கவனியுங்கள் அது தாக்கி அழிக்கும் முறையாக,தமிழர்களால் அறியப்படவில்லை,தற்காப்புக் கலையாகத்தான் அறியப்பட்டது- தமிழகத்திலிருந்தான் சீன தேசத்திற்குச் சென்றது என்று வரலாற்றுக் கருத்தை இந்தப் படம் முன்வைக்கிறது;இதை சீனர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.இந்தப் படம் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில சீனர்களும் அழைக்கப்பட்டிருந்ததும்,அவர்களும் போதிதர்மன் என்ற நபரே சீனத் தற்காப்புக் கலையின் மூலம் என்றும் ஒத்துக் கொண்டார்கள்.வலிந்து தாக்கி அழிப்பதை விடத் தற்காப்புக்கும் வேறு வழியற்ற நிலையிலேயே எதிராளிக்கு ஊனம் அல்லது உயிர்நீக்கத்தைப் பற்றி எண்ண வேண்டும் என்ற கருத்தாகத்தில் அமையும் வீரம் என்ற பொருண்மையின் பழந்தமிழ்ப் பொருளும் பல காட்சி வழியிடை இந்தப் படத்தில் துலக்கப்பட்டதும் மகிழ்வைத் தந்தது..

அதோடு படத்தின் கதாநாயகன் வழி இலங்கையில் நடந்த நிகழ்ச்சி பற்றிய அழுத்தமான அறிவித்தலும்(ஒருத்தன ஒம்போது நாடு சேந்து கொன்னா அதுக்குப் பேரு சண்டையோ வீரமோ இல்லை,துரோகம்!) போகிப் பண்டிகை பற்றிய வித்தியாசமான நோக்கத்தில் அமைந்த ஒரு சிந்தனையும் நமது பழமையில் இருந்து இப்போது திரும்பிக் கூடப் பார்க்கப்படாத பல நுண்மைப் பொருள்களில் சிந்தனை செல்ல வேண்டும் என்ற தூண்டுதலும் இந்தப் படத்தின் மூலம் ஒரு சிறிது நடந்தாலும் அதற்காக இந்தப் படத்தின் இயக்குனரை நான் பெரிதும் பாராட்டுவேன்.

இக்கருத்தை தமிழறிஞர்களோ,நுட்பவியல் திறனாளர்களோ கரடியாகக் கத்தி அறிவித்தாலும் தமிழர்களின் ஆதார வழிகாட்டியாகத் தற்போது திகழ்ந்து தொலைக்கும் திரைப்படத்தின் வாயிலாக இது தெரிவிக்கப்பட்ட போது அதைப் பற்றிய சிந்தனை பெருவாரியான பொதுமக்களுக்கு ஒருவேளை ஏற்படலாம் என்பதற்கான சாத்தியக் கூறு இருப்பது நிச்சயமான பலன் !

இன்னொரு படமான விஜயின் வேலாயுதம் படமும் வழக்கமான விஜய் படத்திற்கான மசாலாப் படம் எனினும் உங்களுக்குள் இருக்கும் காப்பாளரையும் போராளியையும் நாமேதான் கொண்டு வர வேண்டும்;எவராவது மீட்பர் வந்து நம்மை மீட்பார் என்று மீட்பர்களை வெளியே தேடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற பொது சனங்களுக்கு ஒரு சேதியைச் சொன்னது.அந்த வகையில் ஜெயம் ராஜாவையும் பாராட்டலாம்.




நினைத்து நினைத்து நொந்து கொள்ள வேண்டிய விதயம் இவற்றையெல்லாம் மனதில் பதியவைக்கக் கூட சினிமா என்ற கருமம்தான் தேவைப் படுகிறது என்பது ! இந்த நேரத்தில் களவானி,கொலவெறி பற்றி ஞாநி எழுதியுள்ள பத்தியை ஒவ்வொரு வரியையும் கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன் என்றும் அறிவிக்கிறேன்.




Monday, August 15, 2011

135.இந்தியத் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!




இன்று 65 ஆவது விடுதலை நாள்.



ஆங்கிலேயரின் அடிமைப் படுத்தலும் அதனைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டமும் ஒரு வகையில் சிதறிக் கிடந்த இந்திய சமஸ்தான அரசுகளை ஒன்று சேர்ந்து ஒரே நாடாக்கிய விளைவுடன் முடிந்தது.

இந்த 65 வருடங்களில் இந்தியா நம் தேசம் என்று  பெருமிதப் படத்தக்க கணங்கள் அரிதாகவே இருக்கின்றன.எங்கும் பெருகி வரும் ஊழலின் விகிதாசார வளர்ச்சி ஆண்டுக்காண்டு பெருகுவதும்,அரசு என்பது ஊழல் வாதிகள் திருடர்கள்,பொறுக்கிகள்,வன்முறை சக்திகள் ஆகியவர்களின் கூட்டமைப்பு  ஆதிக்கத்தில் இருப்பது என்று இந்திய அரசாண்மை நாள்தோறும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் தாய்நாடு என்று பெருமிதப் பட வைக்கும் காரணங்கள் நாளுக்கு நாள் சிறிதாகிக் கொண்டே வருகின்றன.

