குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, May 23, 2008

59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் போது நான் அமரர் சுஜாதா என ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

பலரும் சுஜாதாவை நினைவு கூர்ந்து பதிவு போட்டிருந்தார்கள்.நான் அறிந்த வரை அவரின் சிறந்த விதயங்களாக நான் உணர்ந்தவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
அதற்கு எதிர்வினையாக நண்பர் சரவணன் பெ.நா.அப்புஸ்வாமி பற்றி குறிப்பிட்டு என்னை மறுதளித்திருந்தார்.

பொதுவாக மேலும் அறிதலுக்காக நான் அறிவுறுத்தப்பட்டால் அதை மகிழ்வுடனே எதிர்கொள்வேன்;அறிதலுக்கான வாய்ப்பாக அதைக் கருதுவேன்.

எனவே அது பற்றிய ஒரு சிந்தனை அடிமனதில் ஓடிக்கொண்டே இருந்தது.இந்த சூழலில் அப்புஸ்வாமி பற்றி மேலதிகத் தகவல்கள் படிக்கக் கிடைத்தன.

அப்புஸ்வாமி தகுதியால் ஒரு வழக்கறிஞர்;தமது 26’ம் வயதில் தன் உறவினர்,ஒரு பத்திரிக்கையாளர் அவரது பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதப் பணித்த போது, ‘நான் தமிழை பள்ளியில் முறையாகப் படிக்கவில்லை;என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் கூட எழுதியதில்லை,நான் எப்படித் தமிழில் எழுதுவேன்’ என மலைத்த அவர்,எழுதிக் குவித்தவை என்னென்ன தெரியுமா?


சுமார் 5000 ம் மேலான கட்டுரைகள்,
100 க்கும் மேலான புத்தகங்கள்
10000 வரிகளுக்கும் மேலான மொழிபெயர்ப்புகள்-இந்த மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமான இருவழி மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.


26 வயது முதல் தமது 95 வயது வரை சுமார் 50 ஆண்டுக்கு மேல் எழுதியவர்;இறந்த அன்று கூட ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கட்டுரை(Bharat’s Vision of the Motherland)எழுதி தன் கையால் அஞ்சலில் அனுப்பிவிட்டு இறந்து போன அற்புத மனிதர்;அந்த கட்டுரை மறுநாள் ஹிந்து பதிப்பில் வெளிவந்திருக்கிறது !

இப்படிப்பட்ட மனிதரைப் பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும் என எண்ணினால் வியப்பே ஏற்படும்.ஓரளவு பரந்த வாசிப்பு வழக்கம் நமக்கு இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இதனால் வெட்கமேற்பட்டது உண்மை.

1891 ல் பெருங்குளம் நாராயணய்யருக்கும் அம்மாகுட்டி அம்மாவிற்கும் பிறந்த அப்புஸ்வாமி,சென்னை மாநிலக் கல்லூரியின் சட்டத் தேர்ச்சி மாணவர்.சென்னை உயர்நீதி மன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கறிஞராக-Appellate Side Advocate - சுமார் 50 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

1900 ங்களில் அறிஞர் சிலர்,மேல்நாடுகளில் முகிழ்ந்து வரும் நவீன அறிவியல் சிந்தனைகள் தமிழரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றெண்ணி சென்னையில் தமிழர் கல்விச் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்த அமைப்பின் சார்பாக தமிழ் நேசன் என்ற பத்திரிகையும் தொடங்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியரான அ.மாதவையர்,அப்புஸ்வாமியின் சித்தப்பா!
அவர்தான் மேற்சொன்னவாறு அப்புஸ்வாமியை கட்டுரை எழுதச் சொன்னது...

