குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, May 13, 2009

104.குட் டச்-பேட் டச்:சில அவதானிப்புகள்

சில சென்னை நண்பர்களின் முயற்சியால் மருத்தவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் அவர்களின் உதவியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி பற்றிய செய்திகள் நண்பர் நர்சிம்,டோண்டு ஆகியோர்கள் பதிவுகளில் வந்திருக்கின்றன.

இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டும் அதே நேரத்தில் இவ்வகை கல்ந்துரையாடல் நிகழ்ச்சிகள் பற்றிய தேவைகள் எழுந்திருக்கும் சமூகசூழல் பற்றிய பார்வையில் இதை அணுக விழைகிறேன்.எனக்குத் தோன்றும் கேள்விகள்:

- இந்த வகையான கருத்தரங்கிற்கான தேவைகள் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்கின்றனவா?இன்னும் இக் கேள்வியைத் தெளிவாக்கும் போது,இவ்வகை கருத்தரங்கிற்கான தேவைகள் மெட்ரோ,சிறுநகரங்கள்,கிராமம் சார்ந்த நகரங்கள்,மற்றும் முழு கிராமப் புறங்கள் எல்லாவற்றிலும் ஒரே வகையில் இருக்கின்றனவா?

- மேற்கண்ட கேள்விக்கு வெவ்வேறு வித பதில்கள் வருமெனில் அதற்கான மூல காரணிகள் என்ன?

- 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் வேறுபாடு இருக்கிறதா?ஆம் எனில் காரணம் என்ன?

- இவை பற்றிய தேவைகள் ஏற்படும் போது,கூடுதலாக குழந்தைகளுக்கான பாலியல் கல்வி தேவையா என்ற உடன்-கேள்வி கருதப்பட வேண்டுமா?அல்லது இல்லையா?

-குழந்தைகளுக்கான பாலியல் கல்வியே அவர்களுக்கு தேவையில்லாத ஆர்வத்தை உண்டு செய்துவடும் வாய்ப்பிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதை எப்படி எதிர் கொள்வது?

இவற்றை அலசும் போது என் பார்வையில் மெட்ரோ நகரங்களில் இவ்வகையான எச்சரிக்கை கருத்தரங்கங்களுக்கும்,குழந்தைகளுக்கான அறிவுறுத்தல்களுக்குமான தேவைகள் மெட்ரோ நகரங்களில் தேவைப்படும் அளவுக்கு கிராமப்புறம் சார்ந்த இடங்களில் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லையெனினும் எனது அவதானிப்பைக் கொண்டு பார்க்கும் போது கிராமப்புறத்தின் குழந்தைகள் பெற்றோர் அல்லது குடும்ப கவனிப்பாளர்களின் பார்வையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் பெருநகரங்களின் வாழ்க்கை முறை குழந்தைகள் நெருங்கிய குடும்ப நபர்கள் அல்லாத பலரின் அருகாமையில் எளிதான தின வாழ்க்கையில் இருக்கிறார்கள்.சற்று சிந்தித்துப் பாருங்கள்,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ அல்லது ரிக்ஷாக் காரர் முதல் பள்ளியின் பியூன் அல்லது அட்டெண்டர்கள்,டியூசன் செண்டர்கள் அவற்றில் உலவும் எண்ணற்ற வெளியாளர்கள் ஆகியோருடன் பெருநகரக் குழந்தைகள் தங்களின் தின வாழ்வில் சில மணித்துளிகளைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

கிராமங்களில் இவ்வகை அயலார்களின் அருகாமை குறைவு.

சரி,இது சரியென்று எடுத்துக் கொண்டால்,பெருநகர வாழ்க்கையை முற்றாக நாம் ஒதுக்க வேண்டுமா?ஒதுக்க முடியுமா?வாழ்வெனும் ஓட்டத்தில் பலசாலியாக பெருநகரங்களின் வாழ்வு தரும் வாய்ப்புகள் மிகவும் தேவையாக இருக்கின்றன.பெருநகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு நான் சொல்லும் இந்தக் காரணிகள் வித்தியாசமாகவும் ஒத்துக் கொள்ள இயலாததாகவும் இருக்கலாம்.ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,பெருநகரில் அனுபவப்பட்ட என்னைப் போன்ற சிலர் இந்த வேறுபாட்டை அறிய-அல்ல-உணர முடியும்.

இந்த சூழலில் குழந்தைகளூக்கு சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அவர்கள் திசை திரும்பும் வாய்ப்புகளும் இருக்கின்றன.இதைப் பற்றிய கேள்விக்கு விரிவான பதிலை மருத்துவர் ஷாலினி கூட அளிக்க வில்லை என்று டோண்டு குறிப்பிட்டார்.ஏனெனில் இதற்கான அறுதியிட்ட பதில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம்.

