குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, March 2, 2013

182. ஆளுமையை உருவாக்கும் சிந்தனைகள் மற்றும் தமிழ்மொழியின் காலம்

தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக பதிமூன்று வருடங்களும், தமிழகத் திரையுலகின் முடிசூடா மன்னனாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாகவும் திகழ்ந்தவர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரனான எம்ஜிஆர்.
ஆசியா வீக் எழுதிய அஞ்சலி


அவருடைய கட்டற்ற புகழுக்கு அவருடைய ஆட்சித் திறமோ அல்லது நடிப்புத் திறனோ நிச்சயம் காரணமில்லை; அவர் சாமான்ய மக்களுக்கு
அருகில் எப்போதும் தன்னை நிறுத்திக் கொண்டார். அவர்களுடன் ஓயாது தனது படங்கள், அவற்றின் பாடல்கள், பொதுமக்களைச் சந்திக்க நேர்ந்த கணங்களில் இயல்பாக வெளிப்பட்ட, எளியவர்கள் மீதான அவரது அன்பு மற்றும் அக்கறை-இந்த குணங்களே அவரை மற்றவர்கள்  'வனவாசம்' இருந்தாலும் எட்ட முடியாத நிலையில் அவரை அசையாது நிறுத்தின.

திரையுலகில் நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் அவர் தலைக்கனம் பிடித்தவர் அல்லது எவரையும் தண்டிக்கத் தயங்காதவர் அல்லது இறுக்கமானவர் என்ற பிம்பம் பல சமயங்களில் படைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அவர் எளிமையாக, 'மனம் சொல்வதைக் கேட்கும்' மனிதராகத்தான் இருந்திருக்கிறார்  என்பது சில சம்பவங்களை அறியும் போது தெரிகிறது.

சானகியைத் திருமணம் செய்த ஆரம்ப நாட்கள்

கீழ்வரும் பத்தி அவரே தன்னைப் பற்றிய சுய அலசல் செய்து எழுதியிருப்பது, படியுங்கள், இவ்வளவு நேர்படப் பேசும் மனிதராகவே எம்ஜிஆர் இருந்திருக்கிறார் என்பது வியப்படைய வைக்கும் !

என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.

நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.

எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.

— கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது.(நன்றி- தினமணி நாளிதழ்)


தன்னைச் சுற்றியிருகும் சில மனிதர்கள் அர்த்தமில்லாமலும், தகுதியில்லாமலும் வாழ்வின் உச்ச நிலைகளை அடைந்து விடுகிறார்கள் என்று பொதுவாக எல்லோரும் உணரும் கணங்கள் உலக வாழ்வில் அடிக்கடி நடக்கும்.

ஆனாலும் அவர்களுக்குள்ளும் நாம் பின்பற்றத் தக்க, நல்ல குணம், சிந்தனை, முயற்சி, வெற்றி வேகம், தன்னம்பிக்கை & வாட் நாட்..- இருக்கலாம் என்று பார்வையைத் தந்தது மேற்கண்ட பத்தி.


()


தமிழ் மொழியின் காலம் பற்றி எவராவது எழுதினால் சிலருக்கு உடனே  பற்றிக் கொண்டு வரும்.ஆரியர்கள் படையெடுப்பும் வருகையும் பொய் என்றும், சமத்கிருதம் தேவ மொழி என்றும் ஜல்லியடிப்பார்கள்.

இந்த வாதங்களைப் பொடிப்பொடியாக்கும் ஆய்வு ஆதிச்சநல்லூர் அகழ்வும், கல்வெட்டாராய்ச்சியும், அதன் ஆய்வறிக்கையும். ஆனால் இன்னும் அரசின் இயக்கச் சக்கரங்களில் நிலவும் முட்டுக் கட்டைகள் இந்த அறிக்கையை ஆதார பூர்வமாக வெளியிட விடாமல் வைத்திருக்கின்றன.

இது பற்றி ஆராய்ச்சியாளர் நடன.காசிநாதன் அவர்களின் பேட்டி| அறிக்கையை அண்மையில் படிக்க நேர்ந்தது.

