குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Wednesday, June 8, 2022

198 - ஆதீனங்களின் கதை

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
முதல் இதழ் வெளிவந்த சூன் 1' 2022 இதழில் ஆதீனங்களின் கதை வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.


தமிழர் சமயம்
இந்தியாவெங்கும் காலங்காலமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான தத்துவ வழிகாட்டல்கள் நெடுங்காலந்தொட்டே இருக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சமய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டல்கள், வழிகாட்டிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. கிருத்துவம், இசுலாம் போன்ற பெரு மார்க்கங்களுக்கான வழிகாட்டல்கள் எவ்விதம் உள்ளன என்பது பெரும்பாலும் பரவலாக அறியப்பட்டது; இந்த பெருமதங்கள் அல்லாத மற்றவற்றைப் பொதுவாக இந்து என்று குறிப்பிடும் வழக்கம் இற்றை நாளில் நிலவுகிறது. கவனித்துப் பார்த்தோமானால் இந்த இந்து என்ற பதத்தை இந்து 'சமயம்' என்று தமிழில் குறிப்பிட விழைவார்கள்; இந்து 'மதம்' என்று குறிப்பிடுவது குறைவாக இருக்கும். ஆனால் பண்டைய இந்தியாவில் சமயங்கள் மட்டுமே நிலவின; மதங்கள் இல்லை என்பதையும், இன்று இந்து 'மதமாக' நிலவுவதை, இந்து 'சமயமாக' அறிமுகப் படுத்துவதன் உட்பொருள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது நிற்க.

ஆனால் இந்த இந்து என்ற சொல்லாக்கம் ஆங்கிலேயர் வழி வந்தது. அதற்கு முன்னால் இந்தியாவில் பற்பல சமயங்கள் நிலவின. தென்னாட்டைப் பொறுத்தவரை சைவம் என்ற சிவம், வைணவம் என்ற விண்ணவம், காணாதிபத்யம் என்ற கணபதியம், கௌமாரம் என்ற குமரம், சமணம் என்ற செயினம் (இதற்கு ஆசீவகம் என்ற முன்னோடியும் உண்டு) மற்றும் பௌத்தம் என்ற புத்தம் என்ற சமயங்களே நிலவின. இந்த சமயங்களில் சிவமும், குமாரமும் தமிழ்ச் சமயங்களாக பொ.உ.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிலை பெற்று விட்டன என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை இவற்றிலேயே சான்றுகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த இளையனும் அழகனுமாக முருகன் குறிப்பிடப் படும் அதே நேரத்தில், சிவன் மிக உயர்ந்த நிலையில் வைத்தும் வழங்கப்படும் தெய்வமாகிறான். இந்த இரண்டு ஆரம்பகால இறை வடிவங்கள் பின்னர் நிலங்கள், தினைகள் மூலம் பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களுக்கு முறையே வேலன், மாலன், இந்திரன், வருணன், கொற்றவை என்று நிலம் சார்ந்த பகுதிகளாகப் பாகுபாடு அடைந்தாலும் சிவன் என்ற தத்துவம் அனைத்திற்கும் உள்ளாய், அனைத்தினும் புறம்பாய் என்று சித்தாந்தம் குறிப்பிடுவது போல எல்லா இடங்களிலும் நிலை பெற்று வளர்ந்து விளங்கியது. இந்த நிலை பொ.உ. மு மூன்றிலிருந்து பொ.உ.பி இரண்டு வரை நிலவியதற்கான இலக்கியச் சான்றுகள் தமிழில் உள்ளன.  

Thursday, March 12, 2015

187.சிங்கையில் திருவாசகம் முற்றோதல்

நண்பர்களே,

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு.
திருமுறைகளையும் தமிழ் இலக்கியங்களையும் ஓதாமல் விட்டுவிட்டிருக்கும் தமிழ்ச் சமுதாயம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்திருக்கும் சமூக நோக்கிலான வீழ்ச்சி விளக்குதற்கரியது.

நமது தலைமுறையின் இளையர்கள் எவரும் நல்ல தமிழ் அல்ல, சகித்துக் கொள்ளக் கூடிய அளவில் கூடத் தமிழில் பேசும் வழக்கம் கொண்டிருக்க வில்லை என்பதும், இதில் பெரும்பான்மைச் தமிழ்ச் சமூகம் பெருமை கொண்டிருக்கிறது என்பதும் நினைந்து நோக வேண்டிய நிலையாகும்.


இந்த நிலையில் ஒரு சிறு அளவிலான தமிழர்களை தமிழ் மொழியின் வேரான பண்டாரத்தை(புதையல்) நோக்கித் திரும்பியிருப்பது மகிழ வேண்டிய செய்தியாகும்; இந்த குறைந்த விகித நண்பர்கள் தமிழிலக்கியங்கள் மற்றும் திருமுறைகளைப் படித்தறிய முற்படுவதோடு, அவற்றைத் தத்தமது வாரிசுகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தையும் சுற்றுப் புறத்தையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட மேற்கண்ட சிறிய விகிதத்திலான மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதே நம்மாலான சிறு கையளிப்பு என்ற எண்ணம் தோன்றியதால் இந்தப்  பணியில்   என்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வருகிறேன்.

திருவாசகத்தின் நூற்பயனும் ஓதற்பயனும் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிந்த விதயமே. ஆ்யினும் எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை என்பது எனது வாழ்வனுபவம் எனக்குக்  கற்றுத் தந்த பாடம். எனவே இந்த சேவை கட்டண சேவையாகவே அளிக்கப் படப் போகிறது.