இவற்றை எதிர் கொள்வதற்கான சரியான வழிமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் மிகவும் அணுக்கமாக தோழமையுடன் இருப்பதும் அவர்களின் உலகத்தில் தவிர்க்க இயலாத நபர்களாக பெற்றோர் விளங்குவதும் முக்கியம்.இந்த சூழலில் குழந்தைகளின் செயல்களிலிருந்து நண்பர்கள் வரை அனைவரது விவரமும் நமக்குத் தெரியவரும்.

நெருங்கிய குடும்ப நபர்களே குழந்தைகளுக்கு வினையாக அமைந்தால் என்ன செய்வது என்பது துர்பலமான ஒரு சூழல்.சொல்லத் தேவையன்றி மிகக் கவனமுடன் கையாள வேண்டிய விதயமே.அப்படிப்பட்ட நெருங்கிய நபர்கள் குடும்பத்தில் இருக்க வேண்டியது அவசியமா எனபதே இதில் என் கேள்வி !


இதைப்பற்றிய கருத்துக்களை யோசிக்கும் போதே அதனுடன் கூடுதலாக இணைக்க வேண்டிய ஒரு கலந்துரையாடல் தலைப்பு குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவையா என்பதும்.

இதுவும் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியே..என்னுடைய கணிப்பில் சிறுவர்களுக்கு 12 வயது வரை அவர்கள் சிறுவர்களாக இருக்க அனுமதிப்பதுதான் சரியான செயலாகத் தோன்றுகிறது.13\14 வயதளவில் பாலியல் விதயங்களைப் பக்குவமாகக் கற்றுத் தரும் அதை நேரத்தில் அவர்களுக்கு பரிசோதிக்கும் ஆவல் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

இந்த விதயம் பற்றிய டோண்டுவின் பதிவில் எழுப்பிருக்கும் கேள்விகள் அர்த்தம் பொருந்தியவை என்றே நினைக்கிறேன்..அவற்றிற்கு ஷாலினி பதில் சொன்னால் இன்னும் மகிழ்வேன்...

Tuesday, May 12, 2009

103- நெகிழ்ந்து மலர்ந்த ஒரு "பூ"

இந்த வாரத்தில் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி(தானே?)நடித்த பூ திரைப்பபடம் பார்க்க முடிந்தது.

நல்ல படங்களை நாங்கள் வெற்றி பெற விடுவதில்லை என்ற தமிழக ரசிக மனோபாவத்துக்கேற்ப வந்த சுவடு தெரியாமல் போன ஒரு படம்.


படம் பார்த்து முடித்த இரவு தூங்க நெடுநேரம் ஆனது;மனம் நெகிழந்த ஒரு உணர்வுடனேயே தூங்கப் போனேன்.சிறுவயதில் நான் பார்த்த நிறம் மாறாத பூக்கள்  உதிரிப் பூக்கள் படத்தின் -விஜயன் நீருக்குள் போகும்-இறுதிக் காட்சி நெடுநாட்களாக நினைவில் இருந்த ஒன்று.அதற்குப் பிறகு இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் பாதித்ததும் நினைவில் நெடுநாட்கள் இருக்கும் என்றும் தோன்றியது.
கதை என்னவோ சாதாரண காதல் கதைதான் என்று கருதினாலும் நாயகியின் அன்பு எப்படிப்பட்டது என்ற அவளின் பார்வையும் அதை வெளிப்படுத்தும் காட்சிகளும் அன்பு-காதல் ஆகிய உணர்வுகளின் நோக்கம்-objective and attainment-மாறுபட்டு என்னவாக இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் இந்தக் கதையின் முடிச்சு.

காதலித்தவர்கள் எப்படியும் இணைவதுதான் காதலின் வெற்றி என்ற பொதுப்பட்ட சிந்தனையிலிருந்த வேறுபடும் படம் ஒருவர் மீதான காதலின் உன்னதம் அவள் அல்லது அவனுடன் இணைவதைக் கூட விலையாகத் தரத் தயாராக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நச்சென்று சொல்லிச் செல்கிறது படம்.

அத்தை மகனை சிறுவயதில் இருந்து பிரவாகமாய் விரும்பும் ஒரு எளிய கிராமத்துப் பெண் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று தெரிய வரும் பொழுது எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது பல படங்களில் எடுத்துத் தள்ளியிருக்கும் கருமாந்திரக் காட்சி,இரண்டு வகைப்படும்;ஒன்று அவள் இறந்து போவாள்,பெரும்பாலும் தற்கொலை அல்லது விபத்து ஏதாவது ஒன்றில்;அல்லது சாமியாரிணி ஆவாள்...இவை தவிர்த்த தீர்வுகளை முன் வைத்த படங்கள் மிகக் குறைவு.

