குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, February 19, 2008

43-ஞாநியின் இடமாற்றமும்,விகடனின் முக மாற்றமும்

ஞாநி அனைவரும் அறிந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்;சுமார் 33 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்.அவரது ஒரு நாவல்-ஒரு டிவி மீடியா நபருக்கும்,அவரது இளமைக் கால தோழிக்கும்,அரசியல் பித்தலாட்டங்களுக்குமிடையான சம்பவங்களின் தொகுப்பான கதை.எனக்கு ஓரளவு பிடித்த நாவல்களில் அதுவும் ஒன்று.

அவரது கட்டுரைகளின் கருத்துக்களில் பலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.எனக்கும் அவரது கருத்துக்கள் அனைத்திலும் முழு உடன்பாடு என்றும் பொருளில்லை.
அவர் சில மாதங்களாக(வருடங்களாக?) ஆவி.யில் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் அது நிறுத்தப்பட்டது;போன வாரத்திலிருந்து அவர் குமுதம் இதழில் ஓ பக்கங்களைத் தொடர்கிறார்.

பின்புலத்து விதயங்களில் சில சுவாரசியமானவை.

ஞாநி எழுதிய அரசியல் கட்டுரைகளில் சில ஆளும் திமுக தரப்புக்குப் பிடிக்காதவை என்பது ஊரறிந்த ரசசியம்,குறிப்பாக திமுக தலைமைக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் எழுதிய கட்டுரை,மற்றும் வேறு சில.

அதற்குப் பரவலான எதிர்வினை எழுந்தது;எவரது எழுத்துக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.ஆனாலும் அவரின் கட்டுரைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களும்,கண்டனக் கூட்ட்ங்களும் நடந்தன.

திமுக’வின் சமீப வெளிச்சப் பிரமுகர் தமிழச்சி கூட்டிய கூட்டத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் உதிர்க்கப்பட்டன. குறிப்பாக ஒருவர் ஞாநி இலக்கியப் பத்திரிகையில் எழுதினால் ஒன்றும் பிரச்னையில்லை;வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவதுதான் பிரச்னை எனக் கூறினாராம்.

சிறிது காலத்தில் விகடனிலிருந்து அவர் வெளியேற்றப் பட்டார்.

விகடன் !

இதே பத்திரிகைதான் எம்ஜிஆர் காலத்தில் பிஹெச்.பாண்டியனின் கருத்தை விமர்சித்து வெளியிட்ட கார்ட்டூனை மறுக்கவோ,திரும்பப் பெறவோ முடியாது என் உறுதியாக மறுத்து,சட்டமன்ற உரிமைப் பிரச்னையை எதிர்நோக்கி,ஆசிரியர் பாலு சிறை சென்று,பின் வழக்காடி,அரசை வென்று,அபராதம் வசூலித்து,அக் காசோலையை பணமாக்காது,சட்டமிட்டு ஆசிரியர் பாலு’வின் அறையில் மாட்டி பெருமிதப்பட்ட பத்திரிகை.

இன்று அரசின் தலைமையை ஒருவர் விமர்சித்தார் என்பதற்காக அதே பத்திரிகை ஒரு நிரூபிக்கப் பட்ட எழுத்தாளரை வெளியேற்றியிருக்கிறது !

நிச்சயம் அரசின்,கட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அரசின் தலைமை ஒரு அறியப்பட்ட பத்திரிகையாளரும்,அப்படி அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவரும்,பத்திரிகையாளர்களுடன் சுமுகமான உறவைப் பேணுவதில் கவனம் வைப்பவர் என்றும் பரவலாக அறியப்படுபவர்;
செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்கள்
ஆண்ட நாட்டைத் தான் அவரும் ஆட்சி செய்கிறார்;அந்த சொற்றொடரை ஆய்ந்தும், பொருள் விரித்தவர் அவர்,ஆனாலும் இப்போது அதை நினைவில் கொள்ளவோ, பொறுக்கவோ இயலவில்லை போலிருக்கிறது !

குமுதம் எத்தனை நாளைக்குப் புகல் அளிக்கும் என்பதும் பொறுத்துப் பார்க்க வேண்டிய ஒன்று !

காலங்கள் மாறும்;காட்சிகள் மாறும்;அரசியல் என்பது பொய்வேஷம் !!!!