ஆகா, சிங்கப்பூரில் பணம் சம்பாதிக்க என்ன நூதனமான வழி என்று வாதிடும் நண்பர்கள் தயவு செய்து விலகவும்;  இதன் மூலம் சேர்க்கும் பணம் இந்தப் பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் நோக்கதிற்காகச் செலவு செய்யப் படும் தொகையுடன் சேர்த்துக் கொள்ளப் படும் என்பது ஒரு சிறிய அறிவிப்பு.

Friday, August 17, 2012

* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் !



நண்பர் கோவி.கண்ணன் தனது காலம் பதிவில் பதஞ்சலி பாம்பின் அற்புதம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்.

இது போன்ற புகைப்படங்களிலிருந்து 'அற்புதங்களை' உருவாக்குபவர்களுக்கு ஒரு விதமான மனத் தடையும், சுய இரக்கமும் இருக்குமோ என்பது என் சந்தேகம்.சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை, அல்லது உண்மையிலேயே நடக்காத ஒன்றைத் திரித்து, நடந்ததாச் சொல்லி,

Wednesday, May 16, 2012

141.நானும் ரௌவுடிதான் !!!



மதுரை ஆதீன நியமன விவகாரத்தில் ராசசேகரன் ஒவ்வோர் நாளும் அளித்து வரும் பேட்டிகளையும் உதார்களையும் பார்க்கும் போது அந்த நபருக்கு அதிகார வர்க்கத்தின் ஏதோ ஒரு இழையின் அனுக்கமும் நட்பும் இருப்பது தெரிகிறது.

எந்த ஒரு விமர்சனத்திற்கும் பத்து நாள் பத்து நாள் என்று அவர் கூவுவதும் வடிவேலுவின் ரவுசுத் தனம் போல்தான் தெரிகிறதே ஒழிய அவருக்கு ஆன்மிக குறிக்கோள்கள் இருப்பதாகத் தெரிய வில்லை.

ரஞ்சிதா விவகாரத்தில் பெயரும் புகழும் கெட்டுப் போன அவர் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தவும் மேலும் நிறுவனப் படுத்தவும் மேற்கொண்ட உத்தியாகவே அவர் மதுரை ஆதீனத்தை மடக்கியதைக் கருத வேண்டியிருக்கிறது.

()

சில ஆதீனங்களுடன் பேசிப் பழகிய அனுபவம் இருப்பதால் அவர்களது குணநலன்கள் பற்றிய அவதானம் எனக்கு உண்டு;மேலும் இயல்பாகவே எவருடன் பேசினாலும் பழகினாலும் அவர்களை அதிகம் நுணுகி அவதானிப்பது எனக்குப் பிடித்த எனது இயல்பு.பொதுவாக தமிழக ஆதீனகர்த்தர்கள் பொது மக்களிடம் அதிகம் புழங்காதவர்கள்;அவர்களை அப்படி வைத்திருப்பதில் ஆதீனத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் இருப்பதாகவும் நான் உணர்ந்திருக்கிறேன்.இந்த வித நபர்கள் ஆதீனங்களில் மட்டுமல்ல பொதுவாக பெரும் பதவி அல்லது அதிகாரம் அல்லது பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இப்படிப் பட்ட பல நபர்கள் இருப்பார்கள்.அதாவது பராக்,பராக் சொல்பவர்கள் போல.

இதன் காரணமாகப் சாதாரண பொது மக்களைப் பற்றிய குண இயல்புகளோ அல்லது சாதாரண உலகத்தின் மனித சாமர்த்தியங்கள் பற்றிய அறிவோ அற்றவர்களாத்தான் அவர்கள் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.அவர்கள் ஆதீனத்தில் சந்திக்கும் பொது மக்களும் கை கட்டி வாய் பொத்தி அவர்களைக் கண்டவுடன் பொத் பொத் என்று காலில் விழுந்து விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு பின் வரும் மக்களாகத்தான் அறிமுகப் படுத்தப் படுவார்கள்.இந்த வித விதிமுறைகள் பராக் பேர்வழிகளால்தான் நடைமுறைப் படுத்தப் படும்.

சில முறை பார்த்த நபர்களைத் திரும்ப பார்க்கும் போது மட்டும் ஆதீன கர்த்தர்கள் சிறிது பேசுவதற்குத் தயாராக இருப்பார்கள்;அந்த சமயங்களில் சாதாரண மக்களில் எவரும் இலக்கிய,நுண்ணறிவு,பல்திறத் திறமைகளுடன் எவரையாவது சந்திக்கும் போதோ அவர்களிடம் விவாதிக்கும் போதோ சாதாரண ஒரு கிராமத்துப் பேர்வழி எவ்விதம் வியப்புத் திகைப்பில் ஆழ்வாரோ,அதற்குக் குறையாமல் ஆதீன கர்த்தர்களின் எதிர்வினை இருக்கும்.

அதிலும் மதுரையின் பழைய ஆதீன கர்த்தர் பொதுவான ஆதீன கர்த்தர்களின் அளவுகோலை எடுக்கும் போது வடிவேலு போன்றதான குணநலன்கள் கொண்டவர்.இந்த சூழலில் அவரை நித்தி போன்ற, தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான சாதாரணர்கள்,நடிகைகள்,தொழில்துறையினர்,திறனாளர்களை ஓயாது சந்தித்துக் கொண்டிருக்கும் கார்பொரேட் சாமியார்கள் எளிதாக தன் கைக்குள் போட்டுக் கொள்வதும் அவர்களை எதிலாவது சிக்க வைத்து மீளாநிலையில் வைப்பதும் மிக எளிதான செயல்.