பூ நாயகி அதை எளிதாக எதிர் கொள்வதோடு,நாயகனான அத்தை மகன் மீது எந்த வருத்தங்களுமின்றி இருக்கிறாள்;தோழி உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையா என்று கேட்கும் போது,எதுக்கு வருத்தப்படனும்,அது நல்லா இருந்தா பத்தாதா?நான் அது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டா அது எப்படி நல்லா இருக்கும்?எனக்கு அது சந்தோஷமா இருக்கணும் அதுதான் வேணும்.நான் வருத்தப்படாம இருந்தாத்தான் அது சந்தோஷமா இருக்கும் என்று இதழ் நெளியும் புன்னகையுடன் சொல்லும் போது நாம் நெகிழ்ந்து போவது நிச்சயம்.

அவனை எவ்வளவு விரும்புகிறாள் என்பதை,ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அதில் முழுதும் எழுதி அவனிடம் கொடு;அதைப் பார்த்தால் உன் அன்பின் வலிமை தெரிந்து உன்னையே திருமணம் செய்து கொள்வான் என்று தோழியின் யோசனைப்படி முயற்சிக்கும் நாயகி,கடைசியில் எதுவும் எழுதத் தோன்றாமல்,நீ நல்லா இருக்கணும் மாமா..என்று இரு வரிகளுடன் கடிதத்தை முடிப்பது..

மளிகைக் கடைக்கு சாமான் வாங்கச் சென்று விட்டு,என்ன வேணும் என்ற கடைக்காரரின் கேள்விக்கு தன் மாமாவின் பெயரை விளித்து வேண்டும் என்று சொல்லும் தன்னை மறந்த கணம்..

போன்ற சிறு சிறு ரசமான இடங்கள் படம் முழுதும் ஆங்காங்கே.

அவனது திருமணத்திற்கு தனது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து,பகைத்து தூற்றி அவனை சாபமிடும் போது,அவனது நலமான வாழ்வுக்காக அவனுடைய திருமணத்திற்கு கட்டாயம் தன்னுடைய வீட்டிலிருந்து யாராவது கட்டாயம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் நாயகி அதை வலியுறுத்த தற்கொலை வரைக்கும் போகிறாள்..இது மிக வித்தியாசமான ஒரு சிந்தனை.

எங்கள் ஊர்ப் பக்கங்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் நடைபெறும் போது ஒரு வழக்கம் வைத்திருக்கிறார்கள்;அதாவது மணமக்கள் திருமணத்தன்று வருகை தந்திருக்கும் மூத்தவர்கள் அனைவரது கால்களிலும் விழுந்து ஆசி பெறுவது.பொதுவாக எல்லா இனத்திலும் மணமக்கள் நெருங்கிய சொந்தபந்தத்தில் மூத்தவர்களிடம் ஆசி பெறுவார்கள்.ஆனால் நகரத்தார் என்று சொல்லப்டும் நாட்டுக் கோட்டை நகரத்தார் திருமணம் ஒன்றில் நான் பார்த்து வியந்தது வந்திருந்த அனைத்து மூத்தவர்கள் காலிலும் விழுந்து ஆசி பெற்றது..எனது தந்தையுடன் அத்திருமண விழாவில் கலந்து கொண்ட நாங்கள் நட்பு முறையில்தான் அழைக்கப்பட்டிருந்தோம்.எனது தந்தையும் பெண்ணின் தந்தையும் நண்பர்கள்..நண்பர்கள் என்று சொல்வது கூட அதீதம்;ஒருவருக்கொருவர் மதிக்கும் தெரிந்தவர்கள்,அவ்வளவே.

ஆனால் நாங்கள் நுழைந்த உடன் எங்களை வரவேற்ற பெண்ணின் தகப்பானார் தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்;பின்னர் மணமக்களை அறிமுகப் படுத்தினார்.பின்னர் மணமக்கள் எனது தந்தையாரிடம் ஆசி பெற்றார்கள்.