அப்போது மேற்சொன்னவாறு பதிலளித்த அப்புஸ்வாமியிடம்,அவர் ‘உங்கள் வீட்டில் தமிழ்ப் புத்தகங்களும் பத்திரிகைகளும் நிறைய உண்டு.தமிழில் புலமை வாய்ந்த பலர் உனக்கு நண்பர்கள்,எனவே டபாய்க்காமல் எழுது,தேவையெனில் நான் சுருக்கிக் கொள்வேன் என தைரியம் அளிக்க ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’ என்ற அந்தக் கட்டுரையுடன் எழுதத் தொடங்கினார் அப்புஸ்வாமி.

இவரின் கல்லூரிக்கால நண்பர்களின்-பிற்காலத் தமிழர்களின்-பட்டியல் நம்மைப் பொறாமைப்படவைக்கும் ஒன்று.கா.சுப்பிரமணியபிள்ளை,பி.க்ஷீ.ஆச்சார்யா,வையாபுரிப்பிள்ளை,க.அ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் உடன் படித்தவர்கள் என அவரே நினைவு கூர்கிறார்.
உ.வே.சா வுடனும் கல்லூரிக்காலத்திலேயே இவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.

இந்தக் கட்டுரை அச்சில் வந்தபின் அந்த மகிழ்வான அனுபவத்தை பிரபஞ்சத்தில் மனிதன் என்ற ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

கிட்டத்திட்ட 5000 கட்டுரைகளுக்கும் மேல் அவரால் எழுத முடிந்த காரணம் அவரது நீண்ட நெடிய ஆயுள்,சுமாராக 26 வயதிலிந்து தமது 95 வயது(1986) வரை எழுத முடிந்த அவரது அயராத இயக்கத் தன்மை வியக்க வைக்கும் ஒன்று.

அவரின் அற்புத உலகம்,மின்சாரத்தின் கதை போன்ற நூல்களும்,சென்னை கிருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஜே.பி.மாணிக்கத்துடன் இணைந்து எழுதிய வானொலியும் ஒலிபரப்பும்,எக்ஸ்-ரே,அணுவின் கதை போன்ற நூல்களும் பல்கலைக் கழகங்களால் பாராட்டப் பட்ட சிறப்பைக் கொண்டவை.

இது மட்டுமின்றி,சிறுவர்களுக்கான புத்தகங்களில் மிகப் பரந்து இயங்கி இருக்கிறார் அப்புஸ்வாமி.பள்ளிச் சிறுவர்களுக்கான அவரது நூல்கள் சித்திர விஞ்ஞானம்,சித்திர வாசகம்,சித்திர கதைப்பாட்டு போன்ற புத்தகங்கள் அற்புதமானவை.தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் குழந்தை எழுத்தாளர் சங்கம் இரண்டாலும் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் இவர் ஒருவரே என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இவ்வளவு எழுதிக் குவித்த அப்புஸ்வாமி அதற்குரிய நியாயமான அங்கீகரிப்புகள் பெற்றாரா என்பது விவாதத்துக்குரிய ஒன்று.இதில் விநோதமான ஒரு விதயம் இதையும் அவர் உணர்ந்தே இருந்தார் என்பதும் இதில் பெரிய வருத்தங்கள் ஏதுமின்றி தன் கடன் எழுதிக் குவிப்பதே என்பது போல எழுதிக் கொண்டேயிருந்தார் என்பதும்தான்.

இன்னொரு சுட்டப் பட வேண்டிய விதயம் அவருடைய,அறிவியலுக்கான கலைச்சொல்லாக்க முயற்சியும்,பரவலாக தமிழில் கலைச்சொற்களை உபயோகித்ததும்.பின்வரும் ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள்.

Atomic Fission - அணுப்பிளவு
Satellite - துணைக்கோள்
Electron - நுண்ணணு,மின்னணு
Invention - புத்தமைப்பு
Element - மூலகம்
Foundry - வார்ப்படச்சாலை(பொன்னியின் செல்வனில் கல்கியின் “நாணய வார்ப்படச்சாலை” நினைவுக்கு வருகிறதா?