இந்த நிலையில் தன் உத்தியில் சரியாக இயங்கும் நித்தி ராச்சேகரனின் விரிந்த நோக்கங்கள் மதுரை ஆதீனகர்த்தர் என்ற ரீதீயில் மிக அபாயகரமானவையாக இருக்கும்.ஆதீன மீட்புக் குழுவினர் நினைப்பது போல் அவரை வெளியேற்றும் செயல் எளிதாக இருக்கப் போவதில்லை என நடைபெறும் நிகழ்வுகளும்,நித்தியின் உதார் சவடால்களும் தெரிவிக்கின்றன.

அரசு அல்லது நீதி மன்றங்கள் உறுதியுடன் தலையிட்டு அவரை அடக்க வேண்டும்;நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அது நடப்பது மிக தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

சைவ ஆத்திகர்கள் மிகவும் கவலைப் பட வேண்டிய விதயம் இது !!!

Monday, July 14, 2008

67.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும்-II


இந்த பதிவு இதே தலைப்பில் எழுதப்பட்டதன் தொடர்ச்சி.
சிவம் என்னும் தத்துவத் தோற்றுவாய்
பழந்தமிழர் வாழ்வில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு தனியான சான்றுகள் தேவையில்லை;இன்னும் சொல்லப்போனால் ஆப்பிரிக்கா,சீனம்,ஆஸ்திரேலியாவின் அகழ்வுகளின் போதும்,சிந்து,மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் போதும் லிங்க வடிவம் மற்றும் யோக வடிவங்களும் (அகழ்வுப்பொருள் எண் 420)கிடைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதும் காணக்கிடைப்பதே.இந்த யோகிகளின் வடிவம் யோகிகளின் தலைவனாக பழந்தமிழ் நாட்டில் அறியப்படும் சிவனின் வடிவமே என கற்கால இந்திய ஆய்வில் ஈடுபட்ட ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்ற பெண்மணியின் நூற்கருத்துக்கள் சொல்வதும் சிந்திக்க வேண்டுவது.

எனில் சிவத்துக்கான தோற்றுவாய்க் காலம் என்ன?
தொல்காப்பிய மொழி விதிகள் சகர மெய்யோடு இகரமும்(ச்+இ) சேர்ந்து சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடாது எனச் சொல்லவில்லை.
இரண்டாவதாக அகத்தியரின் மாணாக்கர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் கழாரம்பர்

தமிழ்,சிவம் இனிமை என்னும் தனிப் பொருளாம்

எனச் சொல்லும் கூற்று,தமிழ் என்ற சொல்லுக்கே,சிவம்,இனிமை என இரு பொருள் இருக்க வாய்ப்பிருப்பதைக் குறிக்கிறது.விளக்கத் தேவையின்றி இது தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட அல்லது தொல்காப்பிய காலமே.
இன்னோரு தொல்காப்பிய பாயிரக் குறிப்பு நாவலந்தேயத்தை
செந்தமிழ் இயற்கை சிவனிய நிலம்