திருமணத்தில் இருந்து திரும்பிய பிறகும் கூட இதன் உளவியல் காரணங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்;எனது தாயாரிடம் தெரிவித்த போது,மிக எளிதாக அதற்கு ஒரு விளக்கம் கிடைத்தது.திருமணத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள்;வருபவர்களில் எவருக்கேனும் விழாக் குடும்பத்தாரிடம் ஏதேனும் மன்த்தாங்கல்கள் சிறிதளவு இருந்தாலும் கூட தம் காலில் விழுந்து தங்களின் உளமார ஆசியை வேண்டும் மணமக்களை முழுமனத்துடன் வாழ்த்துவார்கள்.அவர்களிடம் ஏதும் மனக்குறைவான சிந்தனை இருந்தாலும் கூட தமது குழந்தைகளைப் போல எண்ணி தங்களிடன் ஆசிர்வாதம் ஆசி வேண்டும் மணமக்களின் செயல் அவர்கள் அறியாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு மனப் பிணக்குகளைக் கூட சரி செய்து முழுமனத்துடன் அவர்களை வாழ்த்திச் செல்வார்கள்.அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயம் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
அது முழுக்க எனக்கு உடன்பாடானதாகத் தோன்றியது.

கிட்டத்திட்ட அந்த ஒரு செய்தியையே பூ படம் தந்தது.தன்னை நிராகரித்தாலும் தான் விரும்பிய ஒருவன் நன்றாக வாழ வேண்டும் என்று உளமார நினைக்கும் நாயகி தனது மனத்தையே வருத்தங்களற்று மாற்றிக் கொள்வதோடு,அவன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்,அதற்கு தன் குடும்பத்தினரும் சென்று அவனது திருமணத்தில் கலந்து கொண்டு அவனை வாழ்த்திவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்து,அதற்கு பதில் நிபந்தனையாக,'அவனது திருமணத்திற்கு முன்னர் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்;அதற்கு சம்மதித்தால் நாங்கள் அவன் திருமணத்திற்குச் செல்கிறோம்' என்று சொல்ல,உடன் சம்மதித்து அவனது திருமணம் நடக்கும் முன்னரே தான் திருமணம் செய்து கொள்கிறாள்.

இவ்வளவு மன நெகிழ்ச்சியுடன் தான் விரும்பியவனின் வாழ்க்கையின் மகிழ்ச்சியை விரும்பும் அவளின் முயற்சிகள் வியர்த்தமாகி விட்டதை தெரிந்து கொள்ளும் கணத்தில் அவளது வெடித்து அழும் உணர்வுகளுடன் முடிகிற படம் மிகுந்த நெகிழ்ச்சியான சிந்தனைகளை விட்டுச் செல்கிறது..

பார்த்து நெகிழ வேண்டிய ஒரு படம் !

Thursday, April 23, 2009

102-குறுந்'தொகைகள்-26-04-2009




இலங்கைத்தமிழர்களின் இன்னல்கள் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கப்போகும் தேர்தல்கள் கிளர்த்தும் நாடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறுகின்றன.

மக்கள் அனைவரும் முட்டாக்**கள் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தமிழர் தலைவருக்கு மக்களுக்கு எப்படியாவது பல நாடகக் காட்சிகளை நடத்திக் காட்டி தன் 'மக்களை' உயர்த்தும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்;இன்னும் கழைக்கூட்டாடி மாதிரி குட்டிக் கரணம் அடித்துக் காட்டுவது மட்டும்தான் மிச்சம்,கூடிய விரைவில் அதையும் எதிர் பார்க்கலாம்.

அம்மா ஆயுசு முழுதும் இலங்கையில் கண்ணுக்குத் தெரிந்தார்கள்;இப்போது இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்;'புலிகள்' எல்லாம் காற்றில் மறைந்து விட்டார்கள் போலிருக்கிறது....ம்ம்ம்ம்...தேர்தல் எல்லாம் செய்யும் வேலை!

நேற்றுவரை தமிழர் பாதுகாப்புப் புண்ணாக்கு வியாபாரம் செய்தவர்களுக்கு இன்று இரண்டோ அல்லது ஏழோ இடங்கள் எல்லாவற்றையும் மறந்து ஐயாவும் அம்மாவும் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்;இனி தேர்தல் முடிந்து சிலகாலம் வரை இலங்கைத் தமிழர்களை பற்றிய எந்த விவரமும் இவர்கள் வாயில் இருந்து வராது.

பல காரணங்களால் தேசிய அளவில் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக மாறிப் போய் விடும் என்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கை கொடுக்கும் தமிழகம் கவிழ்த்து விடுமோ என்று பயந்து மீண்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு வெளிப்படையாக இலங்கையில் என்ன நடந்தாலும்,எவ்வளவு தமிழர்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை எனபதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது..ஏதாவது செய்வார்களா என்ற பொய் எதிர்பார்ப்பாவது இல்லாமல் போகும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் போர்நிறுத்த வேண்டு கோளும் அதற்கான இலங்கையின் எதிர்வினையும் மேலும் கலக்கமளிக்கும் இந்தச் சூழல் அவலத்துடன்,அச்சமூட்டுகிறது.