Microscope - நுண்ணோக்கி
Radiation - கதிரியக்கம்
Elements - தனிமங்கள்
Rocket - உந்து கருவி
Organic Chemistry - அங்கக ரசாயணம்
Accelerator - துரிதகாரி
Pancreas - கணையம்

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.....இதில் சில அவரே புனைந்ததும்,சில அவரால் மாறாது கையாளப் பட்டவையும்.
கக்குவான் இருமல் என்ற காரணியுடன் கூடிய பெயரை அந்த நோய்க்குச் சூட்டியவர் அவரே.
மொழியை அறிவை வளர்க்க உதவும் ஒரு காரணியாகப் பார்க்க வேண்டுமேயல்லாது,அன்னைத் தமிழ்,கன்னித் தமிழ் என்றெல்லாம் பட்டமளித்து,மொழியை வளரவிடாத போக்கைச் சாடியவர்.
“மக்கள் அறிவியலைக் கற்று,அறிவியல் மனநிலையைப் பெற்று வாழ்வார்களேயானால் அவர்கள் இயல்பாகவே பகுத்தறியும் தன்மை பெறுவார்கள்,எனவே அறிவியல் சாதாரண மக்களிடம் எளிதாகச் சென்றடையும் வழி தமிழில் அறிவியல் அறிவு பரவும் வண்ணம் நிறைய எழுதப்பட வேண்டும்”என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு அதற்காகவே அறிவியல் கட்டுரைகள் நிறைய எழுதிக் குவித்தவர்.

1965 லேயே ரேடார் பற்றி
“ரேடார் அறிவிக்கும் நட்சத்திரங்கள்” என்ற கட்டுரையில் “ரேடார் கருவிகள் மின்காந்த அலைகளை வானில் வீசுகின்றன,அவை பிறபொருள்களில் மோதித் திரும்பி வருவதைத் திருத்தமாக ஏற்கின்றன,எனவே அவை வானில் பறக்கும் விமானங்களையும்,நீரினுள் இருக்கும் கப்பல்களையும் கண்ணுக்கு எட்டாத் தொலைவிலும்,இரவிலும் கூட கண்டுபிடிக்க துணை செய்கின்றன”
என எளிமையாக எழுதிய அதே நேரத்தில்,
“அறிவியலில் பொய்க்கும் ஏமாற்றத்திற்கும் சிறிதும் இடம் இல்லை;அறிவியலாளனுக்குப் புல்லும்,புழுவும்,மனிதனும் உயர்வு தாழ்வு இல்லாதவை;இதுவே விஞ்ஞான மனநிலை எனப்படுவது;விஞ்ஞானத்தால் கிடைக்கும் கருவிகளை விட இந்த விஞ்ஞான மனநிலையை அடைவதே பெரியது,மகத்தானது”
என அடர்ந்தும் எழுதியவர்.

அறிவியல் மட்டுமல்லாது மொழிபெயர்ப்பில் இலக்கியம் பற்றியும் எழுதி இருக்கிறார்;
நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலா கொன்றோ; மிசையாகொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை;வாழிய நிலனே ! (புறம்-187,ஔவையார்)
என்ற பாடலின்

“O Land!
You may be a flourishing kingdom
Or a wild jungle:
You may be a hollow depression,
Or a high table-land:
These matter not
Where ever the men are good
There you are good:
So, long may you live
O Land”
என்ற அழகான மொழிபெயர்ப்பு,அந்த அறிவியல் எழுத்தாளனுக்குள்ளிருந்த கவிஞனுக்கும்,ரசிகனுக்கும் சான்று.