எனக் குறிப்பிடுகிறது.
லிங்கம் என்ற சொல்லுக்கு குறியீடு என்று பொருள்;சிவலிங்கம் என்பது சிவம் என்னும் தத்துவத்தை குறிக்கும் குறியீடு (குறி அல்ல) எனப் பொருள்படும்.
பண்டைத்தமிழர் கடவுட்கொள்கை சிவம் என்னும் தத்துவத்திற்கு பால்வேறுபாடு கூட(gender) குறிப்பிடவில்லை.திருமந்திரம் சதாசிவம் என்றே குறிக்கிறது.சிவம் என்னும் தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய,அனைத்தினுக்கும் புறத்துமாயிருக்கிற ஒரு தத்துவமாகவே தமிழர் கடவுட் கொள்கை அறிவுறுத்துகிறது.
திருமந்திரத்தின் காலம்
இன்னும் வட்டெழுத்துக்காலத் தமிழ் மொழி 16 உயிரும் 35 மெய்யும் ஆக 51 எழுத்துக்களைக் கொண்டது என்பது மொழியியல் ஆய்வறிஞர்களின் துணிபு.
இந்த வட்டெழுத்துக் காலம் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்டது.
திருமந்திரத்தில் திருமூலர்
ஆறிருபத்து நாலஞ்செழுத் தஞ்சையும்
வேறுருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே
என்கிறார்.
இது 35 விளைந்து கிடக்கும் மெய்யெழுத்துகளுள்(ஆறு+இருபத்து நான்கு+ஐந்து) மலம்(அறியாமை) நீக்கும் சிவாயநம என்ற சொல்லைத் தேறிக் கூறுமின் கூறக்கூடிய குறைகள் ஏதும் இருக்காது எனச் சொல்வது திருமந்திரத்தின் காலம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கூறுவது.
எனவே தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட நூலாகவே திருமந்திரம் இருந்திருக்க வேண்டும் என்பதும்,அக்காலத்திலேயே சிவ வழிபாடு இருந்தது என்பதும் தெளிவு.
மேற்குறிப்பிட்ட இரு விளக்கங்கள் தொல்காப்பிய காலத்துக்கு முன்னரே சிவம் என்னும் தத்துவம் மற்றும் லிங்க வழிபாடு தமிழகத்தில்,தென்னாட்டில் இருந்தது என்பதற்கும்,ஏதோ காரணம் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னைய அருந்தமிழ் தத்துவ நூல்கள் கிடைக்கப்பெறவில்லை(இக்காரணம் பின்னர் ஆராயப்படும்) என்பதும் அறியப்படும்.
ஆரியர் வருகை:
1.ஆரியர்கள் என்று வரலாற்றால் குறிக்கப்படுபவர்கள் இன்றைய ஈரானிய நிலப்பகுதிகளில் இருந்து இந்தியப்பகுதிகளுக்குள் நுழைந்தவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
2.இவர்கள் நாவலந்தேயத்தில் வாழ்ந்த மக்களுடன் ஒப்பிடும்போது அதிக உயரமாகவும்,வெம்மை கலந்த சிவந்த நிறம் கொண்டவர்களாகவும்,ஆடல்,பாடல் திறன் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள்.
3.இவர்கள் வந்த காலம் தென்பகுதியைக் கடல் கொண்ட காலமாகவே இருக்க முடியும்;இந்த கடல் கோள் தென்பகுதி நிலத்தைப் நீரால் பிறித்தும் வடபகுதி நிலத்தை நிலத்தால் இணைத்ததுமான மாறுதல்களைச் செய்திருக்க வேண்டும்,எனவேதான் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைய மத்தியக் கீழ் நாட்டு நிலப்பகுதியிலிருந்து நிலப் பாதை இந்த இயற்கை மாறுபாடுகளால் நேர்ந்திருக்க வேண்டும்.
4.இவர்கள் வந்த காலத்தில் நாவலந்தேயம் பரவலாக தமிழ் பேசும் தமிழர்களால் நிறைந்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.
5.இவர்களது தோற்றப் பொலிவாலும்,ஆடல் பாடல் திறனாலும் கவரப்பட்ட நாவலந்தேய மன்னர்கள் இவர்களுக்கு பல சலுகைகளை செய்யத் தலைப்பட்டார்கள்.
6.இவர்களின் வழிபாடு முறை தீ வேள்வி வளர்த்து அதில் மிருகங்கள் பலி கொடுத்து அக்னியையும்,இந்திரனையும் வழிபடும் முறையே.ருத்ரன் என்னும் ஒரு உருவகத்தை அழிவின் தேவதையாக குறிப்பிட்ட இவர்கள் அந்த உருவகம் சிவந்த நிறமுடைய,கோபாவேசத்துடன் கூடிய அழிவின் நாயகன் என்ற குறிப்பை முன்வைத்தனர்.இது வழிவழியாக நாவலந்தேயத்திலேயே சிறப்புற வாழ்ந்த மக்களின் வழிபாட்டும் முறையை விட தங்கள் வேள்வி வழிபாடு உயர்ந்தது,சிறந்தது என்ற தன்னை மேற்படுத்திக்கொள்ளும் செயலால்,இந்த ருத்ரன் என்னும் அழிவு வடிவத்தை,அன்பால் குறிப்பிடப்படும்,அன்பின் வடிவாகவே அறியப்பட்ட சிவத்தின் மீது ஏற்றினர்.
இந்த வேறுபாடு கொலை வேள்வி வழிபாட்டு முறைகளை அன்பின் வழி வாழ்வு முறை கொண்ட தமிழர்கள் ஏற்காததாலேயே ஆரியர்கள் சிவம் என்னும் தத்துவத்தையும்,அத்தத்துவம் கொண்டிருக்கும் ஆழ்ந்த தத்துவப் புதையல்களையும் அழித்தொழிக்கும் முறைகளை,மன்னர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கின் மூலம் செயற்படுத்தத் தலைப்பட்டனர்.
இந்த செயல்கள் ரிக் வேதத்தின்(வடமொழியின் முதல் நூல் ரிக் என்பதை அறிக..ரிக் தொடர்ந்த எல்லா வடமொழி நூல்களும் ஆரியர்கள் நாவலந்தேயத்திற்குள் நுழைந்த பிறகே ஆக்கப்பட்டன;வாழ்வு தேடி இடம் பெயரும் ஒரு இனத்தவராக வந்த அவர்களுடன் எந்த தத்துவ சாரங்களும் அற நூல்களும் உடன்வர வில்லை;அவை(ரிக்,யஜுர்,சாம,அதர்வண) கூறும் செய்திகளை-contents- வைத்தே இந்தக் கூற்றுகளை அறியலாம்.) 2’ம் மண்டலம் 20ம் பண்ணில் சொல்லப்பட்டுள்ள 6 மற்றும் 7ம் பாடல்களில் உள்ளன.அவை சொல்வதாவது:
‘அரிய காரியங்களை முடிப்பவனும்,மிகப்புகழ் பெற்ற இந்திரன் ஆரியமகனை உயர்த்துகிறான்;வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அருவருக்கப்படும் தாசனை(தமிழர்கள்) தலை கவிழச் செய்கிறான்