Wednesday, February 13, 2008

42-திராவிடம் மற்றும் தமிழ்மொழி இலக்கியம்-II

தமிழே இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கும் சாத்தியங்களையும்,தென்னிந்திய மொழிகளான கன்னடம்,மலையாளம்,தெலுங்கு ஆகியவற்றிற்கு தமிழே மூலமொழி என்று உறுதியாகக் கருத இடமிருப்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம்.

இவற்றில் கன்னடமும்,தெலுங்கும் தமிழிலிருந்து அதிக வேறுபாடுகளையும்,மலையாளம் அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழோடு குறைந்த அளவு வேறுபாடுகளையும் கொண்டிருப்பது கண்கூடு;இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியானவை.

வட இந்தியாவில் நிலைபெற்ற ஆரியர்கள் (பிராமணர்களின் மூதாதைகள்) காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் குடியேறினார்கள்;இதனால் தமிழும் பிராகிருதமும் வடமொழியும் கலக்கும் நிலை கன்னட,தெலுங்கு தேசங்களில் ஏற்பட்டது.அந்தந்த வட்டாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப கன்னடமும்,தெலுங்கும் வட்டார மொழிகளாக தனிவடிவம் பெறத் தலைப்பட்டன.இதற்கேற்ப அங்கு சேர சோழ பாண்டிய ஆட்சியாளர்கள் அல்லாத வேறு வர்ணத்தவர்கள் ஆட்சியாளர்களாக இருந்ததும் இந்த வேறுபாடு மிகுந்ததற்கு ஒரு காரணம்.

ஆனால் கேரளத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு எட்டு நூற்றாண்டு முன்பு வரை(அதாவது கி.பி.1200 கள் வரை) கேரளத்தின் பகுதிகளிலும் தமிழே ஆட்சி மொழியாகவும்,கலைமொழியாகவும் இருந்தது.காரணம் சுமார் பதினைந்து நூற்றாண்டுக்கு முன் கேரளத்தை ஆண்ட மன்னர்கள் தமிழரசர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்;அவர்கள் பெருமான்கள்,பெருக்கன்மார்(சேரமான் பெருமான்) என்ற அபிடேகப் பெயர் கொண்டு கேரளப் பகுதியை ஆண்டு வந்தார்கள்.கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டபோது திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர் தலைவராக இருந்ததற்கான் குறிப்புகள் கிடைக்கின்றன.மேலும் கிபி முதல் நூற்றாண்டு வரை கேரளப் பகுதிப் புலவர்கள் பலர் இயற்றிய பாடல்கள் தொகை நூல்களான புறநானூறு,அகநானூறு முதலியவற்றில் காணக் கிடைக்கின்றன.

சிலம்பு பாடிய இளங்கோவும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவரே;சேரமான் பெருமாள் நாயனார்,குலசேகர ஆழ்வார் போன்றவர்கள் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்களே.இவ்வாறு கேரளம் தொன்மைமொழியான தமிழ் ஊடாடும் பகுதியாக நெடுங்காலம் இருந்ததால் மற்ற திராவிட(தென்னிந்திய) மொழிகளை விட தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது.
அதோடு தென்னிந்தியப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிக வலுவானவர்களாகவும்,கடல் கடந்து இலங்கை,பர்மா,சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தெனாப்பிரிக்கா,பிஜித்தீவுகள்,மொரீஷியஸ் போன்ற பிரதேசங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியதாலும் அந்த இடங்களிலெல்லாம் தமிழும் தமிழர்களும் வாழத் தலைப்பட்டனர்.
இவற்றிற்கான குறிப்புகள் தென்னகம் மட்டுமல்லாமல் இந்த வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன.

கிமு 10 ஆம் நூற்றாண்டின் அரசனான சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயிற்தோகையும்,யானைத்தந்தமும்,வாசனைத் திரவியங்களையும் கொண்டு சென்றிருக்கின்றன;ஈப்ரு மொழியில் உள்ள துகி(மயில் இறகு),அஹலத்(வாசனைப் பொருள்) போன்ற சொற்கள் முறையே தோகை,அகில் ஆகிய தமிழ் வார்த்தைகளின் திரிபு.கிரேக்கத்திற்கு அக்காலத்தில்(கிமு 5’ம் நூற்றாண்டு) தமிழகம் அனுப்பிய இஞ்சியும்,பிப்பிலியுமே முறையே சிக்கிபெரஸ்,பெப்பரி(ஆங்கில ginger,pepper) போன்ற கிரேக்க சொற்களின் மூலங்கள்.அக்காலத்திய ரோமப் பேரரசின் நாணயங்கள் தமிழகப் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன;சீனத்திலிருந்து வந்த பட்டு நமது இலக்கியங்களில் கூட இடம் பெறுகிறது.