அவரது மயிலை சித்திரக்குளக்கரை வீட்டில் அவருடன் அளவளாவ வரும் நண்பர்கள் பட்டியலைப் பாருங்கள்
டி.கே.சி
ராஜாஜி
கல்கி
பி.க்ஷீ
எஸ்.வையாபுரிப்பிள்ளை
டி.எல்.வெங்கட்ராமய்யர்
வாசன்
ஏ.என்.சிவராமன்
கி.வா.ஜ
ரா.பி.சேதுப்பிள்ளை...
எனப் பட்டியல் நீளுகிறது.
அவருடைய “தமிழ்த்” தளத்திறகுச் இதுவே சான்று.

அறிவியல் தமிழை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றதில் சுஜாதாவுக்கும் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கும் ஒருவரைப் பற்றி,அறியக் கூடும் வாய்ப்பாக,எனக்குள் தேடலை விதைத்த அந்த நண்பருக்கு என் நன்றிகள் !!!!!!
சில சுவையான பிற்சேர்க்கைகள்:
1.சென்னையிலேயே பிறந்து வளர்ந்த அப்புஸ்வாமி 80 வயதுக்கும் மேல் குடும்ப சூழல் காரணமாக நெல்லைக்குச் சென்று தங்க நேர்ந்திருக்கிறது.அதை இயல்பாக எடுத்துக்கொண்டு வாழ்வையும்,எழுத்துப் பணியையும் தொடர்ந்திருக்கிறார்.
2.1960' களில் தனது ஒரே மகன் மருத்துவ தொழிலை முன்னிட்டு இங்கிலாந்து செல்ல முடிவெடுத்த போது,வருந்தாமல் "உன் எதிர்காலம் உன் முடிவால் நன்றாக இருக்கும் என நம்பினால் தாராளமாய் போய் வா" என்று வாழ்த்தி அனுப்பியவர் ! அந்த மகன் அவருக்கு முன்னாலேயே,இவரது 80'ஆவது வயதில் மறைந்த போது கலங்காமல் வாழ்ந்தவர்.
3.கலைமகள் பத்திரிகை தன் நண்பரால் தொடங்கப் பட்டபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்;அதிலேயே பல கட்டுரைகளும் எழுதினார்.
4.1986 'ல் தன்னுடைய நெருங்கிய நண்பரும்,பிரபல வழக்கறிஞருமான கே.வி.கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவுக்கு கலந்து கொள்ள சென்னை சென்றவர்,விழா ஒத்தி வைக்கப் பட்டதால் நெல்லை திரும்ப இரு வாரங்கள் ஆகும் சூழல் வந்த போது,அந்த இரு வாரங்களை வீணாக்காமல் பயனுள்ள வகையில் கழிக்க, நெல்லைக்குத் தகவல் அனுப்பி ஆங்கில மகாகவி டென்னிசனின் Complete works of Tennyson புத்தகத்தை படிக்க வரவழைத்திருக்கிறார்.
ஆனால்,வாழ்வின் விநோதம்,புத்தகம் வந்த இரு நாட்களில் மறைந்து விட்டார் !

20 comments:

  1. மிகப்பெரும் படைப்புகள் வெகுஜன கூட்டத்தை அடையாமலே உள்ளது, தற்போதைய சூழலில் ஒருவரை அடையாளம் காண்பதோ காண்பிப்பதோ மிக எளிதான விஷயமாகிறது, ஆனால் நம் முந்தைய தலைமுறை படைப்பாளிகளுக்கு இது சாத்தியமற்றுப்போனது. இது போன்ற படைப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதே நம் உடனடி அடிப்படை கடமையாயிருக்கும். ஒரு பழம் பெரும் படைப்பாளியைப் பற்றிய விபரங்கள் தந்ததிற்கு நன்றி..முயன்று பார்க்கிறேன் ஏதேனும் புத்தகம் கிட்டுமா என்று....

    ReplyDelete
  2. இவரைப்பற்றி உங்கள் பதிவின் மூலமாகவே கேள்விப்படுகிறேன். விரிவாக எழுதியிருந்தீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இப்படி ஒரு எழுத்தாளரா..? இதுநாள் வரை கேள்விப்பட்டிராத தகவல். நன்றி. கூடவே bibliography இணைத்திருந்தால் இன்னும் உபயோகமாக இருந்திருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. Up from your "easy chair", Stretch your legs and hands away from your bony body, look for the bible around if any, here you found the bibliography!

