குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, February 2, 2009

93.ஒப்பனை உலகின் சில உண்மை முகங்கள்

முத்து எடுக்கலாம் என்று கடலில் மூழ்குபவன் செத்துப் போவதும் உண்டு;செத்துப் போகலாம் என்று கடலில் விழுபவன் கை நிறைய முத்துக்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு.படித்ததுமே எனக்குப் பிடித்த வாசகம் இது.இதில் நான் இரண்டாவது ரகம்.எனக்கு முத்து எடுக்கத் தெரியாது என்பது மட்டுமல்ல;முத்து எடுக்க வராது என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளஞ்சல்களைக் கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து.


இப்படித் தொடங்கும் அந்தப் புத்தகம் விவரிப்பது இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பிரபலத்தின் இளமைப் பருவம் முதல் சமீப காலம் வரையான கதை.


இன்றைய அவரது உயரத்திற்கும் அவரது இளமைப்பருவ பயங்களுக்கும் தோல்விகளுக்கம் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என வியக்க வைக்கும் அளவுக்கு சிறுவயது பயங்கள்,தோல்விகளை கண் முன்னே விரித்துப் பரப்பிச் செல்லும் அவரின் மீது பெருமளவு மரியாதை வந்தது உண்மை.


படிக்க எடுக்கும் போது எந்த ஒரு முன் விருப்புகளுமின்றி ஒரு மேம்போக்கான பிதற்றல்களும் சுய பிரதாபங்களும் நிரம்பிய கதையாக இருக்கும் என்றுதான் நினைத்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் தன்னைப் படிக்க வைத்தது அந்த 200 சொச்சம் பக்கப் புத்தகம்!


ஏழாம் வகுப்பில் உங்கள் மகன் தேர்ச்சி அடைவதற்கு வாய்ப்பில்லை;தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் நாங்கள் அவனை தேர்வாக்காமல் இருப்பதை விட வேறு வழியில்லை;இல்லை வேறு பள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதானால் தேர்ச்சி அளித்து பள்ளிமாற்று சான்றிதழ்-ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்-தருகிறோம்.என்ன முடிவு சொல்லுகிறீர்கள்? என்று பள்ளித் தலைமையாசிரியர் தந்தையைக் கூப்பிட்டு சொல்லுமளவுக்கு தோல்வியியையும் தோல்வி மனப்பான்மையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் தன் துறையில் உச்சத்தை தொட்டது மட்டுமல்ல, தமிழகத்திலேயே அழகான பெண்ணின் காதலையும் வென்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற கதையை விவரிக்கும் அந்தப் புத்தகம் நடிகர் சூர்யா என்று அறியப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் தன்னுடைய வாழ்வின் அனுவங்களைச் சொன்ன இப்படிக்கு சூர்யா என்ற புத்தகம்!


0 0 0


ஒரு பிரபல நடிகர் அப்பா;வாழ்வின் அடிப்படையான வசதிகளுக்கு எந்த வித குறைகளும் இல்லை;நல்ல ஆரோக்கியமான சூழலில் அமைந்த வீடு....இப்படி இருந்தும் சிறுவயது சூர்யாவுக்கு தெனாலி கமல் மாதிரி பல பயங்கள் இருந்திருக்கின்றன;இன்னும் சொன்னால் எதில் ஈடுபட்டாலும் நாம் நிச்சயம் தோற்போம் என்று எந்த வித ஐயமும் இல்லாமல் நம்பும் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கிறார்.


வகுப்பில் ஹிந்தி மொழியோ அல்லது கணக்குக் கேள்விகளோ வரும்போது வரிசைப்படி கேள்வி வரும்போது கேள்வி வரும் முதல் வரிசையைத் தவிர்க்க இரண்டாவது வரிசைக்கு மாறியும்,கேள்வி இரண்டாவது வரிசைக்கு வரும் போது திரும்ப முதல்வரிசைக்கு மாறியும் தப்பிக்கும் மாணவனாக தான் இருந்ததை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொள்கிறார் சூர்யா!

ஆனால் இந்தக் குறையுடைய குழைந்தைக்கு தான் ஒரு பிரபல நடிகராக இருந்தும் தனது மகனுக்க ஒரு அப்பாவாக அற்புதமான ஒரு கடமையாளராக சிவகுமார் தன் மகனுக்கான நல்ல வழிகாட்டியாகவே எப்போதும் இருந்திருக்கிறார்,குடும்பத்திற்கான அவரது குவாலிடி நேரம் மிகக் குறைவாகவே கிடைத்த போதிலும்!


மற்றுமொரு விதத்திலும் தனது பயங்களுக்கு உளவியல் ரீதியான வலுவான காரணத்தையும் ஒளிக்காமல் முன்வைக்கிறார் அவர்.


தான் இப்படித் தோல்வியின் இருட்டு மூலைகளுக்குள் முடங்கிய இளவயது சூர்யாவின் அடைக்கலம் பெரும்பாலும் அவரது அம்மா.எல்லாக் குழந்தைகளைப் போலவும் ஏம்மா எனக்கு மட்டும் இப்படி? என்று கேட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்;ஆனால் திரைப்படங்களில் போல சிறுவயது பாலகனாக இருக்கும்போதே அல்ல;பின்னர் வளர்ந்து வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கை வந்த காலங்களில்.