மேலும் ரிக் 5ம் மண்டலம் 10ம் பண், 7ம் மண்டலம் 21ம் பண்,96 ஆவது பண்,99ம் மண்டலம் 3ம் பண் ஆகிய பாடல்கள் தமக்கு வலிமை கூடும் பொருட்டு அளவற்ற விலங்குகளைக் கொன்று நிணம்,நெய்,சோமச்சாறு சொரிந்து செய்யப்பட்ட தீ வேள்விகளையும்,தாஸரஞ்சப் போரில்,சுதாஸை எதிர்த்த ஆரியரல்லாத விஷானிகள் சிவாக்கள் என்பவர்களை இந்திரன் துணை கொண்டு வென்றதாகவும் பொருள்படும் குறிப்புகள் கிடைக்கின்றன.
மேலும் சிவ வழிபாடு செய்தவர்கள் சிஸனதேவர்கள் எனவும்,சிவாக்கள் எனவும் இழிவாகக் கூறி கொலை,தீ வேள்வி செய்யாத,அதை ஏற்காத மக்களை,ருத்திரனைப் போற்றாதவர்களை தீயிட்டு அழித்த வரலாறுகளை இவை பேசுகின்றன.இவை ரிக் ‘சிவம் என்ற தத்துவத்தை இழிவாகவே பேசுகிறது என்பதற்கான சான்றுகள்.
ஆரிய/தமிழர்கள் உடன்படிக்கைகள்:
ஆளும் மன்னவர்களிடம் தங்களுக்கிருந்த செல்வாக்கினாலும்,பலத்தாலும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துரத்தப்பட்டனர்;அந்தப் பகுதி தெக்கணம் என அழைக்கப்பட்டது;ஆரியவர்த்தம் என்றழைக்கப்படும் ‘இந்துஸ்தானம் என்ற நாட்டுப் பகுதி வரையறுக்கப்பட்டு இதன் தெற்கெல்லையாக விந்திய மலைப்பகுதி வரையறுக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை பற்றிய செய்திகள் ‘போதாயன சூத்திரம் என்னும் வடமொழி நூலின் ஆமத்ஸ்தம்பத்தில் பேசப்படுகின்றன.
ஆயினும் இதன் பின்னரும் இந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டு பற்பல காலங்களில் தென்னாடு நோக்கி அவர்கள் கூட்டமாக (பிரகச்சரணர்(எல்லோருக்கும் முதலில் வந்தவர்),அஷ்ட சகஸ்ரம்(எண்ணாயிரம் பேர்) நகர்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது.
ருத்ரன்,ருத்ர சிவனான கதை:
ருத்ரன் என்னும் கொடும் தேவதையை ரிக்ல் குறிப்பிட்ட வடமொழி ஆரியர்கள் பின்னர் இயற்றப்பட்ட யஜுர்,சாமம்,அதர்வணத்தில் ருத்ரனுடன் சிவன் என்னும் சொல்லையும் சேர்த்து ருத்ரசிவன் என்றாக்கிக் கொண்டனர்;இது தென்னாட்டில் சிவம் என்னும் தத்துவத்துக்கிருந்த அழித்தொழிக்க முடியாத நன்மதிப்பை தான் வழிபடும் ருத்ரன் என்னும் பிரதிமைக்கு ஏற்றும் ஆரியரது முயற்சியே இந்த ருத்ரன் ருத்ரசிவனான கதை.
இதற்கான சில தரவுகள் பின்வருவன,மஹாதேவ் சக்ரவர்த்தி எழுதிய The Concept of Rudra-Siva through Ages என்ற புத்தகத்திலிருந்து.(ரிக்ன் மண்டல/பண்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
In Rgveda,Rudra is described as fierce^1 and
destructive like a terrible wild beast ^2,swift ^3,the red boar of the sky
^4,the cow-slayer ^5,the man-slayer ^6,the lord of animal sacrifices ^7,the
father of Rudras or Marats ^8 and who bears swift arrows and strong bow
^8.
He is also identified with Agni ^9.
No distinct
cosmical functions are ascribed to him ^10,
He is,
in the vague & uncertain anthropomorphic form, of the dreadful &
destructive powers of nature-of forests, lighting and forest fires
^11.
1- Rig II.33.9
2- Rig II.33.11
3- Rig I-114.4
4- Rig I-114.5
5/6- Rig I-114.10
7- Rig I-43.4
8- Rig I-114,II.33
9- Rig II-33.10
10- Rig VII-46.1
11- TAG Rao,in Elements of Hindu Iconography
இவ்விதமாக ரிக்ல் கீழ் நிலையான பயப்படுத்தும் தேவதையாக உருவகிக்கப்பட்ட ருத்ரன்,வரலாற்று நிலையில் மிகப்பின்னால் உள்ள உபநிடதங்களில்(ப்ரஹதாரண்யக,ஐத்ரேய,சாண்டோக்ய உபநிடதங்கள்) ருத்ர-சிவனாக மாற்றம் பெற்று அனைத்துக் கடவுளர்க்கும் மேலான கடவுளாக,உருவற்ற பிரம்மம் ஆக,வேதங்களை உருவாக்கித்தந்தவனாக ‘உருமாற்றம் அடைகிறான்.
இதற்கான காரணம் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியதே.ஒரு பகுதியின் உயர்ந்த சிறந்த ஒரு பொருளை,தத்துவத்தை தமது உடமையாக அறிவிப்பதன் மூலம் அப்பொருளை,தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர் யாமே என்ற மயக்கறிவைத் தோற்றுவிப்பதே நோக்கம் என்பதை யாரும் அறியலாம்.
தமிழர்களின் கடவுட் கொள்கையில் அன்பின் வழியாகி அனைத்தினுக்கும் உள்ளாகவும்-புறமாகவும் உள்ள, லிங்க வடிவில் வழிபடு காலமே அறியப்பட முடியாத அளவு தொண்மையுடைய,ஆரியர்கள் வருகைக்கு பன்னெடுங்காலம் முன்னரே தமிழர் தொழுதேத்திய சிவம் என்னும் தத்துவம்,வடமொழியர்களின் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேத மற்றும் அதற்குப் பின் வந்த உபநிடத காலத்தாலெயே ஏற்றம் பெற்றது என்பது,குருடர்கள் யானையைத் தடவி விளக்கம் சொல்வதற்கொப்பானது.
டிஸ்கி 1: இதை எழுதுவதற்கான காரணம் பண்டைத் தமிழரின் கடவுட் தத்துவம் எவ்வளவு உயர்ந்தது ,தமிழரின் உயர்ந்த சிந்தனை வளம் எத்தகையது என்பதை இப்போதைய தலைமுறை இளையர்களுக்கும்,இன்றைய பட்டப்படிப்பாளர்களும் அறிய வேண்டும் என்ற காரணம் பற்றியே.இன்றைய பிராமணர்கள் என்றறியப்படும் வகுப்பினரின் மேல் எனக்கு எந்தவித முன்கருத்தோ,துவேஷமோ இல்லை.