      Delete
  4. Atomic Fission- Anu pilavu
    Atomic Fusion- Anu inaivu

    ReplyDelete
  5. நன்றி கிருத்திகா..
    அப்புஸ்வாமியின் படைப்புகள் வெகுஜன ஊடகத்தை அடைதல் எளிதாகவே இருந்திருக்கிறது.ஏனெனில் அவர் பெரும்பாலும் எழுதியது தினமணி மற்றும் தினமணிக்கதிர் வார இணைப்பில்,எனவே வெகுஜனங்களின் கைக்கெட்டும் தூரத்துக்குத்தான் அவர் எழுதினார்.
    நமக்கு அவர் பற்றி விதயங்கள் தெரியாமலிருப்பது நம் குறைதானே தவிர அவரின் குறையல்ல என்றே தோன்றுகிறது.
    தேடிப்படிப்பது நம்மிடம் குறைந்து போனதும்,மேலெழுந்த வாரியான வாசிப்பும்,விதயஞானக் குறையுமே காரணங்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி கோகுலன்.
    முதலில் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்;வருக,மீண்டும் வருக.

    நம்மில் பலருக்கும் அப்புஸ்வாமியைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
    எனவேதான் எனக்குத் தெரியவந்தவுடன் இதைப் பற்றி விளக்கப் படுத்தினேன்.

    ReplyDelete
  7. Arivan

    I am venkatramanan, a software engineer from Chennai.
    Do you have his AppuSwami's writings? From your blog, I am interested to read him.

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  8. நன்றி மார்கன்,தற்கால இளையர்களில் பலருக்கும் அறியப்படாதவராகவே அப்புஸ்வாமி இருந்திருக்கிறார்,காரணம் நம்மில் பலருக்கு நித்த செய்தித்தாள் படிக்கும் வழக்கம் இல்லாதிருப்பது காரணமாக இருக்கலாம்,ஏனெனில் அவர் பெரும்பாலும் செய்தித்தாள்கலேயே எழுதினார்.
    இரண்டாவது அவர் காலத்தால் சிறிது முந்தையவர்,ஆனால் இதைக் காரணமாக என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை,ஏனெனில் காலத்தால் முந்தைய கல்கியையும்,புதுமைப்பித்தனையும் இன்னமும் நாம் அறிந்திருக்கிறோம்.

    அவர் புனைவுலகில் எழுதியில்லாத நிலை வேண்டுமானால் ஒரு ஒத்துக்கொள்ளக் கூடிய காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  9. அனானி,திருத்தத்திற்கு நன்றி.
    திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  10. நன்றி வெங்கட்ராமன்,என்னிடம் அவரது நூல்கள் இல்லை,சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன.
    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சில நூல்களை வெளியிட்டிருக்கிறது.
    மு.வளர்மதி என்ற பெண்மணி அவரின் சில ஆக்கங்களைத் தொகுத்திருக்கிறார்.

    ReplyDelete
  11. சுவையும், கருத்தும் செறிந்த பதிவு. பெ. நா. அப்புஸ்வாமி என்ற ஒரு பெரும் எழுத்தாளர், அறிவியல் அறிவர் தமிழ் உலகத்தில் இருந்ததே என் போன்றவர்களுக்குத் தெரியாதிருந்த குறை நீக்கும் பதிவு. இந்த அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    2 ஆலோசனைகள்:

    1. இந்தப் பதிவை பெரிய இதழ்களுக்கு (குமுதம், ஆனந்த விகடன், கல்கி, etc.) அனுப்பினால் பல்லாயிரவர் பலன் பெறுவர்.
    2. இந்தப் பதிவுக்கு மூலமான தொகுப்புக்களைக் குறிப்பிட்டால், பெ. நா. அபபுசுவாமி குறித்து மேலும் அறிய ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகும்.