0 0 0

கோவை செண்ட்ரல் எக்ஸைசில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கே.ராஜேந்திரன் எழுதிய ஒரு கவிதை,மீண்டும் சுஜாதாவின் கட்டுரைகளில் இருந்து...

மங்கிய வெளிச்சத்தில்
பளபளக்கும் இமைக்காத கண்கள்
வைக்கோல் திணித்த
கன்றுக்குட்டியின் ஒட்டுத்தோல் பார்த்து
மனம் மறுகும்
முரட்டு விரங்களின்
இயந்திர உரசலுக்கு
மெல்லிய நாவின்
ஈர ஸ்பரிசங்களும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
நினைவில் தேங்கும்
சாட்டைக் கம்பு
நினைவுக்கு வர
அடைத்த துவாரம்
அரை மனதாய்த் திறக்கும்
மார்வலி மரத்து
வெள்ளை ரத்தம் வடிக்கும்

பசு என்னும் தலைப்பில் வந்த இந்தப் புதுக்கவிதை நவீன கவிதையின் பரிமாணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.பல கவிதைகப் பரிச்சயங்களில் எனக்கு எப்பொழுதும் தோன்றும் 'இன்னும் சிறிது செப்பனிட்டிருக்கலாமோ'என்ற எண்ணம் இக்கவிதைக்கும் ஏற்பட்டது.


(எனக்குத் தோன்றிய)tinkered version

மங்கிய ஒளியில்
வைக்கோல் போர்த்து
அசையா நின்ற ஒட்டுத் தோல் குட்டி;
மெல்லிய நாவின் ஈர ஸ்பரிசமும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
தேங்கும் நினைவில் மறுகும் மனம்;
சாட்டைக் கம்பு சுழல
முரட்டு விரல்களின்
எந்திர உரசலில்
அடைத்த மடியின் துவாரம்
மார்வலி மரத்துத் திறக்க
வடிகிறது..
வெள்ளை ரத்தம் !

இந்த செப்பம் பல சமயங்களில் நல்ல கவிதையை உன்னதமானதாக மாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன.
நண்பர் ராஜேந்திரன் இப்போது பதிவெழுதிக் கொண்டிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது;சினப்பட்டால் மன்னிப்பாராக !


0 0 0

மதுரைக் காரரும் சென்னை(நிதி)க் காரரும் (தேர்தலுக்காக)வெளியிட்ட சொத்து விவரம் ஒரு பதிவில் பார்க்க நேர்ந்தது.அதுவே 30,40 கோடிகளில் இருக்கிறது.
எந்த ஒரு கல்வித் தகுதியோ,தனிப்பட்ட வணிக நிறுவனமோ இல்லாத அன்ப நண்பர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்து என்று சுதந்திர இந்தியாவில் எவரும் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
மாதம் முழுதும் நாயாய் உழைத்தும் நம்மால் ஆயுளில் ஒரு கோடி சேர்க்க முடியுமா என்று மலைப்பாயிருக்கிறது...

ம்ஹ்ம்...

வாழ்க இந்தியா,வாழ்க அரசியல்!

0 0 0

விருட்சம் கவிதைகளி'ல் யுவன் எழுதிய பிரவாகத்தில் ஒரு துளி

எனக்குப் பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்.
நான் விழித்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது பொழுது.
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிரவாகம்

நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்;அதற்கு இது ஒரு உரைகல்.இந்தக் கவிதை நிச்சயமான ஒரு கவிதை அனுபவத்தை சட்டென்று தருகிறது;கடைசி வரியை கணங்களின் பிரவாகம் என்று மாற்றினால் இக்கவிதை இன்னும் கூர்ப்படுவதாக உணர்கிறேன்!

0 0 0

Tuesday, April 21, 2009

101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள் !

தமிழில் புதுக்கவிதை சென்ற சில பத்தாண்டுகளில் புயல் போலக் கிளம்பி,நல்ல-அல்ல கவிதைகளைத் தரம் பிரிப்பது வைக்கோல்
போரில் ஊசி தேடுவதை விடக் கடினமானதாக ஆகிவிட்டது.ஏதேனும் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலில் தோன்றுவது
கவிதை வடிவம்தான்..அதை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பின்னர் மற்ற வற்றில் பார்வையைத் திருப்புவார்கள்..

எங்களுடைய சமூகத்தின் கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாள் அன்று கொண்டாட்டங்களும் சில போட்டிகளும்
வைப்பார்கள்;90 களில் ஒரு முறை ஒரு மகானுபவர் யோசைனையில் கவிதைப்போட்டி வைத்து விட்டார்கள்.அதில் படிப்பாளி(?!) என்று என்னை
நடுவர்களில் ஒருவராக்கி என்னை எல்லாக் கவிதைகளையும் கேட்க வைத்தார்கள்.(அந்த வதை அனுபவம் பல நாட்களுக்கு நினைவில் இருந்தது வேறு விதயம்!).சொல்லத் தேவையன்றி,அந்த அசம்(பவ)பாவிதத்திற்குப் பின் நான் ஒரு மோசமான
நடுவராக அறியப்பட்டேன்.