அது பின்வருமாறு...


இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.
அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக.
‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம் என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.( நன்றி முகநூல் நண்பர்கள்)
 ஆதிச்ச நல்லூர் அகழ்வு பற்றி இந்திய தொல்லியல் துறையின் பக்கத்தில் உள்ள செய்திகளை இங்கு படிக்கலாம்.

இவ்விவரங்களைப் படிக்கையில் தமிழ் எழுத்து வடிவம் கி.மு.600 க்கு முன்பே இருந்திருக்கிறது என்பது அசைக்க முடியாமல் நிறுவப் பட்டிருக்கிறது.

முதல் வேதமாக அறியப் பட்டிருக்கும் ரிக்'கின் காலம் இரண்டாம் நூற்றாண்டு வாக்கிலேயே சுட்டப் பட்டிருக்கிறது. அதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு முழு எழுத்து வடிவம் இருந்திருக்கிறது என்ற உண்மை வெளிவந்திருக்கும் நிலையில், இந்தியாவில் நிலவிய கலைகள் அத்தனையும் தமிழ் மொழியில் எழுத்து வடிவில் இருந்திருக்கம் சாத்தியங்கள் மறுக்க முடியாதவை.

ஆனால் அவற்றில் பல இன்று இல்லை. இடையில் என்ன நடந்திருக்கலாம் என்பவை சிந்திக்க வேண்டியவை.


13 comments:

  1. அது வெறும் மயக்க நிலை என்று தலைவருக்கு தெரிந்ததால் தான், இன்றும் பலரின் இதயத்தில் தெய்வமாக இருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் தனபாலன்...

      சினிமாவிலும் அரசியலிலும் உச்சநிலையில் சுமார் 30 ஆண்டு காலம் இருந்த ஒரு மனிதருக்கு இந்த அளவுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ளும் மனம் இருந்திருகிறது என்பதை நினைக்கும் போது எனக்கு வியப்பேற்பட்டது.

      இந்த தன்னிலை உணர்தல்' இன்று இருக்கும் தமிழக அரசியல் வாதிகள் எவருக்கும் இல்லை, மு.கருணாநிதி உட்பட..

      Delete
  2. ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் அசோக மன்னரின் கல்வெட்டுக்களை விடத் தொனமையானவை என்பதற்கும் அசோக மன்னன் தமிழனிடம் கடன்பெற்றான் என்பதற்கும் பொருத்தமில்லை. குருட்டுத் தாவல் என்று தோன்றுகிறது.

    ஆரிய படையெடுப்பால் தமிழ் உருமாறியபதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றனவே! தேவமொழியாவது மண்ணாவது. அதெல்லாம் தமிழால் வாழும் ரஜினிகாந்த் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும்.

    எம்ஜிஆர் பெரும் கோபக்காரர் என்பதற்கு என் குடும்பத்தினர் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் உள்ளன. எம்ஜிஆரின் கோபம் ஒரு சாதனையாளனின்/தலைவனின் கோபம். சில allowances தந்தே ஆகவேண்டும் :-).

    ReplyDelete
    Replies
    1. || எம்ஜிஆரின் கோபம் ஒரு சாதனையாளனின்/தலைவனின் கோபம். சில allowances தந்தே ஆகவேண்டும் :-).||

      உண்மை. :))

      Delete
  3. || ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் அசோக மன்னரின் கல்வெட்டுக்களை விடத் தொனமையானவை என்பதற்கும் அசோக மன்னன் தமிழனிடம் கடன்பெற்றான் என்பதற்கும் பொருத்தமில்லை. குருட்டுத் தாவல் என்று தோன்றுகிறது. ||

    இதில் இன்னும் பின்புலச் செய்திகள் உள்ளன அப்பாதுரை சார்..தமிழ் மொழியின் வடிவில் பிரமி, வட்டெழுத்து , தற்போதைய எழுத்து என்ற வடிவங்கள் உண்டு. பிரமி என்றால் அது அசோகர் கல்வெட்டுகளில் இருந்து கிடைத்ததுதான் சான்றாக இருந்தது.