இவ்வாறு உலகின் பல பகுதிகளில் தனது மேலாண்மைத் திறத்தால் கோலோச்சிய தமிழ் இன்றைய திரிந்த திராவிட வர்க்கக் கூறுபாடுகளால்,தமிழகத்தில் கூட செழுமையான நிலையில் இல்லாத நிலை இருக்கிறது.

நமது குழந்தைகளில் பலர் தமிழை எழுதத் தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலம் நடைபெறுகிறது;இலக்கியங்களின் பரிச்சயம் இல்லாதே போகிறது;தமிழக வழிபாட்டுத் தலங்களில் கூட அருந்தமிழ்ப் பதிகங்கள் அரங்கேற மறுக்கின்றன.
ஆட்சியோ துவேஷத்தையும் வெறுப்பையும் விசிறி விடுவைதையே நிறைவேற்றியிருப்பது ஒன்றுதான் இன்றைய 'திராவிடம்' செய்திருக்கும் சாதனை என்பது எண்ணி வருந்த வேண்டிய ஒன்று.

-இன்னும் வரும்

Wednesday, February 6, 2008

41-திராவிடம் மற்றும் தமிழ்மொழி இலக்கியம்

திராவிடம் என்ற சொல் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அனைவரும் அன்றாடம் கேட்கும் சொற்களில் ஒன்று எனச்சொன்னால் அது மிகையல்ல;திராவிடம் என்ற சொல் வழங்கி வருகிறதே தவிர திராவிடம் என்ற சொல்லின் பொருள் என்ன என்பது பற்றியோ,அதன் வேர்ச்சொல்,பொருள் பற்றியோ இன்றைய திராவிடக் குடிதாங்கிகள் அறிவார்களா என்பது சந்தேகமே.
ஒரு காலத்தில் இந்திய தேசம் முழுதுமே ஒரே மொழி பேசப்பட்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்திருக்கிறது;அதை ‘பழந்திராவிட மொழி’ என ஆராய்ச்சியாளர்கள் குறிப்புச் சொல்லாக அழைக்கிறார்கள்.காலப் போக்கில் வட இந்தியாவில் வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியர்களும்,வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியர்களும் வந்து வட இந்திய மக்களோடு கலந்து ஒன்றானார்கள்.இதனால் வட இந்தியப் பகுதியில் பேசப்பட்டு வந்த மொழி பல மாறுதல்களுக்கு உட்பட்டு,பிராகிருதம்,பாலி முதலிய மொழிகள் தோன்றின.
வட இந்தியாவின் வடமேற்கே பலூசிஸ்தானத்தில் ஒரு சாரார் பேசும் மொழி பிராகூய்(Brahui).இம்மொழியின் இரட்(இரண்டு),முசிட்(மூன்று) முதலான எண்ணுப் பெயர்களும்,வாக்கிய அமைப்பும்(Syntex),மூவிடப் பெயர்களும்(தன்மை,முன்னிலை,படர்க்கை) போன்ற இயல்புகளும் தமிழைப் போலவே இருப்பதும்,வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தமிழுக்குமான வாக்கிய அமைப்பு இன்றளவும் பெருமளவு ஒத்திருப்பதாலும்,இந்த ‘பழந்திராவிட’ மொழி தமிழாகவே இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவு சாத்தியம் என்பதும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இந்த திராவிடம் என்ற சொல் பிற்காலத்திலேயே ஏற்பட்டது;இது தமிழ் என்ற சொல்லின் திரிபே என்பதும் நூலாய்வர்களின் முடிவு.திராவிடம் என்ற சொல் தமிழ்,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்தது என்று விளக்கம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆயினும் துரானியர்,ஆரியர் கலப்பிற்குப் பிறகு வட இந்தியாவில் பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் செல்வாக்குப் பெற,தென்னிந்திய அளவில் பழந்திராவிட மொழி-தமிழ்- குறுகவேண்டிய நிலை ஏற்பட்டது.
காலப்போக்கில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்,மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குப் செல்வதில் உள்ள சிரமங்கள் இவற்றால் இந்த வேற்றுமைகள் தென்னிந்திய அளவிலும் பல பிராந்தியங்களில் வேறுபட்டன.