டிஸ்கி 2: இன்றைய தமிழகத்தின் 'திராவிட' அரசியலும்,பண்டைத்தமிழரின் அன்பு நெறியும் முற்றிலும் இருவேறு திசையில் இருப்பன.பண்டைய தமிழரிலும் அந்தணர் என்னும் வகுப்போர் இருந்தனர்;அவர்கள் தமிழரின் ஒரு பிரிவினரே;அவர்களுக்கும் வடதிசையிலிருந்து வந்த ஆரியருக்கும்-அவர்கள் வந்தேறிய அக்காலத்தில்-ஏதும் தொடர்பிருக்கமுடியும் எனக் கருதுவதும் முட்டாள்தனமானது.தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘அந்தணர் என்போர் அறவோர்' எனவே குறிக்கிறார்,அந்தணர் என்போர் ஆரியர் என்று அல்ல !
-இன்னும் வரும்

Wednesday, June 18, 2008

66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !

நண்பர் ரவி அவர்கள் சிவலிங்க வடிவம் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.

அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில் தமிழுக்கும்,சிவம் என்ற தத்துவத்திற்கும் உள்ள தொடர்பையும்,வடமொழியில் சிவம் என்ற தத்துவம் தோற்றுவாயாய் இல்லை;இயல்பாகப் போற்றப்படவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப் போக,சில பாராட்டுகளும், சில மறுப்புகளும், பல வாதப் பிரதி வாதங்களும் ஏற்பட்டன.

சிவம் என்ற தத்துவம் தமிழிலேயே போற்றி வளர்க்கப்பட்டது என்பதற்கான தரவுகளும்,இடைக்காலத்தில்,அதாவது கடல்கோளுக்குப் பின்னர் ஏன் தமிழகத்தில் சிவ வழிபாடு,போற்றுதல் இல்லாமல் போனது என்ற கேள்விகளும் எழுந்தன.

பிற்சேர்க்கையாக ருத்ர சாகையில் சிவம் பற்றிய சில மேற்கோள்களும் விளக்கங்களும்,மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.

இந்த வகை சிவம் என்ற தத்துவம்,அறிவை நோக்கிய ஒரு வாசிப்பும் ஆய்வும் சுவையளிப்பதாகத் தோன்றியதால் விளைந்தது இந்தத் தொடர் பதிவு.
எச்சரிக்கை :( இது இரண்டு மூன்று பகுதிகளாக வர வாய்ப்பிருக்கிறது...

இனி....தமிழும்,சிவமும்,தொடர்பும்,வடமொழியும்,மெய்ஞானமும் இன்னபிறவும்..


இந்த விதயம் இரு தளங்களில் அணுகப்படவேண்டியது.

முதலாக தமிழ் என்ற மொழியின் காலம் என்ன என்பதை சிறிது ஆராய வேண்டும்;இந்த ஆய்வின் கூறுகளே பழந்தமிழ் மொழியில் நிலவிய கடவுள் கொள்கை மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் மற்றும் அறிவைத் தரும்.


தமிழ்,தமிழகம் எங்கிருந்து முகிழ்ந்தது?
தமிழ் என்ற மொழியைப் பற்றியும் தமிழகம் என்ற ஒரு நாட்டினைப் பற்றிய அறிவு வேண்டுமெனின் அந்த நாட்டின் வரலாறு ஆராயப்படவேண்டும்;வரலாற்றின் கூறுகள் நாடு,அதன் மக்கள்,அவர்களில் மொழி மற்றும் அவர்களின் நாகரிகம் ஆகியவை.

நாட்டின் வரலாறு என்பது இரு வகைப்படும்;ஒன்று எழுதப்பட்ட வரலாறு,மற்றது எழுதப்படா வரலாறு.பெரும்பாலும் கிருத்துவின்(Christ) காலத்துக்குப் பிற்பட்ட நாடாயின் பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு கிடைக்கும்;முற்பட்டதாயின் எழுதப்பட்டோ,படாததாகவோ இருக்கும்.

எழுதப்படா வரலாறு மேலும் இரு விதமாக,அறியப்படும் வரலாறு மற்றும் அறியப்படா வரலாறு என இருவிதமாக பகுக்கப்படும்.பழந்தமிழ் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு இருப்பினும் அவை மிகப் பெரும்பாலும் தமிழறிழர்களால் எழுதப்பட்டதை விட கார்டுவெல் பாதிரியார் போன்ற ஆங்கிலேயர்களுக்கிருந்த தமிழார்வத்தால் எழுதப்பட்டவை.அவர்களுக்கு தமிழின் தொன்மை,இயல்புத்தன்மை, nativity பற்றிய தெளிவு இருக்குமா என்பது மேலும் கேள்விக்குரிய ஒன்று.

அதிலும் இந்தியாவில் பலதிறப்பட்ட மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள்,ஆண்டிருக்கிறார்கள்.இத்தகைய குடியேறியவர்களின் ஆதிக்கம் நூற்றாண்டுகளுக்கு உச்சத்தில் இருந்ததையும் வரலாறு பார்த்திருக்கிறது.(எடுத்துக்காட்டு முகம்மதியர்கள்,களப்பிரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்).இத்தகையோர் ஆட்சிப் பொறுப்பிலோ அதிகாரத்திலோ இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவான தரவுகள் வரலாற்றில் இடம் பெறுவது நிகழக்கூடிய தவறே.