முதல் பரிசுக் கவிதை என்ன தெரியுமா?

அலைகள்,
கடல் கன்னி
கரைக்கு அனுப்பும்அன்பு முத்தங்கள் !

போகட்டும்....நல்ல கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன..கீழே சில நல்ல அல்லது கவரும்
கவிதைகளும்,அவற்றிற்கான சில ரசிப்புகளும்..

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழ்க் கவிதைகளின் தற்காலப் போக்கைக் காட்டும் நான்கு கவிதைகளை இங்கே தருகிறேன்.முதலில் குமுதம் வாசகர்களுக்கு எளிதில்
புரியக் கூடிய கவிதை.என் நண்பர் பாவண்ணன் எழுதியது.

'இடித்துச் சிதைத்தார்கள் ஒருநாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்...
பஸ்ங்க வந்து ரயில் அழிச்சாச்சு வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ் ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில் புடிப்பானா?
என் இளமையின் ஞாபகம் வேற விதம்
ஒவ்வொரு மணிக்கும் ஓடும் ரயில்களுக்கு
வரிசையாய் நின்று சல்யூட் அடிப்போம்
குதிரை வண்டியில் வந்திறங்கி
கூட்டமாய் காத்திருப்பவர்களை
ஆலவிழுதில் ஊஞ்சல் கட்டி
ஆடியபடி பார்த்ததிருப்போம்
அரையனாவுக்கு நாவல்பழம் வாங்கி
ஆளாளுக்குத் தின்றபடி
மரங்கள் நடுவே பாதைபோட்டு
ரயில்கள் போல நாங்களே ஓடுவோம்
தேடிவரும் அம்மா
எங்களைக் காண்பது ரயிலடியில்தான்
காலம் மாறிவிட்டது இன்று
என் பிள்ளை பார்க்க
ரயில் இல்லை இப்போது
அகால நள்ளிரவில் ஊளையிட்டுச் செல்லும்
சரக்கு ரயிலைக் காட்ட முடியாது
தண்டவாளம் மட்டும் இருக்கிறது
பழகின ஏதோ ஒன்றின் மிச்சம் போல

இந்தக் கவிதை வெளிவந்தது 'காலக்கிரமம்' என்னும் சிற்றிதழ்,ஆசிரியர் ஆத்மாஜி.மொத்தம் 18 பக்கம்.முழுவதும்
கவிதைகள்.மேற்சொன்ன கவிதை மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய,சிறுவயதில் நாம் பார்த்துப் பரவசப்பட்ட ரயில்களை ஞாபகப்
படுத்தும் evocative கவிதை.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இழந்தது ரயில் மட்டும் இல்லை என்பது புரியாவித்தாலும்
பரவாயில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழின் நவீன கவிதைகள் எல்லாமே அத்தனை எளிமையானவை அல்ல;முன்பு மேற்சொன்ன பாவண்ணனின் கவிதையை விடச் சற்று
அதிகமாகச் சிந்திக்க வைக்கும் கவிதை ஒன்றை அடுத்துத் தருகிறேன்,அதை எழுதியவர் விக்கிரமாதித்யன்.

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.

'ஆகாசம் நீல நிறம்' என்னும் தொகுப்பில் இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்(ஆம்,22 ஆண்டுகளுக்கு முன்தான் !!!!!)இந்த
அபாரமான கவிதை ஏன் இதுவரை கண்ணில் படவில்லை என்று கேட்டு விக்ரமாதித்யன் 'மேலும்' என்னும் பத்திரிகையில் மே 1993
இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.'எனக்கொண்ணும் நஷ்டமில்லை,22 வருஷ இருட்டில் ஒரு தீக்குச்சி பொருத்தி வைத்துப்
பார்க்கிறேன்.எளிமையை ஏற்காத இவர்கள் மனசை லேசாக குத்திக் காட்டுவேன்,அவ்வளவுதான்' என்கிறார்.

