குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

Saturday, August 18, 2012

* * * * * 168.நட்பும் குணமும்-நாளொரு பாடல்-14


நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.


நூல்: மூதுரை

Tuesday, August 7, 2012

156.கொன்றை வேந்தன்-நாளொரு பாடல்-7






அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லற மல்லது நல்லற மன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கண் மூவா மருந்து
ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
ஔவியம் பேசுத லாக்கதிற் கழிவு

பாடல்: கொன்றை வேந்தன்(உயிர் வரிசை)
ஆசிரியர்:ஔவை
எண்-1-12 (உயிர் வரிசை)

முன்னோட்டம்:
இந்த வரிகளில் சிலவற்றை அவ்வப்போது எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம்;இவற்றில் சில சொற்றொடர்களைப் பொருள் தெரியாமலேயே இன்றைய மேடைப் பேச்சுகளில் பலர் அள்ளி விடுவார்கள்.

இந்தப் ஒரு வரிக் கவிதை வடிவப் பாடல்களை எழுதியவர் ஔவையார்.
நமக்குத் தெரிந்த ஔவைப் பாட்டி... :))

இப்போது பாடல் வரிகளும் பொருளும்:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை-தாய்,பிதா-தந்தை
ஒருவருக்கு தாயும் தந்தையும்தான் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய,அறிவிக்கப் பட வேண்டிய தெய்வங்கள்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயம்-கோவில், சாலவும்- மிகவும்
கோவிலுக்குச் சென்று தொழுவது மிகவும் நல்லது. இறை சித்தமும்,ஆன்மிகமும் பண்புகளும் வளர்வதோடு, நடைப் பயிற்சியாகவும்,மனிதர்களைச் சந்திப்பதற்காகவும்,சமூக்கதின் அங்கமாக இழைவதனாலும் கூட ஆலயம் தொழுவது மிக நல்லது !

இல்லற மல்லது நல்லற மன்று
இல்லறம்- அறவழியிலான குடும்ப வாழ்வு
அற வழியில் அமைத்துக் கொள்ளப் படும் இல்ல வாழ்வு,திருமண வாழ்வு, அல்லாதது எதுவும் நல்ல அறமாக அறியப் படாது.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் அழகிய குறள் ஒன்றும் இருக்கிறது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிப்
போஒய்ப் பெறுவது என்

துளசி டீச்சரின் 38 வது திருமண நாளப் பதிவில் கூட இந்தக் குறளை எழுதியே வாழ்த்தினேன். நாவலருக்கு நன்றியுடன் ! [ நெடுஞ்செழியனுக்கு என்று அன்பர்கள் நினைத்து விடாதிருப்பார்களாக :)) ]


ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார்- கொடுக்காதவர்,ஈகை இல்லாதவர், தேடு|தேட்டை-செல்வத்தை
பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைக்கும் செல்வமானது சேர்த்து வைத்தவர்களுக்குப் பயனளிக்காமல்,தீயவர்கள் கைக்கே செல்லும்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
உண்டி-உணவு, சுருங்குதல்- குறைத்தல்
உணவைத் தேவையான அளவிற்கு மட்டும் உண்டு,குறைந்த அளவில் உண்பது,பெண்களுக்கு அழகை அதிகரிக்கும்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊருடன்- வாழும் சமூகம்,சுற்றம்   பகை-எதிர்ப்பு
தாம் வாழும் சமூகத்தையும் சுற்றத்தையும் பகைத்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் அடிப்படையையே கெடுத்து விடும்,

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எண்- எண்கின் மூலம் கிடைக்கும் கணித அறிவு,எழுத்து- எழுத்துக்களை அறிவதால் கிடைக்கும் மொழி அறிவு
கணித அறிவும் மொழி அறிவும் ஒருவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. சமூகம்,வரலாறு,அறிவியல் போன்ற துறைகளில் அறிவும் பயிற்சியும் இருந்தால் நல்லது.ஆனால் இன்றியமையாது அவசியம் இருக்க வேண்டியது மொழியறிவும்,கணித அறிவும் ஆகும்.