    சமத்கிருதம் மற்றும் இந்தியின் பின்னோக்கிய வரலாறு, பிராகிருதம், வடமொழி பிரமி என்று உள்ளது.

    இந்த வடமொழி பிரமி அசோகர் கால கல்வெட்டுகளில் பரவலாகக் காணக் கிடைக்கிறது; எனவே தமிழுக்கு எழுத்து வடிவ மூலம் பிரமி எழுத்து என்ற கட்டமைப்பு வலிந்து உருவாக்கப் பட்டது.

    இப்போது ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளில் இருக்கும் தமிழ் பிரமி எழுத்து அசோக பிரமிக்கு 800 ஆண்டுகள் முற்பட்டது என்று நிறுவப் பட்டிருக்கிறது.

    இப்போது கசை வசனம் புரியுமென்று நினைக்கிறேன். :))

    இந்தக் கோணத்தில்தான் நடன காசிநாதனின் ஆய்வும் அமைந்தது.

    தொடர்புடைய மேலும் சில செய்திகள்:

    1.திருப்பரங்குன்றத்தில் தமிழ் பிரமி அல்லது பல்லவ பிரமி

    2. இந்து பத்திரிகையின் செய்தி

    ReplyDelete
  4. விளக்கத்துக்கு நன்றி. சுட்டிகளுக்கும்.

    ReplyDelete
  5. பௌத்தமும் தமிழும் என்று ஒரு புத்தகம் படித்து வருகிறேன். கொஞ்சம் ஒருதலைப்பட்ட கருத்துக்கள் கொண்ட புத்தகம் எனினும், அதில் பிரமி எழுத்துருக்களை ஏற்கும் முன்னரே, அதாவது பௌத்தர்களின் தாக்கம் தமிழில் ஏற்படும் முன்னரே, தமிழ்நாட்டில் கல்வி செழித்தோங்கியதாக வருகிறது. எனில் தமிழ் எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டுமே என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை சார், வேங்கடசாமி நாட்டார் எழுதிய புத்தகம் அது என்று நினைக்கிறேன்...

      பழந்தமிழகத்தில் கலைகளின் நிலை அதில் மொழியின் பங்கு பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சுவாரசியமானவை.

      நிச்சயம் தமிழுக்கு வரிவடிவம் பௌத்தர்களின் காலத்திற்கு முன்பே இருந்திருக்க வேண்டும்..பரிபாடல் என்னும் நாட்டியம் | இசை பற்றிய நூல் (இப்போது கிடைத்திருக்கும் பரிபாடல் அல்ல) அகத்தியத்திற்கு முந்தைய காலத்தியது என்று படித்த நினைவிருக்கிறது.(அகத்தியத்தின் காலம் கிமு 6-4 ம் நூற்றாண்டுகள் என்பதை நினைவில் வைக்கவும்)..

      தமிழ் மொழியைப் பொறுத்த வரை பல சான்றுகள், பல நூல்கள் வலிந்து அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.இயற்கை அழிவின் மூலம் மொத்தமாக ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் அழிந்து போவது சாத்தியம் அற்றது.

      Delete
  6. அறிவன்,

    …புரட்சித்தலைவருடைய கட்டுரை இன்றைய நடிகர்களுக்கு மிகவும் அவசியமானது.

    …எனக்கு எப்போதும் ஒன்று புரியதில்லை. தமிழைப் பின்னிலைப் படுத்துவதால் இவர்கள் அடையும் லாபம் என்ன? ஏற்கனவே அரப்பனில் கிடைத்த மாட்டின் உருவத்தை குதிரையாக மாற்றப் பார்த்தார்கள். இதெல்லாம் ஏன்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க குட்டிப்பிசாசு...நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகிறீர்கள்..