இந்த அபாரமான கவிதை கவனிக்கப்படாத்து ஆச்சரியம்தான்.இதற்குப் பரிகாரமாக லட்சக்கணக்கான வாசகர்கள் இதைக் கவனிக்கட்டும்
என்று தீக்குச்சி என்ன,தீப்பந்தமே ஏற்றிக் காண்பிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்தக் கவிதையும் புரிவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது.கை(ப்) பேனா,கால்(ச்) செருப்பு ப்பன்னா
ச்சன்னாவை எதற்கு கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களை சங்கடப் படுத்த விரும்பவில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

பதிலாக அதே காலக்கிரமம் இதழில் வெளியான் இரு கவிதைகளைக் கொடுத்து கவிதைகளின் புரிதல் நிலைகளைச் சற்றே கஷ்டப்படுத்த
விரும்புகிறேன்.

பத்தாமடை
சித்ராங்கியே
மூணாம் படை
மூப்பாயியைப்
போய்ப் பார்
முதுகில் கூடையும்
இடுப்பில் குழந்தையும்
கக்கத்தில் ரைஃபிளுமாகக்
காத்திருக்கிறாள்
மணல் தடுப்புகளுக்கு
பின்னால்

குருநாத் கணேசனின் இந்தக் கவிதை புரிந்தும் புரியாமலும் கோடி காட்டுகிறதல்லவா?இதில் சித்ராங்கி யார்,மூப்பாயி யார் என்று
வியப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு வித்ததில் இலைமறை காய் மறைவாகப் புரிவதுடன் சற்று சங்கடப் படுத்துகிறதல்லவா...அது
போதும்.

இப்போது பிரம்மராஜன் கவிதைகளுக்கு நீங்கள் தயாராகலாம்.

திணைப் புறம்பின் விழுப்
புண்கள் தாமே
தேடியதுன்னை
வியர்க்கும் மணல் மேடுகள்
ஊடே ஞானிகப்படுத்தும் தோள்
வலியில் மொக்கு உட்குழிய
மின்சாரம் அலற
நான் முகத்திலொன்று வாட
நீரின் நினைவு நினைக்கும்
நின்பனை நிலம்
சாவில் முளைக்கும்
வாழ்வின் வைரஸ் பூவே
போற்றி!

பாவண்ணனிலிருந்து பிரம்மராஜன் வரை கவிதை வடிவங்கள் எத்தனை விதமானவை என்று மாதிரி காட்டுகிறது.பிரம்மராஜன் கவிதை
புரிகிறது,புரியவில்லை என்ற தளத்தில் இயங்குவதல்ல.இது ஒரு surreal சித்திரம் போல பார்ப்பவனின் மன விகற்பங்களுக்கு ஏற்ப
அதன் புரிதல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.புரிகிறதா?

* * * * * * * * * * * * * * * * * * * * *

அண்மையில் கோவையில் ஒரு சிறுகதைப் பட்டரையின் போது,'நிகழ்' பத்திரிகையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய 'கால்களின்
ஆல்பம்' என்கிற கவிதையை வாசித்துக் காட்டிய போது,அது எவ்வளவு தூரம் கேட்டவர்களின் மனசைப் பாதித்தது என்பதை படித்து
முடித்தபின் உணர்ந்தேன்.பலபேர் என்னிடம் வந்து கை குலுக்கினார்கள்.ஒரு பெண்மணி மனுஷ்ய புத்திரனின் விலாசம் கேட்டு
அவருக்குப் பணம் அனுப்ப வேண்டும்,ஏதாவது செய்ய வேண்டும் என்றார்,கண்களில் கண்ணீருடன்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

மேற் குறிப்பிட்ட ஐந்து பத்திகளும் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.இவை 90 களின்
மத்தியில் எழுதப்பட்டவை.ஒரு புகழ் பெற்ற,தின எழுத்துலகின் பெரும் வாசகர் வட்டத்தைப் பெற்ற சூப்பர் ஸ்டார் எழுத்தாளரான
அவர்,நல்ல கவிதைகளையும் கவனிக்கப்பட வேண்டிய திறமையான கவிஞர்களையும்,அவர்கள் அப்போது எந்த வித அடையாளங்களற்று
இருந்தும்,அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்.இதை ஒரு கடமையாகவே கருதிச் செயல்பட்டார் என்றும் எனக்குத்
தோன்றுகிறது.

மனுஷ்யபுத்திரன் சுஜாதாவின் மறைவின் போது எழுதிய,அவருக்கும் பின்னவருக்குமான பரிச்சயம் ஏற்பட்ட விதங்களும்,அப்போது அவர்
இருந்த(முன்னவர்) நிலையையும் விவரித்த அந்தப் பத்தியைப் படித்து நெகிழாதவர்கள் குறைவு.

அப்படிபபட்ட நேர்மறை மனிதர் இறந்த போது(ம்),அவரின் சாதிய அடையாளங்கள் குறித்த வசைச் சொற்கள் பரவலாக-குறிப்பாகப்
பதிவுலகில்-எழுந்தன.