ஒரு இந்தியர் 37 மாடிகளுடன் தனக்கு வீடு கட்டிக் கொள்ளும் நிலை இருக்கும் போது,தெருவின் போக்குவரத்து நிறுத்த முனையங்களில் இன்னும் இது போன்ற குழந்தைகள் சல்யூட் அடித்துப் பிச்சைக் காசு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்;இந்தக் குழந்தைக்குள் ஒரு கல்பனா சாவ்லாவோ,ஒரு டாக்டர் முத்து லெட்சுமியோ ஒரு சரோஜினி நாயுடுவோ இருந்திருக்கலாம்.நம்மை ஆளும் அரசும் அமைப்புகளும் அவர்கள் ஒரு போதும் வெளிப்பட்டு விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போன்றுதான் நிலை இருக்கிறது.


தனது பொறுப்புகளில் எதையும் சரிவர நிறைவேற்றத் துப்பில்லாத இந்த தேசத்தின் அரசாட்சி மீண்டும் மீண்டும் உலகின் பல பகுதிகளிலும்,இந்தியாவுக்கு உள்ளும் கூட தமது குடிமக்கள் கேள்வி முறையற்று வன்முறையின் மூலம் கொன்றழிக்கப் படும்போதோ-கணக்கற்ற முறை பாம்பேயில்  நடந்த குண்டுவெடிப்புகளும் அவற்றிற்கு அரசின் எதிர்வினையும் போல வேடிக்கை மட்டும் பார்க்கவோ அல்லது துப்புக் கெட்ட தனத்துடன் அறிக்கைகள் விடவோ அல்லது ஈழத்தில் நடந்தது போல இணைந்து அழிக்கவோ மட்டுமே முயன்றிருக்கிறது.


ஒரு குடிமகனாக இந்த வகையான எல்லா ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் இந்த விடுதலை நாள் கொண்டாட்ட உணர்வு எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.

இந்திய விடுதலைக்காக சொல்லொனாத துயர்களையும் வலிகளையும் பெரும் எண்ணிக்கையிலான போராட்டக் காரர்கள் அனுபவித்திருக்கிறார்கள்,தியாகங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் வாழ்வின் அற்புதக் தருணங்கள் மற்றும் பருவங்களில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உயிரையும் விருப்புடன் விடுதலைப் போராட்டத்திற்காகத் தந்திருக்கிறார்கள் என்பதும்  பெரும்பான்மை நினைவுகளில் மறைந்து போய்,இந்திய சுதந்திரத்தை காந்தியும் நேருவும் கவட்டுக்குள் இருந்து எடுத்துக் கொடுத்து விட்டார்கள் என்பது போன்ற ஒரு பொதுக்கருத்து பொதுவாக நிலவுகிறது.

அதை மறுதளித்து இந்திய நாட்டுக்கு விடுதலை ரத்தம்,வலி,உயிர்த்தியாகங்களால் தான் கிடைத்தது என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தருணமாகத் திகழ்வதால் இந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு முக்கிய நாளாகப்படுகிறது.



மேலும் உலகளாவிய பல நாடுகளில் பெரிய நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் சிறிது சிறிதாக சிதைவுற்று சிறு சிறு நாடுகளாக மாறி வருகின்றன அல்லது மாற்றப் படுகின்றன.இந்த சூழலில் இந்தியா ஒரே நாடாக இருப்பினால் மாறி வரும் உலக சூழலில் பல பயன்கள் இருக்கின்றன.அந்த கட்டமைப்பை சிதைந்து விடாமல் காக்கும் ஒரு காரணியாக விடுதலை நாள் உணர்வு திகழ்வதால் இந்த நாள் ஒரு முக்கிய நாள்.


நல்ல தலைவர்கள் நிரம்பிய, ஊழலும் வன்முறையும் அற்ற, பொதுமக்களின் நலன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட ஒரு அரசு வரும் போது இந்தியா என்ற நாட்டின் மனித வளமும் கனிம வளமும் இந்தியப் பொருளாதாரத்தை மென்மெலும் உயர்த்தும்;அத்தகைய உயர்வு பொதுமக்கள் அனைவருக்குமான வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஒரு தினத்தைக் காண வேண்டும் என்ற ஆசை இருக்கும் அனைவருக்கும் இந்த நாட்டின் ஒருங்கிணைப்பைக் காக்க வேண்டிய அவசியமும்,அதற்காக இந்த விடுதலை நாளின் பெருமித உணர்வை கணப்பைப் போல் தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்தியாவும் ஒரு தேசமாக பெருமிதப் படத் தக்க வகையில் மாறும் என்ற நம்பிக்கையுடனும்,அந்த நம்பிக்கை வளரும் வகையில் பணியாற்றவும்,பங்களிக்கவும் இந்திய மக்களாகிய நம் அனைவருக்கும் தேவையும் கடமையும் இருக்கிறது என்ற கருத்துடனும்

உலகெங்கிலும் வாழும் இந்தியத் தோழர்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.




உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...