தெற்கே இருப்பவர்கள் பேசிய மொழி தமிழ் எனவும்,திருப்பதி மலைக்கு வடக்கே இருப்பவர்கள் பேசிய மொழி தெலுங்கு எனவும்,மைசூர்ப்பகுதி பேசிய மொழி கன்னடம் எனவும் வேறாக வளர்ந்தது;இவை வெவ்வேறு மொழிகளாக வளர்ந்தது.இந்த நான்கு மொழிகளுக்குள் இன்றளவும் சுமார் ஐந்தாயிரம் சொற்கள் பொதுவானவையாக உள்ள விதயம்,சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஆயினும் தமிழுக்கு மட்டுமே நீண்ட இலக்கிய வரலாறு இருக்கிறது.



-இன்னும் வரும்

Sunday, January 20, 2008

40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

தெகா யோகா பற்றிய ஒரு பதிவு போட்டு,பாரி அரசு முதலான சிலர் அதற்கு சில எதிர்வினைகள் செய்ய,நானும் எனது கருத்துக்கள் சொல்ல,ஒரு பெரிய பின்னூட்டப் போட்டியும், ‘உம் பேச்சு கா’ போன்ற வகையான எதிர்-எதிர் வினைகளும் வர,சொல்ல விரும்பியவற்றை விளக்கமாகவே சொல்லி விடலாம் என்று இந்தத் தனிப் பதிவு.

இதில் யோகம் பற்றி நான் படித்து அறிந்தவைகளும்,நான் அனுபவித்து அறிந்தவகைகளும் பெரிதளவாகவும்,அதனைப் பற்றிய எனது மேலதிக கருத்துக்கள் சிறிதளவும் உண்டு.

கருத்து 1:
யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களைப் போன்ற பலன்களை எளிதாகத் தருகிறது.

நானறிந்தது:

யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைப்பது போன்ற பலன்களைத் தருவதில்லை;அதைவிட சிறந்த பலன்களைத் தருகிறது.ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் உடலின் தசைநார்கள் கசக்கப்பட்டு முறுக்கேற்றப் பட்டு கெட்டித்தன்மை அடைவதோடு தேவையற்ற உபரி தசைகள்,கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் வடிவுடன் கூடிய தசைக்கட்டமைப்பைப் பெறுகிறது.
நாளாவட்டத்தில்,உடற்பயிற்சி செய்வது குறைந்தால்,அல்லது நின்றுவிட்டால் மீண்டும் அதிகப்படி எரிக்கப்படாத சக்தி கொழுப்பாக தசைகளில் சேகரிக்கப்பட்டு,எந்தெந்த உடலின் பகுதிகள் அதிக அசைவோ கசக்கப்படலோ இல்லாமல் இருக்கின்றனவோ(ஆண்களுக்கு பெரும்பாலும் அடிவயிற்றில் ஆரம்பித்து,மேல்வயிறு வரை வயிற்றின் மூன்று பாகங்கள்,மற்றும் இடுப்பு,பிருஷ்டம்,அந்த நிலையையும் தாண்ட,தொடைகள்,கழுத்து,கன்னங்களுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் மார்பு,பெண்களுக்கு முதலில் பிருஷ்டம்,இடுப்பு,வயிறு,தொடைகள்,மேல் கைப்பகுதி ,கழுத்து,கன்னங்களின் கீழ்ப்பகுதி என்ற வரிசையில்..)அங்கு தசைக்கூட்டம் சேர்கிறது.

உடற்பயிற்சி அதிக அளவு சக்தி/கொழுப்பை எரித்து தசைகளின் சமசீர்த் தன்மையை நிலைநிறுத்துகிறது.ஆனால் அது உடலின் உட்கருவிகளில் எந்த முன்னேற்றத்தையோ,சிறப்பான உபயோகத்தன்மையையோ தூண்டுவதில்லை;எடுத்துக்காட்டாக சிறுநீரகங்களையோ,பித்தப்பையையோ சிறப்பாக வேலை செய்ய வைத்து அவற்றின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதோ,உச்ச பட்ச திறனிலோ-optimized utility value status- வைப்பதில்லை.