    ReplyDelete
  12. சுவையும், கருத்தும் செறிந்த பதிவு. பெ. நா. அப்புஸ்வாமி என்ற ஒரு பெரும் எழுத்தாளர், அறிவியல் அறிவர் தமிழ் உலகத்தில் இருந்ததே என் போன்றவர்களுக்குத் தெரியாதிருந்த குறை நீக்கும் பதிவு. இந்த அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    2 ஆலோசனைகள்:

    1. இந்தப் பதிவை பெரிய இதழ்களுக்கு (குமுதம், ஆனந்த விகடன், கல்கி, etc.) அனுப்பினால் பல்லாயிரவர் பலன் பெறுவர்.
    2. இந்தப் பதிவுக்கு மூலமான தொகுப்புக்களைக் குறிப்பிட்டால், பெ. நா. அபபுசுவாமி குறித்து மேலும் அறிய ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகும்.

    ReplyDelete
  13. நன்றி லக்ஷ்மி நரசிம்மன்.
    இப்போதெல்லாம் குமுதம்,விகடனுக்கெல்லாம் நாம் விளித்து எழுத வேண்டியதில்லை.
    அவர்களே காப்பி அடித்துப் போட்டு விடுகிறார்கள் !!!
    என்ன ஒன்று,எழுதிய நம் பெயரைப் போடமாட்டார்கள்....
    :-)
    அப்புசுவாமியின் அனைத்து எழுத்து தொகுப்புகளையும் பட்டியலிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  14. அப்புஸ்வாமியைப் பற்றி ஒரு பி.எச்டி தீசிசே போடலாம்.
    சென்னை அல்லது தஞ்சை பல்கலை கழகங்கள் அவர் வாழ்க்கையையும், எழுத்துகளையும் ஆராட்ந்து அதை பிரசுரிக்க வேனண்டும். பற்ற நாடுகளில் அவரைப்போன்ற எழுத்தாளர்கலை தலையில் தூக்கி மெச்சுவார்கள். ஆனால் போலி பகுத்தறிவு கோஷங்கள் மிகுந்த தமிழ்நாட்டில் சினிமாவிக்குத்தான் முதலிடம்.

    ReplyDelete
  15. ?????????
    நண்பர் கேள்விக்குறி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    போலி பகுத்தறிவுக்கும் அப்புஸ்வாமிக்கும் என்ன தொடர்பு ஐயா? சொல்லப்போனால் அவரும் ஒரு பகுத்தறிவாளராக,நாத்திகராக இருந்தவரே.
    அவரது அறிவியல் தமிழாக்கங்களுக்கு அது ஒரு தடையாக இருந்ததில்லை.

    ReplyDelete
  16. "போலி பகுத்தறிவுக்கும் அப்புஸ்வாமிக்கும் என்ன தொடர்பு ஐயா? சொல்லப்போனால் அவரும் ஒரு பகுத்தறிவாளராக,நாத்திகராக இருந்தவரே"

    அறிவன், நீங்கள் என்னோட thrust ஐ புரிந்துகொள்ளவில்லை..