எழுதப்பட்ட வரலாற்றில் இந்தவிதக் குழப்பங்கள் நேரும்போது எழுதப்படாத வரலாற்றாராய்ச்சிக்கு உதவும் காரணிகள் இலக்கியம்,வெட்டெழுத்துக்கள்/கல்வெட்டுக்கள்(inscriptions) மற்றும் பழம்பெரும் இலக்கிய/இலக்கண/மொழியியல் நூல்கள் ஆகியவை.பண்டைத்தமிழைப் பொறுத்தவரை தமிழர்கள் மேல் ஆரியக்கலப்பு நிகழ்ந்திருப்பதால் இந்த வித எழுதப்படா வரலாற்றை மேற்கூறிய காரணிகள் துணை கொண்டு ஆராயவேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.


குமரிக்காண்டம்/லெமூரியா மற்றும் முச் சங்கங்கள்

தமிழ் மற்றும் தமிழனின் பிறந்தகம் எது என்ற கேள்வி ஆதாரமானது.

இது மூழ்கிப்போன,லெமூரியா என்ற குமரிக்கண்டம் என்பது உண்மை.இந்தக் கண்டம் இப்போதைய இந்துமாக்கடல் கொண்டுவிட்ட பரப்பு;இந்தநிலப்பகுதி ஆதிகாலத்தில் இன்றைய ஆஸ்திரேலியா,ஜாவா தீவுகளிலிருந்து இன்றைய ஆப்பிரிக்காவின் பகுதிகள் வரை பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கான சுட்டிகள்,சான்றுகள் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையிலும்,பி.டி.சீனிவாசையங்கார்,சேசையங்கார்,இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் தெளிவாக அறிய வைக்கப் பட்டிருக்கின்றன.

இந்த குமரிக்காண்டத்தில் இன்றைய இமயம் போல ஒரு மலைத் தொடரும் அதன் தென்,வடப் பகுதி எல்லைகளாக இரு பேராறுகளும் இருந்திருக்கின்றன.அவை முறையே பஃருளியாறு மற்றும் குமரி ஆறு ஆகிய இரண்டும்.இந்த ஆற்றங்கரைகளுக்கிடையே இருந்த பெரு நகரே மதுரை.

இந்த மதுரை இன்றைய மதுரை அல்ல;கடல் கொண்டுவிட்ட தென்மதுரை;இந்த நகரே முதல் தமிழ்ச்சங்கம் கண்ட தென் மதுரை.

இறையனார் அகப் பொருளுரை

“தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம்
இரீஇயனார் பாண்டியர்கள்,அவருள் தலைச்சங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கடல்கொள்ளப்பட்ட மதுரையென்ப;இடைசங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கபாடபுரமென்ப;கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப,அவர் சங்கமிருந்தது உத்தர மதுரை என்ப ”
என்கிறது.இவற்றுள் கடைச்சங்கத்தில் குறிப்பிட்டதே இந்நாள் மதுரை.

மேலும் இந்நூல் குறிப்பிடும் விவரங்கள்

தலைச்சங்கம்

இலக்கியம் : முதுநாரை,முதுகுருகு,புறப்பொருள்
இலக்கணம் : அகத்தியம்
இசை : முறுவல்,சயந்தம்,குணநூல்,செயிற்றியம்
நாடகம் : பரிபாடல்,களரியாவிரை,அபிநயம்,நற்றந்தம்,வாமனம்
இடம் : குமரி நாட்டின் பழைய மதுரை அல்லது தென் மதுரை

இச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோ காய்ச்சிய வழுதி முதலாக கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் அகத்தியர்,குமரவேள், நிதியின் கிழவன்,முரஞ்சியூர் முடிநாகராயர்.

இடைச்சங்கம்:

இலக்கியம் : கலி,குரு,வெண்டாளி,வியாழமாலை,மாபுராணம்
இலக்கணம் : அகத்தியம்,ஐந்திரம்,தொல்காப்பியம்
இசை : இசை நுணுக்கம்,பூத புராணம்,அகவுள்
இடம் : லெமூரியாவின் கபாடபுரம்

இச்சங்கம் 3700 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் தொல்காப்பியர்,மோசி,வெள்ளூர்க்காப்பியன்,திரையன்,மாறன்,கீரந்தை என்பவர் சிலர்.

இந்த குமரிக் காண்டமும்,பின்னர் கபாடபுரமும் கடல் கோள்களால் அழிக்கப்பட்டு விட்டன.

பண்டைத் தமிழிலக்கியத்தில் சொல்லப் படும் கடல் கோள்கள் மொத்தம் நான்கு;
முதலது தலைக்கழக இருக்கையாகிய தென் மதுரையைக் கொண்டது;
இரண்டாவது “நாக நன்னாடு நானூறியோசனை” கொண்டது (மணிமேகலை 9:21);
மூன்றாவது இடைக்கழக இருக்கையான கபாடபுரத்தைக் கொண்டது;
நான்காவது காவிரிப் பூம்பட்டினத்தையும்,குமரியாற்றையும் கொண்டது.

இந்தக் குமரிக் கண்டம் மற்றும் ஆறுகளுக்கான சான்றுகள் புறப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கின்றன.