      எம்ஜிஆர் சாதித்த விடயங்களையும் இன்றைய தம்மிருப்பு விடயங்களையும் எண்ணிப் பார்த்தால் இன்று 'ஆட்டம்போடும்' பல நடிகர்கள் அடங்குவார்கள்..திரையுலகில் போனியாகவில்லையென்றால் ஆளப் போய்விடலாம் என்று எளிதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் !

      || எனக்கு எப்போதும் ஒன்று புரியதில்லை. தமிழைப் பின்னிலைப் படுத்துவதால் இவர்கள் அடையும் லாபம் என்ன? ஏற்கனவே அரப்பனில் கிடைத்த மாட்டின் உருவத்தை குதிரையாக மாற்றப் பார்த்தார்கள். இதெல்லாம் ஏன்? ||

      வடவர்களுக்கும் தமிழர்களும் இருந்த வரலாற்றுப் போரும், தமிழர்களை அழிக்க வேண்டுமென்றால் தமிழை முதலில் அழிக்க வேண்டும் என்ற சித்தாந்தமும்தான் காரணம்.இன்றைய இந்தியாவின் தத்துவ, அறிவு, ஞானப் புதையல்கள் எல்லாம் ஒரு காலத்தில் தமிழ் மொழியில் மட்டுமே இருந்திருக்க முடியும் என்று முடிவுக்கு வரப் பல சாத்தியங்கள் உண்டு. ஒரு கட்டத்தில் தமிழ் ஏடுகள், நூல்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இயற்கைப் பேரழிவும் நிகழ்ந்திருக்கலாம்.

      இந்த இயற்கைப் பேரழிவுக்குப் பின்னரும் தமிழர்களால் தங்கள் அறிவுப் புதையல்களை மீளவும் கட்டமைக்கவும் முடிந்திருக்கலாம்; இந்த நிலையில்தான் தமிழையும் தமிழர்களையும் திட்டமிட்டு அழிக்கும் செயல்கள் ஆக்கம் பெற்றிருக்கலாம்.

      தமிழின் அறிவுப் புதையல்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டால், சமத்கிருதத்திலிருந்துதான் அனைத்தும் வந்தன என்று எளிதாகச் சொல்லவிடலாம்.

      இதற்கு குறுக்கே நின்றதால்தான் ஹரப்பன் எருது குதிரையாக முயன்றது.

      ஆரிய வரவுக் கொள்கையை மறுப்பதும் இதே காரணம் பற்றியே..

      ஆதிச்சநல்லூர் கல்வெட்டு ஆய்வறிக்கை வெளிவர மறுப்பதும் அதன் பொருட்டே..
      அரசியலிலும் ஆளும் வட்டாரத்திலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற வடவர்களின் ஆதிக்கம் இன்று வரை தொடர்கிறது;இந்த காரணமே நாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற 'இருப்பை' எப்பொழுதும் உறுதி செய்ய முயற்சிக்கச்சொல்கிறது;இந்த காரணமே தமிழைப் பின்னிலைப் படுத்தச் சொல்கிறது....

      Delete
  7. அறிவன்,

    எம்ஜிஆரின் ஆளுமை என்பது நீரும்,நெருப்புமான ஒன்று, சில நல்லதும்,கெட்டதும் கொண்டதே, ஆனால் அவர் பொதுவாக கடைசிவரையில் நிலைநிறுத்திக்கொண்ட ஏழைப்பங்காளன் இமேஜ் சரிய விட்டதேயில்லை, எனவே தான் இன்னும் அசைக்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார்.

    ஆனால் அவர்தான் அரசியலில் கொள்கை தேவையில்லை,தனி மனித வசீகரம்,ஆளுமை போதும்னு நிலை நிறுத்தியவர், ஆனால் அப்படி செய்தாலும்,அதற்கு முன்னர் அவர் கட்டமைத்த பிம்பம் எப்படினு தெரியாமலே இன்றைய நடிகர்கள் தனிமனித வசீகரம் மட்டுமே போதும்னு நினைக்கிறார்கள்.