    தமிழ்நாட்டில் உண்மையான பகுத்தறிவு இயக்கம் இருந்தா, அவ்வியக்கம் விஞ்ஞான எழுத்துக்களை மக்களிடம் பரப்ப, அப்புஸ்வாமி போல் நன்றாக எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை பிரசித்தி செய்திருக்கும். தமிழ் அறிவியல் எழுத்துகளுக்கு, ஜனரஞ்சக எழுத்தையோ அல்லது சீரியஸ் ஆராய்ச்சி கட்டுரைகளையோ, திக, திமுக போன்ற "பகுத்தறிவு பாசறை"களில் கொஞ்சமாவது இடம் கொடுத்துள்ளனரா? தமிழ்நாட்டு "பகுத்தறிவு இயக்கங்கள்" (இது பெரிய ஜோக்கு) கட்சி அல்லது ஜாதி அரசியலில் தான் முழுமூச்சாக ஈடுபடுகின்றனவே தவிற, தமிழ் அறிவியல் எழுத்துக்களுக்கு ஒரு சிந்தனையும் கொடுப்பதில்லை. ஜாதி அல்லது கட்சி அரசியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்திற்க்கு நூறில் ஒரு பங்கு கொடுத்தால் கூட , இப்போது அப்புஸ்வாமி யார் என்ற நிலைமை தெரியாமல் போயிருக்காது

    ReplyDelete
  17. ////தமிழ்நாட்டு "பகுத்தறிவு இயக்கங்கள்" (இது பெரிய ஜோக்கு) கட்சி அல்லது ஜாதி அரசியலில் தான் முழுமூச்சாக ஈடுபடுகின்றனவே தவிற, தமிழ் அறிவியல் எழுத்துக்களுக்கு ஒரு சிந்தனையும் கொடுப்பதில்லை. ஜாதி அல்லது கட்சி அரசியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்திற்க்கு நூறில் ஒரு பங்கு கொடுத்தால் கூட , இப்போது அப்புஸ்வாமி யார் என்ற நிலைமை தெரியாமல் போயிருக்காது//////

    நீங்கள் சொல்வது சரி.
    ஆனால் ஜாதி மற்றும் கட்சி அரசியலில்,அப்புசுசவாமி மட்டுமல்ல,அனைத்து மக்கள் நல விதயங்களுமே புறந்தள்ளப் படுவது கண்கூடு..

    ReplyDelete
  18. அறிவன்

    நான் இங்கே கண்டிப்பது ஜாதி/கட்சி அரசியலை பொதுவாக அல்ல; அது வேர விஷயம். "பகுத்தறிவு" என்ற பெயர் தாங்கிய இயக்கங்கள், அறிவியலை மக்களிடையே பரப்புவதை புறக்கணித்து விட்டன. அதைத்தான் கண்டிக்கிரேன்

    தமிழ் அரிவியல் எழுத்துகளை பரப்புவதில், ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் பற்றியும் சொல்ல வேண்டும். NCBH மறைந்த சோவியட் நாட்டின் புத்தக வினியோகஸ்தர்கர். ரொம்ப சீப்பாக கம்யூனிச புத்தகங்களை விற்றர்கள். அதே சமயம் சோவியத் நாட்டின் பல பிரபலமான விஞ்ஞான புத்தகங்களையும் சிலவற்றை தமிழிலும் பிரசுரித்தனர். அதற்க்கு அவர்களை பராட்ட வேண்டும்.

    ReplyDelete
  19. நண்பர் கேள்வி,
    உண்மை.
    நானே பல NCBH புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.மிக நல்ல முறையில்,குறைந்த விலையில் அருமையான புத்தகங்களை அளிப்பார்கள்.
    ருஷ்ய வரலாற்றுக் கதைகள்,சிறுவர்களுக்கான அறிவியல்,இயற்பியலின் இயக்கம் போன்ற புத்தகங்கள் வழ வழவென்று அருமையான உயர்தரக் காகிதத்தில் படித்தது இப்பொதும் நினைவிருக்கிறது.
    இவை பொதுவாக பதிப்பகங்களின் பணி என்றாலும்,அதை நோக்கிய சிந்தனைகளை ஊட்ட வேண்டிய பணி அரசினுடையது;அதை கடந்த 40 ஆண்டுகளாக எந்த அரசும் செய்யவில்லை என்பது உண்மை.
    சமூக சூழலையே திரைப்படம்,பிராமண வெறுப்பு,ஜாதி மோதல்கள் சார்ந்ததாக மாற்றியதுதான் ஒரே பலன்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...