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நந்நீர் பஃருளி மணலினும் பலவே “ -புறம்.9


“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசையாண்ட தென்னவன் வாழி”
-சிலம்பு 11:17-22


”தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6:67
அடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி என்பது முதல் சங்க காலத்து தமிழ்ப் பாண்டிய மன்னன் சாவம் என்றழைக்கப்பட்ட ஜாவா வரை வென்று,அவன் நிலப்பகுதியின் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பதித்து வைத்தான் என்ற குறிப்புக்கான விளக்கம் ஆகும்.

மேலும் இவ்வரசர் குடி குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டதனால்,வடதிசையில் பரவி இமயம் வரை இருந்த நிலப்பரப்பைச் சேர்த்து தென் திசை வரை பரந்த நிலத்தை ஆண்டவன் என்ற குறிப்பும் கிடைக்கிறது.

இந்தவாறு லெமூரியா ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை பரந்திருந்த நிலப்பகுதி என்பதற்கும்,அது பழந்தமிழர் நாடு என்பதிற்குமான மேலும் சில சான்றுகளானவை வருமாறு;

1.தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்ல திருந்தியும் சிறந்தும் இருப்பதும் முழுத் தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென்கோடியுள் வழங்குதலும்.

2.எட்டும்,பத்தும்,பன்னிரெண்டுமாக மெய்யெழுத்து ஒலிகள் கொண்ட மொழிகள் ஆஸ்திரேலியாவிலும் அதனையடுத்த நாடுகளிலும் வழங்குதல்.

3.முழுவளர்ச்சியடைந்த பின்னே ஒரு மொழியின் வள ஆராய்ச்சி நடைபெறும்;இத்தகைய மொழியாராய்ச்சிக்கான தலைச் சங்கம் குமரிக் கண்டத்தின் தென்கோடியான பஃருளியாற்றங்கரையில் இருந்தது

4.பண்டைத் தமிழ்ச் செய்யுள்களில் கூறப்படும் நீர்நாயும்,காரன்னம் என்னும் பறவையும் ஒத்த உயிரிகள் ஆஸ்திரேலியாவிற்குத் தெற்கில் உள்ள தாஸ்மேனியாத் தீவுகளில் காணப்படுவது.

5.தென்னாடு,தென்னவன்,தென்மொழி போன்ற பதங்கள் தெற்குத் திசையமைந்த பெருநிலப் பகுதியைக் குறிப்பதாக இலக்கியங்களில் காணக் கிடைப்பது.

1. ”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6.97

2. ”மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேல்சென்று மேவார் நாடிடம்படப்
புலியொடு வில்நீக்கிப்
புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன்
-கலித்தொகை.104

இந்த தரவுகளால் தமிழ்மொழி குமரிக் காண்டத்தில் இருந்ததும்,குமரிக் கண்டத்தமிழர் தென்னாடு-லெமூரியா- முழுதும் பரவி இருந்ததோடு வட இமயம் வரை சென்று,வென்று சிறந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும் அறியக் கிடைக்கிறது.


இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது
இந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் மேலும் சில ஆய்வு நோக்கான தரவுகள்:

1.Early History of India என்ற ஆய்வு நூலின் ஆசிரியரான வின்செண்ட் ஸ்மித்(Vicent Smith) மற்றும் ப.சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழியத் தொன்மையாராய்ச்சி நூல்கள் சொல்வது,
“வட இந்தியாவின் சமஸ்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து இந்தியா(நாவலந்தேயம்) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வது,அந்த அறிவைப் பெறுவதற்கான முயற்சியை மிகக் கேடானதும்,மிகச் சிக்கலான இடத்திலிருந்தும் தொடங்குவதாகும்.விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியப்பகுதியே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகிறது;இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழியையும்,குமுகாய(சமுதாய) ஏற்பாடுகளையும் இன்றும் தெளிவாகக் கொண்டிருக்கின்றனர்;எனவே அறிவியம் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் தனது ஆய்வை,இதுவரை சிறந்ததென்று கொள்ளப்பட்டிருந்த முறைப்படி சிந்து கங்கை சமவெளியினின்று தொடங்காமல்,கிருஷ்ணை,காவிரி,வைகையாற்று வெளிகளின்று தொடங்க வேண்டும்”

2.PT.சீனிவாசையங்காரும்,இராமச்சந்திர தீட்சிதரும் இந்த அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் விளவான தமிழர் வரலாறு மற்றும் தென்னாட்டு வரலாறு.

இந்த ஆய்வுகள் தமிழினமும்,தமிழ் மொழியும் அதன் உச்சநிலையில் குமரிக்காண்டத்தில் இருந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன.

இன்னும் அவை குமரிக் காண்டமே முதல் மனித இனம் தோன்றிய இடமாக இருக்கக்கூடும்;உலகின் முதல் மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாக நிறுவும் சுட்டிகளை வைக்கின்றன.

ஆயினும் இப்பதிவின் நோக்கம் சிவம் என்ற வழிபாட்டுத் தத்துவமும்,தமிழுக்கு அதனுடன் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு நோக்கில் அலசலுமே ஆதலால்,உலகின் முதல் மொழி’ ஆய்வுக்குள் செல்லாமல்,

தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது;மொழியாராய்ச்சி செய்து இலக்கியம் வளர்க்கும் வண்ணம் பண்பட்டிருக்கிறது;நாவலந்தேயம்(இந்தியப் பகுதியும் குமரிக் காண்டமும் இணைந்த பகுதி) முழுதும் பரவி ஆண்ட வாழ்வியல் கொண்டது

என்ற அளவில் கொண்டு மேற்செல்வோம்.
-இன்னும் வரும்

இந்தப் பதிவின் தொடர்ச்சியான பகுதி இரண்டு: இங்கு.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...