    கல்வி வியாபாரம் செய்யும் நடிகர் அரசியல் இயக்கம் நடத்துகிறார்,நாளையே ஆட்சிக்கு வந்தால் ,அவர் அரசு எப்படி ஏழைகளின் கல்வி குறித்து கவலைப்படும்? அரசு கல்வி நிலையங்களை மூடுவதில் தான் ஆர்வம் காட்டும்.

    இன்றைக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏராளம்,ஆனால் அனைத்துக்கும் விலை,காரணம் அரசியல்வாதிகள் தான் பெரும்பாலான கல்வி வியாபாரிகளே,பின்னர் எப்படி அரசு வழங்கும் கல்வியை மேம்படுத்துவார்கள்.

    அரசியலில் ஈடுபவர்கள் ,சேவை எனக்கருதப்படும் துறைகளை வியாபார ரீதியாக நடத்த முயலக்கூடாது.

    மக்கள் அதற்கு ஏற்றார்ப்போல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
    ---------------

    தமிழ் தொன்மையானது தான் ,ஆனால் சில தமிழறிஞர்கள் மிக தொன்மை,உலகத்துக்கே முதன்மை என கிடைத்தவற்ரை வைத்தே அதிகப்படியாக பேசுவதால்,வழக்கமாக கிடைக்க வேண்டிய தொன்மவியல் அங்கீகாரம் கூட மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

    // தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.//

    பூம்புகார் அருகே கடலுக்கு அடியில் கட்டுமான அமைப்பு இருக்குனு ஜப்பானிய ஆய்வாளர்கள் ரொம்ப நாளுக்கு முன்னர் தண்ணீரில் மூழ்கி ஆய்வு செய்து,வீடியோ எல்லாம் எழுத்துட்டு போயிட்டாங்க, ஆனால் அப்பவே யாரும் முழுசா ஆய்வு செய்யவில்லை.

    நடன.காசிநாதன் சொல்வது அதற்கு பிறகு தான் ,ஆனால் இப்பவும் அப்படியே தான் கதை போகும்,முழுசா யாரும் ஆய்வு செய்ய மாட்டார்கள். எனக்கு ஒன்னு புரியலை ,21 அடி கடல் ஆழம் தானே ஏன் நம்ம ஆட்களும் கடளுக்குள் மூழ்கி ஆய்வு செய்து பார்க்க கூடாது, அதுக்கே நடன.காசிநாதன் ஆர்க்கியாலஜில வேலை வேற செய்திருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

      || கடைசிவரையில் நிலைநிறுத்திக்கொண்ட ஏழைப்பங்காளன் இமேஜ் சரிய விட்டதேயில்லை, எனவே தான் இன்னும் அசைக்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார்.

      ஆனால் அவர்தான் அரசியலில் கொள்கை தேவையில்லை,தனி மனித வசீகரம்,ஆளுமை போதும்னு நிலை நிறுத்தியவர், ||

      இல்லை.வசீகரம் மற்றும் ஆளுமை தவிர அவருக்கு அடிப்படையான ஒரு கொள்கை இருந்தது..அது சமூகத்தின் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் எதையும் செய்யாதிருப்பது;அவர்கள் வாழ்வுக்கு முடிந்த வரையில் உதவுவது..

      மாநில முன்னேற்றம்,தொழில்துறை முன்னேற்றம், தொழில் நுட்பம் ஆகிய எல்லாவற்றிலும் அவர் பூச்சியம் தான்..ஆனால் மேற்கண்ட ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தார்..

      வசீகரம்,ஆளுமையுடன் மேற்கண்ட உத்திதான் அவரை கடைசி வரை(இன்றும் கூட சிலர் அவர் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கலாம்!) உச்சத்தில் வைத்திருந்தது.

      || கல்வி வியாபாரம் செய்யும் நடிகர் அரசியல் இயக்கம் நடத்துகிறார்,நாளையே ஆட்சிக்கு வந்தால் ,அவர் அரசு எப்படி ஏழைகளின் கல்வி குறித்து கவலைப்படும்? அரசு கல்வி நிலையங்களை மூடுவதில் தான் ஆர்வம் காட்டும்.