மகனின் கேள்விக்கான பதில் அம்மாவின் வார்த்தைகளில்...


மிகவும் கண்டிப்பான ஊர்க் கவுண்டர் எங்க அப்பா.எங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவற செய்தாலும் ஒரு சினிமாவுக்குப் போகனும்னாலும் தான் போய்ப் பார்த்து விட்டு வந்து அது நல்ல படம்,வன்முறை ஆபாசங்கள் இல்லை என்று தோன்றினால் மட்டுமே பிறகு குழந்தைகளை அழைத்துப் போகிற அப்பா.


இந்த சூழலில் வளர்ந்த எனக்கு ஒரு நாள் கல்லூரியில் இருந்து வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டினார்கள்,போட்டோவில் கோட் சூட் அணிந்து உன் அப்பா.இவர்தான் மாப்பிள்ளை என்றார்கள்,மனதில் ஒட்டவே இல்லை;போதாதற்கு பிரபல நடிகர் என்றார்கள்,நானோ அவர் நடித்த ஒரு படத்தையும் பார்த்திருக்கவில்லை.பெண்பார்க்கும் போது நேரிலாவது பார்க்கலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர் வரவில்லை,பெண் பார்த்துவிட்டுப் போனபிறகு ஜாதகம் சரி இல்லை போன்ற பிரச்னைகள் கிளர்ந்தால் பெண் மனதில் தேவையற்ற தாக்கங்கள் ஏற்படும்,பின்னர் பார்க்கிறேன் என்று விளக்கம் சொல்லி நண்பர்களை அனுப்பி வைத்தார் உன் அப்பா.


நேரில் பார்த்துக் கூட முடிவு செய்யாத அவருக்குப் பெண்கள் பற்றிய என்ன கண்ணோட்டம் இருக்கும் என்று நொந்த நான் வேதனையைத் தவிர ஒன்றும் வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்


இப்படியான மன பயத்தில் இருந்த அவருடைய திருமண நிச்சயதார்த்தம் அன்றுதான் அவர் சிவகுமாரைப் பார்த்திருக்கிறார்.திருமணம் நிச்சயிக்கப் பட்ட அன்றே படப்பிடிப்புக்குச் சென்று விட்டிருக்கிறார் சிவக்குமார்.


திருமணத்தன்றும் படப்பிடிப்பில் இருந்து சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறார் சிவக்குமார்.திருமணமும் தொடர்ந்த வரவேற்பும் தமிழகத்தின் பல பிரபலங்கள் கூடிய கூட்டம்;சிலருக்கு இந்த வகையான பெரும் பிரபலஸ்தர்கள் கூடி நடந்த திருமணம் மிக்க மகிழ்வை அளித்திருக்கும்;ஆனால் சூர்யாவின் அம்மாவிற்கு ஒரு வகையான மிரட்சியையும் மனத் தயக்கத்தையும்,இவர் ஏதோ அவசரப்பட்டு தன்னைத் திருமணம் செய்திருக்கிறாரோ என்ற விதமான பயங்களையும் சூர்யாவின் அம்மாவுக்கு அளித்திருக்கிறது.


திருமணம் முடிந்த நேரம் சிவகுமார் துணைப்பாத்திரங்களை விட்டு தனி கதாநாயகனாக முன்னேற ஆரம்பித்திருந்த நேரம்;காலையில் படப்பிடிப்புகள் மதியத்திற்குப் பிறகு நாடக உலகம் என்று ஓடிக் கொண்டிருந்த அவர் நல்ல கணவனாக இருக்க பெரிதும் முயன்றும் அதை மனைவி புரிந்து கொள்ளும் அளவிற்கான கால அவகாசம் ஒதுக்கி அவருக்குப் புரியவைக்க இயலாத சூழலும்,பரபரப்பான சென்னை வாழ்க்கையும் ஒரு வித மிரட்சியைத் தந்திருக்கிறது அவரது மனைவிக்கு.


பெரியவர்கள் எல்லாவற்றையும் கருதி கோவையிலிருந்து உடன் துணையாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்த சிவகுமாரின் சகோதரி மகளின் எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டி பலியாக,அந்த நேரத்தில் அவரது மாமியாருக்கும் பேத்தியின் மரணம் தந்த அதிர்ச்சி உடல் நலத்தை நலிய வைக்க,அந்த நிலையில் சரவணனை சூல் கொண்டிருக்கிறார் அவரது அம்மா.


கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து,ஒரளவு உலகம் புரிந்த பெண்ணாக வளர்ந்த எனக்கே முற்றிலும் புதிய சூழலில் அமைந்த மணவாழ்க்கை இறுக்கமாகவும் போராட்டமாகவும் இருந்தது.எனது தயக்கங்கள்,தவிப்புகள்,குழப்பங்கள் இவற்றோடு ஜானகியின் மரணமும் சேர்ந்து கொள்ள,கருவாக என் வயிற்றிலிருந்த உன்னையும் அது பாதித்திருக்கிறது.அதிலிருந்துதான் மீண்டு வந்திட்டியே கண்ணா.. என்று தலையைக் கோதிவிட்டார் அம்மா என பதிந்திருக்கிறார் சூர்யா.


0 0 0


இந்த வகையான மனத்தயக்கங்களுடைய சிறுவனாக வளர்ந்த சரவணனின் கூட்டப்புழு வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நியதிகளுடன் வாழ்ந்த தந்தையால் எப்படி செப்பம் பெற்று வண்ணத்துப் பூச்சியானது-


நடிகரின் குழந்தைகளாக இருந்தும் சரவணனும் கார்த்தியும் பொதுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் அளவிற்கு வாழ்வின் நிதர்சனங்களைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் நெறிப்படுத்துதல்-


மகனுக்குத் தேவைப்பட்ட நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தானே நேரில் தார்மீக ஆதரவு மற்றும் உதவிக்காக தயாராக இருந்த அப்பாவின் அன்பு-


பணியாளர்களுடன் எப்போதும் அன்புடனும் மரியாதையுடன் நடக்க வேண்டிய மனிதப்பண்புகளுடன் அமைந்த சிறுவயது வாழ்வைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் கவனம்-


எக்ஸ்போர்ட் கம்பெனியில் தன் பெயரைத் தெரிவிக்காது சுயமுயற்சியில் வேலை தேடிக் கொண்ட போது அவரின் மேல் திரைத்துறையைத் திணிக்காமல் அவர் போக்கில் விட்ட பாங்கு-


1200 ரூபாய் சம்பளம் தரும் அந்த வேலைக்காக ஒருநாளின் 20 மணி நேரங்கள் வரை உழைக்க வேண்டிய சூழலிலும் கித்தாப்பான,நடிகரின் மகனாக இல்லாது தொழிலாளர் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான ஒரு தொழிற்சாலை வேலையாளாகவே உயர்ந்த விதம்-


பின்னால் திரைப்பட உலகம் அழைத்த போது அப்போதும் நீதான் முடிவெடுக்க வேண்டும்.உனக்கு உதவி தேவைப்படும் போது நான் எப்போதும் உன் அருகில் என்ற வகையில் மகனை ஆதரித்த விதம்-


திரைத்துறையில் தொடர்ந்த தோல்வி மனப்பான்மையை உடைக்க உளவியல் ரீதியாகப் பயனளிக்கும் உடல் மற்றும் மனப்பயிற்சியில் தன்னை தந்தை திருப்பி விட்ட விதம்-


ஆரம்பகாலத் தோல்விகளுக்குப் பிறகு நந்தா மற்றும் காக்க காக்க படங்களில் அங்கீகாரம் பெற்ற விதம்-


நேருக்கு நேரில் தொடங்கிய பல தோல்விகளுக்கிடையிலும் கிடைத்த நல்ல மனிதர்களின் உதவிகள்,கற்பித்த பாடங்கள்-


ஜோதிகாவின் அன்பை வென்றது-


அனைத்திற்கும் மேல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்யக் கற்றுக் கொண்ட விதம்-


எனப் பொதுவாக ஒரு சினிமாக் காரனின் அனுபவங்களாக இல்லாமல் வாழ்வில் தோல்விகளின் நிழல்களுக்குள்ளிருந்து வெற்றிக்கான வெளிச்சப் புள்ளிகள் வரும் வாய்ப்புகளையும் அதற்கான ஆயத்தங்களையும் சுவையாக சொல்லிச் செல்கிறது புத்தகம்.


0 0 0


பொதுவாக நாம் எதிலாவது அடிக்கடி தோற்றோமெனில் ஒரளவு சுய அலசல் செய்யத் தெரிந்தவர்களுக்கு அதற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினமான செயலல்ல;அவ்வாறான அலசல்களுக்கப் பின்னர் நம் முயற்சிகளில் வெல்வோமோ தோற்போமோ என்ற ஐயப்பாடு இருக்கும்.


நம்முடைய சுய அலசல் திறன் மேலும் கூர்மையடைந்த பின்னர் செய்யும் முயற்சிகளில் நாம் ஒரளவு அறுதியிட்டு வெல்வோமா தோற்போமா என்பதை கணித்து விட முடியும்.


பின்னர் வருவது அதற்கு அடுத்த நிலை;அதாவது சொல்லி அடிக்கும் நிலை.இந்த வகையில் முயற்சி செய்யும் போதே உறுதியாகத் தெரிந்து விடும்,நாம் வெற்றியடையப் போகிறோம் என்பது. Nothing succeed like success என்று ஒரு சொலவடை உண்டு ஆங்கிலத்தில்! அது விவரிப்பது இந்த மூன்றாவது நிலைதான்.


இந்த மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.


இப்படிக்கு சூர்யா- ஒரு நல்ல வாசிப்புக்கு உத்தரவாதம் !

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...