ஏவா மக்கண் மூவா மருந்து
ஏவா- ஏவுதல் இல்லாத, அறிவுறுத்தல் இல்லாத, மூவா- மூப்பு இல்லாத அமிர்தம் உண்டது போல
தம் பிள்ளைகளுக்கு, இதைச் செய்,அதைச் செய் என்று அறிவுறுத்த வேண்டிய தேவை இல்லாத அளவில் வளரும் பிள்ளைகள் இருப்பது, பெற்றோர்களுக்கு அமிர்தம் உண்டு வாழ்வது போன்ற மருந்தாகும்

ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஐயம்-பிச்சை
பிச்சை எடுத்து வாழும் நிலை வந்தாலும் செய்யத் தகுந்த காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்;செய்யத் தகாத செயல்களைச் செய்யக் கூடாது.


ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஒருவனை-நல்லவனான,அறிவாளியான,திறமைசாலியான ஒருவன், பற்றி- துணையாகக் கொண்டு, ஓரகத்து- ஓரிடத்தில்

அறிவும் திறமையும் முதிர்ச்சியும் கொண்ட ஒருவனைத் துணையாகக் கொண்டு ஒரு இடத்தில் வசிக்க வேண்டும்.


ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
ஓதலின்- படிப்பதும்,வேதம் ஓதுவதும், அன்றே- காட்டிலும், வேதியர்- அந்தணர்,வேதங்களின் வழி நிற்பவர்

அந்தணர்கள்,வேதத்தின் வழி நிற்பவர்கள் என்று அறியப்பட்டவர்கள் வேதங்களைப் படித்து அறிதலினும் முக்கியமானது, ஒழுக்கமான வழியில் வாழ்வது.
படிப்பதை விடப் பயிற்சி செய் என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். Better pratice than preaching !


ஔவியம் பேசுத லாக்கதிற் கழிவு
ஔவியன்-பொறாமை பேசுதல், ஆக்கம்- உயர்வு, செல்வம், முன்னேற்றம்

மற்றவர்களைப் பற்றிப் பொறாமை பேசும் குணமானது, பேசுபவர்களின் செல்வம்,முன்னேற்றம்,உயர்வு ஆகியவற்றை அழித்து விடும்.

முருகப் பெருமான் வித் ஔவை..


டிட் பிட்ஸ்:
  • ஒரு காலகட்டத்தில் வாழும் கற்றறிருந்தவர் அனைவரிலும் சிலர் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள்.அத்தகைய சிறந்தவர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு.அது அவர்கள் காலத்திய,இனி வரப்போகும் காலத்தில குழந்தைகளைப் பற்றிய அக்கறை.

  • அக்குழந்தைகள் நல்ல அறிவை,நல்ல பழக்க வழக்கங்களை,நல்ல அறிவுரைகளை,நல்ல குணங்களைப் பெற்று,வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஓயாத அக்கறை அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

  • தன்னுடைய அடுத்த தலைமுறையை,அவர்கள் வாழும் சமூகத்திற்கான ஒரு சிறந்த பரிசாகத் திகழும் அளவில் தயாரித்து விட்டு விட்டுச் செல்பவர்கள்தான் எப்போதும் உலகத்தை,வாழ்க்கையை மேன்மைப் படுத்தியிருக்கிறார்கள்.

  • அந்த வகையில் குழந்தைகளின் குண நலன்களை மனதில் வைத்து அவர்களுக்கான அறிவுரை வடிவமாகப் பல அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார்.இவற்றில் சில எங்களுக்கு சிறுவயதில் இரண்டு,மூன்றாம் வகுப்புகளில் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இருந்தன.பாடத்திட்டத்தில் இல்லாதவை சிலவற்றையும் அம்மா,முதலில் அடித்தும் படிக்கவும்,பின்னர் பிடித்ததால் படிக்கவும் வைத்தார்.

  • நான் மனிதனாகப் பிறப்பெடுத்தது முதற்காரணம் முதல்,பலப்பல காரணங்களுக்காக நன்றியுடன் தொழுது வழுத்த வேண்டிய அம்மாவுக்கு, இந்தக் கொன்றை வேந்தனைச் சிறுவயதிலேயே படிக்க வைத்ததற்காகவும் கூடுதலாக கடப்பாடு சேர்ந்திருக்கிறது.

  • இந்தக் கடப்பாடுகளைத் தீர்க்க எத்தனை பிறப்புகள் வேண்டும் என்று தெரியவில்லை!!!
  • குழந்தைகள் படிப்பதற்கு அவர்களுக்கும் ,குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு பெரியவர்களுக்கும் பயன்படலாம் என்பதால் கொன்றை வேந்தனையும் இப்பகுதியில் இணைத்திருக்கிறேன்.