விஜய் தொலைக்காட்சியில் இப்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று.அந்த நிகழ்ச்சியும்
விஜய் தொலைக்காட்சி நிறுவன்ம் அதை நடத்தும் விதத்திலும் அபாரமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இந்த நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள்,திரு.உன்னி,திருமதி.சுஜாதா மற்றும் திரு.சீனிவாஸ்.

இதுவரை நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் நல்ல திறனுடன் பாடும் போட்டியாளர்களில் ரவி,ரஞ்சனி,விஜய் மற்றும் அஜீஷ்
ஆகிய நால்வரும்தான் இறுதிக்கு வருவார்கள் என்று நான் கணித்திருந்தேன்.(சூப்பர் சிக்ஸ் வரை).ஆயினும் அது வரை நடந்த
சுற்றுகளிலேயே சீனிவாஸ்,போட்டியாளர் ரவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போலத் தோன்றியது எனக்கு.ஆயினும் இசையில்
எனக்கிருக்கும் எளிய திறமைகளுக்கு விஞ்சிய விதயங்களை நடுவர்கள் கண்டிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

குரல் பயிற்சியாளர் அனந்த் வந்தபிறகு டார்க் ஹார்ஸாக ரேணு முந்தினார்;பல பாடல்களைக் கலக்கலாகப் பாடினார்.

செமிபைனல் சுற்றுகளின் போது இரு நடுவர்கள் வெளிப்படை மதிப்பீடும் ஒரு நடுவர் மறைமுக மதிப்பீடும் செய்வர் என்று
அறிவிக்கப்பட்டது;அப்போது அது ஏன் என்றும் யோசித்தேன்.(பின்னர்தான் விளங்கியது!).தனித்தனியாக ஒருவரையொருவர்
போட்டியிட்டுப் பாடிய அந்த சுற்றுகளிலும் சீனிவாஸ் போட்டியாளர் ரவிக்கு அதிக மதிப்பெண்களும்,அஜீஷுக்கு குறைவான
மதிப்பெண்களும் கொடுத்தார்-இருவருமே ஒரே அளவில் ரசிக்கும்படி பாடியும்!

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப சுற்றுகளில் விளையாட்டுப் பையனாகத் தோன்றிய அஜீஷ் செமி சுற்றுகளில் கலக்கினார்;ஒரு பாடல்
கூட சோடை என்று சொல்ல முடியவில்லை;ஆனால் ரவியின் திறனில் குறிப்பிட்டு அவதானிக்கும் படி எந்த முன்னேற்றமும்
காணக்கிடைக்கவில்லை.அவர் ஆரம்பம் முதலே நன்றாகத்தான் பாடிக் கொண்டிருந்தாலும் outstanding என்று சொல்லத்தக்க
விதத்தில் பாடவில்லையெனினும் ரவியைப் பற்றிய சீனிவாஸின் கமெண்டுகள் ஆகா ஒகோ என்ற அளவிலேதான் இருந்தன.

மதிப்பெண் வழங்கும் போது இரண்டு சுற்றுகளில் அஜீஷுக்கு குறைவான அளவில் மதிப்பெண்ணும்,ரவிக்கு அதிக மதிப்பெண்களும்
வழங்கி முதல் மூன்று இடங்களில் ரவியை உறுதி செய்தும்,அஜீஷை வெளித் தள்ளவும் ஏதுவான கேவலமான செயலைச் செய்தார் சீனி.இது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் உன்னி,சீனி செய்த அந்தத் தவறைச் சரி செய்தார்,தம் மதிப்பெண்களின் மூலமாக.

அவர் அளித்த மதிப்பெண்கள் பாடியவர்களின் திறனுக்கு அளிக்கப்பட்ட சரியான மதிப்பெண்களாகவே தோன்றியது(அஜீஷுக்கு முதல் இடமும்,ரேணுவுக்கு இரண்டாம்
இடமும்,ரவிக்கு மூன்றாமிடமும் அவர் அளித்த மதிப்பெண்களைச் சேர்த்த பின்னர் கிடைத்தன்).அவரின் மதிப்பெண்களின்
மூலம்,அஜீஷ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
திறனுக்கேற்ற மதிப்பீடுகளைச் செய்யத் தவறிய சீனியின் அசிங்கமான செயலைப் பார்த்த போது,மாறுபட்டு சுஜாதாவின் கவிதை
அறிமுகங்கள்தான் எனக்குத் தோன்றியது;பல மறைபொருள் சிந்தனைகளும் வந்தன..

பாராட்டும் விதத்தில் நடந்த உன்னி நெஞ்சை நிறைத்தார் !

சுஜாதா,உன்னி போன்ற உயர்ந்த மனிதர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...