யோகப்பயிற்சியோ 25 சதம் வெளிப்புற தசைகள் மற்றும் 75 சதம் உட்புற கருவிகள்,சுரப்பிகள் முதலியவற்றில் செயல் புரிகிறது.எனவே முதலில் உடலின் உட்கருவிகளின் உச்சபட்ச செயல்பாட்டுத் திறன் காக்கப்படுகிறது;பின்னரே உடலின் தசைகளின் மேல் யோகப் பயிற்சி செயல்படுகிறது.

எனவே தொடர்ச்சியாக யோகப் பயிற்சி செய்வோரின் உடலியக்க நிலை optimized status ல் இருக்கிறது.

இதன் காரணமே உடற்பயிற்சி செய்பவர்கள் கூட சிலநேரம் நீரிழிவு போன்ற நோய்களுக்குள்ளாவது நேரிடுகிறது;ஆனால் தொடர்ச்சியாக சர்வாங்காசனம் செய்துவரும் ஒருவருக்கு சாதாரணமாக-அவர் தன்னுடலை விரும்பிக் கெடுத்துக் கொண்டாலொழிய-நீரிழிவு வர வாய்ப்பில்லை.

எனவே யோகப் பயிற்சி உடற்பயிற்சியை விட பல மடங்கு நல்லது.
ஆனால் யோகப் பயிற்சியையும் உடற்பயிற்சியையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது;காரணம் உடற்பயிற்சியின் நோக்கமும் செயல்பாடும் முழுக்க முழுக்க இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி,சக்தியை எரிக்கச் செய்து,அதிகப்படி கொழுப்பைக் கரைப்பதே;ஆனால் யோகத்தில் சில நேரம் அதிக சுவாசமும்,சில நேரம் மட்டான நிதான சுவாசமும்,செய்யும் ஆசனங்களைப் பொறுத்து பரிந்துரைக்கப் படுவதால்,இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதால் இரத்த ஓட்டத்தில் ஒத்திசைவு பாதிக்கப்படும்.எனவேதான் அதைத் தவிர்க்கும் ஆலோசனை.

கருத்து 2:
யோகப்பயிற்சி,மூச்சுப்பயிற்சி,தியானம் இவற்றின் வரிசைக்கிரமம்:
முதலில் மூச்சுப்பயிற்சி,பின்னர் யோகப்பயிற்சி அதன்பிறகு தியானம் என்பதே சரியான வரிசை.

நானறிந்தது:
யோகப் பயிற்சிக்கு நல்ல காற்றொட்டமுள்ள,ஆனால் தூசிகள் நிலவாத,நேரடி வெயிலில் இல்லாத சூழல் ஏற்றது.
மூச்சுப்பயிற்சியும் யோகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை;ஏனெனில் இரண்டும் உடலியக்கத்தின் பாற் பட்டவை.தியானம் என்பது மனோ இயக்கத்தின்பாற் பட்டது;எனவே யோகப் பயிற்சியோடு தியானப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தேவையற்றது.ஆனால் தொடர்ந்த யோகப்பயிற்சி மனதை,சிந்தனையை எளிதான தியான நிலைக்கு அழைத்துச்செல்ல உடலை ஏதுவாக்குகிறது.

இனி வரிசைக்கிரமத்தில் யோகப் பயிற்சி (சூர்ய நமஸ்காரம் போன்ற) எளிய ஆசனங்களுடன்ஆரம்பித்து சிரசாசனத்தில்(பொதுவாக) முடிந்து,பின்னர் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம்,அதன்பின் சவாசனம்-அதாவது உடலை முழுதாக சவம் போன்ற நிலைக்கு கொண்டு செல்லல்- என்ற வரிசையே யோகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
காரணம் எளிய ஆசனங்கள் முதல் கடின ஆசனங்கள் வரை உடலின் பல கருவிகளும்,சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன;கடைசியாக செய்ய வேண்டிய சிரசாசனம்-தலை கீழாக நிற்றல்- உடலின் ரத்தம் முழுமையையும், புவியீர்ப்பு விசையைத் தனக்கு உதவி செய்ய வைத்து,மூளையை நோக்கி செலுத்தி,சாதாரண நிலையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலே செல்ல வேண்டிய ரத்தம் மூளையின் சகல நரம்பு மண்டலத்திற்கும் செல்வதில் இருக்ககூடும் ஏதேனும் சிறுசிறு குறைகளையும் தகர்த்து மூளையின் சகல நரம்புகளிலும் முழுதான ரத்த ஓட்டத்தைத் தருகிறது.