7 | 365

Sunday, August 5, 2012

154.கல்வியா,காமமா-நாளொரு பாடல்-5



தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது


நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 3

முக்கிய சொற்கள்:
தொடங்கும் கால- தொடங்கும் பொழுது
மடம்-அறியாமை
நெடுங்காமம்- நெடிது காமத்தில் திளைத்திருத்தல்
பீழை-துன்பம்
முற்றிழாய் - முடிந்த தொழில்களையுடைய நகைகளை அணிந்திருக்கும் பெண்(அழைப்பு விகுதி)

பாடல் பொருள் :
நகைகளை அணிந்த, வினைகளை முடித்திருக்கும் பெண்ணே, கல்வியானது கற்கத் தொடங்கும் போது துன்பமாக இருப்பது போல் தோன்றினும் பின்பு இன்பம் கொடுக்கும்;அதுவல்லாமலும் அறியாமையை அகற்றி அறிவைக் கொடுக்கும்; ஆனால் காமம் தொடக்கத்தில் தரக் கூடிய சிறிதளவே நிலவும் இன்பத்தைக் கொடுப்பினும்,இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால் தரக் கூடிய துன்பம் மிகப்  பெரிது.

டிட் பிட்ஸ்:

  • கல்வி கற்காது,காதல்,காமம் என்று பொழுதைப் போக்கும் வழக்கம் எக்காலத்திலும் இருந்திருப்பதை இப்பாடல் சொல்கிறது. :)
  • காமத்திலும் காதலிலும் இன்புற்று கல்வியை மறப்பவர்களுக்கு,காமத்தை எடுத்துக் காட்டி கல்வியை வலியுறுத்தும் விதமாக உள்ள பாடல்.
  • கல்வி கல்லாது,திருமணத்தை நாடும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது இந்தப் பாடலின் விளிப்பு.
  • அறியாமை(மடம்) நீங்கவே அதுனுள்ளிருந்து அறிவு வெளிப்பட்டு ஒளிவீசும் என்ற குறிப்பையும் தருகிறது.




5  |  365

Saturday, August 4, 2012

153.நன்றி - நாளொரு பாடல்-4


சுட்ட பழம்...

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

நூல்:மூதுரை
ஆசிரியர்:ஔவையார்
பாடல் எண்:1

பதம் பிரித்த பாடல்:
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்



முக்கிய சொற்கள்:
நன்றி-உதவி,நன்றி
செய்தக்கால்- செய்வதால்,செய்யும் பொழுது
தருங்கொல்-திரும்பக் கிடைப்பது,தருவது
தளரா-சோர்வில்லாது
தெங்கு-தென்னை
தாள்-அடி
கே.பி.எஸ்...ஔவையாக


கருத்து:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யும் போது,அந்த உதவிக்குக் கைம்மாறாக,பதிலாக,உதவி பெறுபவர் எப்போது திரும்ப உதவி செய்வார் என்ற எண்ணத்திலேயே,சந்தேகத்திலேயே நாம் அந்த உதவியை அவருக்குச் செய்யக் கூடாது; எப்போதும் நின்று,சோர்வில்லாது வளரும் தென்னை மரமானது,தன் வேர்களின் மூலம் தான் எடுத்துக் கொண்டு வளர்ந்த நீரை,தன்னுடைய தலை வழியாக இனிமையான இளநீராக தான் தருவதைப் போல,உதவி செய்ய வேண்டும்.

டிட் பிட்ஸ்:
தென்னை தளராது பிறருக்கு பயனாய் தன்னுடைய இருப்பை அமைத்துக் கொள்வதைப் போல,நாமும் பிறருக்கு உதவிகரமாய் வாழ வேண்டும் என்பது குறிப்பால் சொல்லும் பொருள்.

ஒருவற்கு என்ற சொல்,நற்குணமுடைய ஒருவருக்கு என்ற குறிப்பையும் தருகிறது;நற்குணம் என்பது பெற்ற உதவியை மறக்காதிருப்பதும்,செய்தவருக்கு உதவி தேவைப்படும் காலத்தில்,அவர் கேட்காத நிலையிலும் தானே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வது என்பதும் குறிப்பால் விளக்கப்படுகிறது.




4  |   365

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...