      இன்றைக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏராளம்,ஆனால் அனைத்துக்கும் விலை,காரணம் அரசிய
      ல்வாதிகள் தான் பெரும்பாலான கல்வி வியாபாரிகளே,பின்னர் எப்படி அரசு வழங்கும் கல்வியை மேம்படுத்துவார்கள்.

      அரசியலில் ஈடுபவர்கள் ,சேவை எனக்கருதப்படும் துறைகளை வியாபார ரீதியாக நடத்த முயலக்கூடாது.
      ||
      இருக்கின்ற சட்டங்களை சரியாகப் பயன்படுத்தினாலே, நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

      முதலில் தேர்தலில் கிரிமினல்,சிவில் மோசடி குற்றச் சாட்டு சாட்டப் பட்டவர்,அதற்கான ப்ரைமாஃபேஸி எவிடனஸ் இருப்பதாகக் கருதப் படுபவர் தேர்தலில் நிற்கத் தடை இருக்க வேண்டும்.

      இரண்டாவது சட்டமன்ற,மக்களவை உறுப்பினர் எவரும் இலாபநோக்குடைய நிறுவனம் எதிலும் பங்கு பெற்றிருக்கக் கூடாது.

      சட்ட மன்ற,மக்களவை உறுப்பினர் எவரும் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.இது தொடர்ச்சியாகவோ அல்லது ஆயுள் முழுமைக்குமான விதியாக இருக்கவேண்டும்.

      தேர்ந்தெடுக்கப் பட்டவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாத நிலையில், அவர் வெற்றிபெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் 65 சதவீதத்திற்கு மேல் உள்ள எண்ணிக்கையில், அவரது திருப்தியற்ற செயல்பாடு பற்றிய ஓட்டளிக்கும் வசதி ஏதாவது ஒரு முறையில்(ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அரசு இணையப் பக்கமும், அதில் தேர்தல் அடையாள அட்டை எண் அல்லது ஆதார் அட்டை எண்ணின் மூலம் உள்நுழைந்து ஓட்டளிக்கும் வசதி போன்றவை) இருந்தால் இந்திய அரசியலை சீர் செய்ய இயலும்.

      ||தமிழ் தொன்மையானது தான் ,ஆனால் சில தமிழறிஞர்கள் மிக தொன்மை,உலகத்துக்கே முதன்மை என கிடைத்தவற்ரை வைத்தே அதிகப்படியாக பேசுவதால்,வழக்கமாக கிடைக்க வேண்டிய தொன்மவியல் அங்கீகாரம் கூட மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.||

      இல்லை,செம்மொழிகள் எட்டில், சீனம், தமிழ், இரண்டும் தனித் தனியான மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை.மற்ற மொழிகள் அனைத்தும் ஒத்த மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை..(சமத்கிருதம்,கிரேக்கம்,லத்தீன்,பாரசீகம் ஒரு தொகுப்பு மற்றும் எபிரேயமும்,அரபியும் ஒரு தொகுப்பில் உள்ளவை).

      எனவை தமிழ் சுயம்பான மொழி என்பதிலும் காலத்தினால் மிக முந்தையதில் ஒன்று என்பதிலும் சந்தேகமில்லை.

      ஒலிக்கட்டு மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இறங்கினால், ஒலிக்குறிப்பிலிருந்து ஒற்றெழுத்து வார்த்தைகள் அதிகமாக உருவானது தமிழ் மொழியில் மட்டுமே; எனவே தமிழ் மொழி கற்காலங் தொட்டே வளர்ச்சி பெற்று வந்திருக்க வாய்ப்பிருக்கும்மொழி என்பது நிச்சயம் நம்பத் தகுந்தது.

      ஆய்வுகள் எந்தவித தடையும் அற்று முறைப்படுத்தப் பட்டு, முடிவுகள் அனைவருக்கும் வெளிப்படுத்தப் பட்டால் இந்த வித ஐயங்கள் தீரும்.

      Delete
  8. மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஒரு மர்மயோகி.ஒரு சித்தப்புருஷன் ஆவார்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...