இதன்பிறகு பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் போது,யோகப் பயிற்சியின் போது அந்தந்த ஆசனங்களின் காரணமாக நடந்த விரைவு ரத்த ஓட்டம்,மெதுவான ரத்தஓட்டம் ஆகியவை சமன்செய்யப் பட்டு,இரத்த ஓட்டம் சீரடைகிறது.

பின்னர் செய்யப் படும் சவாசனம் ,மூச்சு விடுதலைத் தவிர,உடலின் சகல இயக்கங்களையும் நிறுத்தி உடலை ஆசுவாசப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சில மேலதிகக் குறிப்புகள் :

*யோகப் பயிற்சியின் மூலம் குடலை நேரடியாகச் சுத்தம் செய்யும் முறை,நன்கு மழுப்பப்பட்டு,எண்ணை தடவப்பட்ட,ஒரு மூங்கில் குழாய்(ஆசனவாய் மூலம் எனிமா கொடுப்பது போல) உதவி கொண்டு யோகத்தின் மூலம் ஆசனவாயின் மூலம் தண்ணீரை பெருங்குடல் வரை உள்ளிழுத்து,நாள்பட்ட மலச்சிக்கல்களினால் ஏற்பட்டிருக்கும் கசடுகளையும் வெளியேற்றும் வழி கூட பரிந்துரைக்கப்படுகிறது.இதைக் கேட்டு தற்காலத்தில் பலர் சிரித்து எள்ளக் கூடுமெனிலும் இது உண்மை.யோக நிபுணர்கள் இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சாதாரணமாக செய்து கொண்டிருந்தார்கள்.

*பிறவிக் குறைகளான இரத்த சோகை,பெற்றொரிடமிருந்து பெற்ற நீரிழிவு,கண்பார்வைக் கோளாறுகள்,ஈஸ்னோபீலியா என்றழைக்கப்படும் மூக்கடைப்பு சார்ந்த இளைப்பு,கண்களுக்கு மேல் நீர் கட்டுதல்,பெண்/ஆண் மலட்டுத்தன்மை (உரிய மருந்துகளின் உதவியோடு) போன்ற நோய்கள் முற்றாகக் குணமடையும் வாய்ப்புகள் உண்டு;ஆனால் பொறுமையும்,விடாமுயற்சியும் அவசியம்.

*யோகப் பயிற்சியில் ஆசனங்கள் சொல்லியிருக்கும் நிலையை-position- முற்றாக அடைந்தால்தான் பலன் உண்டு என்பதல்ல;முழு நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதோடு,எந்த அளவில் முயற்சி செய்தாலும் யோகத்தின் பலன் உண்டு.எனவே முதல் நாளே ஹலாசனத்தில் கால்கள் செங்குத்தாக மேல்நோக்கி நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை;சிறுகச் சிறுக பழகலாம்,பழகிய அளவில் பலன் உண்டு.

ஆர்வமுடையவர்கள் திரு யோகாச்சார்யா சுந்தரம் அவர்கள் எழுதிய சுந்தர யோக சிகிச்சையை நாடலாம்;ஆசனங்கள் செய்யும் வழிமுறைகள்,உடலியக்க 'அரசியல்'(அப்பாடா,நானும் 'சூப்பர்' வலைப்பதிவர்!) ஆகியவற்றை விளக்குவதோடு,பெரும்பாலான தீர்க்க முடியாதவை எனக் கருதப்படும் நோய்களுக்கும் யோக சிகிச்சைத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ள மிக அருமையான புத்தகம்.புத்தக ஆர்வலர்களின் வாழ்நாள் சேகரிப்புக்கான பரிந்துரை.


(அப்பாஆஆஆ,,,போதுமடா சாமி,ரொம்பக் கண்ணக் கட்டுது !!!!!!!!!)

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...